Published : 21 May 2025 07:41 AM
Last Updated : 21 May 2025 07:41 AM
இந்தியாவில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெப்பநிலையும், வெப்ப அலைகளும் இயல்பைவிட அதிகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மார்ச் மாதம்தான் கோதுமைக்கான அறுவடைக் காலம் என்பதால், அதிகரித்த வெப்பநிலை காரணமாக, கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவில் அரிசிக்கு அடுத்தபடியாக அதிக அளவு பயன்படுத்தப்படும் உணவு தானியம் கோதுமை என்பது குறிப்பிடத்தக்கது. பிற தானிய வகைகளும் காலநிலை மாற்ற விளைவுகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
தீவிர வானிலை நிகழ்வுகள்: உலகின் பிற நாடுகளைப் போல இந்தியாவிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக, தென் மேற்குப் பருவ மழையின் வருடாந்திர மழை பொழியும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளம், வறட்சி, வெப்ப அலை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் விவசாய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரி - செப்டம்பர் மாதங்களில், 90% நாள்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன; கடும் வெப்பம் - மழை காரணமாக 2024இல் 32 லட்சம் ஹெக்டேர் அளவு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10,000 கால்நடைகள்வரை உயிரிழந்துள்ளதாகவும் டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழலுக்கான மையம் தெரிவித்துள்ளது.
கோதுமை: இந்தியாவைப் பொறுத்தவரை கங்கைச் சமவெளியின் வட மேற்குப் பகுதிகளில் கோதுமை அதிக அளவு பயிரிடப்படுகிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கோதுமை விளைச்சல் அதிகம்.
கோதுமை வளர்வதற்குக் குளிர்ச்சியான வானிலை தேவை என்பதால் அக்டோபர் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கோதுமைப் பயிர் விதைக்கப்படுகிறது; மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு இடையே அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக வட மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பத்தால் கோதுமை உற்பத்தியில் விவசாயிகளால் நிர்ணயிக்கப் பட்ட இலக்கை எட்ட முடியவில்லை.
2023-2024இல் 2.62 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. 2024-2025 கோதுமை கொள்முதல் 2.66 கோடி டன்னாகப் பதிவாகியது. இந்த அளவு முந்தைய ஆண்டைவிட சற்றே அதிகமாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட (3.41 கோடி டன்) குறைவாகவே இருந்தது. இந்தியாவின் முதன்மையான பயிர்களில் ஒன்றான அரிசி, கடும் வெப்பம், மழை, பலத்த காற்று காரணமாக மோசமான பாதிப்பைச் சந்தித்துவருகிறது.
2022இல் பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட் மாநிலங்களில் நெற்பயிரில் ‘நெற்பயிரைக் குட்டையாக்கும் வைரஸ்’ (Rice Dwarf Virus) தொற்று பரவியது. மே, ஜூன் மாதங்களில் நிலவிய அதிக வெப்பநிலை, இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தரம் குறையும் தானியங்கள்: சர்வதேச மூலக்கூறு அறிவியல் இதழ் (Journal of Molecular Sciences) 2022இல் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதிகரித்துவரும் வெப்பநிலை, கோதுமையின் உயிரியல் - வளர்ச்சி செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தூண்டுகிறது என்றும், இந்த மாறுதல்கள் தானிய உற்பத்தி - தரக்குறைவுக்கு வழிவகுக்கின்றன என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் இந்த அறிக்கையில், அதிகரிக்கும் வெப்பத்தால் ஒளிச்சேர்க்கை, ஆக்ஸிஜனேற்றம் போன்றவை பாதிக்கப்படுவதால் தானியங்களின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக வெப்பம், கோதுமையில் புரதச்சத்தைக் கூடுதலாக உற்பத்திசெய்து, மாவுச்சத்தைக் குறைத்து, கோதுமையைக் கடினமாக்குகிறது. இதன் காரணமாகக் கோதுமையை அரைக்கும்போது தரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தானிய எடைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன; இதனால் சந்தையில் விவசாயிகள் விலைக் குறைவைச் சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்புகள்: காலநிலை மாற்றம் ஒரு நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் எனப் பல்வேறு அம்சங்களிலும் பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 58% பேர் விவசாயத்தைத் தங்கள் முதன்மையான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் விவசாயம் - அதைச் சார்ந்த துறைகள் சுமார் 18% பங்களிப்பை வழங்குகின்றன. இச்சூழலில், காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவில் உள்ள 787 மாவட்டங்களில், காலநிலை மாற்றம் சார்ந்த ஆபத்தை 109 மாவட்டங்கள் அதிதீவிரமாகவும்; 201 மாவட்டங்கள் தீவிரமாகவும் எதிர்கொண்டு உள்ளன. எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால், 2050ஆம் ஆண்டுக்குள், அரிசி விளைச்சல் 20%, கோதுமை 20%, மக்காச்சோளம் 18% குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான மாற்று வழிகளில் இறங்குவது அவசியம்.
தீர்வுகள்: பல்வேறு காலநிலை ஆபத்துகளைத் தாங்கும் மேம்படுத்தப்பட்ட விதைகளை உருவாக்குதல், நெற்பயிர் வளர்க்கப்படும் விதத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றின் மூலமாகத் தீவிரக் காலநிலைப் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வெப்ப அலைகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து பயிர்களை முன்கூட்டியே விதைப்பது, வளர்வதற்குக் குறைந்த காலம் தேவைப்படுகின்ற / அதிக அளவு மகசூலைத் தருகின்ற கொண்டைக்கடலை, கடுகு போன்றவற்றை அதிக அளவில் பயிரிடலாம். உருளைக்கிழங்கின் நடவுக் காலத்தை மாற்றியமைக்கலாம்.
இத்தகைய முன்னெடுப்புகள், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வேளாண் உற்பத்தியை வடிவமைக்கவும், பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களை வகுத்தல், அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில்நுட்பத் தீர்வுகளுக்குப் போதிய நிதியை ஒதுக்குவதன் மூலம் மகசூலில் மேம்பட்ட நிலையை அடைய முடியும்.
பயிர்க் காப்பீட்டை முறைப்படுத்துதல், வானிலை பற்றிய போதிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்துதல் போன்றவை வருங்காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவை உறுதிசெய்யவும் உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT