Last Updated : 05 Jun, 2025 07:27 AM

 

Published : 05 Jun 2025 07:27 AM
Last Updated : 05 Jun 2025 07:27 AM

நாட்டுப்பற்று, மொழிப்பற்று கொண்ட காயிதே மில்லத் | 130-வது பிறந்த நாள்

இந்திய அரசியல் வானில் ஜனநாயக சுடரொளியாக ஜொலித்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 130-வது பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மியாகான் ராவுத்தர் - முகைதீன் ஃபாத்திமா தம்பதியினரின் மகனாக 5-6-1896-ல் பிறந்தார்.

வழிகாட்டும் தலைவர்: காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள், வழிகாட்டும் தலைவர் என்பதாகும். பெற்றோரின் தீர்க்க தரிசனத்தின்படி இந்திய நாட்டின் மதிப்பு மிக்கத் தலைவராக உயர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் மாபெரும் தலைவராக காயிதே மில்லத் திகழ்ந்தார்.

காயிதே மில்லத்தின் தந்தை மியாகான் ராவுத்தர் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்திற்கு துணிகள் விற்பனை செய்து வந்த புகழ்பெற்ற வணிகராவார். கூடுதலாக இஸ்லாமிய மார்க்கப் பற்றாளராக முஸ்லிம் ஜமாஅத் தலைவராக (மௌலவியாக) இருந்தவர்.

இந்தியா - சீனா போரின் போதும் இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் தன்னுடைய பெயரை முதல் நபராக போருக்கு சேர்க்க வேண்டும் என்றும் தன் ஒரே மகன் மியாக்கானை, போருக்கு அனுப்புவதாகவும் நாட்டுப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் எழுதிய தலை சிறந்த தேசபக்தர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக முகமது அலி ஜின்னா இருந்த போது, காயிதே மில்லத் சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர் சென்னை மாகாண தலைவராக அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் பணியாற்றியவர். முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு போராடி பாகிஸ்தான் என்ற நாடு 1947 ஆகஸ்ட் 14-இல் இந்தியாவில் இருந்து பிரிந்தது.

இக்கால கட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் இரண்டாக பிரிந்தது. அதற்கு உண்டான சொத்துக்களை இரண்டாக பிரித்த போது இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 17 லட்சம் ரூபாய் பங்கு தொகை கொடுப்பதற்கு முன்வந்தபோது பாகிஸ்தான் எங்களின் அன்னிய நாடு அந்த நாட்டின் மூலம் வருகின்ற பணத்தை பெற மாட்டேன் என்று சொல்லி, எங்கள் நாட்டில் நாங்கள் சம்பாதித்துக் கொள்வோம்; நீங்கள் செய்ய வேண்டியது விடுதலை பெற்ற பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களான இந்துக்கள், சீக்கியர்கள், கிருத்துவர்கள், பார்ஸிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கூறி சுயமரியாதையோடு வெளியே வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

இந்திய மண்ணில் இனி இந்த கட்சிக்கு இடமில்லை என்று தேசத் தலைவர்கள் எல்லாம் சபித்த நிலையில், பொது நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் திசை வழிப் பயணம் மாறினாலும் அதை மடைமாற்றம் செய்து பொது நீரோடைக்கு கொண்டு வந்து நபிகள் பெருமகனாரின் பிறந்த நாள் விழாவை மையப்படுத்தி திராவிட இயக்கத் தலைவர்கள் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரை பங்கேற்க வைத்து மீண்டும் தேசிய நீரோட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தலைநிமிர வைத்தவர் காயிதே மில்லத்.

இந்திய நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களான இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, பெரியார், ராஜாஜி, காமராஜர் உள்ளிட்டோரின் மதிப்பிற்குரிய நண்பராக உருவெடுத்தவர் அவர். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த போது இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்தது. அப்போது இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க கூடிய அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்ற உலகின் பழமையான ஆதி மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்று வாதாடினார்.

கடந்த 1946 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 52 வரை சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்ட கேரள மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லாமலேயே வேட்பு மனுவை தபாலில் அனுப்பி விட்டு வெற்றி வாகை சூடிய மக்கள் தலைவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

திராவிட இயக்க ஆட்சி: கடந்த 1967-ஆம் ஆண்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தது. தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணா பொறுப்பு ஏற்றார். அதற்கு அடித்தளம் அமைத்து தோள் கொடுத்த ஜனநாயக சக்திகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் அதன் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தியா எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு, தமிழே எங்கள் மொழி, தன்மானம் எங்கள் உயிராகும் என்று காலமெல்லாம் எந்த கொள்கைக்காக வாழ்ந்தாரோ அந்த கொள்கை வழிப் பயணம் 5-4-1972-ல் முற்றுப் பெற்றது.

காயிதே மில்லத் மறைவிற்குப் பிறகு, இந்தியா அவரை மறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய அரசுக்கு காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று எல்லா சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி அதை ஒரு ஆவணமாக தயார் செய்து கொடுத்த பின்னர், அதை இந்திய அரசின் தபால் துறை பரிசீலித்து காயிதே மில்லத் தபால் தலை வெளியிட வைத்தார்.

கருத்து வேறுபாடுகளை களைந்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட ஊக்கம் தரும் நாள்தான் காயிதே மில்லத் பிறந்த நாளான ஜூன் 5.

- கட்டுரையாளர்: மல்லை சத்யா, மதிமுக துணை பொதுச் செயலாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x