Published : 01 Jun 2025 10:54 AM
Last Updated : 01 Jun 2025 10:54 AM
‘என்னை பிரசவித்த பூர்வீக மண்ணே! என் பரம்பரைகளின் மூத்த குடிகளே! எனக்கு நேர் வழி காட்டுங்கள்’ என்று இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு, தெளிந்த சிந்தனையோடு பொது வாழ்க்கையில் நான் பயணித்து வருகிறேன். என்னால் பலன்பெற்றவர்கள் பலர். அவர்களுக்காக இரவு - பகல் பாராது அயராது பணியாற்றினேன். அதற்கான அங்கீகாரம்கூட வேண்டாம்... நன்றியுணர்ச்சியாவது அவர்களிடம் இருக்குமா என்று எதிர்பார்த்தேன்... ஆனால், தாங்களும் ஓர் சராசரி மனிதர்கள்தான் என்பதைக் காட்டி விட்டார்கள். என்னால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்னை ஏணியாகப் பயன்படுத்தி மேலேறி சென்று விட்டார்கள். இன்றைக்கு அவர்களது பரிதாப நிலையை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது. அவர்களைப் போல் என்னால் சுயமரியாதையை இழந்து செயல்பட முடியாது.
‘நீங்கள் தனிமரம்; தோப்பாக முடியாது’ என்று என்னிடம் நேரிலேயே பலர் சொல்வதுண்டு. நான் சொல்வேன் - ‘நான் தனி மரம்தான், தனி மரியாதை, சுயமரியாதையுடன் இருப்பவன்; என்னுடைய மதிப்பை காப்பாற்றிக் கொள்ள இன்றைய நிலையில் தனி மரமாக இருந்தால்தான் என்னுடைய தனித்தன்மை தெரியும்’ என்பேன்.
நான் என்றைக்குமே சுயம்புவாக இருக்க விரும்புகிறேன். கூட்டத்தோடு கூட்டமாக இருந்து, நம் அடையாளத்தை இழக்க முடியாது. ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... அங்கு வேப்ப மரங்கள், புளியமரங்கள் அதிகமாக இருக்கும். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம், அந்த ஊரில் ஓர் ஆலமரமோ, அரச மரமோ தனித்து வானுயர்ந்து நிற்கும். அந்த அரச மரத்தின் கீழ்தான் விநாயகரும் இருப்பார். விநாயகரைத் தொழும்போது அரச மரத்தையும் தொழுவார்கள்.
அந்த அரச மரமும் ஆலமரமும் எவ்வாறு தனித்தன்மையோடு உயர்ந்து, கம்பீரமாக நின்று தன்னை அண்டுபவர்களுக்கு நிழல் கொடுத்து, அவர்களை அரவணைத்துக் கொள்கிறதோ, அதேபோல்தான் தனித்துவமாக, தன்மானத்துடன் என்னுடைய பொதுவாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன்.
இப்போது நெல்லை மாவட்ட அரசியல் களத்துக்கு வருகிறேன். அந்தக் காலத்தில் அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது? மற்றும் சுதந்திரப் போராட்டக் களத்தில் களமாடியவர்கள் குறித்து, என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் விரிவாக பதிவு செய்துள்ளேன்.
அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன்...
நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், பொதுவுடைமை தத்துவத்தைப் பின்பற்றிய பலரும் விடுதலைப் போரில் பெரும் பங்காற்றினர். இந்த எண்ணற்றோரின் தியாகங்கள் விலைமதிப்பற்றவை. நெல்லை சதி வழக்கு வீரத் தியாகிகள் போன்று நாட்டு நலனையே மனதில் கொண்டு சர்வபரித் தியாகங்களுக்குத் தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்டனர்.
அந்த வகையில், பரலி நெல்லையப்பர், கோமதி சங்கர தீட்சிதர், யக்ஞேஸ்வர சர்மா, தினமணி ஆசிரியர்கள் சொக்கலிங்கம், கீழாம்பூர் ஏ.என்.சிவராமன் மற்றும் சோமயாஜுலு, எம்.சி.வீரபாகு, மடத்துப்பட்டி கோபால் நாயக்கர், கே.டி.கோசல்ராம், செல்லபாண்டியன், கூத்தநயினார் பிள்ளை, ஏ.பி.சி.வீரபாகு, செங்கோட்டை சட்டநாத கரையாளர் (பிற்காலத்தில் இவர் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார்), கடையநல்லூர் மஜீத், திருச்செந்தூர் எம்.எஸ்.செல்வராஜ், நெல்லை ஜெபமணி போன்றோரின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடுதலை வேள்வியின் அறப்போர் திட்டமிட்டு நடைபெற்றது.
குறிப்பாக, நெல்லை நகரில் சிந்துபூந்துறை சண்முகம் பிள்ளை, சாவடி கூத்தநயினார் பிள்ளை, ப.ராமசாமி, ஏ.பி.சிவபிரசாத், ஆசிரியர்கள் ஜே.துரைராஜ் ரெட்டியார், ஆர்.வி.ருத்ரப்பசாமி, வழக்கறிஞர் வி.எஸ்.சங்கரசுப்பிரமணிய முதலியார், இசக்கியப்பன், எம்.ஆர்.உலகநாதன், பொ.சிதம்பரம், ஜோசப் பிலாபி பெர்னாண்டோ, சங்கரலிங்கம் செட்டியார், ராமசாமி தொண்டைமான், பி.அண்ணாமலை பிள்ளை, சங்கரதாஸ், வி.எஸ்.டி. முகம்மது இப்ராகிம், அப்துல் அமீது, பேட்டை பாசி ராவுத்தர், வி.எஸ்.சுப்பையா, ராஜா சுப்பிரமணியம் போன்ற எண்ணற்றோரும்,
பொதிகை தென்றல் வீசும் அம்பையில் சங்கர ஐயர், கோமதி சங்கர தீட்சிதர், சங்கர ஐயரின் துணைவியார் லட்சுமி அம்மாள், யக்ஞேஸ்வர சர்மா இவர்கள் யாவரும் எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், வாஞ்சிநாதனுக்குப் பின்புலமாகவும் விளங்கினர். இவர்களோடு வழக்கறிஞர் கல்லிடைக்குறிச்சி மகாதேவ ஐயர், பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, சுந்தர தேவர், பொன்னையா தேவர், வெள்ளை தேவர், ஆவுடையப்பன், வி.சிதம்பரம்பிள்ளை, வீரபாகு செட்டியார், சுடலைமுத்து, ஜி.நடராஜப் பிள்ளை தளவாய், ஆர்.வி.அனந்த கிருஷ்ணன், வி.மீனாட்சிநாதன், முத்தையா நாடார், சுப்பையா முதலியார், முக்கூடல் கே.எஸ்.ராசகோபால், சங்கரநாராயண நாயுடு, கே.பி.எஸ்.மணி போன்ற எண்ணற்றோரும்,
வ.உ.சி., எம்.சி.வீரபாகு பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோருடைய தாக்கத்தில் தூத்துக்குடியில் கதர் கந்தசாமி பிள்ளை, ராமசாமி ஐயர் - சாரதாம்பாள் தம்பதி, ஜானகி அம்மாள், ஏ.பி.சி.வீரபாகு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி நாடார், சாமுவேல் நாடார் மற்றும் முத்துவிநாயகம், வெங்கடகிருஷ்ணன் என்ற கிட்டு, வி.ஆர்.பொன்னம்பலம், வியாகுலம் பெர்னாண்டோ, காம்ரேட் கணேசன், பி.எஸ்.டி.எஸ்.திரவிய ரத்தின நாடார், வி.எஸ்.லட்சுமணப் பிள்ளை, சேதுராமலிங்கம் பிள்ளை, ஜெய்ஹிந்த் அருணாசலம், சண்முகசுந்தர தேவர், தொண்டர் சிவகுருநாதன், விசுவநாத தாஸின் புதல்வர் சுப்பிரமணிய தாஸ், டி.வி.திருவேங்கடம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் 1942-இல் தேசியக் கொடியை ஏற்றிய செல்வநாயகம், கோபாலன் செட்டியார், பேச்சிமுத்து பிள்ளை, பீட்டர் முராய்ஸ், சிவலிங்கம் பண்ணையார், எம்.நடராஜன் போன்ற எண்ணற்றோரும்,
ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.டி.கண்ணபிரான், வி.எஸ்.வெங்கடாச்சாரியார், ஈராமிய பெர்னாண்டோ, கலியாவூர் சுப்பிரமணிய ஆசாரி, ஆசீர்வாதம், ஜெர்மையர் பெர்னாண்டோ, மாசிலாமணி, எஸ்.முத்துரங்க நாயுடு, எஸ்.ஆர்.ராமசாமி பிள்ளை, சண்முகம் மூப்பனார், கே.அருணாசல தேவர், எஸ்.நாகராஜன் போன்ற பலரும்,
தென்காசியில் ஆஷ் கொலை வழக்கில் கொடுந்துன்பத்துக்கு ஆளான சிதம்பரம் பிள்ளை, அவருடைய சகோதரர் தினமணி டி.எஸ்.சொக்கலிங்கம், கடையநல்லூர் புரட்சிவாதி எஸ்.சங்கரகிருஷ்ணன், செங்கோட்டை அருணாசலம் பிள்ளை, எல்.சட்டநாத கரையாளர், கிருஷ்ணசாமி பாரதி, இவருடைய துணைவியார் லட்சுமி பாரதி, லட்சுமிகாந்தன் பாரதி, மகாலட்சுமி பாரதி, தெ.கணபதியப்பன், மு.தெய்வநாயகம் பிள்ளை, பெருமாள் நாயுடு, வழக்கறிஞர் அகமது மீரான், நெட்டூர் முத்துக்குமாரசாமி பிள்ளை, இலஞ்சி துரைராஜ் பாண்டியன், அப்துல் சலாம், பாலகிருஷ்ண நாயுடு, எம்.ஜி.குருசாமி, மகாதேவன், எஸ்.கருப்பையா, எஸ்.எல்.எஸ்.முகம்மது மொகைதீன், சாமிநாத நாடார், மாயாண்டி மூப்பனார், சுரண்டை சுப்பிரமணிய முதலியார், நாகூரப்பா ராவுத்தர், ராமகிருஷ்ண பிள்ளை, சேதுராமலிங்கம் பிள்ளை, திருமலையாண்டி பிள்ளை, கிருஷ்ணாபுரம் ஹரிஹர சர்மா, மேல் அழகியான் அரசப்பன், கடையநல்லூர் மயிலேறும் பெருமாள் போன்றோரும், தென்காசி திருவள்ளுவர் கழகமும், அரிசன சேவா சங்கமும் விடுதலைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
நாங்குநேரி பகுதியில் வழக்கறிஞர் கே.பட்சிராஜன், என்.கே.சீனிவாசன், சடகோப அய்யங்கார், வீரமார்த்தாண்டம் பிள்ளை, வெங்கட்ராம நாயுடு, பணகுடி அம்ஜி மியான் சாகிப், கள்ளிகுளம் மொய்தீன், சுப்பையா பிள்ளை, கிருஷ்ண பிள்ளை, நல்லசிவன் பிள்ளை, நம்பி ஐயர், ஆண்டியப்பன், தளபதி சமுத்திரம், ஆறுமுகம், வடக்கன்குளம் அன்னாசி பெர்னாண்டோ, கணபதி ஆசாரி, கணேசன் செட்டியார், திருக்குறுங்குடி ராஜகோபால அய்யங்கார், மந்திரம் ஆசாரி, சிங்கிகுளம் சாமிநாத பிள்ளை, வடக்கு விஜயநாராயணம் வீரபாகு மார்த்தாண்டம், இவரின் துணைவியார் சண்முகத்தம்மாள், வள்ளியூர் ஆர்தர் போன்ற எண்ணற்றோரும்,
கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் சித்திரம்பட்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்பா நாயக்கர், கழுகுமலை ஜி.ராமானுஜம், பெருமாள் ரெட்டியார், பரம்புக்கோட்டை சங்கரப்ப நாயக்கர், கோவில்பட்டி ஜோசப், எட்டையபுரம் நரசிம்மராவ் என்ற ராயர், நாகம்பட்டி வேணுகோபால கிருஷ்ணசாமி நாயக்கர், கயத்தாறு எம்.எம்.சுப்பிரமணிய பிள்ளை, நாகலாபுரம் நாகலிங்கம் செட்டியார், நாகலாபுரம் கடற்கரை, கரந்தை எல்.வி.ஆர்., கழுகுமலை சங்கரலிங்கம் மேஸ்திரி, வாகைத்தாவு வீரப்ப நாயக்கர், காமராஜருக்கு நெருக்கமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.சங்கிலி, மந்திதோப்பு, குருசாமி நாடார், கோவில்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கர், பொ.கணபதியாபிள்ளை, சண்முகம்பிள்ளை, வெங்கடசாமி நாயக்கர், பிச்சுமணி நாடார், கரந்தை ஓ.எஸ்.பெருமாள்சாமி நாயக்கர், கேப்டன் சுப்பிரமணியம் பிள்ளை, கே.வி.சுப்பையா, கழுகுமலை வெங்கடசாமி நாயக்கர், பால் ரெட்டியார், ஏ.ராமசாமி ரெட்டியார், துரைராஜ் சேர்வை, பசுவந்தனை சுந்தரராமன், வேல்சாமி தேவர், வேலாயுதராஜா, கோபாலகிருஷ்ண யாதவ், பரம்புக்கோட்டை குருசாமி நாயக்கர், நாச்சியார்புரம் ஏ.எஸ்.திருவேங்கடம், கழுகுமலை அழகிரி, வானரமுட்டி பெருமாள் ரெட்டியார், தனுஷ்கோடியாபுரம் சிவஞான செட்டியார், காசுக்காரத்தெரு மாரியப்பன் செட்டியார், கடலையூர் கந்தம் முதலியார், சண்முகம் முதலியார், மாணிக்கம் செட்டியார் போன்ற எண்ணற்றோரும்,
சங்கரன்கோவிலில் மடத்துப்பட்டி கோபால் நாயக்கர், மீன்துள்ளி ராமானுஜம் நாயக்கர், கலிங்கப்பட்டி சங்கரப்ப நாயக்கர், அம்பலவாணப் பிள்ளை, ஊர்க்காவலன் ஆகியோர் இப்பகுதியில் பொறுப்பேற்று விடுதலை அறப்போரை நடத்தினர். காமராஜர் இவர்களோடு நட்பில் இருந்தார்.
கருப்பசாமி புலவர், கதிர்வேல் பிள்ளை, பொன்னுசாமி பட்டர், வெங்கடாசலம் ஐயர், பழனியாண்டி முதலியார், ஷேக் காதர் ராவுத்தர், சிவகிரி காளிமுத்து மூப்பனார், மீன்துள்ளி மாடசாமி செட்டியார், ராமநாத தேவர், சா.ராமலிங்க தேவர், மு.காளிமுத்து செட்டியார், சங்குபட்டி ராமகிருஷ்ண நாயக்கர், புளியங்குடி உலகுமுத்து செட்டியார், சங்குபட்டி வெங்கடசாமி, மூக்கையா வேளாளர், குருசாமி நாடார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர்.சுப்பையா முதலியார், சிறந்த பெண் பேச்சாளர் ராக்கோளம்மாள், முத்து ஆசாரி, மீனாட்சிசுந்தரம், வெள்ளாகுளம் சுப்பா நாயக்கர், செல்லபட்டி அமராவதி அம்மாள், கலிங்கப்பட்டி பங்காருசாமி, சிவகிரி மு.கந்தசாமி, வெள்ளாகுளம் எங்கம்மாள், சென்னிகுளம் நாராயணன் செட்டியார், சங்குபட்டி கணபதி, பெருமாள்பட்டி ராமையா தேவர், சாந்தூரப்ப நாயக்கர், அப்பல் ராஜா, சிவகிரி பாலையா பாகவதர், வாசுதேவநல்லூர் வெங்கடாசலம் ஐயர், சேந்தமரம் சுப்பையா கோனார், ரெட்டியார்பட்டி மகாலிங்கம் போன்ற எண்ணற்றோர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர்.
சங்கரன்கோவிலுக்கு சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், பசும்பொன் தேவர் போன்றோரை மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அழைத்து வந்து அடிக்கடி கூட்டங்கள் நடத்துவார். இவ்வட்டாரத்தில் புலவர்கள் அறுவடைக் காலத்தில் நெற்களத்தில் விடுதலைப் பாட்டுகளைப் பொழி பாட்டுகளாகப் பாடுவார்கள். காமராஜர், மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் ஆகியோர் சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதிகளில் விடுதலை வேள்வி குறித்து கலந்து ஆலோசிப்பார்கள்.
வினோபாவுக்கு நெருக்கமான மலையடிக்குறிச்சி நல்லபெருமாள் தன்னுடைய கருவுற்ற மனைவியையும், மரணப் படுக்கையிலிருந்த தன் தாயையும் பொருட்படுத்தாமல், விடுதலைப் போராட்ட நோக்கத்தில் டெல்லிக்குச் செல்லும்போது மதுரையில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். கருவுற்ற மனைவியையும், மரணப் படுக்கையில் இருந்த தாயையும் பார்க்கச் செல்லுமாறு அண்ணல் காந்தி சொல்லியும் அவர் சிறையிலேயே இருந்தார்.
திருச்செந்தூர் பகுதியில் கே.டி.கோசல்ராம், எம்.எஸ்.செல்வராஜ், மேகநாதன், பெஞ்சமின் போன்றவர்களோடு தங்க நாடார், சிவபெருமான், ஆழ்வார் திருநகரி சேதுராமலிங்கம் பிள்ளை, குரங்கணி ஜெபமணி, சின்னகண்ணு நாடார், தென் திருப்பேரை மகரபூஷணம் அய்யங்கார், ஆழ்வார் திருநகரி அய்யம்பெருமாள், செங்குழி பாண்டிய நாடார், முத்துமாலை நாடார், கீழநாலு மாவடி பொன்னையா நாடார், பால்பாண்டி நாடார், காயல்பட்டினம் வெங்கட்ராம முதலியார், ஆத்தூர் நடராசப் பிள்ளை, படுக்கப்பத்து ஆறுமுக பாண்டியன், ஆத்தூர் முத்துசாமி நாயுடு, திருச்செந்தூர் முத்துப்பட்டவராயன், ஆறுமுகநேரி சண்முகம் நாடார், படுக்கப்பட்டு மங்களா பொன்னம்பலம், சுடலைமணி நாடார், பூச்சிகாடு ஆறுமுகசாமி நாடார், உடன்குடி தங்கையா, ஆசீர்வாதம், திருச்செந்தூர் சுப்பு ஐயர் போன்ற பலரும் ஈடுபட்டனர்.
நேதாஜியின் ஐ.என்.ஐ. படையில் சேர்ந்த போராளிகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவப் படையில் நெல்லையைச் சேர்ந்த நல்லையா (ராமகிருஷ்ணாபுரம் - களக்காடு), ஏ.எம்.தாசன் (இலங்குளம் - நாங்குநேரி), ஜெ.வடிவேல் விக்டர் ராஜ் (ஆனைகுளம்), ஏ.ராஜாமணி (மூங்கிலடி), டி.ஜே.தேவதாசன் (இடையன்குளம்), எம்.ராமையா (கலுங்குடி), வி.ஜெபமணி (இடையன்குளம்), எஸ்.ஜெபமணி, (சிதம்பரபுரம்), டி.நார்த்தான் வேல் (ஆதிச்சபேரி), எம்.துரைப்பாண்டியன் (பஞ்சவினை), எஸ்.தென்னம்பாண்டி (படலையார்குளம்), எம்.சாமுவேல்ராஜ் (தானைகுளம்), வி.சகாயம் (மூன்றடைப்பு), ஏ.சுடலைமுத்து (மூன்றடைப்பு), ஜி.செல்வராஜ் (மருதகுளம் - நாங்குநேரி), பி.தருமந்தி (மருதகுளம்), வி.மோசஸ் (மருதகுளம்), கே.மாசானமுத்து (முதலைகுளம்), ஆர்.சிலுவை அந்தோணி (பந்தனபாறை), ஏ.ரத்தினம் (வ.நெடுங்குளம்), பி.மாடசாமி (புதுகுளம்), ஏ.மைக்கேல் (இளங்குளம்), ஏ.ஞானப்பிரகாசம் (இளங்குளம்), வீ.சிவன் (மூலக்கரைப்பட்டி), எஸ்.சொக்கலிங்க கோன் (ஆண்டாள்குளம்), பி.கோயில்பிள்ளை (அம்பலம்), ஏ.ஆரோன் (திசையன்விளை), ஏ.வடிவேலு (திசையன்விளை), பி.பாலையா (பட்டர்கட்டிவிளை), எம்.நல்லையா (ஏர்வாடி), எஸ்.ராமசாமி (ஏர்வாடி), எம்.செல்லையா (கோதைசேரி), எஸ்.செல்லையா (சுவிசேஷபுரம்), என்.தங்கையா (தளபதி சமுத்திரம்), எம்.எஸ்.சுவாமி பிச்சை (மைலாபுதூர்), ஜி.அதிசயமணி (சின்னம்மாள்புரம்), டி.ஜெபமணி (சின்னம்மாள்புரம்) போன்றோரும்,
எஸ்.ஆசீர்வாதம் (சண்முகபுரம்), ஜி.முத்தையா (சண்முகபுரம்), ஆர்.பிச்சை (பரப்பாடி), ஜெ.பி.டி. நாயகம் (சியோன்மலை), வி.ராமசாமி (திருமலைபுரம்), ஈ.யாக்கோபு (சியோன்மலை), கே.செல்லத்துரை (அழகப்பபுரம்), எஸ்.ஏசுதாசன் (பணகுடி), எம்.ஏனோக் (கழுவூர்), வி.குமரானந்தம் (பெரும்பனை), உம்.உய்க்காட்டான் (சிவந்திபுரம்), எஸ்.செல்லையா (ஏர்வாடி), டி.ஞானசிகாமணி (சண்முகபுரம்), எஸ்.சாமிக்கண்ணு (பானாங்குளம்) கே.ஜேசுதாசன் (காவல் கிணறு), பி.திரவியம் (கருங்கண்ணம் குடியிருப்பு), என்.பாலையா (குரங்குடி), ஜெ.தாசன் (பாளையம் செட்டிகுளம்), டி.தானியல் (கண்டித்தான்குளம்), என்.ஜே.மோசஸ் (கண்டித்தான்குளம்), யோவான் (கண்டித்தான்குளம்), எஸ்.தேவதஞ்சம் (கண்டித்தான்குளம்), எம்.சாமுவேல் (மணற்காடு),ஆர்.கருப்பசாமி (பேட்டை), எம்.சுவாமிகண்ணு (ஆரைக்குளம்), கே.எல்.ஈஸ்வரன் (காருகுறிச்சி- அம்பை), எஸ்.ஞான துரைராஜ் (புலவன் குடியிருப்பு - அம்பை), டி.சிலுவை அந்தோணி (பேயன்குளம் - திருச்செந்தூர்), பி.பண்டாரம் (குறிப்பன்குளம் - திருச்செந்தூர்), பி.ராமையா (கண்ணநல்லூர் - ராதாபுரம்), ஆர்.ரத்தினம் (சவுந்திரபாண்டியாபுரம் - ராதாபுரம்) போன்றோரும் இணைந்து போராடினர்.
இவர்களைப் போல் எண்ணற்ற போராளிகள், சுதந்திரப் போராட்டக் களத்தில் களமாடி, பல தியாகங்கள் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பற்றியெறிந்த சுதந்திர வேள்வியில் தங்கள் இன்னுயிரை ஈந்தோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா.
விருதுநகர் சதி வழக்கில், திருவில்லிபுத்தூர் - விருதுநகர் காவல் நிலையங்களில் வெடிகுண்டு வழக்கு போடப்பட்டது. இதில் காமராஜர், கே.எஸ்.முத்துசாமி, நிருபர் மாரியப்பன், நாராயணசாமி போன்றவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அச்சமயம் இவர்கள் தலைமறைவாக இருந்தனர். விருதுநகரில் காமராஜர் தங்கக் கூடாது என்று வெள்ளையர் உத்தரவிட்ட நேரத்தில், அவர் தலைமறைவாகக் கோவில்பட்டியில் தங்கினார். இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் அரிக்கேன் லைட்டை வைத்துக் கொண்டு பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார் பெருந்தலைவர் காமராஜர்.
(தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT