Published : 23 May 2025 08:16 AM
Last Updated : 23 May 2025 08:16 AM
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கெனவே இடியாப்பச் சிக்கலில் இருக்கும் பல்கலைக்கழக விவகாரத்துக்கு இந்த உத்தரவு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திமுக மூத்த வழக்கறிஞரும் எம்பி-யுமான வில்சன் அறிவித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக தொடரப் போகும் வழக்கும் அந்த பட்டியலில் இடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காலியாக உள்ள 10 பல்கலைக்கழகங்களில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அந்த நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளைக் கேட்டு குடியரசுத் தலைவர் சட்ட விளக்கம் கேட்டிருப்பதால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதும் தெளிவாகிறது.
இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் எப்படி தங்களது கல்விப் பணியையும், நிர்வாகப் பணிகளையும் தொடர முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பொதுவாக, துணைவேந்தர்கள் இல்லாத காலகட்டங்களில் தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை கல்வி வட்டாரத்தில் இருப்பவர்களால் மறுக்க முடியாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத காலகட்டத்தில், பொறுப்பில் இருந்தவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதே இதற்கான சாட்சியாகும். பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகள், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் மாறி மாறி பிறப்பிக்கும் உத்தரவுகள், அரசு சார்பில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, இந்த வழக்குகளில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே அனைவரது கவலை. எனவே, நீதிமன்ற வழக்குகளில் திறமையாக வாதங்களை எடுத்து வைத்து, மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்டுவது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி, துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் எந்த வகையிலும் கல்வி வளர்ச்சி பாதிக்காத வகையில் தற்காலிக ஏற்பாடு ஒன்றை உருவாக்குவது அவசியம்.
வழக்கு விவகாரங்கள் அனைத்தும் முடிந்து இறுதி முடிவு தெரியும் வரை இந்த தற்காலிக நிர்வாகம் கல்விப் பணியை திறம்பட கொண்டு செலுத்தும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதே இப்போதைக்கு தீர்வாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT