Published : 18 May 2025 10:26 AM
Last Updated : 18 May 2025 10:26 AM

கரிசல் மண் படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 22

இடது: மேலாண்மை பொன்னுச்சாமி | வலது: பாதசாரிகள் ஓய்வெடுக்க நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கல்மண்டபம்

‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ கி.ரா.வைப் போல, அம்மண்ணில் பிறந்த மற்றொரு ஆளுமை மேலாண்மை பொன்னுச்சாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்த கிராமத்தில் மளிகைக் கடை வைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

1960 காலகட்டங்களில் திருவேங்கடத்தில் மாலை நேரங்களில் அவரை அடிக்கடி சந்திப்பது உண்டு. தேநீர் அருந்தியபடி பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவோம். கையில் தீக்கதிரும், செம்மலரும் வைத்திருப்பார். இவருடைய ஆசான் எஸ்.ஏ.பெருமாள் ஆவார். எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல படைப்பாளிகள் எஸ்.ஏ.பெருமாளால் இலக்கிய உலகத்தில் வளர்ந்தார்கள்.

இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு ஏற்பட்ட தொடர்பால் எழுதத் தொடங்கினார். அந்த வகையில், 36 படைப்புகளைப் படைத்துள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார். இவர் எழுதிய ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

இவர், வானம்பார்த்த கரிசல் மண்ணில் தீப்பெட்டி தொழிலாளர்களுடைய பாடுகளை அதிகம் எழுதியுள்ளார். என்னை மனதில் கொண்டு ஒரு பாத்திரப்படைப்பாகவும் கொண்டு வந்துள்ளார். அதேபோல் இவரது ஊர் பக்கத்தைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி பெ.மகேந்திரன், தன்னுடைய ‘நிறைகுளம்’ என்ற படைப்பில், கரிசல் மண்ணில் தண்ணீர் கொண்டுவர வேண்டும், அணைகள் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்ததைக் குறித்து, என்னைப் பற்றி எழுதியுள்ளார். இவர் மேலாண்மை பொன்னுச்சாமியின் நெருங்கிய நண்பர்.

மேலாண்மை பொன்னுச்சாமியைப் பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மூ.பாலசுப்பிரமணியன், தனது ‘கரிசல் நிலமும் மேலாண்மறைநாடு கிராமமும்’ என்ற ஆய்வு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

கரிசல் எழுத்தாளர்களில் மேலாண்மை பொன்னுச்சாமியும் குறிப்பிடத்தக்கவர். அவர் தனது கதை இலக்கியங்களில் கரிசல் வட்டார இயல்புகளை நயம்பட வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பிறந்து வளர்ந்த மேலாண்மறைநாடு கிராமத்தை வெளியாகக் கொண்டு படைப்புகளைத் தந்துள்ளார்.

“மேலாண்மறைநாடு கரிசல் பூமி. மானாவாரி நிலங்களையும், வறண்ட கிணறுகளையும் நம்பி விவசாயம் செய்யும் கிராமம். அக்கிராம மக்களின் வாழ்வு வறுமையோடு போராடுவதும் விவசாயம் இல்லாத காலத்தில் பிழைப்புக்காக, அருகிலிருக்கும் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்குச் செல்வதும்தான். வறுமை மட்டுமல்ல, சாதியம், பெண்ணடிமைத்தனம் போன்ற சிக்கல்களும் அவர்களுக்கு உண்டு. புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட மாற்றங்கள் அக்கிராம வாழ்வை, நரக வாழ்வாக மாற்றியது எனப் புதுச் சிக்கல்களும் உண்டு. இவற்றை கருக்களாகக் கொண்டே மேலாண்மை பொன்னுச்சாமி கதைகளைப் படைத்துள்ளார்.

தனது படைப்புகளுக்கான வெளியாக மேலாண்மறைநாடு என்னும் கிராமத்தைக் கொண்டிருந்தார். அக்கிராமம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கின்றது. கரிசல் கிராமங்களுக்குரிய அத்தனை அடையாளங்களையும் கொண்டிருக்கும் இக்கிராமம் குறித்து தனது படைப்புகளில் விவரித்துள்ளார்.

“தண்ணீர் பிறப்பே காணாது, காய்ந்து கனல் பறந்து கிடக்கிற ஆறு... அசோக வனமாக வேலிமரக்காடு... வெட்டுப்பட்டுக் காய்ந்து கிடந்த முளகுமி... மஞ்சணத்தி மரம்... ஆற்றுக் கரையின் மண் சரிவு... தலைவிரி கோலமாகப் பேயாகக் கிடக்கிற வேலிமர விளார்கள்... நெருக்கமாக நாலு தூர்கள்... ஒடிந்து நொறுங்கிக் கிடக்கிற முள்குமி... விரல் நுழைக்க முடியாத அடர்த்தி, ஏகப்பட்ட தொழைதழைகள்...” என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம், கரிசல் நிலத்தின் வறட்சியை அடையாளமாகவும் எல்லையாகவும் கொண்டிருந்த அக்கிராமத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல், கரிசல் பூமியில் வறட்சியான விவசாயம் செய்யப்படுவதையும், நிலத்தின் இயல்பையும், தண்ணீரின் தரத்தையும், மேலாண்மை பொன்னுச்சாமி தனது மற்றொரு கதையில் கூறும்போது, “காடு கரைகளிலிருந்த பச்சைப் பசப்புகளைக் கோடை வெயிலும் காற்றும் தின்று தீர்த்து விட்டன. கரிசல் காடுகளில் பயிர் பச்சையெல்லாம் ஓய்ந்து பழங்கதையாகி... உழுது போட்டு விட்டனர் சம்சாரிகள். இறவைத் தோட்டங்களிலும் பருத்தி ஓய்ந்துவிட்டது. உழுது ஆறப் போட்டு விட்டனர். மிச்சமிருக்கிற ஒன்றிரண்டு தோட்டங்களிலும் கதை கந்தலாகிக் கிடக்கிறது. கோடை மழையில்லாமல் அகத்திகள் கூட நெஞ்சு வற்றிப் போய் இணுக்கு இணுக்காக இலைகளை ஆட்டிக் கொண்டு குச்சியாக நிற்கின்றன.”

“கோவணத் துணி போல கொஞ்சமாய் நிலம். அதுவும் உப்புத் தண்ணீர்... வாயில் வைக்க முடியாது. வேப்பெண்ணையாய்க் குமட்டும். உப்புத் தண்ணீர் பாய்ந்து பாய்ந்து உவர் பொங்குகிற புஞ்சையில் மழையில்லா விட்டால் தீப்பிடித்த மாதிரிதான். பருத்திச் செடிகளெல்லாம் பட்டுப் போய்விட்டன. அகத்தியும் செத்துப் போயிற்று. வேறு என்ன செய்ய? எல்லாவற்றையும் பிடுங்கி துப்புரவாக்கி, நிலத்தை உழுது போட்டாகி விட்டது...” என்கிறார்.

இவ்வாறு மேலாண்மை பொன்னுச்சாமி குறித்த தனது ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கிறார் முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்.
கரிசல் நிலத்துக்கு மத்தியில் மிகவும் அரிதாகக் குறைந்த அளவில் செம்மண் நிலப்பகுதியைக் காணலாம். அத்தகைய பகுதிகளில் அமைந்துள்ள ஓரிரு கிராமங்களின் பெயர்கள் மண்ணின் பெயரை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சான்றாக கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவே தென்படும் சிறிய செம்மண் திடலில் அமைந்துள்ள கிராமம் இடைசெவல் (கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த ஊர்) எனப் பெயர் பெற்றுள்ளது. கரிசல் சூழ்ந்த பகுதிக்கு நடுவே செம்மண் காணப்பட்டதால் இடைசெவல் (இடையில் செம்மண்) எனப் பெயர் கொண்டுள்ளது.

கி.ரா. தனது ஊரின் பெயருக்கான காரணத்தை, “கரிசல் தாயின் நெற்றியில் ஒரு செந்தூருக்கம் பொட்டு மாதிரிக் கொஞ்சம் செவல்காடு (செம்மண் தரை) இருக்கிறது. தெற்கேயும் வெகுதூரம் கரிசல் இடைப்பட்ட இந்த இடத்துக்கு ‘இடைசெவல்’ என்று பெயர் சொல்லி வந்தார்கள். இதுவே நாளாவட்டத்தில் ஊர் பெயராகி விட்டது” என்று குறிப்பிடுகிறார். செவல்குளம், செவல்பட்டி என்ற ஊர்களின் பெயர்க்காரணமும் இவ்வகையில் அமைந்ததே.

கரிசல் மண்ணில் கம்மவார் இனம்

கரிசல் மண்ணையும் கம்மவார் இனத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. இவ்வினத்தின் வாழ்வோடும், வாழ்வாதாரத்தோடும், வாழ்வியலோடும் இணைந்த நிலம் கரிசல் நிலம். குறிப்பாக, நீர்ப்பாசனம் இல்லாத வானம் பார்த்த வறண்ட கரிசல் நிலத்துக்கும், கம்ம இனத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர்கள் குடியுள்ள கிராமங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால், ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி (இன்றைய விருதுநகர், தூத்துக்குடியின் வடக்கு மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வரையும் தெற்கே கயத்தாறு வரையும்) மாவட்டங்களில் நிறைந்து காணப்படுகின்றனர்.

இந்த மாவட்டங்களில், எங்கே கரிசல் நிலம் ஆரம்பமாகின்றதோ அங்கிருந்து தொடங்கி எங்கே கரிசல் நிலம் முடிகின்றதோ அங்குவரை இம்மக்கள் வாழும் கிராமங்களை அதிகமாகக் காணலாம். குறிப்பாக, இவர்கள் தமிழ்நாட்டில் குடியேறிய ஆரம்பகால கட்டங்களில் கரிசல் மண் இல்லாத பகுதிகளில் இம்மக்கள் வாழும் கிராமங்களைக் காண்பதரிது.

விடுதலைக்கு முன்னர் 1921-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதை உறுதிப்படுத்துகிறது. அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் கம்மவார் மக்கள் தொகை 11.61 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தக் கம்மவார் மக்கள் தொகையில் 76.4 சதவீதம் ஆந்திர மாவட்டங்களிலும், மீதமுள்ள 23.6 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களிலும் வாழ்ந்துள்ளனர். ஆந்திரப் பகுதியில் வாழ்ந்த 8.88 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் குண்டூர் (35.6%), கிருஷ்ணா (25.6%), நெல்லூர் (11.35%), சித்தூர் (10.7%) முதலான மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இந்த இனத்தவர்களின் மக்கள் தொகையை (1921) பார்க்கும் பொழுது, தமிழகத்தில் வாழ்ந்த 2.73 லட்சம் மக்களில், பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி (20.88%), ராமநாதபுரம் (19.85%), மதுரை (7.3%), மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர் (19.5%), வட மாவட்டங்களான செங்கல்பட்டு (12.86%), வடஆற்காடு (10.29%), தென் ஆற்காடு (4.78%) முதலான மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. இன்னும் குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஏறத்தாழ 50 சதவீதம், மேற்கு மாவட்டங்களில் 20 சதவீதம் பேர் வாழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சான்றாக, மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில், திருமங்கலம் தொடங்கி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கயத்தாறு வரை கரிசல் நிலம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம். திருமங்கலம் - திருவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் திருமங்கலம் முதல் கிருஷ்ணன் கோவில் வரையுள்ள பகுதிகள், மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சங்கரன் கோவில் வரை, எட்டையபுரம், தூத்துக்குடி வரையுள்ள பகுதிகள், கோவில்பட்டி - சங்கரன்கோவில் - தென்காசி நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, கழுகுமலை, குருவிகுளம் வரை அமைந்துள்ள பகுதிகள், கோவில்பட்டி - ராஜபாளையம் நெடுஞ்சாலையில் இடைப்பட்ட பகுதிகள், கோவில்பட்டி - கயத்தாறு நெடுஞ்சாலையில் கட்டபொம்மன் சிலை வரை ஆகிய அனைத்தும் கரிசல் மண் நிறைந்த பகுதிகளாகும்.

மேற்கூறிய பகுதிகள் அனைத்திலும் கம்ம இன கிராமங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதைப்போலவே சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையின் இருமருங்கிலும், சிவகாசியிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையின் இருபுறமும் அருப்புக்கோட்டையிலிருந்து சாத்தூர், நாகலாபுரம், விளாத்திகுளம், எட்டையபுரம் வழியாகக் கோவில்பட்டி செல்லும் சாலையின் அனைத்துப் பக்கங்களிலும் இம்மக்கள் வாழும் கிராமங்களை அதிகம் காணலாம்.

இந்த இனத்தவரின் பூர்விக இருப்பிடம் ஆந்திரப்பிரதேசம். அதிலும் குறிப்பாக கிருஷ்ணா நதியின் தெற்கே அமைந்துள்ள ராயலசீமா பகுதிகளான குண்டூர், விஜயவாடா, நெல்லூர் மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். குண்டூர் மாவட்டம் கரிசல் நிறைந்த மாவட்டம். பெரும்பாலும் மழையை நம்பி வேளாண்மை செய்த மாவட்டம். பருத்தி மிளகாய், சிறுதானியப் பயிர்கள் ஆகிய மானாவாரிப் பயிர்களை இன்றும் பயிர் செய்கின்றனர்.

எனவே தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மண், தங்களோடு உறவாடிய தட்பவெப்ப நிலை, தாங்கள் விளைவித்த பயிர் வகைகளை எவ்வித இன்னலுமின்றி பயிர் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கரிசல் பூமியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

நீர்ப்பாசன வசதியுள்ள செம்மண், வண்டல் மண், கரிசல் மண் நிறைந்த பகுதிகள், ஏரிகள், குளங்கள் நிறைந்த பகுதிகள், ஆற்றோரப் பகுதிகள் ஆகியவற்றில் பூர்விகத் தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய இடங்களில் நிலங்கள் கிடைப்பது கடினம்; குடியேறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு.

இடம்பெயர்ந்த கம்ம இனத்தவரின் மொழியும், வாழ்வியல் முறைகளும் உள்ளூரில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து வேறுபட்டிருந்தமையால், ஆரம்ப காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ‘குடிபுகல்’ சற்றே கடினமாக இருந்திருக்கலாம்; எதிர்ப்பும் இருந்திருக்கலாம். இடம்பெயர்ந்து வரும்பொழுது, யாரும் பயன்படுத்தாத நிலங்கள், குடியிருப்புகள் இல்லாத நிலங்கள், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்த இடங்கள், யாரையும் பகைக்காமல், யாரையும் எதிர்க்காமல், யாரையும் பலவந்தமாக வெளியேற்றாமல் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கரிசல் நிலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

எனவே, ஆந்திராவிலிருந்து வந்த இவர்களுக்கு வளம் நிறைந்த பகுதிகளில் குடியேற வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் இவர்கள் வானம் பார்த்த பூமியில் தான் வாழ்கிறார்கள். விரோதிகளாலும் விரும்பப்படாத கரிசல் பூமியைத் திருத்தி, நாடாக்கி வளம் பெருக்கினர்.

இந்தத் தகவல்களைப் பற்றி இங்கே பதிவு செய்வது குறித்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நடந்தவற்றை சொல்கிறேன். இதைத்தான் கி.ரா. தனது கோபல்ல கிராமத்தில் சொல்லியுள்ளார்.

சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, தமிழகத்துக்கு விஸ்வநாத நாயக்கர் வரவேண்டும், பாண்டிய நாட்டைக் காக்க வேண்டும் என்ற நிலையில் ஆந்திரத்தில் இருந்து மக்கள் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அதன் பின் சுல்தான்கள் படையெடுப்பின்போதும் ஒருசிலர் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தார்கள். தென் தமிழகத்தைப் பிடிக்க மாலிக்காபூர் வந்தபோது, கம்மாளர்களால் அன்றைக்கு தமிழகத்துக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டார்.

நாயக்க மன்னர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் மங்கம்மா சாலைகள், அன்னசத்திரங்கள், நீர்ப்பாசன குளங்களை அமைத்தனர். பாதசாரிகள் ஓய்வெடுப்பதற்காக அவர்கள் கட்டிய கல் மண்டபங்கள் இன்றைக்கும் சாலை ஓரங்களில் சாட்சிகளாய் காட்சியளிக்கின்றன.
இவையெல்லாம் தமிழ்நாட்டின் நலனுக்காகச் செய்தனர். தமிழகத்தில் இருந்து எந்த சொத்துகளையோ, வளங்களையோ, ஆந்திராவுக்கு அவர்கள் கொண்டு செல்லவில்லை. அங்கிருந்து வந்த பலருக்கு இன்றைக்கு தெலுங்கில் பேசவோ எழுதவோ கூட தெரியாது. தமிழ்தான் தெரியும். இவர்களில் பலர் ஆந்திராவுக்கு சென்றது கூட கிடையாது. மொழி சிறுபான்மையினராக இம்மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். மதச் சிறுபான்மையினரை எப்படி பார்க்கிறோமோ, அதேபோல்தான் மொழி சிறுபான்மையினரையும் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாக இவர்களை ‘வந்தேறிகள்’ என்று சிலர் கூறுகின்றனர். எதன் அடிப்படையில் இந்தக் குரல் எழுகிறது என்பது தெரியவில்லை. மதுரையில் உள்ள திருமலைநாயக்கர் மகால் தமிழகத்தின் கலை அம்சமாக விளங்குகிறது. அது குறித்தும் மோசமாகவும் கடுமையாகவும் பேசி வருகின்றனர்.

காசி - கன்னியாகுமரி நெடுஞ்சாலை அமைந்தது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால்தான். தஞ்சை, செஞ்சியில் நாயக்கர் மன்னர்கள் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தனர். இன்றைக்கு பல்வேறு கல்வி நிலையங்கள், நூற்பாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என மக்கள் நலன் சார்ந்த நிறுவனங்களை அந்த இன மக்கள் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், இலக்கியத் துறை, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற அளவுக்கு பங்காற்றி வருகின்றனர். அவர்களுக்கு தெலுங்கு பேசத் தெரியாது. தமிழ் மட்டும்தான் தெரியும்.
யாரையும் குறைகூறுவது எனது நோக்கமல்ல. ‘வந்தேறிகள்’ என்று கூறுபவர்கள் இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > கரிசல் மண்ணின் கதை சொல்லி... ‘கி.ரா. நூறு’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 21

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x