Last Updated : 10 Jun, 2025 08:18 AM

2  

Published : 10 Jun 2025 08:18 AM
Last Updated : 10 Jun 2025 08:18 AM

கூட்டத்தை சமாளிக்க புதிய படை அவசியம்!

மும்பையில் திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கிடையே நடந்த விபத்தில் 4 ரயில் பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற செய்தி ரயில் பயணிகள் மட்டுமின்றி இதர பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிரெதிரே சென்ற இரண்டு ரயில்களிலும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் இருந்துள்ளது. அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பை ஒன்றுக்கொன்று உரசியதில் பயணிகள் கீழே விழுந்து இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.

மும்பையில் பொதுவாகவே ரயில் பயணிகளின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட அதிகம். அலுவலகம் சென்று வருவோருக்கு புறநகர் ரயில்களே பிரதான பொதுப் போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 61 லட்சம் ரயில் பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்றால் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தினந்தோறும் ஏற்படும் நெருக்கடியை எளிதில் உணர முடியும்.

இந்தியாவில் இயங்கும் புறநகர் ரயில்களில் 1,000 பேர் உட்கார்ந்து செல்ல முடியும்; 6,000 பேர் வரை நின்று பயணிக்க முடியும். ஆனால், மும்பை ரயில்களில் இந்த எண்ணிக்கையைத் தாண்டி பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு, தொங்கியபடி பயணித்து வருகின்றனர். இந்த அளவுக்கு ரயிலில் பயணிகள் பயணம் செய்ய அனுமதிப்பதே தவறான நடைமுறை.

நடந்துள்ள சம்பவத்தையடுத்து, தற்போது இயங்கும் புறநகர் ரயில்கள் மற்றும் புதிதாக தயாரிக்கப்படும் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு, மூடிய நிலையில் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், கதவுகளை திறக்க விடாதபடி, மூட முடியாதபடி பயணிகள் முண்டியடிக்கும் நிலையை எப்படி சமாளிப்பது? அத்தகைய சூழ்நிலையை திறமையான கூட்ட நெரிசலை சமாளிக்கும் உத்திகளைக் கொண்டே நிர்வகிக்க வேண்டும்.

இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை கடந்துவிட்ட நிலையில், கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆங்காங்கே அடிக்கடி நடக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், பொது இடங்களில் கூட்டத்தை சமாளிக்கும் நடைமுறை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் தான் பல துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் கூட்டத்தை நிர்வகிக்க தனி நடைமுறைகளை உருவாக்க வேண்டும். அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தையும் விலாசமான இட வசதிகளுடன் அமைக்க வேண்டும், காலி நிலப்பரப்பைக் கொண்ட சதுக்கங்கள், பூங்காக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட மக்கள் தொகை எண்ணிக்கையை மனதில் கொண்டு அடிப்படை கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்.

மும்பை ரயில் விபத்து சம்பவத்தைப் பொறுத்தமட்டில், பயணிகளின் தேவைக்கேற்ப ரயில்கள் இயங்கவில்லை என்பதே கூட்ட நெரிசலுக்கான அடிப்படையாகும். போதுமான அளவில் ரயில்களை இயக்குவது மட்டுமின்றி, மக்கள் தொகை வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக பொதுப் போக்குவரத்துவதற்கும், சாலை வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, முறையாக நிர்வகிக்க, அதிவேகத்தில் இயங்கும் தனிப்படை அவசியம் என்பதையே நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x