Published : 24 May 2025 02:08 PM
Last Updated : 24 May 2025 02:08 PM
தமிழர்களுடைய மரபு, கலாச்சாரம், ஜனநாயகப் பாங்கு, ஆட்சியில் மக்களுடைய பங்களிப்பு என்ற மகிமை, மாண்பை உத்திரமேரூர் கல்வெட்டு சொல்கின்றது. மக்களாலே தங்கள் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது உலகத்துக்குப் பறைசாற்றிய இனம் தமிழ் இனம். பழந்தமிழர் அரசியலில் சோழர்கால குடவோலை தேர்தல் முறை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறையாகும்.
இந்த முறையில் கிராமத்தின் பகுதிவாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். குடவோலை முறை 9-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது என்பதை பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்திரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.
குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்தார்கள். அதாவது மக்களிடையே நற்பெயர் உடைய மற்றும் பிறருக்கு நன்மை செய்பவர்களை அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், ஒரு சிறு பிள்ளையை கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்வார்கள், குழந்தையும் தெய்வமும் ஒன்றென கருதியதால் இந்த வழக்கம் இருந்தது. அதில் வரும் பெயருடைய நபரையே வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கொண்டு போட்டி பூசலின்றி.
ஓட்டுக்கு பணம் தராமல், சாதி கட்சிகள் கூட்டணி இல்லாமல், சினிமாக்காரர்கள் பிரச்சாரம் இல்லாமல், மதப்பிரச்சனைகளைக் கிளப்பாமல், கள்ள ஓட்டு போடாமல் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் மிகக் கடுமையான விதிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டதையும் மிகவும் விரிவாக தெரிவிக்கிறது உத்திரமேரூர் கல்வெட்டு.
வேட்பாளராகத் தகுதி உடையவர் (உத்திரமேரூர் கல்வெட்டின்படி):
“கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவர்... தனது மனையிலேயே அகம் (வீடு) எடுத்துக்கொண்டுள்ளவர்... வயது வரம்பு: 70 வயதிற்குக் கீழே 35 வயதிற்கு மேலே... மந்திர பிராம்மணம் வல்லான் அறிஞன், ஓதுவித்தறிவான் அல்லது அரைக்கால் நிலமே உடையான் எனினும் ஒரு வேதம் வல்லான் கல்வியிற் சிறந்தோன் அவர்களிலும் காரியத்தில் நிபுணனாக இருக்க வேண்டும். ஆசாரம் உடையான், பொருள் சுத்தம் மனச் சுத்தம் உடையான்...” என்று கல்வெட்டு கூறுகிறது...
அந்த வகையில், நல்ல கல்வி தேர்ச்சி, சிறிதளவு சொந்த நிலம், அறவழியில் நடப்பவன், வேதம் படித்து அறிந்தவன், தூய மனமுடைய ஆன்மிகவாதியாக உள்ளவன், நேர்மையான வழியில் பொருள் சேர்த்தவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையவர்கள் என்பதை அறிய முடிகிறது.
மேலும், வேட்பாளராகத் தகுதி அற்றோர் குறித்து, “கையூட்டு செய்தவன், பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனவன், பிறரின் பொருள் பறித்தோன்... மற்றும் பல...” என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், வாரியங்களுக்குக் கணக்கு காட்டாது இருந்தவன் மற்றும் குற்றம் இழைத்தவன் போன்றவர்களுக்கு சிற்றவை, பேரவை மக்கள், அதாவது அவனோடு தொடர்புடைய மக்கள் அவனது அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன்பிறந்தான், தந்தையோடு உடன் பிறந்தான், உடன் பிறந்தான், பிள்ளை கொடுத்த மாமன்... என்று பல்வேறு உறவு முறையிலும் தொடர்பிலும் வருவோரும் தேர்தலில் போட்டியிட தகுதி இழக்கின்றனர்...
குறிப்பாக, ஓலையை வாங்கும் முறை சிறப்பாக கையாளப்பட்டது. யாரேனும் ஒரு சிறுபிள்ளையால் ஓலை எடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் எழுதப்பட்ட ஓலையை நடுநிலையாளர் கையில் வாங்கும் பொழுது ஐந்து விரலும் நீட்டியபடி அகலமாக வைத்து உள்ளங்கையில் வாங்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்ட ஓலையை வாசித்து, மற்றவர்களும் வாசிக்கும்படியும் விதிகள் அமைக்கப்பட்டன.
அதோடு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவிக்காலத்தில் இடையில் தவறு செய்தால் உடனே பதவியிலிருந்து விலக்கக் கூடிய நடைமுறை அமைந்திருந்ததையும் உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
நேர்மை, ஒழுக்கம், ஆன்மீகம், சன்மார்க்க சமயங்களில் தெளிவு, அறிவாற்றல், உள்ளத்தில் ஒழுக்கம் உடையவர்களாக இருந்த அக்கால ஆட்சியாளர்களையும் தேர்தல் முறைகளையும் எண்ணுகிறபோது வியப்பும் பெருமிதமும் ஒருங்கே ஏற்படுவது இயல்பே...
தமிழ்நாட்டில் கம்மவார் குடியேறிய வரலாறு
தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி நிலவிய காலத்தில் கம்மவார் தமிழ்நாட்டில் குடியேறினர். நாயக்கர் ஆட்சி எப்பொழுது எவ்வாறு ஏற்பட்டது? எத்தனைக் காலம் நீடித்தது என்பதை சற்று ஆராய்தல் அவசியம்.
தென் தமிழகம் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! அவர்களுடைய ஆட்சி கி.பி.600 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, கி.பி.16-ம் நூற்றாண்டு வரை நீடித்தது. கி.பி.15, 16-ம் நூற்றாண்டுகளில் பாண்டியர்கள் ஆட்சி வலுவிழந்து இருந்தது.
கி.பி.1336-இல் தென்னாட்டில் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் சுல்தான் அரசுகள் தக்காணப் பகுதியில் நிறுவப்பட்டன. தென்னகத்துக்குச் சுல்தான் அரசுகளால் ஆபத்து வருமென விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். விஜயநகரப் பேரரசுக்கும் தக்காண சுல்தான்களுக்கும் அடிக்கடி போர்கள் நடைபெற்றன. இவர்களிடையே தீராத பகை இருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சுல்தான் அரசுகள் படையெடுத்து இசுலாமியர்கள் ஆட்சி ஏற்பட்டது. பிற்காலங்களில் இசுலாமியர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த இந்துக்களைக் காப்பாற்றும் பணியில் விஜயநகரப் பேரரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது.
இந்து சமயத்தைக் காக்க, விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார கம்பணன் கி.பி.1365-க்கும் கி.பி.1370-க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தார். இவரது படையெடுப்பு தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட அடித்தளமிட்டது எனக் கூறலாம். இக்காலகட்டத்தில் இராயல சீமையிலிருந்து தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் குடியேறினர். பல போர்த் தளபதிகளுக்குப் ‘பாளையக்காரர்’ அந்தஸ்து வழங்கப்பட்டது.
கி.பி.1420-ம் ஆண்டு பாண்டிய அரச வம்சம் விஜயநகரப் பேரரசால் தூக்கி எறியப்பட்டது. இருப்பினும், பாண்டிய மன்னர்கள் தென் தமிழகத்தைத் தொடர்ந்து ஆள்வதற்கு விஜய நகரப் பேரரசு அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து இசுலாமிய அரசர்களை வெளியேற்றியதில் முக்கிய பங்காற்றியவர்களில் விஜயநகரப் பேரரசால் அனுப்பப்பட்ட தளபதி நாகம நாயக்கரும், அவருடைய மகன் விசுவநாத நாயக்கரும் அடங்குவர். குறிப்பாக விசுவநாத நாயக்கர் பேராற்றல் படைத்தவராகப் போற்றப்பட்டார். மதுரையைக் காப்பதில் அரண்போல் செயல்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மதுரைப் பேரரசின் கீழ் வந்தது. விஜயநகரப் பேரரசின் சார்பாக திருச்சிராப்பள்ளி அரசை வழிநடத்தினார். அவருக்குப் பின்னர் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் விசுவநாத நாயக்கர், முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், வீரப்ப நாயக்கர், இரண்டாவது கிருஷ்ணப்ப நாயக்கர், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், இரண்டாவது முத்துவீரப்ப நாயக்கர், சொக்கநாத நாயக்கர், மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர், மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாத நாயக்கர், மீனாட்சி அரசி (விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மனைவி) ஆகியோர் (கி.பி.1527 - கி.பி.1736) ஏறத்தாழ 200 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகத்தை ஆண்டனர்.
இந்த அரசர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை ஆண்ட திருமலை நாயக்கர் எனப் பிஷப் கால்டுவெல் குறிப்பிடுகிறார். அவரது ஆட்சிக்குச் சாட்சியாக இருப்பவை மதுரையில் அவர் எழுப்பிய கட்டிடங்களும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனையுமாகும்.
ராணி மங்கம்மாளின் சீரிய ஆட்சி
திருமலை நாயக்கருக்கு அடுத்து, நாயக்கர் ஆட்சியில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர் ராணி மங்கம்மாள் (கி.பி.1689 - 1706). அவர் போரைத் தவிர்த்து அமைதியில் நாட்டம் கொண்டார். அன்றைய மதுரை, திருநெல்வேலி மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் சாலைகள் அமைத்தல், நீர் ஆதாரங்களைப் பெருக்க குளங்கள் வெட்டுதல், கிணறுகள் தோண்டுதல், அரண்மனை கட்டுதல் ஆகியவற்றின் மூலம் அழியாத புகழைத் தேடிக் கொண்டார்.
அவர் காலத்தில் கற்களால் கட்டப்பட்ட அன்னசத்திரங்கள், பயணியர் ஓய்வு மண்டபங்கள், சிதிலமடைந்த நிலையில் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றைக்கும் ஆங்காங்கே நம் கண் முன்னே சாட்சிகளாக நிற்கின்றன.
மதுரை நகரைக் கட்டமைத்ததில் நாயக்கர்களின் பங்கு மகத்தானது. காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்திலேயே இருந்துள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்காவிட்டால் கன்னட தேசத்தின் மீது போர் தொடுப்பேன் என்று சூளுரைத்த தகவலும் வரலாற்றாய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாயக்கர் காலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் சிறப்பாய் ஆதரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிப் புலவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். திருமலை நாயக்கர் இவற்றை ஆதரித்தது கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் தெரிய வருகின்றது. நாயக்கர் காலத்தில் மொழி வேறுபாடின்றி இலக்கியம் சிறப்பாகப் போற்றப்பட்டன.
நாயக்கர் ஆட்சியின் கடைசி அரசர் விஜயரங்க சொக்கநாதன் 1731-இல் காலமானார். அவருக்குப் பின்னர் யார் அரசன் என்ற ‘தாவா’ எழுந்தது. இதைக் கேள்வியுற்ற ஆற்காடு நவாப் தனது மகனான சப்தர் அலியின் தலைமையின் கீழ் படையை அனுப்பினார். அவனோடு தனது உறவினரான சந்தா சாகிப்பை அனுப்பிக் கப்பம் வசூலிக்க ஆணையிட்டார். எனினும், உண்மையான நோக்கம் - இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருச்சியைத் தங்கள் வசப்படுத்துவதாகும்.
ஆனால், சந்தா சாகிப் சதி செய்து திருச்சிராப்பள்ளிக்குத் தன்னைத் தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டு, மதுரை மற்றும் அதனை உள்ளடக்கிய பகுதிகளைத் தன்வசம் எடுத்துக் கொண்டார். இதனால் அரசை இழந்த நாயக்கர் வம்சத்து இளவரசர்களுள் ஒருவர், மராத்தியத் தளபதிகளான ராகோஜி பான்சலே மற்றும் தேசிங் ஆகியோர்களின் உதவியை நாடினார். இந்த இரு தளபதிகளும் தங்கள் படைகளுடன் தெற்கு நோக்கிப் பயணித்து, ஆற்காடு நவாப்பைத் தோற்கடித்து, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளை மீட்டெடுத்தனர். சந்தா சாகிப் சிறைபிடிக்கப்பட்டு மராத்தாவில் உள்ள சத்தாரா என்ற ஊரில் சிறை வைக்கப்பட்டார்.
1801-ஆம் ஆண்டு இப்பகுதிகள் அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தன. நாயக்கர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காகப் ‘பாளையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு அவை ‘பாளையக்காரர்கள்’ வசம் அவை ஒப்படைக்கப்பட்டன. சான்றாக தெற்குப் பகுதியில் எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பகுதிகள் பாளையக்காரர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ‘பாளையங்கள்’ அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்பட்டவையல்ல. விசுவநாத நாயக்கர் காலம் (1529) தொடங்கிக் கடைசி நாயக்க மன்னர் ஆட்சிக்காலம் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஆங்கில அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கட்டபொம்மன் (1760 - 99) இத்தகைய பாளையக்காரர்களுள் ஒருவர். எனவே, தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் இன மக்கள் கி.பி.15-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் குடியேறியதாகக் கொள்ளலாம்.
கரிசல் எழுத்தாளர்களில் முன்னோடியான கி.ராஜநாராயணன் எழுதிய, ‘நாட்டுப் பண்பாட்டு மரபில் தோன்றிய வரலாற்று நாவல்’ எனக் குறிப்பிடப்படும் ‘கோபல்ல கிராமம்’. கம்மவார் ஆந்திராவிலிருந்து குடியேறிய வரலாற்றையும், அவர்கள் வாழ்வியல் கூறுகளையும் தெளிவாகச் சித்தரிக்கிறது. கட்டபொம்மன் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதாகக் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ்ஸும் இக்கருத்தை எதிரொலிக்கிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
வானம் பார்த்த பூமியாகிய கரிசல் மண் உறுதியான அரசமைப்பு, நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஆட்படாமலும் 16-ம் நூற்றாண்டு வரை குடியேற்றத்துக்கு உட்படாமலும் இருந்து வந்திருக்கின்றன.
இந்த சமயத்தில்தான் தமிழ்ப் பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்களின் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. விஜயநகரப் பேரரசின் செல்வாக்கின் கீழ் தமிழகம் நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டபோது தெலுங்கு அரச குடும்பங்களும், அதிகாரிகளும் தமிழ் மண்ணில் குடியேறி நிலப்பிரபுக்கள் ஆயினர். தஞ்சை, திருச்சி, மதுரை, செஞ்சி போன்ற பகுதிகளில் இவ்வாறு தெலுங்கு நிலப்பிரபுக்கள் ஆங்காங்கு உருவாகினர்.
ஆனால், கரிசல் மண்ணில் குடியேறிய கம்மவார் நாயக்கர்கள் தோக்கலாவார் நாயக்கர்கள், வேட்டைக்கார நாயக்கர்கள், கன்னடக் கவுண்டர்கள் போன்றோரின் குடியேற்றம் மேற்குறிப்பிட்ட குடியேற்றங்களில் இருந்து சற்று மாறுபட்டது.
கோபல்ல கிராமத்தில் இவர்கள் குடியேற்றம் பற்றிச் சொல்லப்படும் கதையின் அடிப்படையில் சில உண்மைகள் இருக்கின்றன. கரிசல் மண்ணின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு குடியேறிய நாயக்கர் சமூகங்களில் சிற்சில வேறுபாடுகளுடன் கூடிய கிட்டத்தட்ட இதேபோன்ற கதைகள் ஏராளமாக வழங்கி வருகின்றன.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இசுலாமிய மன்னர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளில் உண்டான வெறுப்பின் விளைவாலும் நம்பிக்கையாலும் தூண்டப்பெற்று இந்த வசதியற்ற விவசாய சமூகம் தமிழகத்தை நோக்கி வந்திருக்கலாம் எனக் கருதலாம்.
அதிகாரிகளாகவும், கோயில் பூசாரிகளாகவும் வந்தவர்களுக்கு நீட்டிய ஆதரவுக் கரத்தை அகதிகளாக வந்த இவர்களுக்கு அன்றைய நாயக்க மன்னர்கள் நீட்டவில்லை. எனவே இவர்கள் யாரும் அண்டாத கரிசல் காடுகளில் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.
மேற்கூறிய கருத்தையே பேராசிரியர் நா.வானமாமலையும் பின்வருமாறு கூறுகிறார்:
இதுவொரு இனக்குழுவல்ல. பல காரணங்களால் நாடிழந்து, பிறந்த மண்ணை விட்டுப் பெயர்த்தெறியப்பட்டு கிளம்பி ஆபத்தில்லாத பூமியில் அடைக்கலம் புகவந்த கூட்டம். அவர்கள் தாங்கள் ஆயிரம் ஆண்டுகளில் பயன்படுத்திய போர்க்கருவிகள் உழுபடைகளோடு புதிய பூமிக்கு வந்தவர்கள். இவர்கள் யாருக்கும் சொந்தமில்லாத வனத்தை எரித்து கரிசல் மண்ணாக்கி, உழுது பயிரிட்டு, உணவுப் பொருள் உற்பத்தி செய்தார்கள். குடியேற்றம் அனைத்தும் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்பதை சரித்திரச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குடியேறிய இடங்களில் காடுகளைத் திருத்தி, பொது ஆதாரங்களை உருவாக்க நூற்றுக்கணக்கான கிராமங்களை ஏற்படுத்தினர்.
குடியேறியவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தில் குடியேறியதாகக் கூற முடியாது. பல்வேறு காலகட்டங்களில் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடியேற்றம் அனைத்தும் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்பதைச் சரித்திரச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குடியேறிய இடங்களில் காடுகளைத் திருத்தி, பொது ஆதாரங்களை உருவாக்கி, நூற்றுக்கணக்கான கிராமங்களை ஏற்படுத்தினர். இவ்வாறு பதிவு செய்துள்ளார் நா.வானமாமலை.
தமிழ்நாட்டில் அன்றைய ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் பல்வேறு இனத்தவர்கள், சாதியினர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களினால் குடியேறினர். இவ்வாறு குடியேறிய சாதியினர்கள், இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழ்வதைக் காணலாம். கம்மவார், காப்பு, கவரா, வெலமா, பலிஜா, ராஜுலு, காஜுலு, ரெட்டியார், சாலியச்செட்டி, தெலுங்கு, யாதவர், 24 மனை தெலுங்கு செட்டியார், வைசியர், பக்தார்கள், சம்சலா, ஒட்டர்கள், தாசரி, தொட்டி நாயக்கர், கம்பளத்து நாயக்கர், தெலுங்கு பிராமணர், அருந்ததியர், தொம்மரி ஆகிய சாதியினைச் சார்ந்தவர்கள் அவ்வாறு குடியேறியவர்களே.
அவர்களுள் கம்மவார் நில உடைமையாளர்கள்; பெரும்பாலும் சிறு விவசாயிகள்; விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள். நகர வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்கள். அவர்களுடன் வந்தவர்கள் அருந்ததியினர்கள். தோல் பதனிடுதல், செருப்பு செய்தல், கமலையின் தோல் பகுதியிலான வால் பகுதியைச் செய்தல், தோல் சம்பந்தப்பட்ட பொருட்களைச் செப்பனிடுதல், விவசாய வேலைகள் அனைத்தும் செய்தல், இறந்த உடலை எரியூட்டுதல் போன்ற செயல்களைச் செய்து வந்தனர்.
இவர்களது வாழ்வும் வாழ்வாதாரமும் தெலுங்கு பேசும் நில உடைமையாளர்களை முற்றிலும் சார்ந்திருந்தது. ஒட்டர்கள் - பூமியில் நீரோட்டம் பார்த்தல், கிணறு தோண்டுதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். காஜுலு பலிஜா - வளையல் வியாபாரம் செய்பவர்கள். கம்பளத்து நாயக்கர்கள் ஒரு காலத்தில் படைவீரர்கள். இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான பாளையங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். சான்றாகப் பாஞ்சாலங்குறிச்சி பாளையத் தலைவராக கட்டபொம்மனும், எட்டையபுரம் பாளையத் தலைவராக எட்டப்பனும் செயல்பட்டுத் தத்தம் பாளையங்களை ஆண்டமையைக் கூறலாம்.
இவ்வாறு குடியேறிய பல்வேறு தெலுங்கு பேசும் மக்களில் பெரும்பான்மையினர் கம்மவார். இந்தக் கம்மவர் யார் என்பது குறித்து பல்வேறு கதைகள் உண்டு. அக்கதைகள் பெரும்பாலும் புனையப்பட்ட கதைகளே. சிலவற்றில் உண்மையும் இருக்கலாம்.
கம்மவார் பற்றி உலா வரும் கதைகள்:
எட்கர் தர்ஸ்டன் மற்றும் ரெங்காச்சாரி எழுதிய ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற ஆய்வு நூலில் கம்மவார் குறித்து அன்று உலா வந்த சில கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.
1. கம்மா என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் காதில் அணியும் நகை. அரக்கர்கள் அட்டகாசத்தால் பெரிதும் துன்புற்ற முனிவர்கள், விஷ்ணுவிடம் சென்று தம்மைக் காக்குமாறு முறையிட்டனர். விஷ்ணு தம் மனைவியான இலட்சுமியை அணுகி ‘உங்கள் குறையை முறையிடுங்கள்’ எனப் பரிந்துரைத்தார். முனிவர்கள் இலட்சுமியிடம் முறையிட, இலட்சுமி தன்னுடைய காதணி ஒன்றை ஒரு பெட்டியில் வைத்து அதை நூறு ஆண்டுகள் வணங்குமாறு ஆணையிட்டார்.
முனிவர்களும் பெட்டியிலுள்ள காதணியை இடைவிடாது வணங்கினர். நூறு ஆண்டுகள் முடிந்தவுடன் பெட்டியிலிருந்து ஐந்நூறு வீரர்கள், முனிவர்கள் முன்னே தோன்றினர். முனிவர்கள் வேண்டுகோளுக்கிணங்க வீரர்கள் அரக்கர்களை அழித்தனர். பின்னர், முனிவர்கள் அவ்வீரர்கள் அனைவருக்கும் ஏராளமான நிலங்களை வழங்கி, அவற்றில் விவசாயம் செய்து வாழப் பணித்தனர். அதன்படி அவ்வீரர்கள் ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா, நெல்லூர் மாவட்டங்களில் பெரும்பாலான நிலங்களில் நன்முறையில் விவசாயம் செய்து வாழ்ந்தனர். இலட்சுமியின் காதணியிலிருந்து (கம்மலு) தோன்றியதால் இவ்வினத்தவர் ‘கம்ம’ என அழைக்கப்பட்டனர்.
2. கோதாவரி மாவட்டத்தில் உள்ள சில கம்மவார்கள் எம்.ஆர்.ஹெமிங்வேயிடம் கூறிய கதை: “பூர்வீகத்தில் நாங்கள் சத்திரியர்கள். வெகுகாலத்துக்கு முன்னர் எங்கள் இனத்தைச் சார்ந்த ஒருவர் பரீட்சத் பேரரசர் வம்ச வழியில் வந்த ஒரு அரசரைத் தகாத சொற்களால் திட்டி விட்டார். அதனால் கோபமடைந்த அரசர், அவர்களைத் தண்டிக்க முற்பட்டார். ஆபத்தை உணர்ந்த கம்மவார் ‘காப்பு’ இனத்தவரிடம் சரணடைந்தார்கள். அவர்களும் அடைக்கலம் கொடுத்துக் காத்தார்கள். தம்மைக் காத்த காப்பு இனத்தவரின் சம்பிரதாயங்களைக் கம்மவார் பின்பற்றி வாழ்ந்தார்கள்.
3. முதலாம் பிரதாப ருத்ரனும், இரண்டாம் பிரதாப ருத்ரனும் கி.பி.12-14 நூற்றாண்டில் தெலுங்கு தேசத்தை ஆண்டனர். அரசன் பிரதாப ருத்ரனின் விலை மதிப்பில்லாக் காதணி எதிராளியின் கையில் சிக்குண்டதையறிந்த ‘காப்பு’ இனத்தவர் எதிரிகளுடன் துணிச்சலோடு போராடி நகையை மீட்டனர். காப்பு இனத்தவரின் வீரச் செயல், அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் ‘கம்மா’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
4. கம்மவார்களும், வெலமவார்களும் ஒரே சாதியாக இருந்தபொழுது, கம்ம இனப் பெண்கள், இசுலாமியப் பெண்கள் அனுசரித்த ‘கோஷா’ முறையைப் பின்பற்றினர். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. கம்மவார்கள் பெரிதும் வேளாண் தொழிலில் ஈடுபட்டவர்கள் ‘கோஷா’ முறை வேளாண் தொழில் செய்வதற்குப் பெரிதும் தடையாக இருந்தது. எனவே ‘கோஷா’ முறையைக் கைவிட முடிவு செய்தார்கள். அதையே ஒரு உடன்படிக்கையாகப் பனை ஓலைச் சுருளில் எழுதினார்கள். உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் ‘கம்மரா’ என்றும், கையெழுத்திட மறுத்தவர்கள் ‘வெலமா’ (வெளியார்) எனவும் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
5. முன்னொரு காலத்தில் பெத்தரெட்டி என்ற அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பல மனைவிகள். தமக்கு மிகவும் பிடித்த மனைவியை அரசியாக்கினார். அதனால் பொறாமையுற்ற மற்ற மனைவியர்கள், அரசியின் நகைகளைத் திருடுமாறு தங்களது மகன்களுக்குக் கட்டளையிட்டனர். அன்னையரின் கட்டளையை ஏற்ற மகன்கள் நகைகளைத் திருடினர். அடுத்த நாள் மன்னர் தம் அரசியிடம் நகைகள் எங்கே என்று கேட்டார். அரசியார் நகைகளைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நகைகளைத் திருடிய அரச குமாரர்கள் தப்பித்து ஓடிச் சென்றனர். ஓடியவர்கள் ‘வெலமா’ என அழைக்கப்பட்டனர். திருடிய நகைகளை மீட்க உதவிய அரசகுமாரர்கள் ‘கம்மா’ என அழைக்கப்பட்டனர்.
6. கம்மாவில் கோட கம்மா, கெம்ப்ப கம்மா என்ற இரு பிரிவுகள் உண்டு. இந்த இரு மரபினரைக் குறித்து ஒரு கதை பரவலாக உலா வருகின்றது. ஒருநாள் இரண்டு சகோதரிகள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அரசன் வந்தான். தங்களை மறைத்துக் கொள்வதற்காக, ஒரு சகோதரி கூடையின் பின்னாலும், மற்றொரு சகோதரி சுவரின் பின்னாலும் ஒளிந்து கொண்டனர். இவ்விருவரின் சந்ததியினரே கெம்ப்ப (கூடை) கம்மா என்றும், கோட (சுவர்) கம்மா எனவும் அழைக்கப்பட்டனர். இவ்விரு பிரிவினரிடையே திருமண உறவு கிடையாது. ஏனெனில் இரு சகோதரிகளும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
7. சூரிய வம்சத்துத் தீலிபராஜனுடைய லட்ச சந்ததியில் பிறந்து சந்திர வம்சத்தினருடன் சம்பந்தம் செய்ததால் இவர்களுக்கு ‘உபாயன்’ என்ற பெயர் வந்தது. இவர்களுக்கு மூல புருசன் ‘தர்மபாலன்’. இவர்களுடைய ஆதிகுரு ‘தருமசீலன்’ என்பவர். தருமபாலனுடைய மகளைச் சந்திர வம்சத்தின் ஒருவன் அபகரிக்க முயன்றான். அவனுடைய தொல்லை தாங்காமல் தருமபாலன் வடபெண்ணை நதியைத் தாண்டி வந்தபொழுது, அங்கே ஜமதக்ளி, பரசுராமன், ரேணுகாதேவி ஆகியோர்களைப் பணிந்து வணங்கினான். தருமபாலனை ஆசீர்வதித்து அவனுக்கு ரேணுகாதேவி தன் காதோலையைக் கொடுத்தாள். அவற்றின் மகிமையால் நதியைக் கடந்து தன் மகளுக்கு வேறொரு இடத்தில் மணம் செய்வித்தான். அவனுடைய சந்ததியினரே கம்மவார். இவ்வாறு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
வரலாற்றாய்வாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே, இந்த தகவல்களையெல்லாம் இங்கே பதிவு செய்துள்ளேன். இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. அதேநேரம் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > கரிசல் மண் படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 22
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT