Last Updated : 11 May, 2025 10:38 AM

1  

Published : 11 May 2025 10:38 AM
Last Updated : 11 May 2025 10:38 AM

செங்கோட்டைக்குப் பெருமை சேர்த்த ஆளுமைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 20

இடது: கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை | வலது: சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை

செங்கோட்டையில் வாழ்ந்த ‘எஸ்.எஸ்.பிள்ளை’ என்று அழைக்கப்படும் சிவசங்கரநாராயண பிள்ளையைப் பற்றி பலர் அறியாமல் இருக்கலாம். கணிதமேதை ராமானுஜனைப் போல எஸ்.எஸ்.பிள்ளையும் தமிழகத்துக்குப் புகழ் சேர்த்தவராவார்.

சுப்பையா சிவசங்கரநாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5-ல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார். இலத்தூரில் தொடக்கக் கல்வி பயின்றார். இவருடைய தந்தை மறைந்துவிட, எதிர்காலம் கேள்விக்குறியானது. அப்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சாஸ்திரியார் என்பவர், தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை இவருடைய படிப்புக்காகச் செலவிட்டு, பிள்ளைக்குக் கல்விச் செல்வம் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், ஏழை பிள்ளையின் கல்விக்கு உதவிய அந்த ஆசிரியப் பெருந்தகையின் மாண்பை என்னவென்று சொல்வது..?

இப்படி, சாஸ்திரியாரால் ஊக்கம் பெற்ற பிள்ளை, தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோயில் ஸ்காட் மகாராஜா கல்லூரியிலும் (பி.ஏ) பயின்றார். அதன்பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில், கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர விரும்பினார். அன்றைய சூழலில், பி.ஏ. ஆனர்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ஆராய்ச்சி மாணவராகச் சேரமுடியும். ஆனால் இவரோ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழகத்தில் இவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

அப்போது, பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, எஸ்.எஸ்.பிள்ளையின் திறமையை உணர்ந்து, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் எஸ்.எஸ்.பிள்ளைக்காகக் குரல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து, சென்னைப் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவனாக எஸ்.எஸ்.பிள்ளை சேர்ந்து 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்ஸி. பட்டம் பெற்றார். பிறகு 1929-ல் அண்ணாமலை பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘முனைவர்’ பட்டம் பெற்றார். இந்தியாவிலேயே முதல்முதலாகக் கணிதத்தில் ‘முனைவர்’ பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ்.பிள்ளைக்கு உண்டு.

செங்கோட்டை, அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமி ஐயர், எஸ்.எஸ். பிள்ளையை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வந்தார். கொஞ்சகாலம் பணியாற்றிய அவர், பின்னர் தனது சுயமரியாதைக்குப் பாதகம் வரவே, அப்பணியில் இருந்து விலகி செங்கோட்டைக்குத் திரும்பி விட்டார்.

சிவசங்கரன் பிள்ளை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது, கணக்குப் புதிர் திடீரெனத் தோன்றினால் மனம் மட்டும் புதிரில் இருக்கும்; உடல் இயக்கமோ அந்த வேலையை ஒட்டி இருக்கும்.

ஒருமுறை செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கோயில் முருகன் சந்நிதிக்குக் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது, தீபாராதனையின் சமயம் மணி அடிக்க யாரும் முன்வராத நிலையில், தாமே சென்று ஆலய மணியை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். தீபாராதனையும் முடிந்தது... ஆனால்... மணி சத்தம் மட்டும் நின்றபாடில்லை. அவருடைய மூளையில் முருகப்பெருமான் எந்தக் கேள்விக்கு விடையளித்தாரோ? எந்தப் புதிர் அவர் மனத்தில் ஓடியதோ? அந்தத் திருமலைக்குமாரசாமிக்குத்தான் தெரியும்.

‘எண் கணித விதி’யைப் பற்றி எஸ்.எஸ்.பிள்ளை ஆராய்ச்சி செய்தார். உலக கணித மேதைகள் பலரையும் திணறடித்த வாரிங்க்ஸ் ப்ராப்ளத்துக்கு, தமது 29-வது வயதில் தனியாகத் தமது ஆராய்ச்சியைத் தொடங்கிய 5-வது வருடத்தில் ஒரு வழியையும், அதற்கான விடையையும் காண்பதில் பெரு முன்னேற்றம் கண்டார் எஸ்.எஸ்.பிள்ளை. தொடர்ந்து அதிக அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார்.

அதேபோல், சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த ‘ஃபூரியர் சீரிஸ்’ என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார். 1936 பிப்.10-ல் எஸ்.எஸ். பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து "டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' - ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது.

இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர். அவரோ, "என் ஆராய்ச்சிக்கு இந்தியாவே போதும்'' என்று பணிவுடன் மறுத்துவிட்டார்.

பின்னாளில் சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெறவிருந்த உலகக் கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 30.8.1950-ல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் கனவுகளோடு அமெரிக்கா புறப்பட்டார். கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அத்தோடு பிள்ளையின் கனவும் புகைந்து போனது.

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்குகொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர்.
உலகின் தலைசிறந்த கணிதமேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ‘மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்’ நூலில் இந்தியாவின் சார்பில் ராமானுஜனும், சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் தமிழர்கள் என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது.

செங்கோட்டைக்குப் பெருமை சேர்த்த மற்றொரு ஆளுமை எஸ்.ஜி.கிட்டப்பா என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா. திரைப்படக் காலத்துக்கு முன்பே பிரபலமாயிருந்த பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது. மிகச் சிறிய வயதிலேயே நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது மனைவிதான் திரைப்பட நடிகையும், பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள். எஸ்.ஜி.கிட்டப்பா, திருவாரூரில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். புகழின் உச்சியில் இருந்தபோது, 28 வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் முரண்பாடுகள்

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்துக்கும் கட்டபொம்மனுடைய உண்மையான வரலாற்றுச் சம்பவங்களுக்கும் சில மாறுதல்கள் உள்ளன என ஏற்கெனவே நான் கூறியிருந்தேன். அதைப் பற்றி சற்று பார்ப்போம்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், கட்டபொம்மனின் வீரத்தையும், தீரத்தையும் உலகுக்கு பறைசாற்றியது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வரவில்லை என்றால், கட்டபொம்மனைப் பற்றி இந்த அளவுக்கு உலகுக்கு தெரியாமல் போயிருக்கும்.

அதேநேரம், அவரது தம்பி ஊமைத்துரையின் வீரத்தையும், அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திலும் சரி, வரலாற்றுப் பதிவுகளிலும் சரி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது யாருடைய தவறு என்று தெரியவில்லை.
திரைப்படத்தில் கட்டபொம்மனைப் போல், ஊமைத்துரையும் வசனங்கள் பேசுவார். ஆனால் ஊமைத்துரை பிறவி ஊமை. குழந்தைப் பருவத்தில் சவலைப் பிள்ளையாக இருந்தவர். திரைப்படத்தில் உள்ள முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று.

பாஞ்சாலங்குறிச்சி என்பது சிறு பாளைய பகுதியாகும். அது ‘பாஞ்சை’ என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்தது. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆண்ட திக்குவிசய கட்டபொம்மன் என்று கூறப்படும் ஜெகவீர கட்டபொம்மனுக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்துப் பிள்ளையாகப் பிறந்தவர்தான் ஊமைத்துரை. அவரது இயற்பெயர் குமாரசாமி. ஊமையாக இருந்ததால் அவர் ‘ஊமைத்துரை’ என்று அழைக்கப்பட்டார். அவரை திருச்செந்தூர் முருகனின் அவதாரமாகவும், அவரது அருளால் பிறந்த தெய்வப் பிறவியாகவும் மக்கள் கருதினர். இதனால் அவரை ‘சாமி’ என்று அழைத்தனர்.

ஜெகவீர கட்டபொம்மனின் இளையதாரமான ஆறுமுகத்தம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் கட்டபொம்மன். அவரது இயற்பெயர் கருத்தையா, அவருக்கு அடுத்த பிள்ளைக்கு செவத்தையா என்று பெயர். ஊமைத்துரை மூத்த தாரத்து பிள்ளையாக இருந்தாலும், இளைய தாரத்துக்குப் பிறந்த கட்டபொம்மன் வயதில் மூத்தவர்.

தந்தைக்குப் பின், முறைப்படி மூத்த தாரத்து பிள்ளையான ஊமைத்துரைக்கு கிடைக்க வேண்டிய தலைமைப் பதவி, வயதில் மூத்தவர் என்பதால் கட்டபொம்மனுக்கு கிடைத்தது. ஊமைத்துரை பேச முடியாதவராகவும், இளம் பிராயத்தில் நோஞ்சானாகவும் இருந்ததால், அந்தப் பதவி அவருக்கு கிடைக்காமல் போனது என்றும் கூறுவார்கள்.

கட்டபொம்மன் 1790-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனாலும், ஏதோவொரு குற்ற உணர்ச்சி கட்டபொம்மனை வருத்தியது. இதனால் தனது உடன்பிறந்த சகோதரனைவிட, ஊமைத்துரையின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.

ஊமைத்துரையைப் பற்றி ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் வேல்ஸ் எழுதிய பதிவில், “ஊமைத்துரை அசாத்தியமான வீரன், அவரது அறிவும், சிந்தனையும், திறமையும் ஆற்றலுக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போர் 4 நாள்கள்தான். ஆனால் ஊமைத்துரைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே 4 மாதங்கள் போர் நடைபெற்றுள்ளது.

ஊமைத்துரையைச் சந்தித்து, அவருடன் பழகி, போர்க்களத்தில் இருந்தவர் இந்த ஜேம்ஸ் வேல்ஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னுடைய பதிவுகளில், கட்டபொம்மனை விட ஊமைத்துரையைப் பற்றிதான் வானளாவப் புகழ்ந்து கூறியுள்ளார். ஆனால் திரைப்படத்தில் கட்டபொம்மன் வீரனாகக் கட்டமைக்கப்பட்டார். வரலாற்றிலும் அதுவே நிலைத்து விட்டது.

கட்டபொம்மனோடு பாஞ்சாலங்குறிச்சி அத்தியாயம் முடிந்து விட்டது என்று வரலாறு கூறுகிறது. ஆனால், 1799-ல் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட பின் தொடர்ந்து போரை வழிநடத்தியவர் ஊமைத்துரை. மேலும், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்காமல் கட்டபொம்மன் எதிர்த்துப் போரிட்டார் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ஆங்கிலேயருக்கு கட்ட வேண்டிய 3,363 கோல்டன் பகோடாவை எந்தவித பாக்கியும் இல்லாமல் கட்டி விட்டார். அதைக் கட்டுவதற்காகத்தான் ஜாக்சன் துரையைப் பார்க்கச் சென்றார். இதுதொடர்பான ராணுவ கடிதங்கள், ரகசிய கடித ஆதாரங்கள் ஆங்கிலேயர் வசம் லண்டன் சென்று விட்டன.

கட்டபொம்மன் வரியை கொடுக்க ஜாக்சன் துரையைச் சந்தித்தபோது அவமரியாதை செய்யப்பட்டார். பின்னர் தப்பித்து செல்லும்போது ஏற்பட்ட சண்டையில் கேப்டன் கிளார்க் கொலை செய்யப்பட்டார். இருதரப்புக்கும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட இராபர்ட் கிளைவ்வின் மகன் எட்வர்டு கிளைவ், ஜாக்சன் துறை மீதுதான் தவறு என்று குறிப்பு எழுதியுள்ளார்.

ஊமைத்துரையை தெய்வப்பிறவியாக மக்கள் கருதியதால், அவருடைய வாக்கை தேவ வாக்காகக் கருதிக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சி மக்கள் போரிட்டார்கள். இதையும் ஜேம்ஸ் வேல்ஸ் எழுதிய பதிவில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை பிடிப்பதற்கு புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் உதவினார். கட்டபொம்மன் மற்றும் சகோதரர்கள் செவத்தையா, ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர், தளபதி என 6 பேர் பிடிபடுகின்றனர். 2 நீதிபதிகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்கள் கூடியிருக்க 11 நாள்கள் விசாரணை நடைபெறுகிறது.

நீதிபதியின் முன் கம்பீரமாக நின்றிருந்தார் கட்டபொம்மன். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

இறுதியாக, தூக்கில் போடுவதற்கு முன் ‘ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனைப் பார்த்து ஆங்கில அதிகாரி கேட்டபோது, “அட போங்கய்யா... ஒங்களுக்கு வேற வேலையில்லை, நடத்துங்க...” என இளக்காரமாக பதில் கூறுகிறார் கட்டபொம்மன்.
கயத்தாறு புளியமரத்தில் தூக்கிலிட அழைத்துச் செல்லும்போதும் கம்பீரமாகவே நடந்து சென்றார். எதற்கும் கலங்காதவர் ஊமைத்துரையைப் பார்த்ததும் நெகிழ்ந்தார். “என் மனைவியையும், என் நாட்டையும் விட்டு ஓடியதற்கு இந்த கேவலமான சாவு எனக்கு தேவைதான்” என்று ஊமைத்துரையிடம் கூறி கண் கலங்கினார்.

இவற்றையெல்லாம் ஜேம்ஸ் வேல்ஸ்ஸின் பதிவுகளில் இருந்து அறிய முடிகிறது. திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் முக்கிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்ட்டதால், அவருடைய பெருமையையும், சிறப்பையும் உயர்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரைப்படத்துக்கும், வரலாற்று நிகழ்வுகளுக்கும் பல முரண்பாடுகளைக் காண முடிகிறது.

எதிரிகளிடம் சிக்காமல் அவர்களை எதிர்த்து போரில் வெல்ல வேண்டும் அல்லது வீரமரணம் எய்த வேண்டும் என்று எண்ணியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆனால் விதி வேறு விதமாக அமைந்தது.

கட்டபொம்மனைப் போலவே, ஈழ விடுதலைப் போராளி வேலுப்பிள்ளை பிரபாகரனும் - எதிரிகளால், தான் இறக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சயனைடு குப்பியை கழுத்தில் எப்போதும் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவரைப் போலவே ஒவ்வொரு போராளிகளும் சயனைடு குப்பி வைத்திருந்தனர். இதற்கு கட்டபொம்மனே முன்மாதிரி என்று பிரபாகரனே என்னிடம் கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து, அவரது பெருமையை உலகுக்கு அறியச் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுமட்டுமல்ல, கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட புளியமரத்தின் அருகில் இடம் வாங்கி உயர்ந்த கட்டமைப்புடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலையை கம்பீரமாக நிறுவியவரும் சிவாஜி கணேசன்தான்.

அந்த சிலை திறப்பு விழாவுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியை வரவழைத்து சிலையை திறந்தார். அதன் காரணமாகவே, கட்டபொம்மனுடைய வாரிசு குருசாமி நாயக்கருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தார் குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி. கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவில் நானும் பங்கேற்றது எனக்கு வாய்த்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

கட்டபொம்மனுக்கு மட்டுமல்ல, தனக்குப் பிரியமான சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் தன்னால் இயன்றவரை பெருமை சேர்த்துள்ளார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x