Published : 14 Jun 2025 11:09 AM
Last Updated : 14 Jun 2025 11:09 AM

திருநெல்வேலியில் பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 29

சோ.அழகர்சாமி, ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு

தூத்துக்குடி கோரல் மில், விக்கிரமசிங்கபுரம் ஆலை வேலை நிறுத்தம் போன்ற நிகழ்வுகள் நெல்லை மண்ணில் பொதுவுடைமைக் கொள்கைக்கு வித்திட்டன. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரியும் பொதுவுடைமை கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தொடக்கத்தில் பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, தூத்துக்குடி வி.,சங்கரநாராயணன், சிந்துபூந்துறை சோ.சண்முகம் பொதுவுடைமைக் கொள்கைக்கு இங்கு அடித்தளம் போட்டவர்களாவார்கள்.

இவர்களுடன் ஆர்.நல்லகண்ணு, ஏ.நல்லசிவன், சு.பாலவிநாயகம், தொ.மு.சி.ரகுநாதன், வி.மீனாட்சிநாதன், சாத்தான்குளம் ராகவன், கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமி, டி.ஜி.சுப்பிரமணியன், கழுகுமலை கே.அழகிரி, கோடங்கால் கே.கிருஷ்ணசாமி, தி.க.சி., இலஞ்சி ஐ.வி.ராமகிருஷ்ணன், பூதலப்பபுரம் ஆர்.வேலுசாமி தேவர், பி.பாவநாசம், கடையநல்லூர் ஆர்.ஏ.சக்கையா, எம்.பாண்டியன், பி.சாமிநாதன், சொக்கலிங்கம் பிள்ளை, ஆர்.வி.ஆனந்த கிருஷ்ணன், உடன்குடி பூவலிங்கம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.முருகானந்தம், செங்கோட்டை காமாட்சி, பெ.சீனிவாசன், சொர்ணம் டி.கே.சுவாமிதாஸ், சிவகிரி செல்லையா, எஸ்.எஸ்.தியாகராஜன், சம்பத் போன்ற எண்ணற்றோர் இந்த மண்ணில் பொதுவுடைமை இயக்கம் வளரத் தங்களையே அர்ப்பணித்தனர். ப.மாணிக்கம் பொறுப்பு எடுத்து இப்பகுதியில் கட்சிப் பணியாற்றினார்.

எஸ்.வி.காட்டே, ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், கே.அனந்த நம்பியார், ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன், ஐ.மாயாண்டி பாரதி போன்ற தலைவர்கள் நெல்லைக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கம் வளரப் பாடுபட்டனர்.

முதன்முதலாக, கம்யூனிஸ்ட் இயக்கம் ராமச்சந்திர நெடுங்காடியின் ஒத்துழைப்போடு ஐந்து இடங்களில் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டன. மாவட்டக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் மாநாடு சாம்பவர் வடகரையில் நடைபெற்றது. அம்பாசமுத்திரம், ஏ.சுப்பையா முதல் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கோவில்பட்டியை பூர்விகமாகக் கொண்டு ஆத்தூரில் பிறந்த சங்கரய்யா ஆங்கிலேயரை எதிர்த்துப் பிரச்சாரப் பயணமாக நெல்லைக்கு வந்தபொழுது, நெல்லையில் உள்ள இந்து, ஜான்ஸ், சேவியர் போன்ற கல்லூரிகளின் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதை அறிந்து தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்த சங்கரய்யா, செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல்வரைச் சந்தித்து மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லும்போது, சங்கரய்யா மீது ஆங்கில அரசின் காவல் துறை கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியது. அதேநேரம், இந்துக் கல்லூரியின் அன்றைய முதல்வர் அலெக்சாண்டர் ஞானமுத்து, ஆங்கிலப் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் ஆகியோர் தங்கள் கல்லூரி மாணவர்களிடம் நிதானமாகப் பேசி அவர்களை ஒழுங்குபடுத்தினர்.

1949-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது நெல்லை சதி வழக்கில் ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், மாயாண்டி பாரதி, ஏ.நல்லசிவன்,பொண்ணு, கிருஷ்ண கோனார், சேவியர் சண்முகவேல், செல்லையா நாடார், ஞான ஒளிவு, பீர் இஸ்மாயில், ஏ.ராமச்சந்திரன், ஜேக்கப், சுப்பையா ரெட்டி, அழகிரி தேவர், அய்சக், சுடலைமுத்து, எஸ்.எஸ்.மாணிக்கம், டி.பி.ராமலிங்கம், டி.ஜி.சுப்பிரமணியன், வேலுசாமி தேவர், ஆர்.வி.அனந்தகிருஷ்ணன், சப்பாணி முத்து, ஷேக் சுலைமான், பாஸ்கரன், கே.பி.எஸ்.மணி, சொர்ணம், பலவேசம், டோனாவூர் பெருமாள், வி.ஆர்.சுப்பையா முதலியார், வேலாயுதம் பண்டிதர், கொன்ன சிவனார், புலவர் ராமையா ஆகியோர் மீது மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியும் விதத்தில், ரயில்வே பாலங்கள், தண்டவாளங்கள், தந்திக் கம்பங்களைத் தீ வைத்துத் தகர்த்து, பொதுச் சொத்துகளைச் சீர்குலைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படச் சதி செய்ததாக அன்றைய காங்கிரஸ் அரசு வழக்குத் தொடர்ந்தது.

இவ்வழக்கில் தொடக்கத்தில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கி.ரா., நாலாட்டின்புத்தூர் என்.ஆர்.சீனிவாசன் போன்றோர் பெயர்களும் பழிவாங்கும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்டன. இதை அறிந்த டி.கே.சி தன்னுடைய உதவியாளரிடம் “இடைசெவல் நாயக்கரை (கி.ரா) எதுக்குய்யா சேர்த்தாங்க?” என்று கேட்டுள்ளார். விவரங்களை அறிந்தவுடன் அன்றைய முதலமைச்சர் குமாரசாமி ராஜாவைத் தொடர்பு கொண்டு “அரசாங்கம் எழுத்தாளர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் ஏன் திட்டமிட்டுச் சதி வழக்கு என்று போட்டுள்ளது?” என்று டி.கே.சி. கடுமையான குரலில் பேச, குமாரசாமி ராஜா தன்னுடைய உதவியாளர் சுப்புராஜாவை அழைத்து, கி.ரா. பெயரை நெல்லை சதி வழக்கிலிருந்து நீக்கினார்.

மொத்தம் 97 பேரில் கைதாகாத கே.பாலதண்டாயுதம், மீனாட்சி நாதன், பயில்வான் அருணாச்சலம் ஆகிய மூவர் மீது தனியாக 1953-இல் விசாரணை நடத்திப் பாலதண்டாயுதம், மீனாட்சி நாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை, பாளை சண்முகம் ஆகியோர் வாதாடினார்கள். 92 பேர் மீது ஓராண்டு விசாரணை நடத்தி 78 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேர் தண்டிக்கப்பட்டனர். ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, வேலுசாமி தேவர், வேலாயுதம், கே.பி.எஸ்.மணி, வி.அழகுமுத்து, ஐ.மாயாண்டி பாரதி, ஆர்.கிருஷ்ண கோனார், எம்.பொண்ணு ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு ஐந்து ஆண்டு தண்டனையும், ஒருவருக்கு இரண்டு ஆண்டு தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டு தண்டனையும் வழங்கப்பட்டன.

நெல்லை சதி வழக்கில் குற்றவாளிகளைத் தேடி நெல்லை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, கோவில்பட்டி, எட்டையபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற காவல் துறையினரால் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடுகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

1940-இல் நாங்குநேரியில் நல்லகண்ணு, வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, பேராசிரியர் வானமாமலை ஆகியோர் அக்ரகாரம் நுழைவுப் போராட்டம் நடத்தினார்கள். அதேபோன்று களக்காட்டில் நல்லகண்ணு, முத்துமாணிக்கம் போன்றோர் நடத்தினர். ரெட்டியார்பட்டி, முனிஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி போன்ற ஊர்களில் நடைபெற்ற போராட்டங்களில் நல்லகண்ணு ஈடுபட்டார்.

ராமநதி - கடநா நதியில் அணை கட்ட வேண்டுமென்று காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் நல்லகண்ணு நடத்திய போராட்டம் நெல்லை மாவட்டத்தில் அனைவரும் அறியச் செய்தது. இந்நிலையில், அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ராமையா, அணை கட்டும் திட்டம் பணி தொடங்கப்படும் என அறிவித்தார். 1966-ல் கோவில்பட்டியில் நல்லகண்ணுவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகிரிசாமியும் சேர்ந்து மானாவாரி புஞ்சை நிலங்களுக்கு விளையாத காலத்தில் தீர்வை வசூல் செய்யக் கூடாது என்றும் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யக் கோரியும் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகள் வாங்கிய கடனுக்காக மாடுகளையும், ஏர்களையும், பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் அரசு ஜப்தி செய்தது. வீடுகளிலுள்ள கதவு நிலைகள், தட்டுமுட்டுச் சாமான்கள் கூட ஜப்திக்குட்பட்டன. கோவில்பட்டியிலுள்ள நாச்சியார்புரம் என்ற ஊரில் ஜப்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று ஜப்தி செய்த பொருள்களை அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியின் தாக்கத்தினால்தான் கி.ரா. தன்னுடைய படைப்புகளில் இந்த ஜப்தி நடவடிக்கைகளைக் கடுமையாக சாடி விமர்சிப்பார்.

கி.ரா. பொதுவுடைமைக் கட்சியில் அச்சமயத்தில் இருந்தவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோவில்பட்டி சதி வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நொச்சிகுளம் கிராம சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் நல்லகண்ணுவும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் முருகானந்தமும் ஈடுபட்டிருந்தனர்.

1950-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி நெசவாளர்களுக்கெனச் சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதிகளில் கஞ்சித் தொட்டியைத் தொடங்கியது. முதல் பொதுத் தேர்தலில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை வெற்றி பெற்றார். அச்சமயம் தமிழகத்தில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தலைமறைவாக இருந்த மணலி கந்தசாமியும், சிறையிலிருந்த பி.ராமமூர்த்தியும் பிரச்சாரத்திற்குச் செல்லாமலேயே வெற்றி பெற்றனர். 1952-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் கட்சியைப் புனரமைக்கத் தலைமையிலிருந்து எம்.ஆர்.வெங்கட்ராமன் அனுப்பப்பட்டார்.

1953-இல் நெசவாளர் வறுமையும் பட்டினியும் குறித்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள் நெசவாளர் உரிமைக்காக திருவில்லிபுத்தூர் - அருப்புக்கோட்டையிலிருந்து சென்னை வரை 500 மைல் நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
1959-இல் திருநெல்வேலி சந்திப்பில் பொருநை நதியை ஒட்டியிருந்த கண்ணம்மன் கோயில் தெருவில் மாடியில் இருந்த கட்சி அலுவலகம் அனைவருக்கும் போதிக்கும் கலாசாலையாக இருந்தது.

தியாகி சங்கரலிங்கனார் 78 நாட்கள் சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தபோது ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய கோரிக்கையை எடுத்துச் சொன்னார். பி.ராமமூர்த்தி சங்கரலிங்கனாரைச் சந்தித்துப் பேசினார்.

1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட பின்பு சங்கரநாராயணன், சு.பாலவிநாயகம், எம்.பாண்டியன், ஏ.நல்லசிவன், டி.ஆர்.சுப்பிரமணியம், சொர்ணம், டி.கே.சாமிதாஸ், மாப்பிள்ளை சாமி, எஸ்.சக்தி, ஆர்.வி.அனந்தகிருஷ்ணன் போன்றோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆர்.நல்லகண்ணு, எஸ்.அழகிரி சாமி, என்.டி.வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி போன்ற பலர் தங்கள் பணிகளை ஆற்றினர்.

அம்பையில் பிறந்த தொழிற்சங்கத் தலைவர் நல்லசிவன் பிற்காலத்தில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளரானார். ப.மாணிக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் ஆனார். திருவைகுண்டத்தில் பிறந்த ஆர்.நல்லகண்ணு கட்சியின் மாநிலச் செயலாளரானார். நாங்குநேரி, அம்பாசமுத்திரத்தின் அருகே உள்ள கோடாரங்குளம் போன்ற பகுதிகளில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம், நாங்குநேரி மடம் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலக் குத்தகைப் பிரச்சினையில் ஏழை விவசாயிகளுக்காக நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தலைமறைவான கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நெல்லை மண் அவர்களைப் பாதுகாக்கும் சரணாலயமாக இருந்தது.

வாகைத்தாவில் கி.ரா., வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி ஆகியோருக்கு பி.சீனிவாசராவ் கட்சி வகுப்புகள் எடுத்தார். பிச்சைக்குட்டி கோவில்பட்டியில் பஸ் தொழிலாளர் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார்.

சங்கரன்கோவில் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கக் குருவிகுளம், திருவேங்கடம், கழுகுமலை போன்ற கிராமப் பகுதிகளில் பணிகளை எம்.பாண்டியன் மேற்கொண்டார். சிவகிரி பகுதியில் பல எதிர்ப்புகளை மீறியும் கட்சிப் பணிகளை அயராது மேற்கொண்டார். நெல்லை மண் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தது.

நெல்லை மண்ணில் திராவிட இயக்கங்கள்

திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, 1917 நவம்பர் 30, டிசம்பர் 1-ல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநெல்வேலி கணபதி விலாஸ் தியேட்டரில் தெலப்ரோல் ஜமீன்தார் தலைமையில் நடைபெற்றது. சிங்கம்பட்டி ஜமீன்தார் 29-வது பட்டம் திருமிகு திவான் பகதூர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி வரவேற்புக் குழுத் தலைவராகப் பெரும் பணியாற்றினார்.

நெல்லை மண் திராவிட இயக்கத்துக்குப் பல வகையில் தொடர்புடைய பகுதியாகும். பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இந்த மாவட்டத்தில் சுயமரியாதை பிரச்சாரத்தில் வலம் வந்தனர். பெரியாருடன் சிவகாசியில் பிறந்த தவமணிராசன் அவ்வப்போது இம்மாவட்டத்துக்கு வருவார். 1920-ல் நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். தூத்துக்குடி நகரம் திராவிடர் கழகத்துக்குத் தொட்டிலாக இருந்தது.

1931-இல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டைத் தந்தை பெரியார் நடத்திய பொழுது, அம்மாநாட்டை இந்திரா பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். 1937-இல் நெல்லையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆதி திராவிடர் மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் வி.ஞானமுத்து நாடார், தூத்துக்குடி ஏ.எம்.எஸ். அண்ணாமலை நாடார், எம்.வைகுண்டம், பி.வி. பொன்னுசாமி போன்றோர் 1939-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் 1948, மே மாதத்தில் நடைபெற்ற 18-வது திராவிடர் கழக மாநாட்டில் அறிஞர் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அப்பொழுது பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. கே.வி.கே.சாமி, அந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார். கே.வி.கே. சாமியை மாநாட்டில் பெரியார் பெரிதும் பாராட்டினார். இம்மாநாட்டில்தான் திராவிட நாட்டைப் பெற கருஞ்சட்டைப் படை அமைப்பதைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தி.மு.க.வை அண்ணா தொடங்கிய பின் தூத்துக்குடியிலும், கோவில்பட்டியிலும் கலைஞர் தொடங்கி வைத்தார். 26.08.1950-இல் கோவில்பட்டியில் இருநாள் நடைபெற்ற நெல்லை மாவட்ட தி.மு.க. முதல் மாநாட்டுக்குக் கலைஞர் தலைமையேற்றார்.

இந்த மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ‘சந்திரமோகன்’ நாடகத்தில் நடித்தார். நாவலர் நெடுஞ்செழியன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஈ.வெ.கி.சம்பத், என்.எஸ்.கிருஷ்ணன், மதியழகன், என்.வி.நடராஜன், கே.ஆர்.இராமசாமி, அரங்கண்ணல் போன்றோர் பங்கேற்றனர். டி.கே.சீனிவாசன் மாநாட்டைத் திறந்து வைத்தார். இம்மாநாடு வெற்றி பெற டி.டிபிள்யூ.டி.துரைசாமி, ஈ.வெ.ஆ.வள்ளிமுத்து, பாலகிருஷ்ணன், கலிங்கன், ஆ.திராவிடமணி, எஸ்.நடராஜன், கலைமணி காசி, எஸ்.பி.துரைசாமி போன்றோர் நெல்லை மாவட்டக் கழக நிர்வாகிகளோடு சேர்ந்து சிறப்பாக நடைபெற பாடுபட்டனர்.

ஆகஸ்ட் 27-இல் கோவில்பட்டியில் கூடிய தி.மு.க. செயற்குழு இடஒதுக்கீடு சம்பந்தமாக ‘கம்யூனல் ஜி.ஓ.’ பற்றி விவாதித்தது. இதைக் குறித்து தக்கதோர் போராட்ட திட்டங்களும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ரயில்வே நிலைய பலகைகளில் இந்தி இருப்பதை அழிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய காங்கிரஸ் அரசு, ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கே.வி.கே.சாமி தலைமையில் கலந்துகொண்ட 68 தி.மு.க.வினர் மீது பொய்யான சதி வழக்கு போட்டது. இவ்வழக்கு நெல்லை அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதை அண்ணா ‘தூத்துக்குடி சதி வழக்கு’ என்று குறிப்பிட்டார்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > பெருந்தலைவர் காமராஜர் மனதில் உதித்த உன்னத திட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 28

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x