Published : 08 Jun 2025 10:50 AM
Last Updated : 08 Jun 2025 10:50 AM
தியாகசீலர் பெருந்தலைவர் காமராஜர், அனைவருக்கும் கல்வி வேண்டுமென்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்புக்கு அடித்தளமான, கல்விக் கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தைத் ‘தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய அமரகவி பாரதி பிறந்த எட்டையபுரத்தில் தொடங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ‘ஆர்.கே.’ என அழைக்கப்பட்ட ரா.கிருஷ்ணசாமி நாயுடு உடன் இருந்தார். இவர் சென்னா குளத்தைச் சேர்ந்தவர். இந்த சத்துணவுத் திட்டம் ஆரம்பித்ததைக் குறித்து கி.ரா. ஒரு கருத்தைக் கூறினார். ஒருசமயம் கல்வி இயக்குநராக இருந்த என்.டி.சுந்தரவடிவேலு கோவில்பட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபொழுது கி.வேங்கடசுப்பிரமணியம் நெல்லை மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக இருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு என்.டி.சுந்தரவடிவேலு தன்னுடைய புதல்வர் திருவள்ளுவரைத் தன்னுடன் அழைத்து வந்தபொழுது, மாலைகளைப் பொதுமக்கள் போடும் பொழுது அதைப் பெற்றுக் கொண்டவுடன், அந்த மாலைகளை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்து, திருவள்ளுவர் தன் தகப்பனார் என்.டி.எஸ்.ஸிடம் ‘ஏன் அப்பா... இந்த மாலைகளை வீண் செய்கிறார்கள்? இதற்கு நன்கொடையாகப் பணத்தைக் கொடுத்தால் ஏழை மாணவர்களுக்கு உணவு கொடுக்கலாமே’ என்று அறியாப் பருவத்தில் சொன்னதைக் கேட்ட என்.டி.சுந்தரவடிவேலுக்கு இந்தக் கருத்து தாக்கத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே அன்றைய முதல்வர் காமராஜருக்கும் இதுகுறித்து யோசனைகள் இருந்தபொழுது என்.டி.சுந்தரவடிவேலு சென்னைக்குச் சென்றவுடன் ஒன்றுமறியாச் சிறுவன் திருவள்ளுவர் சொன்ன கருத்தைச் சொல்லவும், காமராஜர் மிக மகிழ்ச்சியோடு ‘ஏற்கெனவே என்னுடைய மனதில் இருக்கின்றது. இதை எட்டையபுரத்திலேயே தொடங்கலாம்’ என்று கூறினார் என்பது செய்தி.
மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த கி.வேங்கடசுப்பிரமணியம் வேறு மாவட்டத்தில் பிறந்தாலும் கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்பொழுது ஆசிரியர்களாக இருந்த ருத்ரப்பசாமி, துரைராஜ் நாயுடு ஆகியோர் வேங்கட சுப்பிரமணியத்துக்கு ஒப்பற்ற ஆசான்களாகத் திகழ்ந்ததாகவும், அவர்கள் மாணவர்களை அரவணைப்பதிலும், உரிமையோடு கண்டிப்பதிலும் மாணவர்கள் மிகவும் பக்குவப்பட்டனர் என்றும் இப்பகுதியில் பல மாணவர்கள் அக்காலத்தில் இந்த இரண்டு ஆசிரியர்களால் உயர் கல்வியைப் பெற்றனர் என்றும் வேங்கட சுப்பிரமணியம் கூறுவார்.
நெல்லை மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்து, மாநில அளவில் கல்வித் துறையில் பல பொறுப்புகளைப் பெற்று இந்தியாவின் திட்டக் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். வேங்கட சுப்பிரமணியம் நல்ல கல்வியாளர், எழுத்தாளர். புதுவை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றினார். நவம்பர் 10, 2004-இல் காலமானார்.
1947-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநிலத்தின் அரசு சின்னமாகத் திருவில்லிபுத்தூர் கோபுரத்தை அறிவிக்க மத்திய அரசைப் பல்வேறு நிலையில் வற்புறுத்தி, வெற்றி கண்டார். ஓமந்தூர் ரெட்டியாருக்கும், முன்னாள் முதல்வர் டி.பிரகாசத்துக்கும் நடைபெற்ற கடுமையான போட்டிக்குப் பிறகு ரெட்டியார் வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்த ஓமந்தூரார் ஆட்சியைத் தூய்மையாக நடத்த வேண்டுமென்பதற்காகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபொழுது, அவர்கள் குற்றம் செய்துள்ளனர் என்று தெரிந்து கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்தச் செய்தி டெல்லியில் நேரு வரை எட்டி விட்டது. ஏற்கெனவே, காங்கிரசில் இருந்த சிலர் ஓமந்தூரார் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். இதைப் பொறுக்காமல் ரெட்டியாரே பதவியை விட்டு விலகினார். குமாரசாமி ராஜா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபொழுது, காமராஜர் ஆலோசனையின் பேரில் சி.சுப்பிரமணியம், தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் குமாரசாமி ராஜாவைச் சந்தித்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். முதல்வரான ராஜா, ராஜபாளையம் பகுதியை வளப்படுத்தி, பிற்காலத்தில் ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார். ஓமந்தூர் ரெட்டியாரும், குமாரசாமி ராஜாவும் அன்றைக்குச் சென்னை மாகாணப் பிரதமர்கள் (பிரீமியர்) என்றுதான் அழைக்கப்பட்டனர்.
நான் பிறப்பதற்கு முன்பு, எங்களுடைய வீட்டுக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வந்ததாக எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சொன்னதுண்டு. திருநெல்வேலி மாவட்ட கட்சிப் பணிக்காக வந்த ஓமந்தூரார், கோவில்பட்டி நிகழ்ச்சியை முடித்துவிட்டு கழுகுமலை வந்து , எங்கள் வீட்டில் மதிய உணவருந்தி சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் திருவேங்கடம் வழியாக சங்கரன்கோவில், தென்காசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றதாகக் கூறுவார்கள்.
காமராஜர்தான் சென்னை மாநில முதல் முதல்வராகப் பணியை மேற்கொண்டார். ஓமந்தூரார், குமாரசாமி ராஜா ஆகியோரைப் பிரதமர் பொறுப்புக்குக் கொண்டு வந்தவர் காமராஜர். இதே பெருந்தலைவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமர்கள் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோரையும் பிரதமர் ஆக்கினார். எனவே ‘கிங் மேக்கர்’ என்பது அவருடைய அரசியல் வாழ்க்கையில் பல சமயங்களில் நடைபெற்றுள்ளது.
‘கே.பிளான்’ என்ற உயர்ந்த திட்டத்தைத் தியாக மனதோடு ஏற்று பொறுப்புகளைத் தூக்கி எறிந்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அரசியல் தலைவர்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 1940-இல் வேலூர் சிறையில் இருந்தபொழுது விருதுநகர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களில் விடுதலை ஆனவுடன் அப்பதவியை உடனே உதறினார்.
பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-இல் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் காமராஜர் இருந்தார். அவர் மறைவுக்குப் பின் அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தி.மு.க. பொறுப்பேற்றிருந்த பொழுது, சென்னையில் காமராஜருக்குச் சிலை வைக்கப்பட்டு, பண்டித நேருவால் திறந்து வைக்கப்பட்டது. பின்னாளில் அவர் உருவம் பொறித்த நூறு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை மத்திய அரசு வெளியிட்டது.
தற்பொழுதுள்ள விருதுநகர் மாவட்டம், அதை ஒட்டிய நெல்லை மாவட்டத்தில் ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தொடங்க, சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ராமசாமி நாயுடு உதவியாக இருந்தார்.
சர்வோதயா, பூதான இயக்கங்கள்
சர்வோதயா, பூதான இயக்கங்களை டாக்டர் ஜெ.சி.குமரப்பா, அரியநாயகம், டாக்டர் அறம், சேரந்தையா பிள்ளை, திருவில்லிபுத்தூர் டி.டி.திருமலை போன்றவர்கள் வளர்த்தார்கள். வினோபாவும், அவருடைய சீடர்களும் இந்த மாவட்டத்துக்குள் பயணம் மேற்கொண்டார். சித்திரம்பட்டி சுப்பா நாயக்கர் வினோபாவுக்கு மிக நெருங்கியவராக இருந்தார். கழுகுமலையில் சர்வோதயா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
எம்.ஜி.சங்கர ரெட்டியார், சுப்பிரமணியம், வி.பொன்னையா, வி.முருகன், ஜான் கட்டார், வி.ஆர்.சங்கரசுப்பு, எம்.முத்துகிருஷ்ணன், வீரசிவம், வேலாயுதம், சிவசுப்பிரமணியத் தேவர், திருப்பதி ரெட்டியார், ஆர்.டி.சுப்பிரமணியம் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கன. முனைஞ்சிபட்டி சங்கர ரெட்டியார், தன் 150 ஏக்கர் நிலத்தை வினோபாவிடம் தானமாக வழங்கினார். அச்சமயம் ராமநாதபுரம் ராஜா 1,157 ஏக்கர் நிலத்தைப் பூதான இயக்கத்துக்கு வழங்கினார்.
தியாக சீலராக இன்றைக்கு நமக்கு காட்சியளிக்கிற சர்வோதய ஜெகநாதன், நெல்லை மாவட்டத்தில் குருவிகுளத்தில் ஆசிரியப் பணியை மேற்கொண்டபோது காந்தியார் அப்பகுதிக்கு பயணம் செய்த நேரத்தில் கழுகுமலையில் தன் குடும்பத்தார் தனக்கு அளித்த தங்கச் சங்கிலியை தேச விடுதலைப் போராட்டத்துக்காக தானமாக காந்தியாரிடம் அளித்தார். சங்கிலியை சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்தில் காந்தியார் ஏலம் விட்டபோது பொதுமக்கள் ரூ.5000-க்கு அதை எடுத்துக் கொண்டனர். அது அக்காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.
1937-இல் முதலில் அமைக்கப்பட்ட இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள்:
குமாரசாமி ராஜா (திருவில்லிபுத்தூர் - பொது), எல்.சட்டநாத கரையாளர் (கோவில்பட்டி - பொது), டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளை (நெல்லை - பொது), ஏ.ஆர்.எஸ்.துரைசாமி நாடார் (தூத்துக்குடி - பொது), ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா (நெல்லை - இந்தியக் கிறித்துவர்), லட்சுமி அம்மாள் (சேரன்மாதேவி - பொது), வி.எல்.டி.ஷேக் மன்சூர் தரகனார் (நெல்லை - முகமதியர்), திருமதி ஜெபமணி மாசிலாமணி (நெல்லை - பெண், இந்தியக் கிறித்துவர்).
1946-இல் அமைக்கப்பட்ட இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள்:
கு.காமராஜர் (சாத்தூர் - பொது), குமாரசாமி ராஜா (திருவில்லிபுத்தூர் - பொது, கிராமப்புறம்), எல்.சட்டநாத கரையாளர் (கோவில்பட்டி - பொது), பழையக் குடும்பனார் (கோவில்பட்டி - பொது), பி.எஸ்.சங்கரசுப்பிரமணிய முதலியார் (திருநெல்வேலி பாளையங்கோட்டை - பொது), முகமது உசேன் சாகிப் (நெல்லை - முகம்மதியர்), லட்சுமி அம்மாள் (சேரன்மாதேவி - பொது, கிராமப்புறம்), டேனியல் தாமஸ் (நெல்லை - கிறித்துவர்), எம்.துரைராஜ் பாண்டியன் (நெல்லை - பொது), திருமதி ஜெபமணி மாசிலாமணி (நெல்லை - இந்தியக் கிறித்துவர்).
விடுதலைக்குப் பின் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் (1952 - 1957):
எஸ்.செல்லப்பாண்டியன் (சேரன்மாதேவி), எஸ்.டி.ஆதித்தன் (திருச்செந்தூர் - பொது), கே.ராமசாமி தாஸ் (கோவில்பட்டி - பொது), ஆர்.எஸ்.ஆறுமுகம் (நெல்லை - தனி), வி.ஆறுமுகம் (நெல்லை - தனி), வி.வி.ராமசாமி (விருதுநகர் - பொது), விருதுநகர் இடைத்தேர்தலில் கே.சண்முகம் வெற்றி பெற்றார். எஸ்.ஆர். ராமசாமி நாயுடு (சாத்தூர் - பொது), பி.ஊர்க்காவலன் (சங்கரன்கோவில் - தனி), எம்.ஜி.சங்கர் (நாங்குநேரி - பொது), ஜே.எல்.பி. ரோச் விக்டோரியா (தூத்துக்குடி), எம்.சின்னத்தம்பி தேவர் (ஆலங்குளம்), ஐ.கே.சுப்பிரமணிய பிள்ளை (தென்காசி), எம்.எஸ்.செல்வராஜ் (சாத்தான்குளம்), பி.செல்வராஜ் (விளாத்திகுளம்), பி.சொக்கலிங்கம் (அம்பாசமுத்திரம்), எஸ்.ஜெயராம ரெட்டியார் (அருப்புக்கோட்டை - சீர்திருத்த காங்கிரஸை அடிகோலியவர்), வைகுண்டம் (திருவில்லிபுத்தூர் - தனி), டி.கே.ராஜ் (திருவில்லிபுத்தூர் - பொது).
1952 தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும், ‘மணிக்கொடி’ ஆசிரியரும், காங்கிரஸ் பிரச்சாரகருமான ஸ்டாலின் கு.சீனிவாசன் போட்டியிட சிபாரிசு செய்யப்பட்டு, தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்பொழுது அவருக்குக் காங்கிரஸ் டிக்கெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பலர் எதிர்பார்த்தும் அவருக்குக் கிடைக்காத வாய்ப்பைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். பின்னாளில் திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராக சென்னை மாகாணப் பகுதிக்கு மத்திய அரசு இவரை நியமித்தது.
1954-இல் குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தவிர மற்ற எல்லாக் கட்சிகளின் ஆதரவு பெற்று அன்றைக்கு முதல்வராக இருந்த காமராஜர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பில் ஆகஸ்ட் 25, 1954-ஆம் நாளன்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர், குடியாத்தம் தேர்தல் பணிகள் போல முன்னாள் காங்கிரஸ்காரர்கள் மனமாச்சரியங்களை விடுத்து இணைய வேண்டும் என்றும், வருகின்ற ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பேசியது பல்வேறு விவாதங்களுக்குள்ளானது.
விருதுநகர் தொகுதியில் காமராஜர் 1957-இல் போட்டியிட்ட பொழுது அவருக்கு எதிராக, கோவை வி.கே.பழனிசாமி கவுண்டர், அருப்புக்கோட்டை ஜெயராம செட்டியார், செங்கல்பட்டு வி.கே.ராமசாமி, கே.டி.கோசல்ராம், எஸ்.எஸ்.மாரிசாமி, டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பணியாற்றுவார்கள் எனவும், அவர்களோடு சாத்தூர் ‘எஸ்.ஆர்.’ என்று அழைக்கப்பட்ட எஸ்.ராமசாமி நாயுடுவும் சேர்ந்து காமராஜருக்கு எதிராகச் செயல்படுவார் என்றும் செய்திகள் உலவியபொழுது, எஸ்.ஆரைப் பார்க்க அவருடைய வகுப்புத் தோழரான சி.சுப்பிரமணியம், சாத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சி.எஸ். அங்கு எஸ்.ஆரைச் சந்தித்தவுடன் அம்மாதிரியான நடவடிக்கைகள் எதுவும் காமராஜருக்கு எதிராக இல்லை என்பது தெரியவந்தது. பல்வேறு சந்தேகங்களை வீழ்த்திக் காமராஜர் வெற்றி பெற்றார்.
இத்தேர்தல் காலத்தில் தூத்துக்குடி வருவாய்க் கோட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் வருவாய்த் துறையில் பயிற்சி பெற்றார். தன்னுடைய நூலில் இந்தத் தேர்தல் காலத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் கூடத் தேர்தல் பணிக்காகத் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் மராட்டிய ஆளுநராகவும், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குத் தனிச் செயலாளராகவும், இந்திய அரசிலும், பன்னாட்டு அளவிலும் பல பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர்.
(தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT