Last Updated : 07 May, 2025 06:41 AM

 

Published : 07 May 2025 06:41 AM
Last Updated : 07 May 2025 06:41 AM

அரிய வகை பூமி தனிமங்கள் | சொல்... பொருள்... தெளிவு

அரிய வகைத் தனிமங்களை (Rare Earth Elements [REEs]) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அரிய வகைத் தனிமங்கள் விநியோகத்தில் சுமார் 70%க்கும் மேல் சீனாதான் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளதால், அரிய வகைத் தனிமங்களின் ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு சீனா நிறுத்தியுள்ளது.

சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீனா இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது. ஸ்​மார்ட் ஃபோன்கள், பாதுகாப்பு / மருத்துவக் கருவிகள் தயாரிப்​பதில் இத்தனிமங்கள் முக்கிய அங்கம் வகிப்​பதால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உள்படப் பிற உலக நாடுகள் அரிய வகைத் தனிமங்​களின் உற்பத்​தியில் கவனம் செலுத்தத் தொடங்​கி​ உள்ளன.

முக்கியத்துவம்: சர்வதேசத் தூய - பயன்பாட்டு வேதியியல் ஒன்றி​யத்தால் (IUPAC), 2005இல் வரையறுக்​கப்பட்ட 17 தனிமங்​களின் தொகுப்பே அரிய வகை பூமி தனிமங்கள். இதில் வேதியியல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள லாந்தனைட்ஸ் (lanthanides) - ஸ்காண்​டியம் (scandium), ஐட்ரியம் (yttrium) ஆகியவையும் அடங்கும். இத்தனிமங்​களில் முக்கிய ஆதாரமாக பாஸ்ட்னசைட் (bastnasite), லோபரைட் (loparite), மோனசைட் (monazite) உள்ளன. இத்தனிமங்கள் பூமியின் மேற்பரப்பில் ஏராளமாகக் காணப்​பட்​டாலும், அவற்றைப் பிரித்​தெடுப்​பதும், சுத்திகரிப்​பதும் சிக்கலானது.

இதன் காரணமாகவே இவை அரிய வகை பூமி தனிமங்கள் என்று அழைக்​கப்​படு​கின்றன. அரிய வகை பூமி தனிமங்கள் 1788இல் கண்டு ​பிடிக்​கப்​பட்டன. அன்றிலிருந்து மனித வாழ்வின் அடுத்​த கட்ட முன்னேற்​றத்​துக்கு அவை முக்கிய அங்கமாக மாறிவிட்டன. மேண்டில் விளக்​குகள் தொடங்கி, பாறைகளின் புவியியல் தோற்றம் வரையிலான அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் இவை பயன்பட்டன.

குறிப்பாக, கடந்த 30 ஆண்டு​களில் தொழில்​நுட்ப வளர்ச்சி காரணமாக அரிய வகை பூமி தனிமங்​களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்தது. உயர் தொழில்​நுட்பக் கருவிகளில் முக்கிய மூலப்​பொருளாக இத்தனிமங்கள் பயன்படுத்​தப்​படு​கின்றன. குறிப்பாக, கைபேசி, திறன்பேசிகள், கணினி ஹார்டு டிரைவ்கள், மின்சார வாகனங்கள், எல்சிடி திரைகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், கேமரா, ஸ்கேனர்கள், புற்றுநோய் மருத்​துவக் கருவிகள் தயாரிப்பில் அரிய வகைத் தனிமங்கள் பயன்படுத்​தப்​படு​கின்றன.

ஆதிக்கம் செலுத்தும் சீனா: 1990களி​லிருந்து அரிய வகைத் தனிமங்​களின் மையமாக சீனா இருந்து​வரு​கிறது. சமீப ஆண்டு​களில் பிற உலக நாடுகளும் அரிய வகை பூமி தனிமங்​களின் ஏற்றும​தியில் முனைப்புக் காட்டிவரு​கின்றன. சீனாவுக்கு அடுத்​த​படியாக அரிய வகைத் தனிமங்​களைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. பிரேசில், 21 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்​களின் இருப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்​கா​விடம் 1.9 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்கள் இருப்பு உள்ளது; இருப்​பினும் சுற்றுச்​சூழல், அரசியல் கொள்கை காரணமாக இத்தனிமங்கள் உற்பத்​தியில் சமீப காலமாக அமெரிக்கா தீவிரம் காட்ட​வில்லை.

உலக அளவில் அரிய வகைத் தனிமங்களை அதிகம் வைத்திருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா அறியப்​படு​கிறது. இந்தியா​விடம் ஏறக்குறைய 6.9 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகைத் தனிமங்கள் இருப்பதாக மதிப்​பிடப்​பட்​டுள்ளது. இத்தனிமங்கள் பெரும்​பாலும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒடிஷா, கேரளம் போன்ற மாநிலங்​களில் பரவலாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, கேரளக் கடற்கரைகளில் மோனசைட் மணற் பரப்பு​களில் அரிய வகை பூமி தனிமங்கள் நிறைந்துள்ளன. மேற்கு மலைத் தொடர் மலைகளில் இருந்து உருவாகும் இம்மணல் ஓடைகள் வழியாக கேரளக் கடற்பரப்பை வந்தடைவ​தாகச் சுற்றுச்​சூழல் நிபுணர்கள் தெரிவிக்​கின்​றனர்.

இந்தியா​வில்... 2021, மார்ச் நிலவரப்படி, இந்தியாவில் 12.73 மில்லியன் டன் மோனசைட் வளம் இருப்பதாக இந்திய கனிமப் பொருள்கள் ஆண்டிதழ் (Indian Mineral Year book [2023]) மதிப்​பிட்​டுள்ளது. இதில் 3.78 மில்லியன் டன்களுக்கு ஆந்திரப் பிரதேசம் அதிக இருப்பைக் கொண்டுள்ளது; அதைத் தொடர்ந்து கடலோர மாநிலங்களான ஒடிஷா, தமிழ்​நாடு, கேரளம் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு அதிகம் கிடைக்கும் அரிய வகைத் தனிமங்களாக லாந்தனம் (Lanthanum), சீரியம் (Cerium), சமாரியம் (Samarium) போன்றவை உள்ளன. ஒப்பீட்​டளவில் இத்தனிமங்கள் லேசான எடை கொண்டவை (அணு எண் அடிப்​படை​யில்). டிஸ்ப்​ரோசியம் (Dysprosium), டெர்பியம் (Terbium) போன்ற கனமான அரிய வகைத் தனிமங்​களின் விநியோகத்தில் நம் நாட்டில் கட்டுப்​பாடுகள் நிலவுவது குறிப்​பிடத்​தக்கது.

இந்தியாவில் அரிய வகைத் தனிமங்கள் அதிகம் இருந்தா​லும், உலக அளவிலான உற்பத்​தியில் 1%க்கும் குறைவாகவே இங்கே அவை உற்பத்தி செய்யப்​படு​கின்றன. இதற்கு, சுரங்கத் தொழில்​களில் தனியார் துறையின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதே முதன்மைக் காரணமாகக் கூறப்​படு​கிறது.

சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக ஏற்பட்​டுள்ள அரிய வகை பூமி தனிமங்கள் விநியோகச் சங்கிலி பாதிப்பை இந்தியாவால் ஈடுசெய்ய முடியும்; இச்சூழலை இந்தியா சரியாகப் பயன்படுத்​திக்​கொள்ள வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்​றனர். இந்த நிலையில்தான் அரிய வகை பூமி கூறுகள் - தனிமங்​களைத் தனியார் நிறுவனங்கள் ஆராயலாம் என இந்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதன் மூலம் அரிய வகைத் தனிமங்கள் உற்பத்​தியில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்கு​விக்க முடியும் என அரசு நம்பு​கிறது. இதற்காக 13 தொகுதி நிலங்கள் ஏலத்துக்கு விடப்​பட்​டுள்ளன. அரசின் இப்புதிய கொள்கை​யில், தனிமங்கள் எதுவும் கிடைக்க​வில்லை என்றால் ஆய்வுச் செலவில் 50% திரும்பிச் செலுத்​தப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

பிற சவால்கள்: இந்தியாவில் போதிய தொழில்​நுட்பம் - உள்கட்​டமைப்புத் திறன் இல்லாமல் இருப்பது அரிய வகைத் தனிமங்​களின் உற்பத்​திக்கு இன்னொரு தடையாக உள்ளது. இந்தியாவில் அரிய வகைத் தனிமங்​களின் முதன்மை ஆதாரமான மோனசைட்​டில், அதிக அளவு தோரியம் உள்ளது.

தோரியம் கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆகவே, இதைப் பிரித்​தெடுப்​ப​திலும் - தூய்மைப்​படுத்து​வ​திலும் கடுமையான வரைமுறைகள் பின்பற்​றப்​படு​கின்றன. அடுத்​ததாக, சுற்றுச்​சூழல் - சுகாதார எதிர்விளைவுகள் உள்ளன. உதாரணத்​துக்கு, ஓர் அரிய வகைத் தனிமத்தைச் சுத்தி​கரிக்​கும்​போது, அதிலிருந்து வெளியேறும் தூசி, கழிவு நீர், கதிரியக்கக் கழிவுகள் சுற்றுச்சூழலில் மாசை ஏற்படுத்து​வதுடன், மனித ஆரோக்கியத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்து​கின்றன.

உலக அளவில் அரிய வகை பூமி தனிமங்கள் உற்பத்தி சார்ந்து கடும் போட்டி நிலவு​கிறது. வளங்கள் நிறைந்த நாடுகள் எடுக்கும் கொள்கை முடிவுகள், தனிமங்​களின் விநியோகச் சங்கி​லிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்​கின்​றனர். இத்தகைய சூழலில் அரிய வகைத் தனிமங்​களின் உற்பத்​தியில் இந்தியாவின் செயல்பாடு உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

இந்தியாவின் நிலை: அரிய வகை பூமி தனிமங்​களின் உற்பத்​தியில் ஏற்பட்​டுள்ள தற்காலிகச் சுணக்க நிலையை நீக்க, சுரங்க நடைமுறைகளை வரைமுறைப்​படுத்து​வதும், சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதும் முக்கிய​மானவை. குறிப்பாக, இத்தனிமங்கள் உற்பத்​தியைப் பரவலாக்குவதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்​நுட்ப மேம்பாடு​களில் இந்தியா அடுத்​தகட்​டத்​துக்குச் செல்ல முடியும். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அதேநேரத்தில், தனிமங்களின் சுத்தி​கரிப்பில் சுற்றுச்​சூழல் மாசைத் தடுப்​ப​தற்கான மாற்று வழிகளை நோக்கி நகர்வதும் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x