Last Updated : 25 Jun, 2025 10:17 AM

1  

Published : 25 Jun 2025 10:17 AM
Last Updated : 25 Jun 2025 10:17 AM

பாலின இடைவெளியில் பின்தங்கும் இந்தியா | சொல்... பொருள்... தெளிவு

உலகப் பொருளாதார மன்றம் (The World Economic Forum) 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பாலின இடைவெளி அறிக்கையை (Global Gender Gap Report) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 148 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டில் ஆண்-பெண் இடையே பாரபட்​சமற்ற நிலை நிலவுவதை முக்கியமான பரிமாணங்​களின் அடிப்​படையில் நிர்ண​யிப்பதை ‘பாலின இடைவெளிக் குறியீடு’ குறிக்​கிறது. ஒரு நாடு இந்தப் பட்டியலில் பின்தங்குவது அந்த நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பாரபட்சம் அதிகம் இருப்பதை உணர்த்து​கிறது.

2022இல் பாலின இடைவெளியில் 135ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023இல் 8 இடங்கள் முன்னேறி 127ஆவது இடத்தைப் பிடித்தது; 2024இல் இப்பட்​டியலில் இந்தியா பிடித்த இடம் 129. இந்நிலை​யில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடு​கையில் இந்த முறை இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்​கி​யுள்ளது. தரவரிசையில் தெற்காசி​யாவின் மிகவும் பின்தங்கிய நாடு
களில் ஒன்றாக இந்தியா இருப்​பதும் கவனத்​துக்​குரியது.

பாலின இடைவெளி: அரசியல், சமூகம், கல்வி, அதிகாரம், பொருளா​தாரம், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்காத நிலையில், சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஆண் - பெண் இடையே மிகப் பெரிய ஏற்றத்​தாழ்வு நிலவு​கிறது. இந்த ஏற்றத்​தாழ்வே பாலின இடைவெளிக்கு வழிவகுக்​கிறது.

இதில், உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு என்பது, நான்கு முக்கியப் பரிமாணங்​களின் அடிப்​படையில் பாலினச் சமத்து​வத்தை அளவிடு​கிறது. அவை - பொருளா​தாரப் பங்கேற்பு - வாய்ப்பு (Economic Participation and Opportunity), கல்வி, சுகாதாரம் - வாழ்க்கை நடத்துதல் (Health and Survival), அரசியலில் அதிகாரம் பெறுதல்.

2025 பாலின இடைவெளி அறிக்கை​யில், உலகளாவிய பாலின இடைவெளி​யானது 68.8% ஆகக் குறைந்துள்ள​தாக​வும், இது கரோனா பெருந்​தொற்றுக் காலத்​துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்​பெரிய முன்னேற்றம் எனவும் கூறப்​பட்​டுள்ளது. பாலின இடைவெளி​யில், தற்போதைய வளர்ச்சி அளவீட்​டின்படி எடுத்​துக்​கொண்டால் பாலினச் சமநிலையை அடைய இன்னும் 123 ஆண்டுகள் தேவைப்​படும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இப்பட்​டியலில் முதல் ஐந்து இடங்களில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஐஸ்லாந்து 16 ஆண்டு​களாகத் தொடர்ச்சியாக முதல் இடத்தில் உள்ளது. அடிப்​படைத் துறைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இடைவெளியை 90 சதவீதத்​துக்கும் மேல் நிரப்பி உள்ள ஒரே நாடு என்கிற பெருமையை இந்நாடு அடைந்துள்ளது.

தெற்காசி​யாவைப் பொறுத்​தவரை, அரசியல் அதிகார மளித்தல் - பொருளா​தாரப் பங்கேற்பில் குறிப்​பிடத்தக்க முன்னேற்​றங்​களுடன், தெற்காசி​யாவில் சிறப்​பாகச் செயல்​படும் நாடாக வங்கதேசம் மாறியுள்ளது.

பாலின இடைவெளியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடு​கையில் 75 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 25ஆவது இடத்தை வங்கதேசம் பிடித்​துள்ளது. தெற்காசி​யாவின் பிற நாடுகளான நேபாளம் 125ஆவது இடத்தி​லும், இலங்கை 130ஆவது இடத்தி​லும், பூட்டான் 119ஆவது இடத்தி​லும், மாலத்​தீவுகள் 138ஆவது இடத்தி​லும், பாகிஸ்தான் 148ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் நிலை: பாலின இடைவெளி அறிக்கையில் கடந்த ஆண்டு​களுடன் ஒப்பிடு​கையில் இந்தியா சரிவைச் சந்தித்து​ உள்ளது. அவ்வறிக்கை​யின்படி, இந்தியப் பொருளா​தா​ரத்தின் மொத்தச் செயல்​திறன் 0.3 புள்ளிகள் அதிகரித்​துள்ளது. இதன்படி இந்தியாவின் பொருளா​தாரப் பங்கேற்பு - வாய்ப்பு 0.9 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 40.7% ஆக உள்ளது.

தொழிலாளர் பங்களிப்பு விகித​மானது எந்தவித மாற்றமும் இல்லாமல் 45.9% ஆகத் தொடர்​கிறது. கல்வியைப் பொறுத்தவரை இந்தியா 97.1%ஐக் கொண்டுள்ளது; இதன் மூலம் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை​யானது நேர்மறை​யாகப் பிரதிபலித்​திருப்பது தெரிய​வரு​கிறது.

மறுபுறம், அரசியல் அதிகாரமளித்​தலில் இந்தியா கணிசமான சரிவைச் சந்தித்​துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளித்​தலில் 0.6 புள்ளிகள் அளவுக்கு இந்தியா சரிந்துள்ளது. 2024இல் நாடாளு​மன்​றத்தில் பெண்களின் பிரதி​நி​தித்துவம் 14.7% ஆக இருந்த நிலையில், 2025இல் நாடாளு​மன்​றத்தில் பெண்களின் பிரதி​நி​தித்துவம் 13.8% ஆகக் குறைந்துள்ளது.

இதேபோல், அமைச்சர் பதவியில் பெண்கள் அங்கம் வகிப்பது 6.5% இலிருந்து 5.6% ஆகக் குறைந்துள்ளது. அரசியல் பங்களிப்பில் இந்தியாவில் பெண்களின் நிலை தொடர்ந்து கவலைக்​குரிய நிலையிலேயே நீடிக்​கிறது.

பின்தங்கும் பெண்கள்: இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் குறிப்​பிடத்தக்க பாலின ஏற்றத்​தாழ்வுகள் நிலவுவதைப் பாலின இடைவெளி அறிக்கை உணர்த்து​கிறது. ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 76.4% ஆகவும், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 35.1% ஆகவும் உள்ளது. இவ்வாறு தொழிலாளர் பங்கேற்பில் ஆண் - பெண் இடையே 41.3% பாலின இடைவெளி நிலவு​கிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு - வேலையின்மையை அளவிடும் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் நடத்திய காலமுறை அடிப்​படையிலான தொழிலாளர் படைக் கணக்கெடுப்புகள் (PLFS), 2016 - 2017 காலக்​கட்​டத்​துடன் ஒப்பிடும்​போது, 2023-24இல் பெண்கள் அதிக அளவில் பணியமர்த்​தப்​பட்​டதைக் காட்டு​கின்றன.

அந்த வகையில் பெண்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2017-18இல் 22%இல் இருந்து 2023-24இல் 40.3%ஆக இரட்டிப்​பாகி​யுள்ளது. ஆனால், இந்த அதிகரிப்புகள் நகரங்​களை​விடக் கிராமங்​களில் (சுயதொழில்கள் மூலம்) அதிகம் நிகழ்ந்துள்ளன. தவிர, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்​தா​லும், குறைந்த சம்பளமே பெண்களுக்கு வழங்கப்​படு​வதும், தரம் குறைந்த வேலைகளிலேயே அவர்கள் அமர்த்​தப்​படு​வதும் தொடர்​கின்றன.

தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்​களி​லும், விவசாயம் போன்ற வேலைகளில் பாரபட்சம் காட்டப்​படு​கிறது. ஒரே மாதிரியான வேலைக்கு ஆண்களுக்கு ரூ.600 ஊதியம் கிடைக்​கிறது என்றால், பெண்களுக்கு ரூ.300 மட்டுமே வழங்கப்​படு​கிறது.

அரசியல் பங்களிப்பு: இந்தியாவில் மகளிர் இடஒதுக்​கீட்டு மசோதா, 1996இல் முதன்​முதலில் அறிமுகப்​படுத்​தப்​பட்டது. ஆனால், இம்மசோதா அரசியல் சூழல் காரணமாக ஒவ்வொரு கட்டத்​திலும் பல்வேறு தடைகளை எதிர்​கொண்டது. அதன் காரணமாக 27 ஆண்டு​களுக்குப் பிறகு, 2023இல் இம்மசோதா நாடாளு​மன்​றத்தில் நிறைவேற்​றப்​பட்டது. தற்போதைய சட்டத்​தின்படி, நாடாளு​மன்​றத்​தி​லும், மாநில சட்டமன்​றங்​களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்​கப்​படு​கின்றன.

ஆனால், இச்சட்டம் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு - எல்லை நிர்ணயப் பணிகள் 2029ஆம் ஆண்டு முடிந்த பிறகே நடைமுறைக்கு வரும் எனக் கூறப்​பட்​டுள்ளது. எனினும் அரசியல் கட்சிகள் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்​களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்​ப​தற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, வரும் ஆண்டு​களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

வலுவான திட்டங்கள் அவசியம்: பெண்கள் வேலைக்குச் செல்வதில் இருக்கும் தடைகளைக் குறைக்கத் தொடர்ச்சி​யாகப் பல்வேறு கொள்கை முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்​டுள்ளன. எனினும் அவற்றில் கலவையான முடிவுகளே கிடைத்​துள்ளன. உதாரணத்​துக்கு, 2017இல் திருத்​தப்பட்ட மகப்பேறு சட்டம், மகப்பேறு விடுப்பை 12 வாரங்​களி​லிருந்து 26 வாரங்களாக உயர்த்தியது.

50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில், குழந்தைப் பராமரிப்பு நிலையங்​களையும் கட்டாய​மாக்​கியது. ஆனால், இதன் செலவு - நிர்வாகப் பொறுப்பு முதலா​ளிகள் மீது விழுந்​த​தால், சிறிய நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்து​வதில் தயக்கம் காட்டத் தொடங்​கிய​தாகச் செயல்​பாட்​டாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

நாட்டின் பாலின இடைவெளி குறைவதற்குக் கல்வி, அரசியல், பொருளா​தாரப் பங்களிப்பு​களில் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், சமூக - குடும்பச் சூழல் காரணமாக வீட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்​வ​திலேயே பெண்கள் கவனம் செலுத்து​கின்​றனர்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்​தல்கள், வன்முறைகள் பெண்களின் சமூகப் பங்களிப்பைக் குறைத்து​விடு​கின்றன. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, சமூகத்தில் பெண்கள் சம வாய்ப்பு பெறும் சூழலை உருவாக்க ஆட்சி​யாளர்கள் வலுவான திட்டங்களை வகுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x