Published : 25 May 2025 01:34 PM
Last Updated : 25 May 2025 01:34 PM
கரிசல் பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக் குரல் எழுப்பியவர் பூலித்தேவன், அதேபோல், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் மற்றும் பூலித்தேவன் படையில் தளபதிகளாக இருந்த ஒண்டிவீரன், பொட்டி பகடை, கருப்பன் பகடை உள்ளிட்டோரும் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். சிவகிரி, சேத்தூர் பாளையக்காரர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு போராட விரும்பினார் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி அக்னி களமாகத் திகழ்ந்த கரிசல் பூமி மேற்கு தொடர்ச்சிமலை வரை விரிந்திருந்தது.
நண்பர் எஸ்.இலட்சுமணப் பெருமாள் எழுதிய ‘நிட்சாப நதித்துறை’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ஒரு காலத்தில் கேந்திர நகரமாக விளங்கிய சாத்தூர், வைப்பாறு மற்றும் கரிசல் மண், மக்களின் வாழ்வியல் குறித்து அந்த வரலாற்றுப் புதினத்தில் சுவைபட விவரித்துள்ளார்.
பண்டைய தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள், தொலைநோக்குப் பார்வையுடன் ஏரி, குளம், சாலைகள், சாலையோர சுமைதாங்கிகள், சத்திரங்கள் அமைத்தல், மரங்கள் நடுதல், சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை பாதுகாத்ததோடு, கலைநுணுக்கங்களுடன் கோயில் கோபுரங்கள், மதுரை திருமலைநாயக்கர் மஹால், திருவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் மஹால் போன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கினர். மதுரையின் ஆதிகால கட்டிடக் கலைகளும் இவர்களால் அமைக்கப்பட்டவையே.
அதுமட்டுமல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவர் விக்ரகத்தை கடத்தி இலங்கைக்குக் கொண்டு சென்றபோது, நாயக்கர் திவான் திருமலையப்ப பிள்ளை அதை மீட்டுக் கொண்டுவந்தார். அதேபோல், பல இடங்களில் கிறித்துவர்களுக்கு தேவாலயங்களும், இசுலாமியர்களுக்கு மசூதிகளும் கட்டுவதற்கு இடங்களை நாயக்க மன்னர்கள் தானமாகக் கொடுத்ததெல்லாம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்மவார் இனத்தின் பல்வேறு வகையினர்
கம்மவாரில் ஜமீன்தாரி கம்ம, பெத்த கம்ம, சின்ன கம்ம, கண்டிகோட்ட கம்ம, கெம்ப்ப கம்ம, மாச்ச கம்ம, இல்லு வெல்லனி கம்ம, கூச்சிகம்ம, குடிபெட்ட கம்ம, எடமபைட்ட கம்ம, பங்காரு கம்ம எனப் பல வகையினர் உண்டு. இத்தகைய பிரிவுகள் அவர்கள் வாழும் அந்தந்த இடங்களில் நடைமுறை மற்றும் பழக்க வழக்கங்களால் ஏற்பட்டது எனக் கொள்ளலாம்.
ஜமீன்தாரர்களாக இருந்தவர்களுக்கு ஜமீன்தாரி கம்ம என்றும், அதைவிட சற்றுக் குறைவாகச் சொத்துகளும் வருமானமும் உடைய குடும்பத்தினருக்கு பெத்த கம்ம என்றும், அதைவிட இன்னும் சற்று வருமானம் குறைவாக உடையவர்களுக்கு சின்ன கம்ம என்ற பெயரும் வழங்கப்பட்டது. திருமணக் காலத்தில் மணப்பெண்ணை ஒரு கூடையில் வைத்து வந்து மணமகளிடம் கொடுத்து வந்த குடும்பத்தினருக்குக் ‘கெம்ப்ப கம்ம’ என்ற பெயர் வந்தது. வீட்டை விட்டு வெளியில் உள்ள நிலபுலன்களுக்குப் போகாதிருந்த குடும்பத்தினருக்கு ‘இல்லு வெல்லனி கம்ம’ எனப் பெயர் வழங்கப்பட்டது.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜமீன்தாரி கம்ம, பெத்தகம்ம, சின்ன கம்ம, கெம்ப்ப கம்ம போன்ற வகையினரே பெருவாரியான உள்ளனர். இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெத்த கம்மவார் மிகுந்து காணப்படுகின்றனர்.
பெத்த கம்ம என்பவர்களுக்குள் ‘தாசாங்கவாளு’, ‘பைத்தவாளு’ என்ற பிரிவினர் உண்டு. தாசாங்கவாளு என்பவர்கள் வைணவர்கள்; பைத்தவாளு அல்லது பருகுத்தினவாளு என்பவர்கள் சைவர்கள். திருமாலின் தாசர்கள், அடியவர்கள் என்ற பொருளில் தாசாங்கவாளு என்ற சொல் வழங்கியிருக்கக் கூடும்.
தாசாங்கவாளு தீவிர வைணவர்களாவர். சைவக் கோயிலுக்குள் நுழைந்திராத அளவிற்கு தீவிர வைணவர்கள். நெற்றியில் திருமண் மட்டுமே இட்டனர். திருநீறை அறவே ஒதுக்கினர். சில ஊர்களில் பைத்தவாளு குடும்பத்தினருக்குச் செம்பில் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுக்காத அளவுக்கு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ்ந்தனர். தாசாங்கவாளு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த கிராமங்கள் உண்டு. அதைப் போலவே பைத்தவாளு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த கிராமங்களும் உண்டு. ஒரு காலத்தில் இவர்களிடையே திருமண உறவு கிடையாது.
குருவிகுளம் ஜமீன்தார் பரம்பரையினர் கிருஷ்ண தேவராயரிடம் மிக்க விசுவாசமுள்ளவர்களாக இருந்து வந்த ஒன்பது சேனைத் தலைவர்களில் ஒருவருடைய வம்சத்தினர் என்றும், அக்காலகட்டத்திலேயே கண்டிக்கோட்டை, உதயகிரி, கொண்டவீடு, பேனுகொண்டா, கடப்பை, நெல்லூர், சங்ககிரி முதலிய பகுதிகளை ஆட்சி செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இளையரசனேந்தல் ஜமீன்தார் பரம்பரையினருக்குக் கிருஷ்ண தேவராயர் காலத்திலிருந்த வீரமல்ல என்பவரே மூலபுருஷர் எனப்படுகிறது.
கம்மவார், நாயுடு அல்லது நாயக்கர் எனவும் அழைக்கிறார்கள். நாயக்க மன்னர்கள் விஜய நகரத்தை ஆண்ட மூன்றாவது வம்சமான துளுவ பரம்பரையைச் சார்ந்தவர்கள். துளுவ வம்சத்தை ஸ்தாபித்த நாயக்க மன்னர்கள் என்பது அவர்களுடைய கோத்திரங்களை வைத்தும் (மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ‘காசியப’ என்ற கம்மவார் குலத்தைச் சார்ந்தவர்கள்) ‘நாயக்கர்’ என்ற பட்டத்தை அவர்கள் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதிலிருந்தும் தெளிவாகிறது.
நாயக்க மன்னர்களின் சொந்தப் பெயர்கள் கம்மவார் குலத்தினரால் வழங்கப்படுவது போல் மற்ற குலங்களில் அவ்வளவு வழங்கப்படவில்லை. ‘நாயுடு’ என்பது ‘நாயக்கன்’ என்பதாக தமிழில் வந்தது. நாயகடு என்றால் தலைவன். நாயகடு நாயக்கன் ஆயிற்று. நாளடைவில் நாயகடு நாயுடு எனவும் மருவிற்று. எனவே நாயக்கர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் கம்மவார் என்கிறார் பண்டிதர் அ.சி.நாயுடு. ‘தமிழ்நாட்டில் நாயக்கர், நாயுடு என்று வழங்கப்படுபவர்கள் கம்மவார், வெலமவார், பலிஜவார்’ என ச.கு.கணபதி ஐயர் கூறுகிறார்.
கம்மவார்களுக்கு ‘வடுகர்’ அல்லது வடுக நாயக்கர் என்ற பெயரும் உண்டு. கம்ம குல மூதாதையர்கள் 1886, 1895, 1907 மற்றும் அதற்கு பிற்பட்ட காலங்களில் எழுதிப் பதிவு செய்த பத்திரங்களில் ‘கம்மகுலம் - வடுக ஜாதி - விவசாய ஜீவனம்’ என்பதைக் காணலாம். வடுகன் என்ற பெயர் எப்படி வந்தது. தமிழ்நாட்டில் வாழும் கம்ம குலத்தவரைக் குறிப்பாகத் தென்பகுதியில் வாழ்ந்த கம்மவாரை தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் வடுக நாயக்கர் என அழைத்தனர். கம்பளத்து நாயக்கர் மற்றும் தொட்டிய நாயக்கரை அந்தப் பெயரிலேயே அழைத்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட கோவில்பட்டி தட்சிண கம்மவார் சங்கம், தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் கம்மவாரை ‘வடுக நாயக்கர்’ எனப் பதிவு செய்துள்ளது. ‘வடுகர்’ என்ற சொல் வடக்கு தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பதாக எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார். 1891-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘வடுகர்’ என்ற சாதி இடம் பெறுகிறது. இது தென் தமிழ்நாட்டில் வாழும் கம்ம குல மக்களையே குறிப்பிடுகின்றது. பெரும்பாலும் கம்மவார் என்பவர்கள் தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் ‘வடுகர்’ அல்லது ‘வடுக நாயக்கர்’ என அழைக்கப்படுகின்றனர்.
ஆக, தெலுங்கர்கள், குறிப்பாக கம்மவார் / வடுகர்கள் குடியேற்ற வரலாற்றை நோக்கும்பொழுது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தமிழகத்தின் தென்பகுதியில் குடியேறியிருக்கலாம். காரணங்கள் பல இருக்கலாம். சிலர் தெலுங்கு அரசர்கள் தமிழகத்தில் படையெடுத்தபொழுது, படைகளோடு வந்திருக்கலாம். சிலர் பஞ்சத்தின் கொடுமையான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு பிழைப்பைத் தேடித் தெற்கு மாவட்டங்களில் குடியேறியிருக்கலாம்.
அவ்வாறு குடியேறியவர்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி, குடியேறியவர்களுக்கு எதிர்ப்பில்லாத இடங்களைத் தேர்ந்தெடுத்துக் குடியேறியிருக்கலாம். அல்லது அன்றைய கம்ம இன ஜமீன்தார்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் குடியேறியிருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் குடியேறி இருக்கலாம் என தெரியவருகிறது. இவ்வாறு எண்ணற்ற தகவல்கள் கம்மவார் குறித்து தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்பாடு
1960-களுக்கு முன்னர் ஊரில் மின்சார வசதி மிகவும் குறைவாக இருந்த காலட்டத்தில் இரண்டு வகையான விளக்குகளை மக்கள் பயன்படுத்தினர். அதில் ஒன்று சிம்னி விளக்கு; மற்றொன்று லாந்தர் அல்லது அரிக்கேன் விளக்கு. இவ்விரு விளக்குகளிலும் எரிபொருளாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
சிம்னி விளக்கு சற்றுச் சிறியது. இவ்விளக்கு எண்ணெய் ஊற்றும் குடுவைப் பகுதி, திரி ஏற்றும் பகுதி, விளக்கு அணையாமல் இருப்பதற்குப் பொருத்தப்பட்ட கண்ணாடிக் குடுவை என மூன்று பகுதிகளைக் கொண்டது. இதனுடைய சிறப்பம்சங்கள் தேவைக்கேற்ப மண்ணெண்ணையை நிரப்பிக் கொள்ளலாம். எந்த அளவிற்கு வெளிச்சம் தேவையோ அந்த அளவிற்குத் திரியை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். திரியைச் சுற்றிக் கண்ணாடிக் குடுவை இருப்பதால் விளக்கு காற்றால் அணையக் கூடிய வாய்ப்புக் குறைவு; எளிதில் கையாளலாம். குறைந்த வெளிச்சத் தேவைக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்ட விளக்கு. விடிவிளக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 200 மில்லி மண்ணெண்ணெயில் இரவு முழுவதும் எரியும் தன்மை கொண்டது.
அதேநேரம், சிம்னி விளக்கு சற்று பெரிய காற்று அடித்தால் அணைந்து போகும் தன்மை உடையது. திரியைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றாலும், திரியைப் போதுமான அளவிற்குச் சரி செய்து பயன்படுத்தாவிட்டாலும் விளக்கிலிருந்து புகை வரக் கூடிய வாய்ப்பு அதிகம்.
சிம்னி விளக்கின் பயன்பாட்டுக் குறைகளை நீக்கிப் புதிய பயன்பாட்டு வசதிகளோடு உருவாக்கப்பட்டதே அரிக்கேன் விளக்கு. Hurricane என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் புயல். புயலடித்தாலும் அணையாத வகையில் வடிவமைக்கப்பட்ட இவ்விளக்கிற்கு அரிக்கேன் விளக்கு எனப் பெயரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இவ்விளக்கில், மண்ணெண்ணெய்யை சேமித்து வைக்கும் கலன், திரி ஏற்றும் பகுதி, கண்ணாடிக் குடுவை, புகை போக்கிப் பகுதி, விளக்கின் கை வளையப் பகுதி என 5 பகுதிகள் உள்ளன.
அரிக்கேன் விளக்கு பல பயன்பாட்டுச் சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. அவற்றில் மிக முக்கியமானவை: குறைந்த பராமரிப்புச் செலவு, குறைந்த எடை உடையது, மிகுந்த வெளிச்சம் தரக் கூடியது, நீண்ட நேரம் எரியும் தன்மையுடையது, புகை அதிகமாக வராது, எளிதில் புகையை வெளியேற்றக் கூடிய அமைப்பு, மண்ணெண்ணெய் அதிகமாகச் சேமிக்கும் அமைப்பு, எத்தகைய காற்றிலும் விளக்கு அணையாது, திரியை ஏற்ற இறக்குவதற்கு எளிதான இலகுவான அகற்றும் பகுதி, எளிதாகக் கையாளுதல் ஆகியவையாகும்.
இவ்விரு விளக்குகளும் அன்றைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் பயன்பாட்டில் இருந்தன. மாலை வேளையில் விளக்குகளை நன்றாகச் சுத்தம் செய்து, விளக்கேற்றுவார்கள். குறிப்பாகப் புகை படிந்த கண்ணாடிக் குடுவைகளை வீட்டில் இருக்கக் கூடிய சாம்பல் அல்லது கோலப்பொடி அல்லது பல் விளக்கப் பயன்படுத்தும் நெல் உமிச் சாம்பல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மெல்லிய துணியால் உட்புறமும், வெளிப்புறமும் நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வர். பின்னர் திரியில் படிந்துள்ள கரியை நீக்கிவிட்டு திரியைச் சமமாகக் கத்தரிப்பார்கள்.
அதன் பின்னர், விளக்கின் அடிப்பகுதியில் உள்ள கலனில் மண்ணெண்ணெய் ஊற்றி நன்றாக மூடி விளக்கைப் பற்ற வைப்பார்கள். அரிக்கேன் விளக்கைச் சுத்தம் செய்து அதைப் பற்ற வைப்பது ஒரு தனிக் கலை.
அந்தக் காலத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. இதனால் சில வீடுகளில் குறைவான மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படும் சிம்னி விளக்குகளையே பயன்படுத்தினர். பகல் பொழுதுகளில் காடு, கழனிகளில் வேலைபார்த்து மாலையில் வீடு திரும்பும் கிராம மக்கள், அந்தி சாய்ந்தவுடன் உணவருந்தி விட்டுத் தெருவில் அமர்ந்து சற்று நேரம் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் அளவளாவி விட்டு விரைவிலேயே தூங்கச் சென்று விடுவார்கள். எரிபொருள் சிக்கனமும் இதற்கு ஒரு காரணம். நிலாக் காலங்களில் நிலவொளியை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அன்றைய கிராம மக்கள் சமையல் செய்வதற்கு தாவரக் கழிவுகள் மற்றும் விறகை எரிபொருளாகப் பயன்படுத்தினர். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பருத்திமார்ப் படப்பை இருக்கும். அதில் இருந்து தேவையான அளவுக்கு பருத்திமாரை எடுத்து விறகாகப் பயன்படுத்துவார்கள். பருத்திமார் நன்றாக நின்று எரியும்.
அதேபோல் காடுகளிலும், குளங்களிலும், வரப்போரங்களிலும் வளரும் கருவேல மரங்களில், நன்றாக முற்றிய மரங்களை கோடரி அல்லது அரிவாளால் பிளந்து, விறகாக்கி வீடுகளில் சேமித்து வைப்பார்கள். இவை தவிர சீமைக் கருவேல மரங்களின் முட்கள் நிறைந்த நுனிக் கிளைகளை சீராக ஒரே நீளத்தில் வெட்டி அதை எரியூட்டப் பயன்படுத்துவதுண்டு. அந்நாட்களில் வேறு எந்தவித எரிபொருட்களும் பயன்பாட்டில் இல்லை. மேலும் எரிபொருட்களை விலை கொடுத்து வாங்குவதும் இல்லை.
தொழுஉரம் தயாரிப்பு
பெரும்பாலான வீடுகளில் ‘தொழுவம்’ வீட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும். மாடு ஒவ்வொரு முறையும் சாணம் போடும்போது, சாணத்தை அதற்கென வைக்கப்பட்டுள்ள கூடையில் அள்ளிப் போட்டு விடுவர். மாட்டின் கோமியம் தொழுவத்தை ஒட்டியுள்ள குழியில் சேமிக்கப்படும். தொழுவத்தில் சேகரிக்கப்பட்ட சாணத்தை குப்பையிலிட்ட பின்னர், கோமியமும் குப்பையிலேயே கொட்டப்படும். அவ்வப்பொழுது, குளங்களிலிருந்து சேகரித்து எடுத்து வரப்படும் வண்டல் மண்ணும் குப்பையின் மீது கொட்டப்படும்.
அவ்வாறு கொட்டப்படும் பொழுது, உள்ளேயுள்ள சாணம், தாவரக் கழிவுகள், வீட்டிலிருந்து வரும் சாம்பல் முதலான கழிவுகள் நன்றாக மக்கி உரமாக மாறுகின்றன. அவ்வப்பொழுது பெய்யும் மழையும் குப்பையின் மேல் விழுந்து ஈரப்பதத்தை ஏற்படுத்தி குப்பை மக்குவதற்குண்டான சூழலை ஏற்படுத்தும். இதை தொழு உரம் என்பார்கள். இவ்வாறு மக்கிய குப்பையானது ஆடி, ஆவணி மாதங்களில் கம்பு பயிர் செய்யும் நிலத்தில் அடி உரமாகப் பயன்படுத்தப்படும். இதற்காக விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வீடுகள் தோறும் வந்து தொழு உரத்தை சேகரித்துக் கொண்டு அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள்.
‘எரு ஏராளமாயிருந்தால் மடையனும் பயிரிடுவதில் வல்லவனாவான்’, ‘குப்பை உயர குடி உயரும்’ முதலான பழமொழிகள் உரமிடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. ஆவணி மாதத்தில் பெய்யும் ஒன்றிரண்டு மழையில் நிலம் நன்றாக நனைந்திருக்கும். உரம் மண்ணோடு மண்ணாகக் கலப்பதற்கான சூழலும் இருக்கும். எனவே இந்தப் பருவத்தில் குப்பையை நிலத்தில் பரவி உழுவர். தொழு உரத்துடன் பன்றி உரம், கிடை போடுவதால் உருவாகும் உரத்தையும் பயன்படுத்துவது உண்டு.
கிடை என்பது ஆடு, மாடு முதலான கால்நடைகளை இரவு நேரங்களில் விளைநிலங்களில் தங்க வைக்கும் பாரம்பரியத் தொழில் நுட்பமாகும். ஆடுகளைக் கொண்டது ஆட்டுக்கிடை என்றும், மாடுகளைக் கொண்டது மாட்டுக் கிடை என்றும் அழைக்கப்படும். கிடை போடுதல் பொதுவாக விளைச்சல் காலம் முடிந்து அடுத்த பயிர் செய்யும் இடைப்பட்ட காலத்தில் போடப்படும். செம்மறி ஆடு மேய்ப்பவர்கள் குறிப்பாக கோடை காலங்களில் தங்களுடைய ஆடுகளை ஊர் ஊராக ஓட்டிச் சென்று கிடை போடுவது வழக்கம். இத்தகைய ஆடு மாடுகளின் சாணக் கழிவுகள் நிலத்துக்கு உரமாக பயன்படுத்தப்படும்.
உறங்காப்புளி (புளிய மரம்)
“மரங்களோடு மனுசங்களுக்குள்ள தொடர்பை பிரிக்க முடியாது. மரங்கள்தான் அவனுடைய முதல் வீடு. மரங்களைத் தள்ளி வைக்க முடியாது... மக்களின் வாழ்க்கையிலிருந்து” என கி.ரா. கூறுகிறார். அது மறுக்க முடியாத உண்மையே. வயோதிகர்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர்கள் ஒருநாளில் பாதி நேரம் மரங்களின் நிழலிலும், மீதமுள்ள நேரம் வீட்டிலும் கழிப்பது வழக்கம். குளக்கரையில் உள்ள பெரிய மரங்களின் நிழலில் குறிப்பாக வேளாண் வேலைகள் அதிகம் இல்லாத கோடை காலத்தில், மக்கள் அமர்ந்திருப்பார்கள். குளக்கரைகளில் பெரும்பாலும் புளியமரம், அத்தி மரம், ஆலமரம், அரசமரம், வேப்ப மரம் ஓங்கி உயர்ந்து காணப்படும். அம்மரங்களை உற்றுக் கவனித்தால், ஊரோடு ஊராக நானும் வளர்ந்தேன் எனச் சொல்வது போலிருக்கும்.
புளியமரங்கள் வெட்கையான மரங்கள். எனினும் ஊரில் அதிகமாக நட்டுப் பாதுகாத்ததற்கு புளிய மரத்திற்கும் அவர்களது உணவுப் பழக்கத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பே காரணமாகும். புளியில்லாமல் சமையல் இல்லை.
வாழ்வியலோடு ஒன்றிவிட்ட குலதெய்வ வழிபாடு
தென்மாவட்டங்களில் குலதெய்வ வழிபாடு என்பது மக்களின் வாழ்வியலோடு ஒன்றி விட்டது. குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் என்பார்கள். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம். மற்ற தெய்வ வழிபாடுகளில் விளையும் பயன்களையும் குலதெய்வம் பெற்றுத் தரும். நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களே குலதெய்வம். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக காக்கும் வல்லமை படைத்தவர்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். குல தெய்வங்கள் கர்ம வினைகளை நீக்கும் வல்லமை படைத்தவை. நமது முன்னோர்கள், முப்பாட்டன், பாட்டன் என தந்தை வழிப் பரம்பரையில் வணங்கி வந்த தெய்வம்.
“முன்னோர் நின்று கும்பிட்ட இடம். அவர்களோட பாதம் இந்த இடத்தில்தான் பட்டது. அதே இடத்துல அவங்க பாதத்துக்கு மேலே என்னோட பாதம் படணும். என்னோட கால் தடம் பட்ட எடத்துல என் மகனோட கால் தடமும், அவனோட கால்தடத்துக்கு மேலே என் பேரனோட கால் தடமும் படணும். அவ்வளவுதான்... அதுபோதும் எங்களுக்கு. அந்த நம்பிக்கையை விடமாட்டோம்” என்று கிராம மக்கள் தொன்றுதொட்டு பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டை கடைபிடித்து வருகின்றனர்.
(தொடர்வோம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT