Last Updated : 16 May, 2025 09:20 AM

5  

Published : 16 May 2025 09:20 AM
Last Updated : 16 May 2025 09:20 AM

உண்மையான எண்ணிக்கை: அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை சரிபார்க்கலாமே!

தமிழக இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்தது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர், முகவரி, மொபைல் எண்களை சரிபார்த்தபோது ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் போலி என்று கண்டறியப்பட்டு, அந்த உறுப்பினர் விவரங்களை அக்கட்சி நீக்கியுள்ளது. கட்சித் தலைமை அளிக்கும் நிர்பந்தம் காரணமாக போலியாக உறுப்பினர்களைச் சேர்த்து கட்சி நிர்வாகிகள் பெயர் வாங்கிக் கொள்வதும், அந்த எண்ணிக்கையை கட்சித் தலைமை தங்களது கட்சியின் பலம் என்று மார்தட்டிக் கொள்வதும் நீண்டகாலமாக இருந்துவரும் நடைமுறையாகும்.

உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக அடையாளம் காட்டப்படுகிறது. அக்கட்சி குறுஞ்செய்தி மூலம் நடத்திய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆளுங்கட்சியான பிறகு எடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளையடுத்து, அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல உலகிலேயே அதிக உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட அரசியல் கட்சி பாஜக என்று அடையாளம் காட்டப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 5.5 கோடி உறுப்பினர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டும் தலா 2 கோடி உறுப்பினர்களையும், ஆம் ஆத்மி கட்சி, தவெக ஆகியவை தலா ஒரு கோடி உறுப்பினர்களையும் கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம் சரிதானா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல எந்த அமைப்பும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில், அரசியல் கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டதே. தேர்தல் பணிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது.

அரசியல் கட்சிகளின் கணக்கு – வழக்குகள், உட்கட்சி தகராறு, பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகிகள் நியமன விவகாரங்கள் உள்ளிட்டவற்றைக் கவனிக்கும் தேர்தல் ஆணையம் அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சரிபார்த்து ஏன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

உறுப்பினர் எண்ணிக்கை விவரம் அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரம் என்று சொல்லி தேர்தல் ஆணையம் ஒதுங்கிவிட முடியாது. ஏனென்றால், நாட்டில் நியாயமான தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்ததே.

நியாயமான தேர்தல் நடக்க வேண்டுமென்றால் மக்களிடம் உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும். பொய்யான உறுப்பினர் எண்ணிக்கை, பொய்யான வாக்குறுதிகளை தடுப்பதும் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று. பொய்யான உறுப்பினர் எண்ணிக்கை அக்கட்சி மீது மக்களுக்கு போலியான தோற்றத்தை உருவாக்கும். அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், உறுப்பினர் விவரங்களை ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணைத்து சரிபார்த்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது, மக்கள் உண்மையான தகவலை அறிய உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x