Published : 07 Jun 2025 10:11 AM
Last Updated : 07 Jun 2025 10:11 AM

நெல்லை மாவட்டத்தில் பற்றியெரிந்த சுதந்திர வேள்வி - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 27

கழுகுமலை முருகன் கோயில் | உள்படங்கள்: கே.டி.கோசல்ராம், எல்.சட்டநாத கரையாளர்

சுதந்திரப் போராட்ட போராளியும், காங்கிரஸ் முன்னோடியுமான கே.டி.கோசல்ராம் பிரச்சாரத்தால் திருச்செந்தூர் பகுதி சுதந்திரப் போரில் தீப்பிழம்பானது. 1930-ஆம் ஆண்டில் நடந்த கள்ளுக்கடை மறியல், உப்பு உற்பத்திப் போராட்டம் ஆகியவற்றை தலைமையேற்று கே.டி.கோசல்ராம் நடத்தினார். 1942 ஆகஸ்ட் 17-இல் வெள்ளாளன் விளைக்காட்டில் உள்ள மணல்தேரியில் கோசல்ராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆங்கில கருவூலத்தைத் தகர்க்க வேண்டும் என்று பெஞ்சமின் தீர்மானம் கொண்டுவந்தார்.

கே.டி.கோசல்ராமுக்குத் தோளோடு நின்று போராட்டத்தை முடுக்கிவிட்டவர் சீனந்தோப்பில் பிறந்த எம்.எஸ்.செல்வராஜ். கே.டி.கோசல்ராம் ஆங்கில அரசால் 1942-இல் கைது செய்யப்பட்டுக் கொக்கிரகுளம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இரவும் பகலும் இவருக்குக் கால் விலங்கு மாட்டப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் கே.டி.கோசல்ராம் திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, திருவைகுண்டம் கோவில்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார். இவர் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினராகவும், திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு சமயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிமுத்தாறு அணைத் திட்டம் வர உறுதுணையாக இருந்தார். அந்த அணையைக் கட்ட நிதி வசதி அரசிடம் இல்லையென்று சொன்னபோது, சில நாட்களிலேயே 25 லட்சம் ரூபாய் நிதி திரட்டித் தமிழக அரசிடம் வழங்கினார்.

எல்.சட்டநாதக் கரையாளர் (செங்கோட்டை) தன்னுடைய சத்தியாக்கிரகம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

1940-ஆம் வருஷம் டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் சத்தியாக்கிரகம் செய்வது நல்லது என்ற அபிப்பிராயத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அறிவித்திருந்தார். டிசம்பர் 4-ஆம் தேதி காலை நான் சத்தியாக்கிரகம் செய்வதென ஏற்பாடாகியிருந்தது. தென்காசி தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்ற முறையில் தீர்மானித்திருந்தேன். ஆனால், நவம்பர் 30-ஆம் தேதி தென்காசி தொகுதியின் அசெம்பிளி அங்கத்தினர் தென்காசி வந்து யுத்த எதிர்ப்பு விகிதங்கள் அனுப்புவதன் மூலம் சத்தியாக்கிரகம் செய்வதென தீர்மானித்தனர். எனவே, நான் என் தொகுதியான சங்கரன்கோவிலில் சத்தியாக்கிரகம் செய்வதென்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று.

டிசம்பர் 20-ஆம் தேதி திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கு நான் அடியில் கண்டபடி எழுதி, நேரில் அன்னார் காரியாலயத்தில் கொண்டுபோய் கொடுத்தேன்.

“வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி காலை பத்தரை மணிக்கு சங்கரநயினார் கோவில் கோமதி அம்மன் சந்நிதானத்தின் முன்பு யுத்த எதிர்ப்புக் கோஷங்கள் செய்யப் போகிறேன். காந்திஜியின் உத்தரவின்படி இந்த முறையில் நான் சத்தியாக்கிரகம் செய்யப் போகிறேன் என்பதைத் தங்களுக்கு அறிவிக்கிறேன்.”

செங்கோட்டையில் என் நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் நான் விடைபெற்றுக் கொண்டேன். ‘ஜெயிலுக்குப் போக விடை கொடு’ என்றால் யாருமே சந்தோஷமாக விடை கொடுப்பதில்லை. ஆனாலும் நான் ஜெயிலுக்குப் போகத்தான் வேண்டும் என்பதை மாத்திரம் எல்லோரும் உணர்ந்தார்கள்.

டிச.4-ம் தேதி காலை 9.30 மணிக்கு நான் சங்கரநயினார் கோவில் ரயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன். ஸ்ரீ எஸ்.என்.அம்பலவாண பிள்ளையும் அங்கு வந்திருந்தார். சரியாகப் பத்தரை மணிக்கு, கோமதி அம்மன் சந்நிதானத்தில் போய் நின்றேன். மூன்று வருஷங்களுக்கு முன்னால் இதே சந்நிதானத்தில்தான் முதன் முதலாகத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும்போது நான் சொன்னது எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

‘தெய்வ சந்நிதானத்தில் சொல்லுகிறேன். உங்கள் முன்னிலையில் சொல்லுகிறேன். காங்கிரஸ் கிழித்த கோட்டை நான் தாண்ட மாட்டேன்.’ அன்று நான் சொன்னது இதுதான். அன்று நான் பேசிய கூட்டத்துக்கும் இன்று நான் கண்ட கூட்டத்துக்கும் வித்தியாசம் இருந்தது.

கூட்டத்தில் மூச்சு விட்டால் சப்தம் கேட்கும். அவ்வளவு அமைதி. எனக்கும் உணர்ச்சி அதிகமாகத்தான் இருந்தது. சரியாகப் பத்தரை மணிக்கு நான் சொன்னதாவது:

“நான் கடமையைச் செய்துவிட்டேன். இனி போலீஸ்காரர்கள் தான் கடமையைச் செய்ய வேண்டும்” என்று ஞாபகமூட்டினேன். போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னை அணுகினார்கள்.

ஒரு காரில் அரை நிமிஷத்தில் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகப்பட்டேன். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு, கோவில்பட்டி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் முன்பு என்னை ஆஜர் செய்வித்து, போலீஸார் இரவு 8 மணி வரை ரிமாண்டு வாங்கினர். கோவில்பட்டியில் ரிமாண்டில் இருக்கும்போது நான் சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கரைச் சந்தித்தேன். அவருக்கு முப்பத்தி மூன்று வயதிருக்கும்.

பல மாதங்களாக திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் பயங்கரமான புயல் காற்றின் வேகத்தில், பல கொள்ளை, கொலைக் குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட இவர், பார்ப்பதற்கு ரொம்பவும் சாதுவாக இருந்தார். கறுப்பு நிறம், கம்பீரமான பார்வை. அரையில் ஒரு கதர் வேட்டி. உடம்பு முழுவதும் மறைக்கும்படி ஒரு கதர் சால்வை. இவர் இரண்டு ஜில்லாக்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களை ரிஸர்வ் போலீஸாரின் கையிலேயே ஒப்படைக்க வேண்டிய அளவுக்கு பீதி உண்டாக்கியவர். இவர் சம்பந்தமாக ரிஸர்வ் போலீஸார் கையாண்ட முறையைக் கண்டித்து திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்திரேட்டிடம் நான் முறையிட்டிருக்கிறேன்.

இதே கந்தசாமி நாயக்கர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு ஹைகோர்ட்டு உத்தரவை எதிர்பார்த்துத் திருச்சி சிறையில் ‘கண்டத்திலே’ வைக்கப்பட்டுப் பிறகு தூக்கிலிடப்பட்டார். இரவு 8 மணி வரை ரிமாண்டு செய்யப்பட்ட நான் ராத்திரியே ஒருவேளை விசாரணை நடக்குமென்று நினைத்தேன். ஆனால், மறுநாள் காலை வரை ஒன்றுமே நடைபெறவில்லை. திருநெல்வேலி ஜில்லாவில் முதலில் கைது செய்யப்பட்ட சத்தியாக்கிரகி நான்தான்.

13-ஆம் தேதி காலை சார்ஜ் ஷீட்டுடன் என்னைக் கோவில்பட்டியில் ஆஜர் செய்ய வேண்டும் என்று சங்கரன்கோவிலுக்கு திடீரென ஒரு தகவல் வந்தது. போலீஸார் அவ்வாறே செய்தனர். கோவில்பட்டி கோர்ட்டை அடைந்தோம். கைதி, போலீஸார், மாஜிஸ்திரேட் எல்லோரும் தத்தம் கடமையை நிறைவேற்றும் ஒரே நோக்கத்துடன் மட்டும் அங்கே இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம் கொடுத்தார்.

வேலூர் சென்ட்ரல் ஜெயிலுக்கு என்னை கொண்டு போக உத்தரவிட்டார்கள். இரண்டாவது வகுப்பு வண்டிப் பிரயாணம் வேண்டாமென்று நான் சொல்லவே, அன்றிரவு ரயிலிலேயே வேலூருக்குப் புறப்பட ஏற்பாடாயிற்று” என கரையாளர் கூறுகின்றார்.

தேசியப் போராட்ட வீரர் எம்.சி.வீரபாகு அரசியல் அமைப்புச் சட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தபொழுது, அச்சட்டத்தை நிறைவேற்றும் தருணம், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவரால் மட்டும் தமிழில் எம்.சி.வீரபாகு என்று கையொப்பமிட்டது. இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்புச் சட்ட மூலப் பிரதியில் தமிழ் எழுத்துகள் ஒளிர்வதைக் காணலாம். எம்.சி.வீரபாகு பிள்ளை சாதி, சமயப் பூசலுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்ற அளவில் பிரச்சாரத்தை எடுத்து வைத்தார். 1934-ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். ராஜேந்திர பிரசாத்துடன் தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். 1940-இல் தனி நபர் போராட்டத்தில் சிறை தண்டனையும் பெற்றார். விடுதலைக்குப் பின்பு வல்லநாடு பாலத்தைக் கட்டி வல்லநாட்டையும், முரப்ப நாட்டையும் இணைத்தார்.

சாத்தூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், செயலாளராக இருந்த காமராஜர் அம்மாநாட்டுக்குத் தந்தை பெரியாரை அழைத்தார். தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் அம்பாசமுத்திரம், தன் சொந்த ஊரான கீழாம்பூர் போன்ற பகுதிகளில் விடுதலைப் போராட்டப் பணிகளை மேற்கொண்டார். உப்பு எடுக்கும் போராட்டத்தில் ராஜாஜியுடன் வேதாரண்யத்தில் கலந்து கொண்டார்.

1943-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிவராமன் திருவாலீசுவரம் கர்ணமாகப் பணியாற்றிய ராமச்சந்திர ஐயர் வீட்டுக்கு ஹரிஹரசுப்பிரமணியனுடன் சென்று, ஒரு பெட்டிக்குள் வெடிகுண்டை வைத்து ராமச்சந்திர ஐயரிடம் கொடுத்தார். அம்பாசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சிக்கு இடையில் உள்ள ரயில் பாலத்தில் காலை 7.30 மணிக்கு குண்டை வைக்க வேண்டும். அந்த வெடிகுண்டு 8 மணிக்குத்தான் வெடிக்க வேண்டும் என்று கறாராகக் கூறினார். ஏனெனில் 7.45 மணிக்குப் பயணிகள் ரயில் செல்லும். அவர்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாவண்ணம் 8 மணிக்கு மலபார் போலீஸை ஏற்றிக் கொண்டு திருச்செந்தூர் செல்லும் ரயிலைத்தான் நாசம் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். சிவராமன் நெல்லை மாவட்டம் முழுவதும் விடுதலை வேள்விப் பணியில் முழுமையாகத் தன்னை ஒப்படைத்திருந்தார்.

பத்திரிகை ஜாம்பவனான தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் விடுதலை வேள்வியில் தென்காசிப் பகுதியில் அரிய பணிகளை ஆற்றினார். இவருடைய அண்ணன்தான் சிதம்பரம் பிள்ளை. ஆஷ் கொலை வழக்கில் கொடுந்துன்பத்துக்கு ஆளானவர். சொக்கலிங்கம் தன்னுடைய இளமைக் காலத்தில் ‘காந்தி’ என்ற பத்திரிகையை நடத்தினார். ‘தினச்செய்தி’, ‘பாரதம்’ போன்ற இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். தென்காசிப் பகுதியில் திருவள்ளுவர் கழகமும் இந்த வேள்வியில் இறங்கியது.

1932-ஆம் ஆண்டு கோவில்பட்டியில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுத் துணி எரிப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவிடுதலை வீரர்களை ஆங்கிலேய அரசினுடைய குண்டாந்தடி கடுமையாகத் தாக்கிக் கோவில்பட்டி நகரமே ரத்த வெள்ளமாகியது. அச்சமயத்தில் தூத்துக்குடி வந்த நேரு இவர்கள் மீதான இந்தக் கொடுமையை வன்மையாகக் கண்டித்தார்.

கோவில்பட்டிப் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலை வேள்வித் தியாகத்துக்குத் தங்களை ஒப்படைத்தனர். இப்பகுதியில் ‘சுதந்திர முன்னேற்ற நிலையம்’ என்ற அமைப்பை இளைஞர்கள் நிறுவி, காடல்குடி காவல் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தினர். விளாத்திகுளம் நீதிபதி போர் நிதி வாங்க வரும்போது மக்களிடமும், கடைகளிலும் நிதி வழங்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு, அலிப்பூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் பிறந்த சவுரிராயன் ஏசுதாசன் காந்தியடிகள் அறிந்த சேவகர், புலவர், மருத்துவர். வடஆற்காடு, திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து பணி செய்தார். காந்தியார், ராஜாஜி ஆசிரமத்தில் தங்கினர். இந்திய விடுதலைக்குப் பின் எட்டையபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்யும் போராட்டத்தில் கலந்து கொள்ள ராஜாஜி எட்டையபுரத்துக்கு வந்தார்.

கழுகுமலை ஆலயப் பிரவேசம்

காணாத காட்சிகளைக் கண்டேன் என்று கல்கி அவர்கள் கழுகுமலை ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“ஆலயப் பிரவேச வைபவத்தை முன்னிட்டே சபாநாயகர் ஸ்ரீசிவசண்முகம் பிள்ளை திருநெல்வேலி காங்கிரஸ் ஊழியர்களால் அழைக்கப்பட்டார். ஆனால், முதலில் குறிப்பிட்ட தேதியில் மேற்படி ஆலயப் பிரவேசம் நடைபெறவில்லை. சர்க்காரிடமிருந்து உத்தரவு வருவதில் எதிர்பாராத தடங்கலும் தாமதமும் ஏற்பட்டன. இது ஸ்ரீசிவசண்முகம் பிள்ளைக்குச் சிறிது ஏமாற்றத்தை அளித்தது. கழுகுமலை காங்கிரஸ் ஊழியர்கள் அளவிலா ஏமாற்றம் அடைந்தார்கள். சர்க்காரின் பொதுச் சட்டம் வருவதற்கு முன்னாலேயே திருநெல்வேலியிலுள்ள முக்கியமான ஆலயங்களையெல்லாம் திறந்து விட்டுவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஸ்ரீசோமயாஜுலுவும், அவருடைய சகாக்களும் துடிதுடித்துப் போனார்கள்.

ஆனால், வெறுமனே துடித்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்துவிடவில்லை. கோவில்பட்டியின் பிரபல காங்கிரஸ் ஊழியரான ஸ்ரீசண்முகம் பிள்ளையை சென்னைக்குப் போகும் ரயிலில் தூக்கிப் போட்டு, ‘உத்தரவை வாங்கிக் கொண்டுதான் திரும்ப வேண்டும்’ என்று ஸ்ரீசோமயாஜுலு கட்டளையிட்டார். அந்த அன்புக் கட்டளையை நிறைவேற்ற ஸ்ரீசண்முகம் பிள்ளை சென்னை சென்று மந்திரிமார்களைத் தேடி அலைந்து, அவர்களுடைய காரியதரிசிகளைத் தேடி அலைந்து, ஹிந்து தேவஸ்தான பரிபாலன போர்டு தலைவர் ஸ்ரீசின்னையா பிள்ளையைத் தேடிக் கொடைக்கானலுக்குச் சென்றலைந்து, கடைசியில் உத்தரவைத் தந்தி மூலம் அனுப்பி விட்டுத் திரும்பி வந்தார். அதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் மந்திரிமார்களின் தயவினாலும், ஸ்ரீசின்னையா பிள்ளை அவர்களின் தீவிர ஒத்துழைப்பினாலும் காரியம் சித்தியாயிற்று.

‘தவறியது தங்கம்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோலவே ஒரு தடவை தேதி வைத்துத் தவறிப் போன கழுகுமலை ஆலயப் பிரவேச வைபவமானது மே மாதம் 20-ஆம் தேதி அமோகமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இதற்காக இரண்டாந்தடவை ஸ்ரீசிவசண்முகம் பிள்ளை சென்னையிலிருந்து வந்தார். மேற்படி தினத்தில் காலை சுமார் 10 மணிக்கு நாங்கள் கழுகுமலையை அடைந்தபோது, ஆலயத்தின் முன்வாசல் கண்கொள்ளாக் காட்சி அளித்தது. அங்கே கூடி நின்று காத்திருந்த சுமார் ஐயாயிரம் ஜனங்களும், சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்ததும், பூரணச் சந்திரனைக் கண்ட சமுத்திரத்தைப் போல் உற்சாக ஆரவாரம் செய்தார்கள்.

அந்தச் சின்ன ஊரில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருந்தது அதிசயந்தான்! அதைவிடப் பெரிய அதிசயம், அந்தக் கூட்டத்தின் நடுவில் சபாநாயகர் ஆலயப்பிரவேசம் செய்வதற்கு வழிவிட்டு இரு புறமும் ஒழுங்காக ஜனங்கள் நின்று ஆரவாரித்ததாகும். இத்தகைய ஒழுங்குக்குக் காரணம் சங்கரன்கோவிலிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தொண்டர் படையின் முன்னேற்பாடுதான் என்று தெரிந்தது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபல முருகன் கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விசேஷம் உண்டு. கழுகுமலையும் அப்படியே விசேஷமான ஸ்தலம். அருணகிரிநாதர் இந்த ஸ்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் கழுகுமலை முருகனை வைத்துத் தான் அந்த அருமையான தமிழ்ச் சுவை சொட்டும் பாமர கீதங்களைப் பாடினார். கழுகுமலை எட்டையபுரம் சமஸ்தானத்தில் உள்ளது என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அப்படியிருக்கும்போது கழுகுமலை முருகனைப் பற்றி நமது தேசிய மகாகவி பாரதியார் பாடாமல் இருப்பாரா?

“முருகா... முருகா... முருகா...!” என்று கதறிப் பாடியிருக்கிறார்.

“வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்!”

“அடியார் பலரிங்குளரே அவரை விடுவித்தருள்வாய்!”

என்பது போன்ற அற்புதமான கவிதை வரிகளை இந்த ஸ்தலத்திலுள்ள முருகனைப் பார்த்துத்தான் பாரதியார் ஆவேசத்துடன் பாடினார். இத்தகைய உயர்ந்த பாடல்களுடனே, ‘கழுகுமலை - குருவிகுளம்’ என்னும் கிராமியப் பாட்டினாலும் இந்த ஸ்தலம் புகழ் பெற்றிருக்கிறது.

இவ்வளவு மகிமை வாய்ந்த முருகன் ஆலயத்துக்குள்ளே பரம பக்தரான ஸ்ரீசிவசண்முகம் பிள்ளையைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரவேசித்தபோது எழுந்த ‘முருகா... முருகா..’ என்ற கோஷம் எப்பேர்ப்பட்ட நாஸ்திகர்களையும் ஒரு கணம் ஆடச் செய்திருக்கும். மற்றும் பல ஆலயங்களில் நிகழ்ந்தது போலவே இங்கும் அர்ச்சகர்கள் மிக்க பக்தி சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் ஸ்ரீசிவசண்முகம் பிள்ளையை வரவேற்று, சுவாமி தரிசனம் செய்வித்தார்கள். எட்டையபுரம் மகாராஜாவின் உத்தரவுப்படி ஸ்ரீசிவசண்முகம் பிள்ளையின் சிரசில் பரிவட்டமாகக் கட்டப் பெற்ற பீதாம்பரத்தைச் சபாநாயகரே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பிறகு, கழுகுமலையின் அழகான கோயில் பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. கோவில்பட்டி தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மீன்துள்ளி ஸ்ரீராமாநுஜ நாயக்கர் தமது முறுக்கி விட்ட மீசை சகிதமாக அக்கிராசனம் வகித்தார். ஸ்ரீமேகநாதன் சொல்மாரி பொழிந்தார். ஸ்ரீசோமயாஜுலு எடுத்த காரியத்தை நிறைவேற்றிய பெருமிதத்துடன் உற்சாகப் பேசினார். ஸ்ரீசிவசண்முகம் பிள்ளை பக்தி மிகுதியினால் அதிகமாகப் பேச முடியாமல் ஒருசில வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டார். கழுகுமலை ஆலயப் பிரவேசத்துக்காக அரும்பாடுபட்ட ஸ்ரீபூசையப்ப பிள்ளையும், ஸ்ரீதீனதயாள லாலா அவர்களும் உடல் உருகி, ஊன் உருகி, உளம் உருகித் தாங்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

கழுகுமலை விழாவைப் பற்றி கல்கி மேலும் கூறுகின்றார்:

“கோயிலில் பிரசன்னமாயிருந்த போலீஸ்காரர்களுக்கு நான் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டேன். ‘ஸ்ரீ சிவசண்முகம் பிள்ளையின் சொத்து ஒன்று காணாமற் போய்விட்டது. திருடுபோன சொத்து நமது ஸ்ரீசிவசண்முகம் பிள்ளையின் இருதயந்தான். திருடிய பேர்வழி யார் என்பதும் எனக்குத் தெரியும். ‘செம்மண் மகளைத் திருடும் திருடன்’ என்று பாடல் பெற்ற முருகப் பெருமான்தான் அந்தப் பொல்லாத திருடன். இத்தனை ஆயிரம் பேருக்கு மத்தியில் நமது சபாநாயகரின் இருதயத்தைத் திருடிக் கொண்டுவிட்டான். இருதயத்தைப் பறிகொடுத்துவிட்டபடியினாலேதான், நமது சபாநாயகரால் மற்ற இடங்களில் போல விஸ்தாரமாகப் பேச முடியவில்லை. தயவு செய்து போலீஸார் முருகனைத் திருட்டுக் குற்றத்துக்காக சார்ஜு செய்து சபாநாயகரின் இருதயத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்ல வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டேன் என்றார்.

தொடர்ந்து, குற்றாலநாதர் கோவில் ஆலயப் பிரவேசத்திலும் கல்கி கலந்து கொண்டார். நெல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாணு பிள்ளையின் பணிகளும் மக்களிடம் பாராட்டைப் பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x