Last Updated : 03 Jun, 2025 07:32 AM

 

Published : 03 Jun 2025 07:32 AM
Last Updated : 03 Jun 2025 07:32 AM

கோயில்களில் பால் வழங்கும் திட்டம் பாராட்டத்தக்கது!

கூட்ட நெரிசல் மிகுந்த கோயில்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருத்தணி முருகன், ஆனைமலை மாசாணியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், மருதமலை முருகன், பெரியபாளையம் பவானியம்மன், பண்ணாரி அம்மன் கோயில் என 10 கோயில்களில் இத்திட்டம் தொடங்கியுள்ளது.

கோயில்களில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பாகவே இலவசமாக காய்ச்சிய பால் வழங்குவது மிக அருமையான திட்டமாகும். இதற்காக ரூ.50 லட்சம் செலவாகும் என்று தெரிவித்திருந்தாலும், குழந்தைகளின் பசியைப் போக்கும் இப்பணிக்காக செலவிடும் தொகை ஆக்கப்பூர்வமான செலவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இத்திட்டத்தை அமல்படுத்தியிருப்பது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இதுபோன்ற சேவை வழங்கப்படுகிறது. அங்கு குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் மட்டுமின்றி, காலை, மாலை சிற்றுண்டி வழங்கப்படுவதையும் இந்து சமய அறநிலையத் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த 10 கோயில்கள் மட்டுமின்றி வடபழனி முருகன், சிறுவாபுரி உள்ளிட்ட ஏராளமான கோயில்களிலும், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நாட்களில் அதற்குரிய கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். நீண்டநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ள அத்தகைய கோயில்களிலும் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

அரசின் அன்னதானத் திட்டம் பல கோயில்களில் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் திட்டமாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற புதிய திட்டங்கள் கோயில்களுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் வசதியாக அமைகிறது.

அதேநேரம் பல கோயில்களில் நுழைவாயிலில் சில நபர்கள் அமர்ந்து கொண்டு சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் பக்தர்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடும் புகார்களும் ஆங்காங்கே வருகின்றன. பக்தர்களின் வருகை அதிகமாக உள்ள கோயில்களில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பிரித்து கட்டணம் வசூலிப்பதைக்கூட நியாயம் என்று வாதிடலாம்.

ஆனால், மிக குறைந்த அளவே பக்தர்கள் வரும் கோயில்களில் சிலர் அமர்ந்து கொண்டு கட்டணச் சீட்டு பெற்றால்தான் கோயிலுக்குள்ளேயே நுழைய முடியும் என்று வசூலில் ஈடுபடுவதும், எதிர்த்து கேள்வி கேட்கும் பக்தர்களை மிரட்டும் செயலில் ஈடுபடுவதும் அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் எதிரான தோற்றத்தை பக்தர்கள் மத்தியில் உருவாக்குகிறது. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்துவதிலும் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x