Published : 06 Jun 2025 07:56 AM
Last Updated : 06 Jun 2025 07:56 AM
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறி பயணிகள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோதே, நுழைவாயிலில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை, மாநகர பேருந்து நிலையத்துக்கும் புறநகர் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே எளிதாக கடந்து செல்லும் வகையில் இணைப்பு இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது என பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அவை ஒவ்வொன்றாக அரசால் சரி செய்யப்பட்டன.
புதிய பேருந்து முனையம் தொடங்கும்போது ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கும். அவை போகப் போக சரி செய்யப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பேருந்து முனையம் செயல்பட ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாள்தோறும் 1,292 பேருந்துகளும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக 500 பேருந்துகளும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. முகூர்த்த நாளையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு அதிக அளவில் பயணிகள் சென்றுள்ளனர். முகூர்த்த நாட்களை போக்குவரத்துத் துறை முறையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வழக்கமான பேருந்துகளே இயங்கியுள்ளன.
தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். அவர்கள் பேருந்து முனைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நள்ளிரவு நேரத்தில் ஜிஎஸ்டி சாலைக்கு வந்து மறியலில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி, கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளை அதிகாலை 2 மணிக்கு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த பின்பே நிலைமை சீரடைந்துள்ளது.
கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, போக்குவரத்து நெரிசலைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் சென்னை நகர மக்கள் சந்திக்கவில்லை. ஆனால், கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட பிறகு, வெளியூர் சென்றுவர போதிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்ற குறை ஒருபுறம் இருந்தாலும், சென்னை நகர மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வதே சொல்லொணாத் துயராக மாறிவிட்டது.
வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகளும் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கும் அதே சிரமத்தை சந்திக்கின்றனர். நகர மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும், மீண்டும் வீடுகளுக்கு திரும்பவும் போதுமான அளவில் பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்கவில்லை என்பதை மாலை முதல் இரவு 10 மணி வரையிலும், பின்னர் அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரையிலும் பேருந்து முனையத்தில் பயணிகள் தவிக்கும் காட்சியை சிறிதுநேரம் கவனித்தாலே விளங்கிவிடும். சாதனைகளை பட்டியலிடும் அரசு, மக்களின் சோதனைகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT