Last Updated : 09 Jul, 2025 06:40 AM

3  

Published : 09 Jul 2025 06:40 AM
Last Updated : 09 Jul 2025 06:40 AM

காவல் மரணங்களும் தண்டிக்கப்படாத காவலர்களும் | சொல்... பொருள்... தெளிவு

சிவகங்கை மாவட்டம் திருப்பு​வனத்​தில், நகை திருடப்​பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்​களால் கடுமை​யாகத் தாக்கப்​பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்​தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல் துறையால் திட்ட​மிடப்​பட்டு நடத்தப்பட்ட குற்றம், அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்​கிறது” எனச் சாடியது.

அஜித் குமாரின் மரணம், நாட்டில் அரங்கேறும் காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்​சமிட்டுக் காட்டி​யுள்​ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்​கப்​பட​வில்லை என்பதையும் தெளிவுபடுத்​தி​யுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல் துறையின​ரால், பட்டியில் சாதி மக்கள் கூடுதலாக இலக்காக்​கப்​படு​வதையும் புள்ளி​விவரங்கள் சுட்டிக்​காட்டு​கின்றன.

காவல் மரணங்கள்: கைது செய்யப்பட்ட ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்​பாட்டில் இருக்​கும்போது நிகழும் மரணங்கள் காவல் மரணங்கள் என அழைக்​கப்​படு​கின்றன. கைதுசெய்​யப்பட்ட நபர் மீது காவல் துறையினர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்​துதல், முன்விரோதத்​துடன் செயல்​படுதல், உடல் - மனரீதி​யாகத் துன்புறுத்​துதல் போன்ற பல்வேறு காரணங்​களால் காவல் மரணங்கள் நிகழ்​கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21, எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமை​களையோ பறிக்கக் கூடாது எனக் கூறுகிறது. இதன்படி, காவல் துறையினால் அத்துமீறி நடத்தப்​படும் காவல் மரணங்கள் சட்டப்படி குற்றச் செயலாகவே கருதப்​படும்.

தமிழகத்தில்: தமிழ்​நாட்டில் காவல் துறையினரின் அத்துமீறல்களுக்கு நீண்டகால வரலாறு இருப்​ப​தாகத் தரவுகள் சுட்டிக்​காட்டு​கின்றன. நாடாளு​மன்றத் தரவுகளின்படி, 2016-17 முதல் 2021-22 (மார்ச் 31, 2022) வரை, தமிழ்​நாட்​டில், நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் விசாரணையில் இருந்தபோது 490 பேர் உயிரிழந்துள்ள​தாகப் பதிவாகி​யுள்ளது.

2016-17 முதல் 2021-22 (மார்ச் 30, 2022) வரையிலான காலக்​கட்​டத்தில் இந்தியாவில் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்​களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மேற்கூறிய காலக்​கட்​டத்தில் இங்கு 2,630 காவல் மரணங்கள் பதிவாகி​யுள்ளன. தென்னிந்தியாவில் காவல் மரணங்கள் அதிகம் நடைபெறும் மாநில​மாகத் தமிழ்நாடு உள்ளது.

காவலர்கள் தண்டிக்​கப்​படு​வ​தில்லை: காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பாக, ஐந்து காவலர்கள் கைது செய்யப்​பட்​டாலும், தமிழ்​நாட்டில் 2017 – 2022இல் பதிவான காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவல் துறை அதிகாரியும் இதுவரையும் தண்டிக்​கப்​பட​வில்லை என்பது குறிப்​பிடத்​தக்கது. இந்தியா முழுவதும், இதே காலக்​கட்​டத்தில் நிகழ்ந்த காவல் மரணங்​களுக்கு எந்தக் காவல் துறை அதிகாரியும் தண்டிக்​கப்​பட​வில்லை.

உதாரணத்​துக்கு, இந்தியா​வில், 2017-2022 காலக்​கட்​டத்​தில், காவல் நிலையங்​களில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக, 345 நீதித் துறை விசாரணை​களுக்கு உத்தர​விடப்​பட்​டுள்ளது. இம்மரணங்கள் தொடர்பாக 123 போலீஸார் கைது செய்யப்​பட்​டனர்; இதில் 79 பேர் மீது மட்டுமே குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட்​ட​தாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்​துள்ளது. இதில் ஒரு காவலர்கூட குற்றவாளி எனத் தண்டிக்​கப்​பட​வில்லை.

2017 - 2021 வரையில், காவல் நிலையங்​களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்துத் தமிழ்​நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்​பட்டன. ஆனால், இந்த வழக்குகள் தொடர்பாக எந்த ஒரு காவலர் மீதும் குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட​வில்லை / தண்டனை விதிக்​கப்​பட​வில்லை. காவல் மரணங்கள் தொடர்பான வழக்கு​களில் மட்டுமல்ல, மனித உரிமை மீறல் வழக்கு​களிலும் காவல் துறையினருக்குத் தண்டனை கிடைப்பது அரிது.

இந்தியாவில் 2017-2022க்கு இடையில் மனித உரிமை மீறல்​களுக்​காகக் காவல் துறையினருக்கு எதிராக 74 வழக்குகள் பதிவு செய்யப்​பட்​டுள்ளன. இதில் 41 காவலர்கள் மீது குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட்​டுள்ளது; இதில் மூன்று பேர் மட்டுமே குற்ற​வாளிகள் எனத் தீர்ப்​பளிக்​கப்​பட்​டுள்ளது.

பாதிக்​கப்​படும் பட்டியல் சாதியினர்: இந்தியாவில் காவல் துறை சித்திர​வதைகளில் பெரும்​பாலும் பட்டியல் சாதி மக்களே அதிகம் பாதிக்​கப்​படு​கின்​றனர். குறிப்பாக, தமிழ்​நாட்டில் இது அதிகம். மேலும், தடுப்புக் காவல் சட்டங்​களின் கீழ் சட்டபூர்​வ​மாகக் காவலில் வைக்கப்​பட்​டுள்ள நபர்களில், பெரும் பாலானவர்கள் பட்டியல் சாதியின​ராகவே உள்ளனர்.

2022 நிலவரத்​தின்படி, இந்தியாவில் தமிழ்​நாட்​டில்தான் அதிக நபர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்​பட்​டுள்​ளனர்; தமிழ்​நாட்டில் தடுப்புக் காவலில் உள்ள 2,129 பேரில் 38.5% பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்​தவர்கள்; தமிழ்​நாட்டின் மக்கள்​தொகையில் பட்டியல் சாதி மக்கள் 20% உள்ளனர் என்பது குறிப்​பிடத்​தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்​பட்​டுள்ள 546 பேரில் 1.1% பேர் பட்டியல் சாதியினர். குஜராத்தில் 334 பேரில் 9.6% பேர் பட்டியல் சாதியினர். ஹரியாணாவில் 235 பேரில் 1.3% பேர் பட்டியல் சாதி மக்கள். உத்தரப் பிரதேசத்தில் தடுப்புக் காவலில் உள்ள 172 பேரில் 7.6% பேர் பட்டியல் சாதியினர் எனத் தெரிய​வந்​திருக்​கிறது.

சட்டப் பாதுகாப்பு: கைது செய்யப்​பட்​ட​வர்​களின் உரிமை​களைப் பாதுகாக்கக் காவல் துறை அதிகாரி​களுக்குச் சில வரம்புகளை இந்தியச் சட்டங்கள் விதிக்​கின்றன. அதன்படி, கைது செய்யப்பட்ட நபருக்கு அவரது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்​கப்பட வேண்டும். குற்ற​வியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 56, 57இன் படி, கைதுசெய்​யப்பட்ட நபர் தாமதமின்றி மாஜிஸ்ட்​ரேட்​டிடம் ஆஜர்படுத்​தப்பட வேண்டும்.

அதாவது, அதற்கான கால இடைவெளி 24 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 22(1)இன்படி, கைதுசெய்​யப்பட்ட எவரும் தங்கள் விருப்​பப்படி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், மருத்​துவரை அணுகவும் உரிமை உண்டு.

இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 22, சட்டவிரோதமான கைதிலிருந்து மக்களைப் பாதுகாக்​கிறது. இதன்படி, காவலில் உள்ள கைதிகளின் பாதுகாப்​புக்கு நீதிபதியே பொறுப்பு. ஆனால், நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நீதித் துறையி​லிருந்து மக்களுக்குக் கிடைப்​ப​தில்லை.

மேலும் காவல் மரணங்களை விசாரிப்​பதில் நீதித் துறை மெத்தன​மாகச் செயல்​படு​வ​தால், குறிப்​பிட்ட காலத்​துக்குள் விசாரணை முடிக்​கப்​ப​டாமல் கால தாமதம் ஏற்படு​கிறது. தமிழ்​நாட்டை உலுக்கிய சாத்தான்​குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸார் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்து​வருவது குறிப்​பிடத்​தக்கது.

மாற்றங்கள் தேவை: காவல் துறையில் தொடரும் வன்முறைக் கலாச்​சாரம் கட்டுப்​படுத்​தப்பட வேண்டும். மனித உரிமை, மனநல ஆரோக்​கியம் போன்றவை அடித்​தளமாக இருக்க வேண்டும். நவீனப் புலனாய்வு நுட்பங்​களில் காவல் துறையில் போதிய பயிற்சி இல்லாத​தால், வழக்கு​களில் உண்மையைக் கண்டறிய காவலர்கள் பெரும்​பாலும் வன்முறையையே கையில் எடுக்​கின்​றனர். இவற்றைத் தவிர்க்க வழக்கு​களில் அறிவியல்​பூர்வமான செயல்​முறை​களில் இறங்கக் காவலர்​களுக்குப் போதிய பயிற்சிகள் அளிக்​கப்பட வேண்டும்.

அரசியல் / அதிகாரம், சாதிய அழுத்​தங்​களுக்கு அடிபணிந்து காவல் துறையினர் செயல்படாத வகையில் கண்காணிக்​கப்பட வேண்டும்; கண்காணிப்புக் கேமராக்கள் காவல் நிலையங்​களில் கட்டாய​மாக்​கப்பட வேண்டும். காவல் துறையின் சித்திர​வதையால் உயிரிழந்​தவர்​களின் குடும்பத்​துக்கு இழப்பீடுகள் வழங்குவது மட்டுமல்​லாமல், நியாயமான விசாரணை​யும், அத்து​மீறிய​வர்​களுக்கான தண்டனை​களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x