Published : 31 May 2025 02:47 PM
Last Updated : 31 May 2025 02:47 PM

பாதுகாப்பு பணியில் கிராம ‘ஊர்க்காவலர்கள்’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 25

நீரோடையில் கரையைத் தொட்டபடி செல்லும் நீர். | நீரோடைக் கரையில் பனை, தென்னை மரம்.

நகர்ப்புற வரலாற்றைப்போல கிராமப்புறங்களின் சமூக வாழ்க்கை, மக்களின் வாழ்வியல் முறைகள் வரலாற்றில் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லையே என்ற மனக்குறை எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை ஓரளவு போக்கும் வகையில், இந்தத் தொடரில் என்னால் இயன்ற அளவு தகவல்களைப் பதிவு செய்து வருகிறேன். அந்த வகையில் இன்னும் ஒருசில தகவல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...

அன்றைக்கெல்லாம் ஒவ்வொரு கிராமத்துக்கும் காவல்காரர்கள் என்று சிலர் இருப்பார்கள். போலீஸார் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில் ஊர்க்காவல் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். நல்ல திடகாத்திரம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் தெரிந்த நபர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இரவில் 2 - 3 முறை கிராமத்தைச் சுற்றி வருவார்கள். திருடர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதைக் கண்காணித்தல், ஆடு, கோழி திருட்டுகள், வைக்கோல் படப்புகள் தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானதாகும். (அப்பொழுதெல்லாம் இருதரப்புக்கு இடையே பகை ஏற்பட்டால் இரவு நேரத்தில் வைக்கோல் படப்புகளுக்கு தீவைத்து பழிவாங்குவது வழக்கமாக இருந்தது).

இரவு காவல் பணி மட்டுமின்றி, பகல் பொழுதுகளில் ஏரி, குளங்களில் மீன் பிடிப்பவர்கள் குத்தகைதாரர்கள்தானா? வண்டல் மண் எடுத்தவர்கள் யார்? யார்? போன்றவற்றையும் கவனிப்பார்கள். மேலும் ஊருக்குள் வெளிநபர் நடமாட்டம் இருந்தால் அவர் யார்? எங்கிருந்து வருகிறார்? யார் வீட்டுக்கு வந்துள்ளார்? என அனைத்து விவரங்களையும் ஊர்க்காவலர்கள் சேகரித்து விடுவார்கள்.

பெரும்பாலும் கிராமங்களின் எல்லைப் பகுதியில் பெரிய அரச மரம், ஆலமரம், வேப்பமரம் அல்லது புளிய மரம் என ஏதாவது ஒரு மரம் இருக்கும். அதன் கீழே மரத்தைச் சுற்றி வட்டமாகவோ, அல்லது சதுரமாகவோ திண்டு கட்டியிருப்பார்கள். அதில் எப்போதும் நாலைந்து பேர் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள். வெளிநபர்கள் முதலில் இவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகுதான் ஊருக்குள்ளேயே நுழைய முடியும். அந்த நபரைப் பற்றிய விவரங்கள் அவர் ஊருக்குள் செல்வதற்குள் வெகு வேகமாகப் பரவி விடும்.

கிராமங்களை புவியியல் ரீதியாகப் பார்த்தோமானால், சிறுசிறு நீர் குட்டைகள், ஓடைகள், ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள சின்னஞ்சிறு மரக்கூட்டங்கள், புதர்கள், வாய்க்கால்கள், தரிசு நிலங்கள், வைக்கோல் படப்புகள் அமைந்துள்ள களங்கள் பரவலாகக் காணப்படும். ஒவ்வொரு வீட்டின் அருகிலும் எருக்குழிகள் இருக்கும். அவற்றில் மாட்டுச் சாணம், கழிவுகள் சேகரிக்கப்படும்.

கொல்லைப்புறத்தில் கிணறு, மாமரம், வாழை, கொய்யா, எலுமிச்சை, நார்த்தங்காய், மாதுளை போன்ற மரங்கள், பூச்செடிகள் காணப்படும். சரியாகப் பராமரிக்கப்படாத சில வீடுகளின் கொல்லைப்புறத்தில் கரையான் புற்றுகள் வளர்ந்திருக்கும். அதில் பாம்புகள் வந்து செல்வதையும் பார்க்க முடியும்.
வண்டல் மண் செறிந்த குளங்கள், சிறு சிறு தடுப்பணைகள் இருக்கும். ஊர் எல்லையில் பிள்ளையார், அம்மன், பெருமாள், சிவன் கோயில்கள் இருப்பது உண்டு. ஒருசில கிராமங்களில் தேவாலயங்கள், மசூதிகள் அமைந்திருக்கும். அதேபோல் தொடக்கப் பள்ளியும், சற்று பெரிய கிராமமாக இருந்தால் நடுநிலைப் பள்ளியும், நகரமாக இருந்தால் மேல்நிலைப் பள்ளியும் இருக்கும்.

தெருக்களில் வீடுகள் ஒரே சீராக கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் மண், சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட வீடுகள்தான். ஒருசில வீடுகள் கல் கட்டிடங்களாக இருக்கும். அப்போதெல்லாம் சிமென்ட் பயன்பாடு இல்லாத காலம்.

அருகில் உள்ள வயல்வெளிகளில் உள்ள கிணற்று பம்ப் செட்களில்தான் பெரும்பாலானவர்கள் குளிப்பது வழக்கம். குளித்துவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, வேட்டியின் இரண்டு பக்க நுனிகளை இரு கைகளிலும் பிடித்து, முதுகுக்குப் பின்னால் இறக்கைபோல் காற்றில் பறக்க விட்டபடி வருவார்கள். வீடு வந்து சேர்வதற்குள் வேட்டி காய்ந்து விடும்.

கிராமங்களில் இலந்தை, கொடுக்காய்ப்புளி, நாவல் மரங்கள் ஊர் பொது இடங்களில் நிற்கும். யார் வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம். அதேபோல், பனங்கிழங்கு, நுங்கு, பதநீர் போன்றவையும் காசு கொடுக்காமலேயே கிடைக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து கொடுக்காய்ப்புளி, நாவல் பழங்கள் பறிக்கச் சென்றது இன்றும் என் நினைவில் உள்ளது.

ஊர் பொது இடத்தில் உள்ள வேப்பமரங்களின் கீழே சிதறியுள்ள வேப்பமுத்துகளைப் பொறுக்கி சிலர் விலைக்கு விற்பது உண்டு. அதேநேரம் புளிய மரத்தில் இருந்து சேகரிக்கப்படும் புளியை வியாபாரிகளுக்கு விற்று அந்தத் தொகையை ஊர் பொதுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள்.

மண்வளம் காக்கும் ஓடைகள்: கிராமங்களில் காணப்படும் ஓடைகள் மண் வளத்தைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. விவசாய நிலங்களில் விழும் உபரி நீரை உள்வாங்கி நிலங்களில் தேவைக்கு அதிகமாக நீர் தங்குவதைத் தடுக்கும் வடிகால்களாக இவை விளங்குகின்றன.

ஓடைகளின் வழியாகச் செல்லும் நீர், முகத்துவாரத்தில் அமைந்துள்ள குளங்களில் நிரம்பி கிராமத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஓடைகளில் மரங்களும், புற்களும், புதர்களும் நிறைந்திருப்பதால், ஓணான், கீரி, பாம்பு, எலி, பல்லி, தேள், பூரான், எறும்பு, கரையான்கள் முதலான உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பல்லுயிர் வாழ்விடங்களாக அவை திகழ்கின்றன.

மேலும் ஓடைகளின் கரையோரங்களில் வளர்ந்துள்ள பனை மரங்கள், கோடைகாலத்தில் நுங்கு, பதநீர் முதலான உணவுப் பொருட்களை வழங்குகின்றன. அதேபோல், ஓடைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களில் விளையும் ‘நெற்றுகள்’ ஆடுகளுக்கு நல்ல தீவனமாக அமைகிறது.

ஓடைகளின் கரைகளில் அமைந்துள்ள மஞ்சணத்தி மரங்களின் பழங்களை பறவைகள் மட்டுமின்றி மனிதர்களும் உண்பது உண்டு. நன்றாக விளைந்த மஞ்சணத்தி மரக்கிளைகள் மண்வெட்டிக் கணைகள் செய்யவும், தண்டுப்பகுதி ஏரின் கைப்பிடி செய்யவும் பயன்படுகின்றன.

ஓடைகளில் மருத்துவக் குணங்களுடைய சில காய்கறிகள் கிடைப்பதுண்டு. முள்ளுக் கத்திரி (கண்டங்கத்திரி), அதலைக்காய், கோவைக்காய், பின்னக்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறிகளைப் பறித்து மக்கள் பயன்படுத்துவதுண்டு. பிரண்டை அதிக அளவில் காணப்படும். அதைப் பறித்து துவையல் செய்வார்கள்.

சில மூலிகைச் செடிகளும் ஓடைகளில் நிறைந்திருக்கும். அந்தவகையில் நெருஞ்சி முள், நாயுருவி, குப்பைமேனி, துளசி போன்றவற்றைப் பறித்தும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் நன்றாக செழித்துவளர்ந்த கற்றாழைகளை வெட்டி அதிலிருந்து நார் எடுத்து கயிறு திரித்து விற்று அதன்மூலம் ஜீவனம் நடத்தியோரும் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக் கொண்டிருந்தனர். சில இடங்களில் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். வீடுகளில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத் போன்றோரின் படங்கள் பிரேம் போட்டு சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும். மக்களிடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி அப்போது இருந்ததில்லை.
கிராமங்களில் முடிதிருத்தும் தொழிலாளி என ஒருவர் இருப்பார். அவர், ஊர் எல்லைப் பகுதிகளான குளக்கரை அல்லது ஆற்றங்கரையோரம் அமர்ந்து முடிவெட்டுவார். சில சமயங்களில் வீடுகளுக்கே சென்றும் முடிவெட்டுவது உண்டு. யாருக்கு, எப்போது முடி வெட்டினோம் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பார். குறிப்பிட்ட காலம் கடந்தவுடன், அந்த நபர் எதிர்ப்பட்டால், ‘ஐயா... முடிவெட்டி ஒரு மாசத்துக்கும் மேலாச்சு... எப்போ வெட்டலாம்...?’ என்று உரிமையுடன் கேட்பார்.

விவசாயத்தில் ஊடுபயிர்களாக உளுந்து, அவுரி, காய்கறிகள் என பயிரிடுவதுண்டு. குறிப்பாக தக்காளி, வெண்டைக்காய், கத்திரி, அவரைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் - இவைதான் கரிசல் மண்ணில் கிடைக்கும் காய்கறிகள். இவை இயற்கை உரங்களால் விளைவிக்கப்படுவதால் எந்தவித தீங்கையும் மக்களுக்கு ஏற்படுத்தியதில்லை.

அன்றைக்கு கிராம மக்களிடம் நீரிழிவு நோய் என்பது கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. அதேபோல், மாரடைப்பு, இதயநோய் என்பதையும் யாரும் அறிந்திருக்கவில்லை. காய்ச்சல், சளி, தலைவலி என சிறுசிறு நோய்கள் இருந்ததே ஒழிய, பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டதில்லை. சில சமயங்களில் சிலருக்கு அம்மை போடும், அதேபோல் டைபாய்டு காய்ச்சலும் வருவதுண்டு. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும்.

கிராமங்களில் உளுந்தங்களி, வெந்தயங்களி, கேழ்வரகுக் களியை அடிக்கடி செய்வதுண்டு. நல்லெண்ணெய் மணத்துடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கு நல்லது. மேலும் எளிதில் ஜீரணம் ஆகும். சர்க்கரை சத்து அதிகம் கிடையாது. கெட்ட கொழுப்பை குறைக்கும். இரும்பு சத்து, நார்ச் சத்தும் மிகுந்திருக்கும். அதேபோல், வேக வைத்த பயறுகள், முளை கட்டிய கம்பு, இவற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். இத்தகைய சத்துமிகுந்த இயற்கை உணவுகளை உட்கொண்டதால், திடகாத்திரமாக நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்டநாள் வாழ்ந்தார்கள்.

அன்றைக்கு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, உத்தமபாளையம், சாயர்புரம், சிவகங்கை, காரைக்குடியில் ஆண்கள் கல்லூரிகள் இருந்தன. குற்றாலம், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரையில் பெண்கள் கல்லூரிகள் இருந்தன. கல்லூரி மாணவ, மாணவிகள் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அவர்களுடைய ஹேர் ஸ்டைலும், நவநாகரிக உடையும் கிராம மக்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். இதெல்லாம் 50 - 60 காலகட்டங்கள்.
பின்னாட்களில், கோவில்பட்டியில் லெட்சுமி மில் ஆலையின் அதிபர் பெயரில் இருந்த ஜி.வி.என். கல்லூரி, சங்கரன்கோவிலில் மடத்துப்பட்டி கோபால நாயக்கர் கல்லூரி, இன்றைக்கு அது இல்லை. மேலும், செங்கோட்டையில் சட்டநாத கரையாளர் கல்லூரி, ராஜபாளையத்தில் ராஜூக்கள் கல்லூரி, சிவகாசியில் அய்ய நாடார் கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, சாத்தூரில் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி என பல கல்லூரிகள் வந்தன.

பள்ளி கோடை விடுமுறை காலங்களில் எங்களது உறவினர்கள் ஊர்களான பெரும்புத்தூர், காக்கிவாடான்பட்டி, எரிச்சநத்தம், நடையனேரி, குமழன் குளம், திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, வெயிலுகந்தபுரம், ராமலிங்காபுரம், எரியோடு, மத்தனம்பட்டி, வெள்ளாகுளம், சங்குபட்டி, கீழாண்மறை நாடு, நத்தம்பட்டி, மாரனேரி போன்ற பல ஊர்களுக்குச் செல்வதுண்டு. போகும்போது, அன்றைக்கு பெரிய நகரங்களாக இருந்த மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் உறவினர்கள் வீட்டில் தங்கி புதிதாக வெளியான திரைப்படங்களைப் பார்ப்பதுண்டு.

இப்படியான கிராம வாழ்க்கை, அனுபவங்களை இன்று நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

பள்ளிப் பருவத்தில் மற்ற மாணவர்களைப் போலவே நானும் கல்வி பயின்றேன். பின்னாளில் சென்னை, டெல்லி நகரங்களுக்குச் செல்வோம், உயர் கல்வி படிப்போம், வழக்கறிஞர் ஆவோம், அரசியல் களத்தில் இறங்குவோம், ஐ.நா. மன்றத்தில் பேசுவோம், ஆளுமைகள் நிறைந்த பல மேடைகளில் பேசுவோம் என்றெல்லாம் கனவில்கூட நான் நினைத்தது கிடையாது.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என எனக்கு எந்த அடையாளமும் இல்லை. ஆனால் என் பெயர் மக்கள் மத்தியில் பரீட்சயமாகி இருக்கிறது. அந்த வகையில் என்னுடைய பொதுநலப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

நான் பிறந்த நெல்லை மண்ணை எப்போதும் மறந்ததில்லை. அம் மண்ணின் பெருமைகளை என்னுடைய பல்வேறு நூல்களில் பதிவு செய்து, என் தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.

பொதுவாழ்வில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள், பரிகாசங்கள் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது. எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகளை எதிர்கொண்டாலும், சலிக்காமல் எனது பயணத்தை தொடர்ந்து வருகிறேன். மனஉறுதியுடன் திடகாத்திரமாக நடந்து திரிகிறேன். இயற்கை அன்னை அந்த தைரியத்தையும், பலத்தையும் எனக்கு அருளியுள்ளாள்.

என்னுடைய இந்த தொடரில், நான் பிரவேசித்த கரிசல் மண்ணின் வாழ்வியல் மற்றும் அருமை பெருமைகளை இயன்ற அளவு பதிவு செய்துவிட்டேன். இனி என்னுடைய அரசியல் பயணங்களில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்யப் போகிறேன். அடுத்து வரப்போவதெல்லாம் நடந்தவை... பார்த்தவை... உணர்ந்தவை... இவைகளைப் பற்றி விவரிக்க இருக்கிறேன்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, என்னுடைய அருமை சகா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை அரசியல் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி... போன்ற அகில இந்திய, தமிழக தலைவர்களோடு பயணித்த நாட்கள், இந்திய - தமிழக அரசியல் உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் விளக்க உள்ளேன்.

இந்தத் தொடரை பலரும் பாராட்டியுள்ளனர். ‘உங்களுடைய பதிவுகளைப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்துள்ளோம். பின்னாளில், கிராம வாழ்வியலை நாங்கள் நினைவுகூர்ந்து மகிழ்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு இந்தத் தகவல்கள் கொண்டு சேர்ப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்’ என புளகாங்கிதம் அடைந்தனர். இது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும், மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

இவற்றையெல்லாம் காணும்போது, ராமாயண காவியத்தில் அணிலின் சேவையைப் போல, நாமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படும் செயல்களைச் செய்துவருகிறோம் என்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் ஏற்படுகிறது.

அந்த திருப்தியோடு தொடர்வோம்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x