Published : 27 May 2025 08:57 AM
Last Updated : 27 May 2025 08:57 AM
நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதியாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2-ம் வகுப்பு வரை கல்வி புகட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் அந்த மாநில மொழி பயிற்று மொழியாக இருக்கலாம் என்றும், 2 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பயிற்று மொழியை விரும்பினால் தொடரலாம் அல்லது வேறு மொழியை தேர்ந்தெடுக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின்கீழ் 30,858 பள்ளிகள் இயங்குகின்றன. அதில் 2.82 கோடி மாணவர்கள் பயின்றுவரும் நிலையில் புரட்சிகரமான முடிவை மத்திய கல்விவாரியம் எடுத்து அமல்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேவையான 2-ம் வகுப்பு வரையிலான என்சிஇஆர்டி புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 5-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மாணவர்களின் தாய்மொழியைக் கண்டறிந்து அவர்களது விருப்பத்தின்படி அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதற்கென குழு அமைத்து வரும் ஜூலை மாதமே அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. தாய்மொழிக் கல்விக்கு நாட்டில் ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் இருந்துவந்தாலும், குழந்தைகள் தாய்மொழி வழியாக அடிப்படைக் கல்வியைக் கற்கும்போது அவர்களது முழுத்திறனும் வெளிப்படும் என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கின்றனர்.
பல்வேறு தாய்மொழியைக் கொண்டமாணவர்களுக்கு வகுப்புகளை ஒதுக்குவதும், ஆசிரியர்களை நியமிப்பதும் நடைமுறையில் சிரமமான காரியம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்தாலும், இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இதன்மூலம் இந்திதிணிப்பு நடைபெறும் என்ற அச்சம் ஒருபுறம் தெரிவிக்கப்பட்டாலும், தாய்மொழிக் கல்வியின் பலன் எப்படியிருக்கும் என்பதை சிறிது காலம் கழித்தே உணர முடியும்.
நாட்டின் மிகப்பெரிய கல்வி வாரியமான சிபிஎஸ்இ புரட்சிகரமான முடிவை எடுத்து இந்த கல்வி ஆண்டே அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
நீதிபதி முருகேசன் குழு வரைவு அறிக்கை அளித்து ஓராண்டை நெருங்கும் நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கல்வியாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸும் இந்த கவலையை வெளிப்படுத்தி மாநிலகல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
கல்வித்துறையில் நாடு மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதனுடன் பயணிக்க வேண்டும் அல்லது அதற்கு மாற்றாக அதைவிடச் சிறந்த கல்விக் கொள்கையை உருவாக்கி, தாமதிக்காமல் அமல்படுத்தி கல்வியில் மாணவர்கள் பின்தங்கி விடாமல் காக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் அரசு மவுனம் காப்பது நல்லதல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT