Last Updated : 21 May, 2025 07:41 AM

 

Published : 21 May 2025 07:41 AM
Last Updated : 21 May 2025 07:41 AM

உணவு உற்பத்திக்கு ஆபத்தாகும் காலநிலை மாற்றம் | சொல்... பொருள்... தெளிவு

இந்தியாவில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெப்பநிலையும், வெப்ப அலைகளும் இயல்பைவிட அதிகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ​

மார்ச் மாதம்தான் கோதுமைக்கான அறுவடைக் காலம் என்பதால், அதிகரித்த வெப்பநிலை காரணமாக, கோதுமை உற்பத்தி பாதிக்​கப்​படும் சூழல் உருவாகி​ உள்ளது. இந்தியாவில் அரிசிக்கு அடுத்​த​படியாக அதிக அளவு பயன்படுத்​தப்​படும் உணவு தானியம் கோதுமை என்பது குறிப்​பிடத்​தக்கது. பிற தானிய வகைகளும் காலநிலை மாற்ற விளைவு​களால் பாதிப்பை எதிர்​கொண்​டுள்ளன.

தீவிர வானிலை நிகழ்வுகள்: உலகின் பிற நாடுகளைப் போல இந்தியா​விலும் காலநிலை மாற்றத்தின் விளைவு​களால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு​வரு​கின்றன. குறிப்பாக, தென் மேற்குப் பருவ மழையின் வருடாந்திர மழை பொழியும் விதத்தில் குறிப்​பிடத்தக்க மாற்றம் ஏற்பட்​டுள்ளதால் வெள்ளம், வறட்சி, வெப்ப அலை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்​துள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் விவசாய மாநிலங்கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்​துள்ளது.

ஜனவரி - செப்டம்பர் மாதங்​களில், 90% நாள்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் பதிவாகி​யுள்ள​தாகத் தரவுகள் கூறுகின்றன; கடும் வெப்பம் - மழை காரணமாக 2024இல் 32 லட்சம் ஹெக்டேர் அளவு பயிர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளதுடன், 10,000 கால்நடைகள்வரை உயிரிழந்துள்ள​தாகவும் டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்​சூழலுக்கான மையம் தெரிவித்​துள்ளது.

கோதுமை: இந்தியாவைப் பொறுத்தவரை கங்கைச் சமவெளியின் வட மேற்குப் பகுதி​களில் கோதுமை அதிக அளவு பயிரிடப்​படு​கிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்​களில் கோதுமை விளைச்சல் அதிகம்.

கோதுமை வளர்வதற்குக் குளிர்ச்சியான வானிலை தேவை என்பதால் அக்டோபர் - டிசம்பர் மாதங்​களுக்கு இடையில் கோதுமைப் பயிர் விதைக்​கப்​படு​கிறது; மார்ச் - ஏப்ரல் மாதங்​களுக்கு இடையே அறுவடை செய்யப்​படு​கிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக வட மாநிலங்​களில் அதிகரித்து​வரும் வெப்பத்தால் கோதுமை உற்பத்​தியில் விவசா​யிகளால் நிர்ண​யிக்​கப் பட்ட இலக்கை எட்ட முடிய​வில்லை.

2023-2024இல் 2.62 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்​பட்டது. 2024-2025 கோதுமை கொள்முதல் 2.66 கோடி டன்னாகப் பதிவாகியது. இந்த அளவு முந்தைய ஆண்டைவிட சற்றே அதிகமாக இருந்​தா​லும், நிர்ண​யிக்​கப்பட்ட இலக்கைவிட (3.41 கோடி டன்) குறைவாகவே இருந்தது. இந்தியாவின் முதன்​மையான பயிர்​களில் ஒன்றான அரிசி, கடும் வெப்பம், மழை, பலத்த காற்று காரணமாக மோசமான பாதிப்பைச் சந்தித்து​வரு​கிறது.

2022இல் பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட் மாநிலங்​களில் நெற்பயிரில் ‘நெற்​ப​யிரைக் குட்டை​யாக்கும் வைரஸ்’ (Rice Dwarf Virus) தொற்று பரவியது. மே, ஜூன் மாதங்​களில் நிலவிய அதிக வெப்பநிலை, இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கியக் காரணமாக இருக்​கலாம் எனக் கருதப்​படு​கிறது.

தரம் குறையும் தானியங்கள்: சர்வதேச மூலக்கூறு அறிவியல் இதழ் (Journal of Molecular Sciences) 2022இல் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதிகரித்து​வரும் வெப்பநிலை, கோதுமையின் உயிரியல் - வளர்ச்சி செயல்​பாட்டில் குறிப்​பிடத்தக்க மாற்றங்​களைத் தூண்டு​கிறது என்றும், இந்த மாறுதல்கள் தானிய உற்பத்தி - தரக்குறைவுக்கு வழிவகுக்​கின்றன என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்​பிடு​கிறது. மேலும் இந்த அறிக்கை​யில், அதிகரிக்கும் வெப்பத்தால் ஒளிச்​சேர்க்கை, ஆக்ஸிஜனேற்றம் போன்றவை பாதிக்​கப்​படு​வதால் தானியங்​களின் வளர்ச்சி கடுமை​யாகப் பாதிக்​கப்​படும் என்றும் சுட்டிக்​காட்​டப்​பட்​டுள்ளது.

அதிக வெப்பம், கோதுமையில் புரதச்​சத்தைக் கூடுதலாக உற்பத்​தி​செய்து, மாவுச்​சத்தைக் குறைத்து, கோதுமையைக் கடினமாக்கு​கிறது. இதன் காரணமாகக் கோதுமையை அரைக்​கும்போது தரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தானிய எடைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படு​கின்றன; இதனால் சந்தையில் விவசா​யிகள் விலைக் குறைவைச் சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்​கின்​றனர்.

பாதிப்புகள்: காலநிலை மாற்ற​ம் ஒரு நாட்டின் உணவு உற்பத்​தியில் பாதிப்பை ஏற்படுத்து​வதுடன் வேலைவாய்ப்பு, பொருளா​தாரம் எனப் பல்வேறு அம்சங்​களிலும் பின்னடைவுகளை ஏற்படுத்து​கிறது. இந்திய மக்கள்​தொகையில் 58% பேர் விவசா​யத்தைத் தங்கள் முதன்​மையான வாழ்வா​தா​ர​மாகக் கொண்டுள்​ளனர்.

அந்த வகையில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளா​தா​ரத்தில் விவசாயம் - அதைச் சார்ந்த துறைகள் சுமார் 18% பங்களிப்பை வழங்கு​கின்றன. இச்சூழலில், காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்​கப்​படுவது நாட்டின் பொருளா​தா​ரத்தில் தாக்கத்தை ஏற்படுத்​தக்​கூடும்.

இந்தியாவில் உள்ள 787 மாவட்​டங்​களில், காலநிலை மாற்றம் சார்ந்த ஆபத்தை 109 மாவட்​டங்கள் அதிதீ​விர​மாக​வும்; 201 மாவட்​டங்கள் தீவிர​மாகவும் எதிர்​கொண்​டு உள்ளன. எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்​ளா​விட்​டால், 2050ஆம் ஆண்டுக்​குள், அரிசி விளைச்சல் 20%, கோதுமை 20%, மக்காச்​சோளம் 18% குறையும் என நிபுணர்கள் எச்சரிக்​கின்​றனர். இத்தகைய சூழலில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்​ப​தற்கான மாற்று வழிகளில் இறங்குவது அவசியம்.

தீர்வுகள்: பல்வேறு காலநிலை ஆபத்து​களைத் தாங்கும் மேம்படுத்​தப்பட்ட விதைகளை உருவாக்​குதல், நெற்பயிர் வளர்க்​கப்​படும் விதத்தை மாற்றியமைத்தல் போன்ற​வற்றின் மூலமாகத் தீவிரக் காலநிலைப் பாதிப்புகளை எதிர்​கொள்ள முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் நம்பு​கின்​றனர்.

வெப்ப அலைகள் ஏற்படும் பகுதி​களைக் கண்டறிந்து பயிர்களை முன்கூட்டியே விதைப்பது, வளர்வதற்குக் குறைந்த காலம் தேவைப்​படு​கின்ற / அதிக அளவு மகசூலைத் தருகின்ற கொண்டைக்​கடலை, கடுகு போன்ற​வற்றை அதிக அளவில் பயிரிடலாம். உருளைக்​கிழங்கின் நடவுக் காலத்தை மாற்றியமைக்​கலாம்.

இத்தகைய முன்னெடுப்புகள், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வேளாண் உற்பத்தியை வடிவமைக்​க​வும், பசுங்குடில் வாயு வெளியேற்​றத்தைக் குறைக்​க​வும், வருமானத்தை அதிகரிக்​கவும் உதவுகின்றன. அதிகரித்து​வரும் காலநிலை மாற்றத்தை எதிர்​கொள்ளும் வகையில் திட்டங்களை வகுத்தல், அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில்​நுட்பத் தீர்வு​களுக்குப் போதிய நிதியை ஒதுக்குவதன் மூலம் மகசூலில் மேம்பட்ட நிலையை அடைய முடியும்.

பயிர்க் காப்பீட்டை முறைப்​படுத்​துதல், வானிலை பற்றிய போதிய விழிப்பு​ணர்வை விவசா​யிகளிடம் ஏற்படுத்​துதல் போன்றவை வருங்​காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்​கொள்ள​வும், உணவு உற்​பத்​தியில் தன்னிறைவை உறு​தி​செய்​யவும் உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x