Published : 21 Jun 2025 11:16 AM
Last Updated : 21 Jun 2025 11:16 AM
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து தமிழகத்தின் பொருளாதாரத்தை மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் நெல்லை மாவட்டத்தின் தோன்றல்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.
அந்த வகையில், திருக்குறுங்குடியில் பிறந்த டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார், ஆழ்வார்குறிச்சியில் பிறந்த சிம்சன் நிறுவனர் எஸ்.அனந்தராமகிருஷ்ணன், இந்தியா சிமென்ட் எஸ்.எஸ்.என். சங்கரலிங்க அய்யர், கல்லிடைக்குறிச்சியில் பிறந்த கே.ஈஸ்வர அய்யர் போன்ற பலர் இந்த மண்ணைச் சார்ந்தவர்கள். ராஜபாளையம் ராமசுப்பிரமணிய ராஜாவின் ‘ராம்கோ’ நிறுவனம் ராஜபாளையம், துலுக்கப்பட்டி, பந்தல்குடி போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றது.
சேரன்மாதேவியில் பிறந்த சே.பா.நமசிவாயம் மாநில அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர். நீர்ப்பாசன பிரச்சினைகளை அறிந்த அறிஞர் ஆவார். காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை ஒழித்ததில் முக்கிய பொறுப்பு வகித்த காவல் துறை துணை ஆய்வாளர் வெள்ளத்துரை வல்ல நாட்டைச் சேர்ந்தவர்.
நெல்லை மாவட்டத்தில் பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தினால் தூத்துக்குடியிலும், விக்கிரமசிங்கபுரத்தில் மதுரா கோட்ஸ், கோவில்பட்டியில் கோவை லட்சுமி ஆலை குடும்பத்தினரின் ஆலையும், கருத்தமுத்துச் செட்டியார் குடும்பத்தினரால் வாங்கி நடத்தப்படுகின்ற லாயல் மில் ஆலையும் பலருக்கு ஆண்டாண்டு காலமாக வேலைவாய்ப்பை வழங்குகின்றன. கோவில்பட்டி லாயல் மில்லை மூத்த அரசியல்வாதி, பேராசிரியர் ரங்கா நேரில் பார்த்து ஆலையின் நிர்வாகத்தைப் பாராட்டினார். நெல்லையில் நூற்பாலைகளும், தாழையூத்தில் சங்கர் சிமென்ட் ஆலையும், வாசுதேவநல்லூரில் தரணி சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளன.
தூத்துக்குடி துறைமுக நகரம் இன்றைக்குப் பல கனரக தொழிற்சாலைகளில் பலருக்கு வேலைவாய்ப்பு தருகின்ற நகரமாக வளர்ந்து வருகின்றது. பல தொழிற்சாலைகளை வடபுலத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அமைத்துள்ளனர். இம்மாவட்டக் கடற்கரைப் பகுதியில் உலோகங்கள் கலந்த மணல் தொழில் வர்த்தகம் பன்னாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நடைபெறுகின்றது.
பீடித் தொழிலும், சில பகுதிகளில் தீப்பெட்டித் தொழிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வாழ்வை வழங்குகின்றன. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யும் காற்றாலைகள் நெல்லை, குமரி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், கயத்தாறு, தேவர்குளம், ஆலங்குளம், கீழவீராணம் பகுதிகளில் அகில இந்திய அளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. பெரிய தாழை பகுதியில் கார்னெட் மணல் தொழிலும் உலகத் தரம் பெற்றது.
கோவில்பட்டி லட்சுமி ஆலையினரால் நடத்தப்படும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியும், காயல்பட்டினத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நடத்திவரும் கால்பந்துப் போட்டியும் பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் அமர்சேவா சங்கம்
தென்காசிக்கும் சுரண்டைக்கும் இடையில் உள்ள ஊர் ஆய்க்குடி. இந்த ஊரில் சிறப்பாகச் செயல்படுகிறது அமர்சேவா சங்கம். இவ்வூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும்போது பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். அப்போது நடந்த உடல் தகுதிச் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கழுத்துக்குக் கீழ்ப் பகுதிகள் செயலிழந்துவிட்டன.தலையும், மூளையும் மட்டும் செயல்பட்டது. இதனால், மாற்றுத் திறனாளிகளின் நிலையை இவர் உணர்ந்து அவர்களின் இன்னல்களைத் தெரிந்து கொண்டார்.
தன் வாழ்வில் மீதியுள்ள காலத்தை மாற்றுத் திறனாளிகளின் நலத்துக்காகச் செலவிட வேண்டும் என்று திட்டமிட்டு, உழைத்து, தன் சொந்த ஊரான ஆய்க்குடியில் சிறிய அளவில் இவர் ஆரம்பித்த ‘அமர் சேவா சங்கம்’ இன்று ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி உள்ளது. நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் காப்பகமாகவும், அவர்களுக்கு கல்வி அளிக்கும் கல்வி நிறுவனமாகவும் திகழ்கிறது இந்தச் சேவை மையம். இவரை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
1963-இல் வானொலி நிலையம் நெல்லையில் அமைக்கப்பட்டது.
திருமங்கை நகர், பாளையங்கோட்டையில் கிறித்துவம், வைணவம், சைவம், இஸ்லாம் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு ஒருதாய் பிள்ளைகளாக வாழ்கின்ற நகரமாகும். தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, நெல்லை இந்துக் கல்லூரி (இந்தக் கல்லூரி தொடக்கத்தில் நெல்லை ஜங்ஷனில் தற்பொழுதுள்ள அக்கல்லூரி பள்ளியில்தான் தொடங்கப்பட்டது), தமிழகத்தில் முதன்முதலாகப் பாளையங்கோட்டையில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட சாரா டக்கர் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி போன்ற பல கலாசாலைகள் பன்னெடுங்காலமாகக் கல்வியைப் போதிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.சி. வீரபாகு போன்றோர் முயற்சியில் தொடங்கிய தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வராய் இருந்த தமிழ் ஆங்கில அறிஞருமான அ.சீனிவாசராகவன் மாணவர்கள் மத்தியில் இலக்கிய உணர்வைத் தூண்டினார். இக்கல்லூரிகளில் கல்வி பெற்ற பாரதியார், மனோன்மணீயம் சுந்தரனார் போன்றவர்களைப் போல், தற்காலத்திலும் இங்கு பயின்றவர்கள் தமிழகம், இந்தியா, ஏன் வெளிநாட்டில் கூட ஒளிர்கின்ற நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஜான்ஸ் கல்லூரி பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து ஆராய்ச்சியாளர் மட்டுமல்லாமல் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய துணைவியார் சரோஜினி பாக்கியமுத்து, மாதவையா நாவல்களைத் தமிழ் மொழி பெயர்த்துள்ளார். அக்கல்லூரியின் பேராசிரியர் வளன் அரசு, பல தமிழ் ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்.
அதுபோன்று சேவியர் கல்லூரியின் பேராசிரியர்கள் இன்னாசி, லூர்து போன்றோருடைய தமிழ்ப் பணியும் நினைவு கொள்ள வேண்டும். இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ராமச்சந்திரன் சிறந்த பொருளாதார நிபுணராவார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் பாரூக் சிறந்த சொற்பொழிவாளர். சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காறு துறை இன்றைக்குப் பல சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. நல்ல நூல்களைப் பதிப்பித்தும், கிராமப்புற நெல்லையின் ஆதிகாலத்துக் கலாச்சாரத்தை ஆராய்ந்தும் வருகின்றது.
இந்துக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஞானமுத்து ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் பாடம் நடத்தினால், ஷேக்ஸ்பியரே பாடம் நடத்துவது போல் இருக்கும். அதுபோன்று செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் வேத சிரோன்மணி, புனித சேவியர் கல்லூரியில் முதல்வராக இருந்த மறைதிரு ராஜநாயகம் ஆகியோர் புகழ்பெற்ற கல்லூரி முதல்வர்களாக விளங்கினர்.
ம.தி.தா. இந்துக் கல்லூரி 1933-ஆம் ஆண்டில் தொடர்ந்து நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தபொழுது, கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் தங்களுடைய ஊதியத்தைக் குறைத்துக் கொண்டும், ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையிலும் வீடு வீடாகச் சென்று உண்டியல் குலுக்கி வசூல் செய்தும் வந்தனர். முதல்வர் அலெக்சாண்டர் ஞானமுத்து தன்னுடைய மாணவர்களைக் கொண்டு நெல்லை நகரில் தன்னுடைய தொப்பியைக் கையில் ஏந்தி நன்கொடை வசூல் செய்து, ஒரு கிறித்துவர் இந்துக் கல்லூரியை நடத்தியது அக்காலத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
மேடைத் தளவாய் முதலியார் முதன்முதலாக நூறு ரூபாய் நன்கொடையாகத் தந்தார். இருட்டு அல்வாக்கடை ஜெகன் சிங் 100 ரூபாயும், லயன் கம்பெனி சண்முகம் பிள்ளை ரூ.100-ம், இசையில் கீர்த்தி பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி சிறுமியாக இருந்தபோது கச்சேரி நடத்தி அதன் மூலம் கிடைத்த நிதியும், மதுரை திரவியம் பிள்ளை அவர்கள் அளித்த ஒரு லட்ச ரூபாயும் சேர்த்து இந்தக் கல்லூரியைத் தொடர்ந்து நடத்த இதயப்பூர்வமாக உதவிகளைச் செய்தனர்.
மதுரை திரவியம் தாயுமானவர் வள்ளல் தன்மையைப் போற்றி இந்துக் கல்லூரியின் பெயரில் ‘மதுரை திரவியம் தாயுமானவர்’ என்று சேர்த்துப் பெயரிடப்பட்டது. அதுபோன்றே மதுரை பொன்னம்மாள், மங்கையர்க்கரசி, கன்னியம்மாள், பிச்சையம்மாள் பெயரில் நிதிகள் வழங்கப்பட்டு, அவர்கள் பெயரில் கல்லூரிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
பத்மபூஷண் பட்டம் பெற்ற கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் தமிழறிஞர்கள் வேங்கடராஜுலு, சிதம்பரம், ராமலிங்கம் ஆகியோரும் இந்துக் கல்லூரியில் பணியாற்றியவர்கள். 1903-ல் டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையார் இந்துக் கல்லூரிக்கு வந்தார்.
நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையிலும், ரயில்வே பீடர் ரோடு பக்கத்திலும் அக்காலத்தில் அரசியல் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, பசும்பொன் தேவர் போன்ற தலைவர்கள் இங்கு பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளனர்.
பாளையங்கோட்டையில் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட ஆஷின் கல்லறை உள்ளது. திருநெல்வேலி கலெக்டராக ஈ.பி.தாம்ஸன் இருந்தபொழுது, சுலோச்சனா முதலியார் முயற்சியால் சுமார் 800 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டது. நெல்லையையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் இதற்கு வயது 160 ஆண்டுகளாகும். ஆதியில் தாமிரபரணியைக் கடப்பதற்குப் பரிசல்கள் பயன்படுத்தப்பட்டன. 11 வளைவுகளுடன் 760 அடி நீளமும், 29.5 அடி அகலமும் கொண்ட பாலமாகும். இது லண்டன் தேம்ஸ் நதிக்கரையின் குறுக்கே கட்டப்பட்ட ‘வாட்டர்லூ’ பாலம் போன்றதாகும்.
சுலோச்சனா முதலியார் கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றினார். ஆயுள் தண்டனைக் கைதிகள் இந்தப் பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்டனர். பாலத்தின் வலுவை அறிய முதலில் யானையைப் பயன்படுத்தினார்கள். பாலத்தை முதன் முதலில் திறந்து வைத்ததும் யானைதான். இந்தப் பாலமும், திருவைகுண்டம் பாலமும் மிக நேர்த்தியாகவும், பலமுடையதாகவும் இன்றைய நவீன காலத்திலும் சாட்சிகளாக இருக்கின்றன.
1932-இல் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மைதானத்தில் முதன்முதலாக விமானம் இறங்கியது. இதைப் பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தது அபூர்வமாக இருந்தது. ஐந்து ரூபாய் கொடுத்தால் அந்த விமானத்தின் உள்ளே சென்று பார்க்கலாம். பத்து ரூபாய் கொடுத்தால் ஒருமுறை விமானத்தில் பறக்கலாம். விமானம் ஹைகிரவுண்டிலிருந்து ஜங்ஷன், டவுன், பேட்டை வரை சென்று திரும்பும். இந்த விமானம் ஒரு வார காலம் முகாமிட்டு மக்களுக்கு வேடிக்கை பார்க்கின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.
ஹைகிரவுண்டு மைதானம் அப்பொழுது பொட்டல் பெருவெளியாக கிடந்து புல் வகைகள் முளைத்திருந்தன. அப்பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர், நீதிபதி, மூத்த அதிகாரிகளின் இருப்பிடங்கள்தான் இருந்தன. இங்கிலீஷ் கிளப் என்ற சங்கம் செயல்பட்டது. வார இறுதி நாட்களில் வெள்ளையர்கள் அங்கு ஆடிக் களித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். அதைப்போன்று இண்டியன் கிளப் என்ற ஒன்று பாளையங்கோட்டையில் இருந்தது. ஓய்வுபெற்ற அதிகாரிகள், சமுதாயத்தில் முக்கியமானவர்கள் அங்கே கூடுவது உண்டு. சீட்டாட்டம், ஊர்வம்பு அங்கு நடைபெறும். இன்றைக்கு அதே ஹைகிரவுண்டு பெரிய குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன.
திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையே பஸ் போக்குவரத்து அதிகமாக இல்லை. இரண்டே இரண்டு மோட்டார் கார்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன. இப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாந்தப்பப் பிள்ளை என்பவர் இருந்தார். கண்டிப்பானவர். சவுக்கும் கையுமாக மோட்டார் வண்டியில் வலம் வருவார். நகர்ப்புறம் சுத்தமாக இருப்பதற்கும், சட்ட ஒழுங்குக்குப் பாதகமாக யார் நடந்தாலும் சாந்தப்பப் பிள்ளை அங்கேயே சவுக்கடி அளிப்பார்.
வீரமாமுனிவர், தனிநாயக அடிகள் விளாத்திகுளம் அருகேயுள்ள வைப்பாற்றில் தமிழ் உச்சரிப்பு முறைகளை அறிந்து முறைப்படுத்தினார். நெல்லை நகரில் இன்றும் நினைவில் வருபவை டி.கே.சி.யின் வட்டத்தொட்டி இலக்கியக் கூட்டங்கள், தாமிரபரணி நதிக்கரைக் கூட்டங்கள், ருசியான சந்திரவிலாஸ் பதார்த்தங்கள், எஸ்.ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை புத்தகக் கடை, பாளையங்கோட்டை மரியா கேண்டீன், திருநெல்வேலி சந்திப்பு அக்காலத்திய பேருந்து நிலைய அமைப்பு, தச்சநல்லூரிலிருந்து நெல்லை ஜங்ஷன் வரை உள்ள சாலையில் இருமருங்கும் பச்சைப் பசேலென்று காட்சி தரும் நெற்பயிர்கள் ஆகியவை மறைந்தது கவலையாக உள்ளது. இருப்பினும் நெடிய மருத மரங்கள் இன்றைக்கும் அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம் > ‘தமிழ்நாடு’ பெயர் கோரி உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கனார் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 30
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT