Published : 27 Jun 2025 06:16 AM
Last Updated : 27 Jun 2025 06:16 AM
‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூன் 14 அன்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கோப்பையைத் தென் ஆப்ரிக்கா வென்றதை உலகமே கொண்டாடியது. தென் ஆப்ரிக்க வீரர்கள் குதூகலக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, மைதான பால்கனியில் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருக்காமல் அமைதியில் ஆழ்ந்திருந்தார், அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா. ‘கோட்டா கேப்டன்’ என்று பரிகாசமாக விளிக்கப்பட்ட பவுமாவின் மெளனத்தின் பின்னணியில் நூற்றாண்டு கால நிறவெறியின் வலி உண்டு.
நிறவெறிக் கொள்கை: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடர் ஒன்றில் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்வது மிகப் பெரிய வரலாற்றுத் தருணம்தான். குறிப்பாக, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ‘சோக்கர்ஸ்’ ஆகி தோல்வியடைவதை வழக்கமாகக் கொண்டிருந்த அணிக்கு, இதைவிடப் பொன்னான ஒரு தருணம் இருக்க முடியாது. ஆனால், பவுமா தலைமையில் அந்த அணி வென்றதுதான் உலகின் கவனத்தைக் குவித்திருக்கிறது. உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் எந்த அணியிலும் இல்லாத வீரர்கள் தேர்வு முறை தென் ஆப்ரிக்கக் கிரிக்கெட்டில் உண்டு. அதுதான் கறுப்பினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை.
விளையாட்டில் இடஒதுக்கீடு ஏன் என்பதற்கு தென் ஆப்ரிக்காவின் நிறவெறி வரலாறு அவல சாட்சியமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு நீண்ட வரலாறு உண்டு. தென் ஆப்ரிக்கா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் மனித குலத்துக்கு எதிரான நிறவெறிப் போக்கு தொடர்ந்தது.
இதை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டது இன்னொரு துயரம். அதேவேளையில், நிறவெறிக் கொள்கை காரணமாக, ஐக்கிய நாடுகள் அவையிலிருந்து 1974இல் தென் ஆப்ரிக்கா நீக்கப்பட்டது. அதனால், உலக நாடுகளிலிருந்து தென் ஆப்ரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அந்த அணி விலக்கப்பட்டது.
1990இல் நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த பிறகு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் பார்வை மாறியது. இதைத் தொடர்ந்து 1991இல் தென் ஆப்ரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது. தடைக்குப் பிறகு முதல் முதலில் இந்தியாவில்தான் தென் ஆப்ரிக்கா ஒரு நாள் தொடர் கிரிக்கெட் விளையாடியது. தென் ஆப்ரிக்காவில் 1800களில் இருந்தே கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது.
1889இல் தென் ஆப்ரிக்கா சர்வதேச கிரிக்கெட் அணியாக உருவெடுத்தது. தென் ஆப்ரிக்காவில் கறுப்பினத்தவர்களே அதிகம். என்றாலும் கிரிக்கெட்டில் வெள்ளையின வீரர்களின் ஆதிக்கமே நீடித்தது. குறிப்பாக, 1956இல் தென் ஆப்ரிக்க அரசின் விளையாட்டுக் கொள்கைப்படி அந்நாட்டு அணி சார்பில் வெள்ளையினத்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்கிற அநீதியான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், திறமையான கறுப்பின வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
ஏன் இடஒதுக்கீடு? - தென் ஆப்ரிக்காவில் நிறவெறியின் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் பல தசாப்தங்களாக ஆளான கறுப்பினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது காலத்தின் தேவையாக இருந்தது. தென் ஆப்ரிக்காவின் மக்கள்தொகையில் 50%க்கும் அதிகமானோர் கறுப்பினத்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
1990களில் சர்வதேச கிரிக்கெட், ரக்பி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தென் ஆப்ரிக்கா திரும்பினாலும், வெள்ளையின வீரர்களே அணிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1998இல் நெல்சன் மண்டேலா ஆட்சிக் காலத்தில் நிறவெறித் தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கறுப்பினத்தவருக்கு இடஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகுதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான விதை துளிர்விட்டது.
இதன் தொடர்ச்சியாகவே 2013இல் தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே கொள்கை வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கறுப்பின / கலப்பின வீரர்களாக இருக்க வேண்டும். அவர்களில் இருவர் ஆப்ரிக்கக் கறுப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பிறகே சமூகத்தின் அனைத்துத் தரப்பு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெறத் தொடங்கினர்.
மகாயா நிட்னி, ஹாசிம் ஆம்லா, பால் ஆடம்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், பிளாண்டர் போன்ற சிறந்த வீரர்கள் தென் ஆப்ரிக்க அணிக்குக் கிடைத்தனர். என்றாலும் இடஒதுக்கீட்டு வீரர்கள் (Quota players) என்று இவர்கள் மீது முத்திரை குத்தப்படுவது தொடர்ந்தது. அணியில் கறுப்பின வீரர்கள் வந்த போதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் நின்றபாடில்லை!
இடஒதுக்கீடு விமர்சனம்: வெள்ளையின வீரர்களால் கறுப்பின வீரர்கள் அவமானத்துக்கு ஆளாகினர். இவற்றையெல்லாம் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்’ என்கிற இயக்கத்தின் மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அந்த அணி நீண்ட காலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாததற்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறையும் காரணம் என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. இப்படியான குற்றச்சாட்டுகள் வெள்ளையின வீரர்கள், அவர்களுடைய ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட நிலையில், பவுமா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது விமர்சனக் கணைகளைக் கூர்மைப்படுத்தியது.
இருநூறு ஆண்டுகளுக்கு மேலான தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின கேப்டன் என்கிற பெருமையை பவுமா பெற்றார் (இதற்கு முன்பு மாற்று கேப்டனாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஆஸ்வெல் பிரின்ஸ் ஒரு போட்டிக்குச் செயல்பட்டிருக்கிறார்). என்றாலும் ‘கோட்டா கேப்டன்’ என்றே தொடர்ந்து விளிக்கப்பட்டார் பவுமா. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் தன்னுடைய திறமை, தனித்துவமான தலைமையின் மூலம் பவுமா கோப்பையை வென்று பதிலடி தந்திருக்கிறார்.
வெற்றியைக் கொண்டாடிக் களிக்காமல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பவுமா உட்கார்ந்திருந்தது, கிரிக்கெட்டில் கறுப்பினத்தவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளுக்கு ஒரு மெளன சாட்சியம். தென் ஆப்ரிக்க ரக்பி விளையாட்டிலும்கூட இதே பிரச்சினை இருந்தது. வெள்ளையின வீரர்களால்தான் கோப்பை வெல்ல முடியும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், 2019இல் தென் ஆப்ரிக்க ரக்பி அணி கறுப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது.
இடஒதுக்கீட்டால் தென் ஆப்ரிக்கா கோப்பைகள் வெல்வதில்லை என்று நீண்ட காலமாக நிலவிவந்த வாதங்களை சியா கோலிசியைத் தொடர்ந்து பவுமாவும் தகர்த்திருக்கிறார். பவுமா 2023இல் கேப்டனான பிறகு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தி 9 போட்டிகளை வென்று, ஒரு போட்டியைச் சமன் செய்துள்ளார். இதில், கோப்பை வென்ற இறுதிப் போட்டியும் அடங்கும். கிரிக்கெட் வரலாற்றில் 10 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தும் தோல்வி அடையாத முதல் கேப்டன் பவுமா என்பது அவருடைய திறமைக்கும் தலைமைக்கும் ஒரு சான்று.
“உலகை மாற்றும் சக்தியும், ஊக்கமளிக்கும் சக்தியும் விளையாட்டுக்கு இருக்கிறது” - நிறவெறி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிச் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா உதிர்த்த வார்த்தைகள் இவை. மண்டேலாவின் வார்த்தைகளைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது தென் ஆப்ரிக்க அணி. கூடவே, தென் ஆப்ரிக்க விளையாட்டுத் துறையில் சமூக, சம நீதிக்கான மாற்றங்களும் துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன.
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT