Published : 17 May 2025 10:44 AM
Last Updated : 17 May 2025 10:44 AM

கரிசல் மண்ணின் கதை சொல்லி... ‘கி.ரா. நூறு’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 21

இடது: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கரிசல் மண்பகுதி | வலது: எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

எளிய மக்களின் கிராமிய மூப்பன், கரிசல் மண்ணின் கதை சொல்லி கி.ராஜநாராயணன் பற்றிய கதைகளை எப்படிச் சொல்வது? அது, சிமிழுக்குள் அடைபட்ட பூதத்தைத் திறப்பதற்கு ஒப்பான செயல் என்றே தோன்றியது.

‘‘மழைக்குக்கூட நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவனில்லை. அப்படி ஒதுங்கிய சிலபோதும் மழையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’’ என்று வெள்ளந்தியாகச் சொன்னவர் கி.ரா.

அகத்தையும், புறத்தையும் மிக நுட்பமாக அணுகி, நிலத்தையும், பருவங்களையும் மக்களையும் அவர்களிடம் புழங்கும் சொற்களையும், அவற்றின் நுட்பமான வளமைகளையும், வழக்காறுகளில் இருந்து நமக்கு கதைகளாக்கித் தந்தவர். அவற்றின் மூலம் மரபுகளும், பண்புகளும் மறந்து போன ஏராளமான சொற்களும், நமக்கு மொழிப்பத்தாயமாக, களஞ்சியமாக, நம் வாழ்வின் தொன்மங்களாக, பூர்வீக மனிதர்களின் நம்பிக்கைகளாக, நடத்தைகளாகக் கிட்டி அவற்றுக்கு ஒரு மீட்சியையும் அளித்த ஒரு ஞானவாணியாக அவரை உணர்வதற்கு ‘கி.ரா. நூறு’ நூல் ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர்.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சொல்லகராதிகள், சொற்பொழிவுகள், பல்கலைக்கழகச் சந்திப்புகள், நேர்காணல்கள், பயணங்கள் என பலவற்றை எழுதி, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அபூர்வ மனிதர் கி.ரா.

1967-ல் இருந்து நடைபெற்ற, நாராயணசாமியின் நாடு தழுவிய விவசாயப் போராட்டங்களில், நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னுடன் கி.ரா.வும் அதில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்த காலங்கள் மனதில் நிழலாடுகின்றன.

கி.ரா.வின் அறுபது வயது நிறைந்த மணிவிழாவினை மதுரை காலேஜ் ஹவுஸ் அரங்கில் கவிஞர் மீராவுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினோம், பின் அவரது எழுபது, எழுபத்தைந்து, எண்பது, எண்பத்தைந்து வயது விழாக்களை சென்னையிலும், தொண்ணூறுகளுக்கான விழாக்களை டெல்லி தமிழ்ச் சங்கம், தினமணி இதழுடன் இணைந்தும் நடத்தினோம், அதேபோல், தொண்ணூற்று ஐந்தாம் வயது கொண்டாட்டங்களை புதுச்சேரியில் நடத்தியது என அத்தனை நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பதில் நானும் பங்காற்றினேன் என்பது என் இலக்கியப் பணியின் முக்கியமான காலகட்டங்களாக உணர்கிறேன்.

1984 வாக்கில் கி.ரா.வின் இடைசெவல் இல்லத்துக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் அழைத்துச் சென்றிருந்தேன். அவருடன் கி.ரா. பேசும்போது, இலங்கை தமிழ் மக்களின் மீதான எனது அக்கறையையும், கவலைகளையும், ஆதரவுகளையும் பிரபாகரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளம் நெகிழத் தெரிவித்தார்.

கு.அழகிரிசாமி

ரசிகமணி டி.கே.சி.பள்ளியைச் சேர்ந்தவன் என்ற பெருமிதமும், கு.அழகிரிசாமியை எழுத்துத் துணையாகவும், ஜீவா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடனான உறவும், காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசு பொருளாகவும் வைத்து வாழ்ந்தவர் கி.ரா. இவ்வுலகை விட்டு அவரது உடல் மறைந்தாலும், அவருடைய படைப்புகள் மூலம் நம்மிடையே இன்றும் உலாவிக் கொண்டிருக்கிறார். இந்திய மொழிகள் எதிலும் இத்தகைய ‘மக்கள் கதை சொல்லி’ இருக்க இயலாது என்பது என் துணிபு.

அவரின் சமகால எழுத்தாளர்கள் தொட்டு, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள்,

ஆய்வாளர்கள், வேற்றுமொழி இலக்கியவாதிகள், மெய்யியல்வாதிகள், நாட்டார் வழக்காற்றுக் கோட்பாட்டாளர்கள், பின் நவீனவாதிகள் என அனைவரின் கட்டுரைகளையும் கேட்டு வாங்கி, ‘கி.ரா. நூறு’ என்ற நூலை இரு தொகுதிகளாகத் தொகுத்து இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூலமாக வெளியிட்டேன்., கி.ரா.வின் முழு வாழ்வுப் பணிகளுக்கான, ஆதாரமாய் இந்நூல் விளங்குகிறது.

இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ‘ஞானபீடம்’ விருதைப் பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டவர் கி.ராஜநாராயணன் என்பதை அவரை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்களின் கருத்துகள் பறைசாற்றுகின்றன.

அவரோடு 1973-ல் இருந்து 2021-ல் அவர் மரணம் அடையும் வரை தினமும் கடிதம் மூலமாகவோ, தொலைபேசி மற்றும் கைபேசி மூலமாகவோ அல்லது நேரில் சந்தித்தோ என ஏதாவது ஒரு வகையில் அவருடன் தொடர்பில் இருந்தேன்.

சொந்த ஊர் பாசம் அளவிடமுடியாதது! - சொந்த ஊர், எவ்வளவு சிறிதாக இருந்தாலும், யாருக்குமே எந்த விவாதத்திலும் ஊரை விட்டுக் கொடுக்க மனசிருக்காது. எங்கிருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொந்த ஊர் குறித்த பேச்சு எப்படியாவது நம்மில் பலருக்கு வந்துவிடுவது மறைக்க இயலாது என்பது உண்மைதானே? ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் உலகப் பொதுமை உரைத்தோமாயினும், தமிழர்களின் ஊர்ப் பாசம் அளவிட முடியாதது. ஊரை விட்டு இடம்பெயரும் நிலையின் அடர்சோகத்தை ‘உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை; ஊரை விட்டுப் போவதும் சாவுதான்...’ என்று சொல்லத் தோன்றும்.

எங்கள் பகுதி கரிசல் மண் நிறைந்தது என்று ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட David Ludden எழுதிய 'Peasant History in South India' என்ற நூலிலும் எங்கள் வட்டார கரிசல் மண் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 16.6 சதவீதம் கரிசல் மண் நிறைந்த பகுதி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கரிசல் மண் உண்டான விதம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலைகள் வெடித்துச் சிதறி, அதிலிருந்து வழிந்தோடிய குழம்பிலிருந்து (lava) உருவான மண் கரிசல் மண் என மண்ணியலாளர்கள் கருதுகின்றனர். அதேபோல், கரிசல் ஒரு முதிர்ந்த மண், நிலத்தில் ஏற்றத்தாழ்வு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக உருவான மண்ணே கரிசல் மண் எனவும் சில மண்ணியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் (1,30,370 சதுர கிலோ மீட்டர்) 16.1 சதவீதம் கரிசல் நிலப்பரப்பு காணப்படுகின்றது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மொத்த நிலப்பரப்பில் 50 சதவீதத்துக்கு மேல் கரிசல் நிலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கரிசல் மண்ணின் பரப்பளவு 40 முதல் 50 சதவீதம் வரை பரந்துள்ளது. கடலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கரிசல் மண் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் கரிசல் மண் காணப்படவில்லை.

கரிசல் மண்ணில் 60 - 70 சதவீதம் களியும் (clay), 10 சதவீதம் அலுமினியமும், 9 - 10 சதவீதம் இரும்பு ஆக்ஸைடும், 6 - 8 சதவீதம் மக்னீசியம் கார்பனேட்டும் கலந்துள்ளன. களி மண்ணாக இருப்பதால் நீரை மிகவும் மெதுவாக உறிஞ்சக் கூடிய தன்மை உடையது கரிசல் மண். அதேநேரம் உறிஞ்சிய நீரை நீண்ட காலம் தேக்கி வைக்கும் திறன் பெற்றது.

கரிசல் மண்ணில் இரும்புச் சத்து அதிகமிருப்பதால் மண்ணின் அடர்த்தி அதிகம். எனவே காற்றாலும், நீராலும் ஏற்படக் கூடிய மண் அரிப்பு பெரிதும் தடுக்கப்படுகிறது. மேலும் ‘காணி தேடினும் கரிசல் மண் தேடு; கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம்’ போன்ற முதுமொழிகள் கரிசல் மண்ணின் செழிப்பை உணர்த்துகின்றன.

கரிசல் நிலம் குறித்து எழுத்தாளர் கு.அழகிரிசாமி குறிப்பிடும்போது, ‘பார்த்தால் ஒரே கருப்பு மண்ணாக இருக்கிறது. இங்கே இப்படிச் சில மரங்கள் முளைத்து இப்படி ஒரு திவ்யமான வாசனை காற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இந்த வாசனை கூட இந்த மண்ணில்தான் உற்பத்தி ஆகியிருக்கிறது’ என்றார்.

1970-களின் தொடக்கத்தில் கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’ நாவல் வெளியானபோது, ஆரம்பத்தில், இது நாவல் மாதிரி இல்லையே... இது ஃபிக்ஷனா? நான் ஃபிக்‌ஷனா? என்று கேள்வி எழுந்தது. கி.ரா. சென்னைக்கு வந்தால் பிராட்வேயில் உள்ள எம்.யு.சி. (மெட்ராஸ் யுனிவர்சிடி கிளப்) விடுதியில் என்னோடு தங்குவார். இந்த விடுதி பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதைப்பற்றி பின்னால் சொல்கிறேன். ‘கோபல்ல கிராமத்தை’ எப்படியாவது நாவலாகக் கொண்டு வரவேண்டும் என்று அப்போது மிகவும் ஆர்வமுடன் இருந்தார் கி.ரா..

சில பதிப்பகங்கள் அதை வெளியிட தயக்கம் காட்டின. அன்றைக்கு பெரியவர் காமராஜர் இருந்தார். நான் ஸ்தாபன காங்கிரஸில் இருந்தேன். காமராஜருடைய குருவான, சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அம்மையார் எம்.எல்.சி.யாக இருந்தார், ‘வாசகர் வட்டம்’ என்ற பிரபலமான பதிப்பகத்தையும் தி.நகரில் நடத்தி வந்தார்.

அந்த பதிப்பகத்தில்தான், ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும், அசோகமித்திரன், நரசைய்யா போன்ற பல ஆளுமைகளின் படைப்புகள் வெளியிடப்பட்டன. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அம்மையாரோடு நன்கு பழக்கம் உண்டு. அதன்பேரில் கி.ரா.வை அவரிடம் அழைத்துச் சென்று ‘கோபல்ல கிராமத்தை’ வெளியிட வேண்டும் என்று சொன்னேன். சிட்டி சுந்தரராஜனிடம் அவர் கருத்து கேட்டார். அவர் வெளியிடலாம் என்று கூறினார். அப்படித்தான் ‘கோபல்ல கிராமம்’ வந்தது.

அந்த நாவல், கரிசல் பூமியில் உள்ள ஒரு குடும்பத்தின் கதையை சொன்னது. பலரால் படிக்கப்பட்டு பாராட்டப் பெற்றது. அதன் சாரத்திலேயே அவர் எழுதிய மற்றொரு நூலான ‘கோபல்லபுரம் மக்கள்’ என்ற நாவலுக்காக கி.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

அந்த நாவலில் எங்கள் வட்டார மக்களின் இயல்புகள், அன்றாட வாழ்வு, சமூக வாழ்க்கை, விவசாய தொழில் பற்றி தெளிவாக, இலக்கிய நயமாக பேச்சுவழக்கில் எழுதியுள்ளார் கி.ரா.

எங்கள் நெல்லையின் மைந்தர் ரா.பி.சேதுப்பிள்ளை, தாம் எழுதிய ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூலுக்கு இப்படியான கிராமங்கள், ஊர்களின் பெயர்க் காரணங்களை ஆய்வு செய்ததெல்லாம் நினைவில் உள்ளது.

அதிமுக்கிய ஆவணம் ‘மெக்கன்ஸி மேனுஸ்கிரிப்ட்ஸ்’ - இந்தியாவில் தெக்கணப் பகுதியில் - குறிப்பாகத் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளில் - காகத்தியர் ஆட்சிக் காலத்தில் (1158 - 1323), கிராம ஆவணங்களைப் பராமரித்தல், வரி வசூலிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராம கர்ணம்’ என்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அந்த அலுவலர்கள் தத்தமது நிர்வாகப் பொறுப்பிலிருந்த கிராமம் குறித்த பல வகையான விவரங்களையும் (அந்தக் கிராமத்தின் சூழல், மக்கள் எண்ணிக்கை, சாதிவாரி எண்ணிக்கை, ஆண் - பெண் பகுப்பு விவரம், கால்நடைகள் விவரம், பயிரிடும் நிலப்பரப்பு, பயிரிடப்படும் பயிர்கள், பொது, தனிப்பட்ட நீர் ஆதார விவரங்கள், மக்களது பழக்க வழக்கங்கள், அதீத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், விழாக்கள், உணவு, உடை, விவசாயக் கருவிகள், வண்டிகள் பற்றிய குறிப்பு முதலிய அனைத்து விவரங்களும்) நேரில் கண்டறிந்து சேகரித்து ஆவணப்படுத்தும் வழக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நடைமுறை காகத்தியர் காலத்துக்குப் பின்னர் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் அவ்வாறு ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் கிராமக் கணக்காளர்கள் (கர்ணம்) சேகரித்து வைத்த ஆவணம் ‘கைபீது’ அல்லது ‘கைபியாத்கள்’ என்று அரபு மொழி மூலம் வந்த பெயர் பெற்றது. தெக்கணத்தை ஆட்சி செய்த சுல்தான்கள் காலத்தில் இப்பெயர்

வழக்கத்துக்கு வந்திருக்கலாம்: சுல்தான்களுக்கு முன்பே தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளில் ‘தண்டக்காவிலே’ / ‘காவிலே’ என்ற பெயரிட்டு கிராமத்தின் சூழல், நிலவரம், கிராம வரி விதிப்பு, வரி வசூல் கணக்கு, அறிக்கை, செய்தி என்ற பல விவரங்களைப் பதிவு செய்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விவரங்கள் சேகரித்துப் பதிவு செய்யும் வழக்கம் தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ், மலையாளம், கன்னடம் என்ற திராவிட மொழிகளிலும், மராத்தி ஏன் சமஸ்கிருதத்திலும் கூடப் பரவியது.

தலைமுறை தலைமுறையாக இவ்வாறு தொடர்ந்து நேரில் கண்டறிந்து சேகரிக்கப்பட்ட ‘கைபீது / கைபியாத்’ கிராமத்தில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களுக்கேற்ப நீக்கல், சேர்த்தல், திருத்தங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்து அலுவலர்களால் திரட்டப்பட்ட கைபீதுகளிலிருந்து சேகரிக்கப் பெற்றவைகளின் மூலம் தற்போதுள்ள ஊர்களின் பெயர்கள் இதே பெயரில்தான் அந்நாளில் வழங்கப் பெற்றனவா? அல்லது அவற்றுக்கு வேறு பெயர் இருந்தனவா? என்பது பற்றியும், அவ்வூர்களில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும்.

இத்தகைய கைபீதுகள் / கைபியாத்கள் இந்தியக் கிராமங்கள் குறித்த - கிராம அலுவலர்களால் நேரடியாகப் பல காலங்களில் சேகரிக்கப்பட்டிருந்த - பலவகைப்பட்ட விவரங்களைத் தருவதாலும், அந்தந்தக் கிராமத்திலேயே ஆவண விவரங்களை மேற்பார்வையாளரோ பிற அலுவலர்களோ அல்லது வரலாற்று ஆய்வாளர்களோ சீராய்வு செய்து நிரூபணம் பெற்றுக் கொள்ள இயலும் என்பதாலும், இந்த வகைத் தகவல் பொக்கிஷத்தின் முக்கியத்துவம் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் நன்கு உணரப்பட்டது.

இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட கர்னல் காலின் மெக்கன்ஸி என்பவர் (1754 - 1821) கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் காலம் (1780 - 1820) பெரிதும் முயன்று, நாட்டின் பல பகுதிகளில் தனது அலுவலர்கள் மூலம் தேடிச் சேகரித்துத் தொகுத்துப் பகுத்து, தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன் ‘மெக்கன்ஸி மேனுஸ்கிரிப்ட்ஸ்’ என்று அறியப்படும் இந்தியக் கிராமங்கள் குறித்த பற்பல விவரங்களடங்கிய மிக அரிய வரலாற்று ஆவணத் தொகுப்பை உருவாக்கினார். வரலாற்று ஆய்வில் ‘மெக்கன்ஸி மேனுஸ்கிரிப்ட்ஸ்’ ஒரு அதி முக்கிய ஆவணமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது!

| இன்று - மே 17 - எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவு நாள் |

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டைக்குப் பெருமை சேர்த்த ஆளுமைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 20

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x