Published : 31 May 2025 09:06 AM
Last Updated : 31 May 2025 09:06 AM

மாற்றுத் திறனாளி, நலிவடைந்த பிரிவினர் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வண்ணம் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்புகள் குறித்து ஓர் ஆய்வு.

1995-ஆம் ஆண்டு நம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வண்ணம் மத்திய அளவில் நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 1990-களின் முற்பகுதியில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக பணியாற்றினார். அது உலகமயமாக்கலின் பொற்காலம். மனித உரிமைகளுக்கும் அது பொற்காலம் என்றே கருதப்பட வேண்டும்.

காரணம், இன்றைக்கு மனித உரிமைகள் என்று நாம் சொல்லக் கூடிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்எச்ஆர்சி) நிறுவுவதற்கான மனித உரிமைகள் சட்டம், 1993-லும், அதேபோல், மகளிர் ஆணையச் சட்டம் (1990), சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம்(1992), துப்புரவு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கையால் துப்புரவு செய்பவர்களை பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் (தடை) சட்டம் (1993) இயற்றப்பட்டன.

அந்த வகையில்தான் கடைசியாக 1995-ல் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாகும். உபாதயா என்கிற ஒரு மாற்றுத்திறனாளி தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, ஒரு உத்தரவை 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மேற்சொன்ன இந்த சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் மத்திய, மாநில அரசுகள் அதனை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பாக இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தாமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ‘‘பின்தேதியிட்டு, கணக்கிட்டு அந்த இட ஒதுக்கீட்டினை அனைத்து மத்திய, மாநில அரசுகள், அரசு சார் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் என்று பல நிறுவனங்கள் இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த தவறும்போது அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும், செயல்படுத்துவதற்கு தடையாக இருக்கின்ற துறை தலைவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதன் பிறகே பல ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டனர் என்பது இங்கே பாராட்டுதலுக்கு உரிய அம்சமாகும். அதனை தொடர்ந்து தேசிய பார்வையற்றோர் சமேளனம் தொடுத்த ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட ஒரு அரசியலமைப்பு தீர்ப்பாயம்/ அமர்வானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

அது மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது அடிப்படை நியமனத்துக்கு மட்டும் பொருந்தாது, அது பதவி உயர்வுக்கும் பொருந்தும் என தீர்ப்பினை அளித்தது. அந்த வரிசையில் விக்காஷ் குமார், ராசுவ் ராத்திரி மாற்றுத்திறனாளிகள் நலக் குழு போன்ற வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வரிசையில் சமீபத்தில் 2 அதிமுக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பினை வழங்கியது ஒரே அமர்வாகும். நமது தமிழ்நாட்டை சார்ந்த நீதிபதி மகாதேவன், ஜே.டி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுதான் இந்த தீர்ப்பினை வழங்கியது.

ஒன்று இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றால் இவர்கள் மூன்று துறைகளிலும் பங்கு பெற வேண்டும், அதாவது, சட்டம் இயற்றுதல். செயல்படுத்துதல், நீதித் துறை ஆகிய‌ அரசின் மூன்று முக்கியமான உறுப்புகளில் பங்கு பெற வேண்டும். அதில் நீதித்துறை நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் தடையினை அறவே தகர்த்தெறிந்தது இந்த அமர்வினுடைய தீர்ப்பாகும். அதாவது மத்திய பிரதேசத்தினுடைய நீதிமன்ற நியமன விதிகளில் 6எ என்ற விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது என்றும், அதனை செல்லாது என்றும் அறிவித்து, அதனை நீக்கவும் செய்தது.

அது மாத்திரமல்ல, அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய நீதித்துறை நியமன விதிகளில் தக்க மாற்றத்தினை ஏற்படுத்த விரைவில் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும், நீதித்துறையில் பணியாற்றுகின்ற வாய்ப்பினை வழங்க வேண்டும். குறிப்பாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அந்த வரிசையில் சமீபத்திய ஒரு தீர்ப்பு அதாவது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வழங்கப்பட்டது. இதே அமர்வுதான் அந்த தீர்ப்பையும் வழங்கியது. இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், அமில வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமையாக பார்வை இழந்தவர்கள், அது மாத்திரமல்ல, நலிவடைந்த பிரிவினர், கிராமத்தில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று இந்த தீர்ப்பினால் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்றைய நாட்களில் எதற்கெடுத்தாலும் கே.ஒய்.சி (KYC) என்பது மிக சாதாரணமாகிவிட்டது. கே.ஒய்.சி என்றால் என்ன? உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், Know Your Customer என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒரு புதிய சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலும், இந்த செயலினை எல்லோரும் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதில் இவர்களுக்கு எந்த விதிவிலக்கும் அளிக்கப்படுவது இல்லை. குறிப்பாக அமில வீச்சு தாக்குதலுக்கு உட்பட்டவர்களுக்கும், முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கும், இந்த KYC-யில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் இருந்து வருகின்றன.

அவற்றை களையும் வண்ணமாக இந்த தீர்ப்பானது அமைகின்றது. அதாவது, Life Photograph என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது, உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு புகைப்படத்தை, எடுக்க வேண்டும். அதாவது, விழி அசைவுகள், முகத்தினை ஒரு குறிப்பிட்ட பாவனையில் வைத்திருத்தல், திரையில் கையெழுத்து இடுதல், திரையில் தோன்றும் குறுஞ்செய்திக்கு 30 வினாடிகளுக்குள் பதில் அளித்தல் போன்றவை ஆகும்.

இவற்றை எல்லாம் பார்வையற்றவர்களாலும் அல்லது அமில வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாலும் செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இதற்கு தக்க மாற்றங்களைச் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் இந்த விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது மாற்றுத்திறனாளிகளுக்குகான நலச்சட்டம் என்பது ஒரு சாதாரண சட்டமல்ல.

அது அரசியலமைப்புக்கு ஒப்பான ஒரு சட்டமாகும் என்கிற அதிமுக்கிய தீர்ப்பினை நீதிபதி வழங்கியிருக்கிறார். ஆகையினால், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்கு சொல்லப்பட்டுள்ள எல்லாமே இனி அடிப்படை உரிமைக்கு சமமாக கருதப்படும் என்கிற ஒரு முக்கியமான அம்சத்தையும் நீதிபதி இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது நாம் வாழும் காலமும், வரும் காலமும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் என்று கருதப்படும் AI-ஆல் நிர்மாணிக்கப்பட்ட இருக்கிறது. இதில் எல்லாமே தானியங்கி அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். ஆகையால் பல தவறுகள் நிகழக்கூடும் என்பதை அறிந்த இந்த நீதிமன்ற அமர்வானது மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

அதாவது Human Reviewers, மனிதனை கொண்டு சீர் ஆய்வு செய்கின்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு நபரினுடைய வழக்கினை அடிப்படையாகக் கொண்டு அவர் அவருக்கு என்று பிரத்தியேகமாக இந்த சீராய்வு அமைய வேண்டும். தானியங்கி அடிப்படையில் செயல்பட கூடிய தவறுகளை களையும் வண்ணம் அந்த மனித அலுவலர் செயல்பட வேண்டும். பிரத்தியேகமாக ஒரு சேவை அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்‌. ஒரு சேவை அமைப்பு (Help Line) உருவாக்கப்பட வேண்டும். அது மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வண்ணம் பணியாற்றுகின்ற வகையிலே இருக்க வேண்டும். இந்த தீர்ப்பு குறித்து அனைவருக்கும் எடுத்து இயம்புதல் வேண்டும். அதாவது, விளம்பரம் செய்தல் வேண்டும்.

அவர்கள் உரிமையினை பாதுகாக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை இந்த தீர்ப்பில் நீதிபதி வழங்கி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக Digital Divide என்று சொல்கிறார்கள், அதாவது, இணைய வழி சேவையினை பெறுபவர்கள், பெறாதவர்கள் என்கிற ஏற்றத்தாழ்வு இனிமேல் கொள்கை முழக்கமாக மட்டுமே இருக்கக்கூடாது, அவற்றினை சரி செய்யக்கூடிய அரசியலமைப்பு சாசனக் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்த சேவையினை தடையின்றி பெறக்கூடிய உரிமை அனைத்து குடிமக்களுக்கும் இருக்கிறது.

இந்த உரிமை அனைவரையும் உள்ளடக்கிய உரிமையாக இருக்க வேண்டும். Inclusive Digital Eco system என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ஷரத்து 21-ல் உயிர் வாழ்வதற்கான ஓர் இன்றியமையாத அங்கமாகும் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிபதி வழங்கி இருந்தார். இந்த தீர்ப்பானது மிக சாதகமான தாக்கத்தினை மாற்றுத்திறனாளிகள், அமில வீச்சு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x