Published : 15 Jun 2025 12:31 PM
Last Updated : 15 Jun 2025 12:31 PM

‘தமிழ்நாடு’ பெயர் கோரி உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கனார் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 30

‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டபோது அவரை அண்ணா சந்தித்தது குறித்து உணர்ச்சிப் பிழம்பாகக் கடித வடிவில் ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதியுள்ளார்.

“கடை வீதியையொட்டி உள்ள மாரியம்மன் கோவில் திடல். நானும் அங்கு நின்று பேசியிருக்கிறேன். அந்தத் திடலில் வீரமும் தியாகமும் ஒருவராகி சங்கரலிங்கனார் ஆகக் காட்சி தரும் என்று யார் எண்ணியிருக்க முடியும்?அந்தத் திடலில் ஒரு சிறு ஓலைக் கொத்துக் குடில் அமைத்துக் கொண்டு ஒரு கயிற்றுக் கட்டிலின் மீது அவர் படுத்துக் கொண்டிருக்கக் கண்டேன்.

அந்தக் குடிலின் மீது காங்கிரஸ் கொடி பறந்து கொண்டிருந்தது. நடுநிசி. எனவே, அங்கு நான்கைந்து பேர் மட்டும் இருந்தனர். ஒரு திரை போடப்பட்டிருந்தது. குடில் வாயிலில் அதை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன். கயிற்றுக் கட்டிலின் மீது சுருண்டு படுத்திருந்த உருவம் தெரிந்தது. மங்கலான விளக்கொளியில் எனக்கு அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை. சில நொடிகள் உற்றுப் பார்த்த பிறகே தெரிய முடிந்தது. ‘ஐயா அண்ணாதுரை’ என்றார் அந்த நண்பர்.

ஒரு விநாடி அவர் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையின் முழுப் பொருளை பாவி நான் அன்று சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. ‘செத்துக் கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே’ என்பதல்லவா அந்தப் பார்வையின் பொருள். ‘நான் சாவதனாலாவது’ என்று அந்த உத்தமர் என்னிடம் சொன்னார். தமிழ்ச் சமுதாயம் இன்று அடைந்துள்ள சீர்கெட்ட நிலையை உணராது இதுபோல் பேசுகிறாரே என்று நான் எண்ணி வருந்தினேன்.

அந்த உத்தமர் தம் இன்னுயிரை ஈந்தாரே, நாம் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாடு என்கிற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா? ஒப்பற்ற ஓர் உத்தமரின் தியாகம் இதற்குக் கூடவா வழி ஏற்படுத்தாது..? இங்கே அறம் ஏது? வீரம் எங்ஙனம் எழும்? நீதிக்கு வழி ஏது? நிமிர்ந்து நின்று உரிமை பேசுவார் யார்? என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது. வீரத் தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும் நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.” இவ்வாறு கடிதத்தில் அண்ணா தெரிவித்திருந்தார்.

தென்பாண்டி மண்டலத்தில் திராவிட இயக்கத்தின் தூணாக இருந்த மாவீரன் கே.வி.கே.சாமி, செப்டம்பர் 20, 1956 அன்று படுகொலை செய்யப்பட்டு அவர் தூத்துக்குடி மண்ணில் சிந்திய ரத்தம் வரலாற்றில் இன்னும் ஈரம் காயாமல் இருக்கிறது.

அண்ணா இப்பகுதிக்கு வரும்பொழுது மதுரை முத்து, ஏ.வி.பி.ஆசைத்தம்பி உடன் வருவது உண்டு. எம்.ஜி.ஆர். சென்னையில் யானைக்கவுனி பகுதியில் குடியிருக்கும்பொழுது நடிகமணி டி.வி.நாராயணசாமி, எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அழைத்துச் சென்று திமுகவில் உறுப்பினராக்கினார். டி.வி.என்-னைப் பற்றி அண்ணா குறிப்பிட்டதாவது:

“அவருடைய (டி.வி.நாராயணசாமி) ஆர்வமும் கொள்கைத் துடிப்பும்தான் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற கலை உலகத் தங்கங்களை நமது இயக்கத்தின்பால் நல்ல ஈடுபாடு கொள்ளச் செய்தது. இவர்களையெல்லாம் அவ்வப்போது அறிமுகம் செய்து வைத்து என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமை நண்பர் நாராயணசாமிக்கே உரியதாகும்” என்கிறார்.

1961 ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் ஈ.வி.கே. சம்பத் பிரச்சினை திமுகவில் ஏற்பட்டபொழுது தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்குழுவில் திமுக முக்கிய முடிவுகளை மேற்கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலைஞர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்புடைமருதூரில் பிறந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் திராவிட இயக்கத்தின் தளகர்த்தராக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று, மண்டல் குழு வழக்கிலும், மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கும் பிரிவு 356-ஐக் குறித்து எஸ்.ஆர்.பொம்மை வழக்கிலும் வழங்கிய தீர்ப்புகள் பிரசித்தி பெற்றவை. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தன்னுடைய திருப்புடைமருதூர் ஆலயத்துக்குத் திருப்பணிகளை மேற்கொண்டார். அந்த ஆலயத்தில் இலைகளைக் கொண்டு வரையப்பட்ட அழகான ஓவியங்கள் மூலம் நெல்லை மாவட்டத்தில் கப்பல் கட்டும் தொழிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்தது என்று சொல்லக் கூடிய ஆதாரங்கள் தெரிய வருகின்றன.

பதற்றமடைந்த எம்ஜிஆர்

ஒருசமயம் எம்.ஜி.ஆரின் 2248 எண் பிளைமவுத் காரில் அண்ணா பயணம் செய்தார். முன் சீட்டில் அண்ணா, பின் சீட்டில் எம்.ஜி.ஆர். திருநெல்வேலி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். கோவில்பட்டி அருகில் விடியற்காலையில் ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக வண்டி நின்றது. காரையும், காரில் பறந்து கொண்டிருந்த தி.மு.க. கறுப்பு சிவப்பு கொடியையும் கண்டவுடன் மக்கள் வெள்ளம் காரைச் சூழ்ந்து கொண்டு, உள்ளே கட்சித் தலைவர் அண்ணா இருப்பதை அறியாமல் ‘எம்.ஜி.ஆர். கொடி... எம்.ஜி.ஆர். கொடி...’ என்று கோஷமிட்டு காரைச் சூழ்ந்து கொண்டார்கள். இதைக் கண்டு எம்.ஜி.ஆர். மிகுந்த பதற்றத்துடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

‘நாடோடி மன்னன்’ வெளியான சமயத்தில்தான் தூத்துக்குடியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளராக தூத்துக்குடி நகரமன்றத் தலைவராக இருந்த சிவசாமி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி நிச்சயம் என்பதில் அண்ணாவுக்கு துளியும் சந்தேகமில்லை. ஆனால், அத்தேர்தலில் சிவசாமி தோற்றுப் போனார். ‘நாடோடி மன்னன்’ படம் வெற்றி பெற்றதும் அப்போதுதான்.

எளிய தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் நெல்லை, பேட்டையில் பிறந்தார். எளிமையான அரசியல் தலைவர். நெல்லை நகரத்தில் சாதாரண பயணிகள் போல் பேருந்தில் பயணம் செய்வார். ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் அவரைச் சந்தித்து மக்கள் தங்களுடைய குறைகளைச் சொல்வதும் உண்டு. இன்றைக்கும் நெல்லை டவுனில் புகழ்பெற்ற ஹிலால் பிரஸ்ஸை இவர் குடும்பத்தார் நடத்தி வருகின்றனர். ஹிலால் பிரஸ் கட்டிடத்தில் தன்னுடைய நண்பர்களுடன் அவ்வப்பொழுது அளவளாவுவார்.

தேர்தல் காலத்தில் மற்ற வேட்பாளர்கள் போன்று இல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தில் அதிகம் ஈடுபடாமலேயே மக்கள் செல்வாக்கால் வெற்றி பெறுகின்ற பெருமை இவருக்கு உண்டு. இந்த மாவட்டத்தில் தென்காசி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது.

ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி

நெல்லை மாவட்டத்தில் ராஜாஜி தலைமையில் இயங்கிய சுதந்திரா கட்சிக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் இருந்தன. ராமசாமி கோனார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.மாரிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஆதிமூலம், வேதாந்தம், டி.எஸ்.ஏ. சிவப்பிரகாசம், ஆர்.சீனிவாசன் எனப் பலர் சுதந்திரா கட்சியை இந்த மண்ணில் வளர்த்தனர்.

டி.எஸ்.ஆதிமூலம் மடத்துப்பட்டி கோபால் நாயக்கருக்குப் பின்பு, ஜில்லா போர்டு தலைவராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தில் நீண்டகால உறுப்பினராகப் பணியாற்றிய சுதந்திரா கட்சித் தலைவர் பேராசிரியர் என்.ஜி.ரங்கா அடிக்கடி பிரச்சாரப் பணிக்காக இம்மாவட்டத்துக்கு வருவார்.

ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி,

செங்கோட்டையைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று 1954-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் சட்டநாதக் கரையாளர், ஏ.ஆர்.கரையாளர் ஆகியோர் பங்கேற்று, கைதாகி, திருவனந்தபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாகச் செங்கோட்டை கேரள மாநிலத்திலிருந்து நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

காமராஜரின் தொண்டராக விளங்கி, தமிழ்த் தேசியத்துக்காக அரும்பெரும் தியாகம் செய்துவரும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் முன்னோர்களும் நெல்லையைச் சேர்ந்தவர்களே. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் செங்கோட்டையைச் சார்ந்தவர்.

எம்.ஜி.ஆரால் 1986-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பாரதி நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர். எட்டையபுரத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டு பல நலத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எச்.பாண்டியன் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பொறுப்பில் இருந்தார்.

பத்திரிகைத் துறை, மக்கள் சேவையில் ஜொலித்த ஜாம்பவான்கள்

பத்திரிகைத் துறையில் சிறப்பைப் பெற்ற டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், சி.பா.ஆதித்தனார், ராமசுப்பையர், கே.பி.கந்தசாமி போன்றோருக்குப் பிறகு சிவந்தி ஆதித்தனார், ராமச்சந்திர ஆதித்தனார், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி, ராகவன், ‘தராசு’ ஷியாம், கே.பி.கே.குமரன் போன்றோர் தினத்தந்தி, மாலை முரசு, தினமலர், தராசு, தினகரன் இதழ்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

சாதாரணப் பாமரனும் அன்றாடச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஆதித்தனார் குடும்பத்தினர் செய்த தொண்டு அளப்பரியதாகும். அதுமட்டுமல்லாமல் பல மக்கள் பணிகள், கோவில் திருப்பணிகளையும் ஆதித்தனார் குடும்பத்தினர் செய்து கொண்டு வருகின்றனர். தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தமிழர் நலன், தமிழக முன்னேற்றம் என்ற குறிக்கோளோடு தன்னுடைய பத்திரிகைப் பணியையும், அரசியல் பணியையும் மேற்கொண்டார்.

காயாமொழியில் பிறந்து, பாரிஸ்டர் பட்டம் பெற்று, சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் தமிழகத்துக்கு வந்து தினத்தந்தியைத் தொடங்கினார். ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். சட்ட மேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழக அமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்தான் சி.பா. ஆதித்தனார்.

நீதிபதி மகாராஜன், டாக்டர் வெங்கடசாமி (அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர்)

‘தினமலர்’ ராமசுப்பையர் முதன்முதலாகத் தன்னுடைய தினமலரைத் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் வையாபுரி பிள்ளை தொடங்கி வைக்க, பின் நாகர்கோவிலில் இப்பத்திரிகையை நடத்தி, பின்னர் நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு தினமலர் வெளியிடப்பட்டது. தச்சநல்லூர் சீனி ஆலையில் தொடங்கப்பட்டு பின்னால் வண்ணாரப்பேட்டைக்குத் தினமலர் அலுவலகம் மாற்றப்பட்டது.

நெல்லையில் முதல் தினசரியாகத் தினமலர்தான் வெளியிடப்பட்டது. ராமசுப்பையர் குமரி மாவட்டத்துக்கு ரயில்வே பாதை அமைக்கவும், குமரியைத் தமிழ்நாட்டோடு இணைக்கும் நேசமணி போராட்டத்திற்கு ஆதரவையும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

குமரி மாவட்டம் தமிழகத்தில் இணைந்தபொழுது அம்மாவட்டம் சிறிய மாவட்டமாக இருக்கின்றது. அதனுடன் வள்ளியூர் பகுதிகளையும் சேர்க்க வேண்டுமென்று அன்றைய அமைச்சர் பக்தவத்சலம் விரும்பிய பொழுது, வள்ளியூர் பகுதிகள் நெல்லையோடு தொடர்புள்ளதால் குமரி மாவட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று ராமசுப்பையர் கூறிய ஆலோசனையின் பேரில் வள்ளியூர் பகுதிகளைக் குமரி மாவட்டத்தோடு சேர்ப்பதைத் தமிழக அரசு கைவிட்டது.

ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கே.ஆர்.சீனிவாச அய்யங்கார் கோடகநல்லூரில் பிறந்தவர். இவருடைய புதல்விதான் பிரேமா நந்தகுமார் ஆவார். இவருடைய புதல்வர் டாக்டர் அம்பிராஜன் பிரபல பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி பாராட்டைப் பெற்றவர். இக்குடும்பத்தைச் சார்ந்த ஆர்.பங்காருசாமியும் அனைவரும் அறிந்த எழுத்தாளர்.

பண்டைய துறைமுக நகரமான குலசேகரப்பட்டினத்தில் பிறந்த டாக்டர் அறம், காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ஆளுநராகவும் பொறுப்பு வகித்தவர், சிறந்த காந்தியவாதி.

‘டாக்டர் வி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட கண் சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் வெங்கடசாமி விளாத்திகுளம் அருகேயுள்ள வடமலாபுரம் கிராமத்தில் பிறந்தார். அரவிந்தர் மீது பற்று கொண்டு மதுரை, திருநெல்வேலி, தேனி, கோவை, புதுவையில் அரவிந்த் கண் மருத்துவமனைகளை நிறுவினார். இலவச கண் முகாம் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
ஆந்திர முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான அரங்கராஜன், எழுத்தாளர் வாஸந்தி போன்றோர் கோவில்பட்டியில் கல்வியைப் பெற்றனர்.

உலகப் புகழ்பெற்ற கணித மேதை செங்கோட்டை எஸ்.எஸ்.பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது ஐன்ஸ்டீன் அழைப்பை ஏற்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள 1950-ல் விமானத்தில் சென்றபொழுது எகிப்தில் கெய்ரோ அருகில் விமான விபத்தில் இறந்தார். இவருடைய கணித ஆராய்ச்சிகள் பிரசித்தி பெற்றவையாகும்.

பல்வேறு தமிழக சைவ மடங்களின் ஆதீன கர்த்தாக்களாக இம்மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமயப் பணியை ஆற்றியுள்ளனர். திருவாவடுதுறை சன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர் மேலகரத்தைச் சார்ந்தவர்.

இம்மாவட்டத்தைச் சார்ந்த நீதிபதிகளான நாகம்பட்டி அழகிரிசாமி, ரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். நீதிபதி அழகிரிசாமி தமிழக அரசின் வழக்கறிஞராகவும், முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் தனிச் செயலராகவும் பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் ஓர் இலக்கிய கர்த்தாவாகத் திகழ்ந்து, ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல், பல்வேறு இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நெல்லையைச் சேர்ந்த திருமதி பத்மினி ஜேசுதுரை முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x