Published : 23 May 2025 09:31 AM
Last Updated : 23 May 2025 09:31 AM
உலகம் ஒரு விசித்திரமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் நிறைவில் பரவலாக தென்பட்ட, ஆழமாக வேரூன்றும் என்று மூன்றாம் உலக நாடுகள் பெரிதும் நம்பிய ஆரோக்கியமான சூழல், 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில், அநேகமாய் முற்றிலும் அற்றுப் போய்க் கிடக்கிறது. இம்மாதம் 12-ம் தேதி இங்கிலாந்து அரசு, விசா வழங்கல் தொடர்பாக, 82 பக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டது. வெளிநாட்டினர் வருகையைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்கு 6 நாட்கள் முன்னதாகத்தான் (மே 6) இந்தியா - இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் - புதிய விசா கட்டுப்பாட்டு விதிகள் இடையே நேரடித் தொடர்பு இல்லை. ஆனாலும், ஒன்று மற்றொன்றை பாதிக்கவே செய்யும். வர்த்தக உறவு வேண்டும்; ஆனால் ‘வருகையாளர்' கூடாது என்று கூறக் காரணம்..? ‘தற்காப்புப் பொருளாதாரம்' 2017 ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதன்முறையாக் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் பிரகடனம் - ‘அமெரிக்கா முதலில்'. அதாவது, எங்கள் நாட்டு நலனே முக்கியம்; பிறரின் நலன்களுக்காக நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கப் போவது இல்லை' என்பதாகும்.
இந்த அறிவிப்பு, தற்காப்புப் பொருளாதாரத்தை மையப்படுத்தும் சர்வதேச அரசியலுக்கு வழி வகுத்தது; வலு சேர்த்தது. இதற்கு முன்பும், அந்தந்த நாட்டு நலனுக்காக அவரவர் பேசியதும் செயல்பட்டதும் உண்டு. கூடவே சற்றேனும் ‘உலக நலன்', சாப்பாட்டில் உப்பு அளவுக்கு, தவிர்க்க முடியாத உள்ளீடாக விளங்கியது. 2017-க்குப்பிறகு, நிலைமை அடியோடு மாறிப் போனது.
அமெரிக்காவைப் பின் தொடர்ந்து சீனா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ‘என் நாடு முதலில்' கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தன. இந்தக் கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சம் - 'எங்கள் நாட்டு இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு' என்கிற பெயரில் அரங்கேறும் உள்ளூர் அரசியல் விளையாட்டு. 1990-களில், திறன்சார் பணிகளை, தகுதி வாய்ந்த இளைஞர்கள், எந்நாட்டவராக இருந்தாலும் எளிதில் பெற முடிந்தது. பணிச்சந்தையைப் பொருத்தமட்டில், ‘உலகம் முழுவதும் ஒரே கூரை' என்கிற நிலை எல்லா மட்டத்திலும் நிலவியது. அமெரிக்கா / ஐரோப்பாவில், இந்தியர்கள் உட்பட ஆசிய தேசத்தவர், மிகுந்த எண்ணிக்கையில் பணி வாய்ப்பு பெற்றனர்.
அயராத உழைப்பு, மங்காத திறமை, சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளுதல், குடியேறிய நாட்டுக்கு முழு விசுவாசம், அந்தந்த நாட்டு சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடத்தல் போன்ற நற்குணங்களால், ‘குடியேறிய' இளைஞர்கள், தாம் பணிபுரிந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு வலிமை சேர்த்தனர். இவர்களின் பங்களிப்பால் அந்தந்த நாடுகள் மிகுந்த பயன் பெற்றன. இதனை அங்குள்ள அரசுகள், தலைவர்கள், பொதுமக்கள் உணர்ந்தே உள்ளனர். ஆனாலும் இவர்களால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு என்கிற பொய்ப் பிரச்சாரம் நாளுக்கு நாள் பரவி வருகிறது. இதற்கு அங்குள்ள அரசுகளும் அரசுத் தலைமைகளுமே காரணம்.
நீண்ட காலப் பயன்களைக் கருத்தில் கொள்ளாமல், குறுகிய அரசியல் காரணங்களுக்காக ஆங்காங்கே உள்ள அரசியல் தலைவர்கள், அதிகார மையங்கள் எடுக்கும் விபரீத முடிவுகள், மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை சிதைக்கின்றன. கல்வி வளர்கிறது; அறிவு சுருங்குகிறது என்கிற வாதத்துக்கு ஏற்ப, உலக வர்த்தகம் விரிவடைகிறது; உலக இளைஞர்களின் எதிர்காலம் சுருங்கி வருகிறது.
குடியேறிகளின் போராட்டம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், குடியேற்ற விதிகள், விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக மாற, குடியேறிகள் சிலரும் காரணம். தனது சொந்த நாட்டுக்கு, அல்லது, தான் குடியேறிய நாட்டுக்கு எதிராக இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், கலவரம், வன்முறை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே குடியேற்ற விதிகளில், விசா கட்டுப்பாடுகளில் தீவிரம் காட்டப்படுகிறது.
இது அப்பாவி இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் டொனால்டு ட்ரம்ப் முன்னெடுக்கும் அதிரடி வரிவிதிப்பு, குடியேற்ற விதிகளில் திருத்தம், தீவிர விசா கட்டுப்பாடுகள் ஆகியன, பிரதானமாக அமெரிக்காவின் வணிக நலனை அடிப்படையாகக் கொண்டவையே. இதற்குப் பின்னால் இருப்பது 'ஓட்டு அரசியல்'. ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாதது.
பிற நாட்டவர் வருகையால், அமெரிக்கா மேலும் வளம் பெற்று இருக்கிறது என்பதே சரித்திரம் காட்டும் உண்மை. இதனை அமெரிக்க அரசும் அமெரிக்க மக்களும் நன்கு அறிவார்கள். பிறகு..? ‘கோவிட்' பெருந்தொற்று ஏற்படுத்திய கடும் பாதிப்பு, உலக நாடுகளின், குறிப்பாக வல்லரசுகளின், பொருளாதாரக் கோட்பாடுகளை முற்றிலுமாக மாற்றி விட்டது. கடந்த நான்கு/ ஐந்து ஆண்டுகளில் 'அந்நிய' வேலைவாய்ப்பு, வெகுவாக சுருங்கி விட்டது. இந்தியா போன்ற பெரிய பொருளாதார நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் போகலாம்; ஆனால், மூன்றாம் உலக நாடுகளின் இளைஞர்கள் நிச்சயமாக பெரும் சிக்கலுக்கு உள்ளானார்கள்.
தற்காப்புப் பொருளாதாரம் - பெரிய நாடுகளுக்கு ஆதாயம்; சிறிய நாடுகளுக்கு ஆபத்து. குறிப்பாக, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் மூன்றாம் உலக நாடுகளின் இளைஞர்கள் வஞ்சிக்கப்படுவார்கள். இது போதாது என்று, ‘கை நிறைய சம்பளத்துடன் அந்நிய வேலை' போய், அங்கிருக்கும் முதலாளிகள் இங்கே வந்து, மனித உழைப்பை மலிவாகப் பெற, இங்குள்ள தலைவர்கள் முயல்கிறார்கள். அந்நிய முதலீடுகளை அதாவது அந்நிய முதலாளிகளை 'ஈர்ப்பதில்' மாநிலங்களில் உள்ள எசமானர்கள், போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள்.
அந்நிய முதலாளிகளுக்கு, நம் மண்ணில், அன்றாடக் கூலிக்கு ஆட்களை ‘சப்ளை' செய்ய ‘புரிந்துணர்வு' ஒப்பந்தம் போடுவதில் தீவிரம் காட்டுகிறார்கள் நமது தலைவர்கள். 1990-களில் கண்ட பொருளாதார எழுச்சி நீர்த்துப் போய், நமது சுதந்திரத்துக்கு முந்தைய, ‘குமாஸ்தாக்களை' உருவாக்கும் பொருளாதார 'மாடல்' மீண்டும் தலை தூக்கி வருகிறது. தற்சார்புப் பொருளாதாரம் - ஒரு வரம். ‘தற்காப்புப் பொருளாதாரம்' - பெரும் சாபம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT