Published : 13 Jun 2025 08:23 AM
Last Updated : 13 Jun 2025 08:23 AM
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘நாம் ஏன் இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘‘இந்தி கற்றுக் கொள்வதில் பலன் இருக்கிறது. அது நம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகியவை பிராந்திய மொழிகள். அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த சமரசமும் இல்லை. அதேநேரம் கூடுதலாக இந்தி கற்றுக் கொண்டால், பெருமைக்குரிய நம் நாட்டு மக்கள் அனைவரையும் அது ஒன்றிணைக்கும். மொழி நம்மை ஒன்றுபடுத்தட்டும்; பிளவுபடுத்த அனுமதிக்க வேண்டாம்’’ என்று அவரது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘‘டில்லியில் வசிக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு மக்கள் சரளமாக இந்தி பேசத் தெரிந்து கொண்டதால், அங்கு மேலோங்கி நிற்கின்றனர். எனவே, நாம் ஏன் இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது? தாய்மொழி அவசியம். அதேநேரம், வடமாநில மக்களுடன் நாம் தேசிய அளவில் இணைந்து செயல்பட தேசிய மொழியை நாம் அங்கீகரித்து கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. தெலுங்கு தாய்மொழி; இந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி என்றிருப்பதில் தவறில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிக்கப்படும் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை கிளறிவிட்டுள்ளது. தேசிய மொழி இந்தி என்ற அவரது கருத்தை தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து தலைவர்களால் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தாய்மொழி, இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி கொள்கையையே ஆந்திர முதல்வரும் வேறு பாணியில் வலியுறுத்தியுள்ளார். எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என்ற நிலையை தமிழகம் உறுதியாக பலமுறை தெரிவித்துவிட்டது. பாஜக-வுடன் கூட்டணியில் உள்ள தலைவர் என்பதால் அவர் இவ்வாறு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசுகிறார் என்று சாதாரணமாக அவரது கருத்தை புறந்தள்ளிவிட முடியாது.
ஆந்திர மாநிலத்தை தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முன்னணி நிலைக்கு கொண்டு வந்து, இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய தொலைநோக்கு திட்டங்களை வகுத்தவர் என்ற முறையில் அவர் சொல்லும் கருத்துக்கு செவிசாய்த்து விவாதிப்பதே சிறந்தது.
இதுவரை இந்தி மொழியை கற்றுக் கொள்ளும்படி வடமாநில தலைவர்கள் வற்புறுத்துவதும் அதை தமிழகம் உள்ளிட்ட தென்மாநில தலைவர்கள் நிராகரிப்பதும் தான் வாடிக்கையான செயலாக இருந்து வந்தது. தற்போது தென்மாநிலங்களில் முக்கிய அரசியல் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு போன்றோரே இந்தி மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? என்ற கேள்வியை முன்வைக்கும்போது அதுபற்றி ஒரு கணம் சிந்திப்பதும், விவாதிப்பதும், இளைய தலைமுறையினரின் கருத்தை விரிவாக கேட்டறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதுமே சான்றோர் பணியாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT