Published : 21 May 2025 09:03 AM
Last Updated : 21 May 2025 09:03 AM
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளிவராத நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது மக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் வரும்போது, அதுகுறித்து சாதாரண மக்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதிவதைப்போல் வழக்கு பதிவு செய்ய முடியாது. நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை நீதிபதிகளைக் கொண்ட உள் விசாரணைக் குழு முடிவு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும்.
இந்த நடைமுறை, கடந்த 91-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைமுறையாகும். இதை எதிர்த்து ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார். உள் விசாரணை நடைமுறைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை; வெளிப்படைத்தன்மையும் இல்லை என்பதால், அந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்த பணம் எங்கிருந்து வந்தது, என்ன பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது, இதன் பின்னணியில் இருந்த பெரிய மனிதர்கள் யார், மின்னணு சாட்சியங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் நடந்த ஒரு வாரத்துக்குப் பின்னரே 140 கோடி மக்களுக்கும் செய்தி தெரியவந்தது. இதுபோன்று எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன என்று அறியும் உரிமை மக்களுக்கு உண்டு என்றெல்லாம் ஜெகதீப் தன்கர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி விலக்களிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. சாதாரண குடிமகன்கள் மீது ஒரு புகார் வந்தால் உடனடியாக காவல்துறை தலையிட்டு வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக தண்டனை பெற்றுத் தரும் நடைமுறை ஏன் நீதிபதிகளுக்கு பொருந்துவதில்லை என்ற சாதாரண மக்களின் கேள்வியில் உள்ள நியாயத்தை உணர வேண்டும்.
ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகளை நம்பி ஓட்டுப்போட்டு பொறுப்பை ஒப்படைக்கும் மக்களுக்கு, அந்த அரசியல்வாதிகள் தவறு செய்யும்போது தீர்வு நாடக்கூடிய ஒரே புகலிடம் நீதிமன்றம்தான். நீதிமன்றம் மட்டும் விழிப்புடனும் கண்டிப்புடனும் இல்லாமல் இருந்துவிட்டால் தவறு செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் என்பதே இல்லாமல் போய்விடும். அதேசமயம், மக்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் நீதித்துறையிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த வகையில், வெளிப்படைத்தன்மை கோரி ஜெகதீப் தன்கர் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் நியாயமானதே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT