Published : 04 May 2025 10:46 AM
Last Updated : 04 May 2025 10:46 AM
‘எட்டையபுரம் பள்ளு’ என்ற இலக்கியத்தைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். பலர் இதுபற்றி அறியாமல் இருக்கலாம். இதில் நாட்டுப்புறக் கூறுகள் அதிகம் உள்ளன. ஒரு காலத்தில் தமிழகத்தில் எட்டையபுரம் சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தன என்பதை ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, நாம் ஆண்டாண்டு காலமாக விதைத்து வந்த நெல் வகைகளைப் பற்றி தெளிவாக இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நெல் வகைகள் யார், யாருக்கு, எவ்வளவு நன்கொடையாகத் தரப்பட்டன என்பது குறித்தும் இந்த பள்ளுவில் விளக்கப்பட்டுள்ளது.
‘எட்டையபுரம் பள்ளு’ இலக்கியப் பாடல்களை இயற்றி பாடியவர், நாகூர் முத்துப் புலவர் என்பவர் ஆவார். இப்புலவர் சோழ நாட்டைச் சேர்ந்த தஞ்சைக்கு அடுத்திருக்கும் கடற்கரை நகரான நாகூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். ‘பாட்டுடைத் தலைவன் மீது மட்டும் அல்லாது அவனது முன்னோரான ‘வெங்கடேசுவர எட்டப்ப பூபதி’ என்பார் மீதும் செய்யுள்கள் பாடியுள்ளார் நாகூர் முத்துப் புலவர்’ என உ.வே.சா. கூறுவார்.
இப்புலவர் எட்டையபுரம் கடிகை முத்துப் புலவர் காலத்தவர். இக்கடிகை முத்துப் புலவர் கி.பி.1705 முதல் கி.பி.1725 வரை, ஆட்சி புரிந்து வந்த ‘ஜெக வீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்’ காலத்தவர் என அறிய முடிகிறது.
குமார எட்டேந்திரன் அவையில் முதன்மைப் புலவராக இவர் விளங்கினார். நாகூர் என்பது இன்றைய நாகப்பட்டினமாகும். அன்னை வேளாங்கண்ணியின் திருக்கோயிலும், இஸ்லாமியர் போற்றும் புனித பள்ளிவாசலும் அமையப்பெற்று, இன்று இவ்வூர் ஆன்மிகச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது.
ஏட்டின் முன்னோ அல்லது பின்னோ நூல் எழுந்த காலத்தையோ அல்லது படி எடுத்த காலத்தையோ குறிப்பிடப்படாததால், கலைக்களஞ்சியக் குறிப்பின்படி இந்நூலின் காலம் கி.பி.19-ம் நூற்றாண்டு என கருத முடிகிறது.
நெல் அளந்த குறிப்பு
எட்டையபுரப் பள்ளுவில் எட்டையபுரம் அரண்மனை நெல், திருக்கோயில்கள், தமிழ்ப் புலவர்கள், ஆன்றோர், சான்றோர் என யார் யாருக்கு எந்தவகையான நெல் நல்கையாக (அன்பளிப்பாக) அளக்கப்பட்டது என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. எட்டையபுர சமஸ்தான வரலாற்றை அறிவதற்கு இக்குறிப்புகள் பெரிதும் தரவுகளாக அமைந்து துணை செய்யும்.
இக்கணக்கை எழுதுபவர் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும்போது,
“கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கு முள்ள
கணக்கு நா(ன்) சொல்லுறே னாண்டே”
எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து, அவர் குறிப்பிட்டுள்ளதாவது: எட்டீசுபரர் பூசைக்குச் சீரகச் சம்பா நெல்லில் நாலாயிரங்கோட்டை நெல்லை அம்மைநாத பட்டர் என்ற கோயிற் பூசாரியிடம் அளித்ததாகவும் ராமவெங்கடாசல விட்ணு ஆலயத்திற்குச் சம்பா நெல் ஆயிரங்கோட்டை திருமலை அய்யங்கார் வசம் அளந்ததாகவும், சாத்தூர் பெருமாள் படித்தரப்பூசை, காலம் தவறாமல் நடைபெற அரசரின் ஆணைப்படி ஆயரங்கோட்டை நெல்லை, கஸ்தூரி வாணன் பால் அளந்ததாகவும், விண்ணோர் போற்றும் கழுகாசலக் குகவேளுக்கு பூந்தாளைச் சம்பா நெல், அண்ணாப்பட்டர் வசம் ஆயிரங்கோட்டை அளந்ததாகவும், ஆதிவெயிலு வந்தாள் அன்னை முப்பிடாரியலங்காரி கோயிற்கு ஐநூறு கோட்டை நெல் பண்டாரத்திட்டம் அளந்ததாகவும், மங்காத கீர்த்தி பெறு எட்டையபுரத்தங்காள் நாயகிக்கென முன்னூறு கோட்டை நெல்லைப் பூசாரி அங்கணன் வசம் அளந்ததாகவும், தவசித்தம் பிரானுக்கு உரிய பூசைகள் நடைபெற நல்கையாக சுப்பன் பண்டாரம் வசம் ஆயிரங்கோட்டை ராசவெள்ளை நெல் அளந்ததாகவும், குல தெய்வமான சக்கதேவிக்கு ஆனைக் கொம்பன் நெல் முன்னூற்றைந்து கோட்டை அளந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காசி நகர்தனில் வாசம் செய்யும் விசுவேசருக்கு நித்திய பூசை நடைபெற ஆயிரங்கோட்டை நெல் போசனச் சம்பா அளந்ததாகவும், புனித நீராடுதலுக்குரிய தமிழகத்தின் தலைசிறந்த தலமான தனுக்கோடி சிவராமலிங்கர் ஆலய பூசைக்காக பிள்ளைச் சம்பா ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும், இரத்தினகிரிக் கோவிற் கட்டளைக்கென எண்ணூறு கோட்டை மிளகி நெல்லை சிவாலயப் பண்டாரத்திடம் அளந்ததாகவும், மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கர் மீனாட்சி ஆலயத்திற்கு குங்குமச் சம்பா நெல்லில் எண்ணூறு கோட்டை நெல் மீனாட்சிநாத பட்டர் வசம் அளந்ததாகவும், தென்பாண்டி நாட்டில் ஆழ்வார்திருநகரில் எழுந்தருளியுள்ள பெருமாள் கட்டளைக் கென, பூந்தாழை நெல்லில் நானூறு கோட்டையை நல்கையாக சேஷயங்கார் வசம் அளந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நெல்லையில் கோயில் கொண்டுள்ள நெல்லை நாயகர் உடன் உறை காந்திமதி கோயிலுக்குக் கட்டளையாக ஆயிரங்கோட்டை புழுகுச்சம்பா நெல்லை வாடிக்கைப்படி அளந்ததாகவும், புனைவனச் சங்கரேசுபவர் கோயிலுக்கு நித்திய பூசை வேண்டியும் அன்னதான நற்காரியத்திற்காகவும் சம்பா நெல்லில் அறுநூறு கோட்டை அளந்ததாகவும், மங்கையெனும் கோவிற்பட்டியில் எழுந்தருளியுள்ள பூவண்ண நாதர் பூசைக்கென்று சம்பா நெல் முன்னூறு கோட்டை அளந்ததாகவும், கடல் முத்தமிடும் அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் சண்முகநாதர் கட்டளைக்கென வெந்தயச்சம்பா நெல்லில் எழுநூறு கோட்டை வேலன் என்பாரிடம் அளந்ததாகவும்,வேதபாராயணம் மற்றும் சாத்திர, தோத்திரங்கள் கற்றுத்தரும் அந்தணர்களான தாத்தையங்கார் வகையினருக்கு ஐநூறு கோட்டை நெல் அளந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வீடுபேற்றை நல்க வல்ல வேள்விகளைச் செய்யவல்ல வேத விற்பனர் சுப்பிர தீட்சதருக்கு எழுநூற்றொரு கோட்டை சீரகச்சம்பா நெல் அளந்ததாகவும், எட்டையபுர சமத்தான பரம்பரையைச் சேர்ந்த கண்ணப்ப குருசாமிக்கென எண்ணூற்றஞ்சு கோட்டை நெல் அளந்ததாகவும், நற்றமிழ் காத்தும் படிப்பித்தும், ஆசானாகவும் இருந்தும் செயலாற்றும் பன கடிகை நமச்சிவாயப் புலவர் பெருமகனார்க்கு அரசனின் ஆணைப்படி முன்னூற்றைந்து கோட்டை நெல் வழங்கியதாகவும், இன்னிசையில் வல்லுநராக வீணைதனிற் சிறந்து விளங்கும் வெள்ளை அண்ணாவி குமாரர்க்கென்று வாழைப்பூச் சம்பாவில் தொன்னூற்று ஐந்து கோட்டை நெல் அளந்ததாகவும், குமார எட்ட பாண்டிய தெய்வேந்திர கன்னன் பெயரை நாளும் பாடும் நற்றமிழ்ப் புலவர் நாகூர் முத்துப் புலவனுக்கு வளமைசேர்க்க முன்னூறு கோட்டை நெல் அளந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், நீர்நிலைகளை உண்டாக்குபவரும், அவ்வாறு உண்டாக்கிய குளம், ஏரிகளைக் காவற் புரிவோருக்கும், பசிப்பிணிப் போக்க நீர்நிலை காக்கும் ராக்கப்பன் செட்டியார் வசம் அரண்மனை நல்கையாக ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும், கனக சபாபதியாபிள்ளைக் கணக்கின் படி முத்துப்பேயன்பால் எண்ணாயிரம் கோட்டை நெல் பாட்டத்தில் அளந்ததாகவும், உவணகிரி சுற்றித் தேரோட்டி வைப்பதற்கு ஒன்பதினாயிரம் கோட்டை நெல் அளந்ததாகவும் அந்நெல்லைக் குமார வேல்மணி என்பார் பெற்றதாகவும், சம்பாதி என்ற இடத்தில் உள்ள குமரகுருபரர் சன்னதி சத்திரம் நடக்கவென்று தொண்ணூற்றொரு கோட்டை நெல் சுப்பன் வசம் அளந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த வகையில் எண்பத்தீராயிரத் தெழுநூற்றொரு கோட்டை நெல் நீக்கி சேரில் வந்த நெல் அளவு தொண்ணூற்றிரண்டு லச்சங்கோட்டை சொந்தத்திருப்பில் உள்ளதாகவும், ஒரு பாடல் கூறுகிறது. இவை அன்றிச் சம்பிறுதிப் பிள்ளை வயித்திலிங்கத் தயாள் எழுதுங் கைக் கணக்கின்படி இன்னும் அளக்கப்படாத நெற்கட்டுகள் உள்ளதாகவும் இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம் வெங்கடேசு ரெட்டுவேள் முன்னிலையில் அளந்து கணக்கிடப்பட்டது என்ற குறிப்பும் உள்ளது.
இவற்றை எல்லாம் காணும் போது எட்டயபுர அரண்மனையின் செல்வச் செழிப்பையும் நிர்வாகச் சிறப்பையும், தரும சிந்தனையையும் அறிந்து கொள்ளத்தக்க சான்றாக மேற்சொன்னவைகள் அமையும் அன்றோ..!
எட்டையபுர சமஸ்தானத்தை ஆண்ட குமார யெட்டேந்திரன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தேடி நாம், வரலாற்று நூல்களை நுணுகிப் பார்த்தால் தக்க தரவுகளாக நமக்குக் கிடைப்பது குறைவே. இது குறித்துக் கலைக்களஞ்சியத்தில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அது வருமாறு:
எட்டையபுரத்தில் 1816 முதல் 1839 வரை ஆட்சி செலுத்திய வேங்கடேசுவர எட்டப்ப மகாராசாவின் மூத்த மகன். 1939-ல் பட்டத்திற்கு வந்தார். இசையில் ஆழ்ந்த புலமை உடையவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் வல்லவர். 'கார்த்திகேய' என்ற முத்திரையுடன் பல கீர்த்தனை உருப்படிகள் இயற்றியுள்ளார். தோடி ராகத்தில் 'கயவதன' என்று தொடங்கும் புகழ்பெற்ற பாடல் இவர் இயற்றியதுதான். பாலசுவாமி தீட்சிதர் போன்ற இசைப் பாடலாசிரியர்களும், சுப்புகுட்டி அய்யா, மீனாக்ஷிசி சுந்தரம் அய்யா, சுப்பையா அண்ணாவி முதலான வீணை வித்துவான்களும், திருநெல்வேலி தேசிங்கு பாகவதர், மதுரை ராமய்யர்,தேவூர் சுப்பிரமணி அய்யா முதலான பாடகர்களும் இவரது அவையை அலங்கரித்தார்கள். இவருடைய முழுப் பெயர் ஜகதீசுவரராமகுமார எட்டப்பர் என்பதாகும்.
குமார எட்டேந்திரருக்குப் பிறகு அவரது தம்பி முத்துசாமி எட்டப்பருடைய மகன் ஜகதீசுவர குமார எட்டப்பன் பட்டத்துக்கு வந்தார். இவர் ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் இம்மூன்று மொழிகளிலும் தேர்ந்தவர். மகாபாரதக் காவியத்தின் மீது மிக்க ஈடுபாடு கொண்டவர். இவரது வேண்டுகோளின்படி 'கவித்திரயம்' என்று அழைக்கப்பெறும் மூன்று சிறந்த ஆந்திரக் கவிஞர்களால் இயற்றப்பட்ட மகாபாரதத்தை, சுப்பராம தீட்சிதர் தமிழில் மொழிபெயர்த்ததாகவும், அந்நூல் அச்சேறியதாகவும், 'சம்பிரதாய பிரதர்சினி' என்னும் தெலுங்கு நூலிலிருந்து தெரியவருகிறது (கலைக்களஞ்சியம், தொகுதி- 10ப. 212).
மேற்கண்ட செய்திகளில் இருந்து எட்டையபுரப் பள்ளு அனைத்து வகையிலும் சிறப்புற்று விளங்கும் நல் இலக்கியமாகத் திகழ்வது புலப்படுகிறது.
இதுவரை தமிழகத்தில் முக்கூடற்பள்ளுதான் புலவர்களாலும் ஆசிரியர்களாலும் பெரிதும் எடுத்துப் பேசப்பட்டது. இன்று அச்சு நூலாகத் தமிழன்னையின் பாதத்தை அழகு செய்யும் முக்கூடற் பள்ளுவுக்கு எந்த வகையிலும் எட்டையபுரம் பள்ளு குறைந்ததல்ல.
தென்னிளசைச் (எட்டையபுரம்) சிறப்பு, அதனை ஆண்டு வந்த மாமன்னர்தம் பெருமை, சமூகப் பண்பாட்டுச் செய்திகள் ஆகியவற்றை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் இந்நூலின் சிறப்புப் போற்றுதற்குரியது. அரசும், தமிழ் ஆர்வலர்களும் இந்நூலை மக்களிடையே கொண்டு சென்றால் இப்பள்ளுவின் பெருமையை யாவரும் அறிந்து போற்ற ஏதுவாக அமையும்.
இந்த எட்டையபுரம் பள்ளுவில் நெல் வகைகள் மட்டுமல்லாது, பருத்தி, மிளகு, கம்பு, குதிரைவாலி, காக்கா சோளம் உள்ளிட்ட பல்வேறு சோள வகைகளைப் பற்றியும், அவை எந்தெந்த பெயர்களில் அழைக்கப்படுகின்றன என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கரிசல் பகுதிகளில் வேப்ப மரங்களை தெருக்களில் அதிகமாகப் பார்க்க முடியாது. ஊர் மந்தையில் உள்ள கோயில்கள் அருகில் மட்டுமே காண முடியும். கருவேலம் மரங்கள்தான் எங்கும் ஆக்கிரமித்திருந்தன. வேலி கருவேலம் மரங்களும் காணப்பட்டன. இந்த கருவேல மரங்களை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம், அவற்றில் இருந்து எவ்வாறு அடுப்புக்கரி தயார் செய்வது, அந்தக் கரியை வியாபாரப்படுத்தும் முறைகள் குறித்தும் இந்தப் பள்ளுவில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், எட்டையபுரம் மாவட்டத்தில் நாட்டார் வழக்காற்றியலில், தருவைகுளம் மீனவர்களின் மீன்பிடிப்பு முறைகள், மீன் வகைகள் மற்றும் மீன்களை எவ்வாறு கருவாடாக்கி பதப்படுத்துவது என்பது குறித்து விளக்கமாகக் கூறப்படுகிறது. கரிசல் பகுதி என்பது தூத்துக்குடி கடற்கரை வரை பரந்து விரிந்துள்ளது.
எங்கள் பகுதியில் உலாவந்த குடுகுடுப்பைக்காரர்கள் பற்றி ஏற்கெனவே கூறியுள்ளேன். இவர்களை ‘ராப்பாடிகள்’, ‘சாமக் கோடாங்கிகள்’ என்றும் அழைப்பது உண்டு. அறுவடை முடிந்த காலங்களில், கையில் அரிக்கேன் விளக்குடன் நள்ளிரவில் பாடி வருவார்கள். குறைக்கும் நாய்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். இவர்கள் சுடுகாட்டில் பூஜை செய்து, தலைச்சன்பிள்ளை மண்டையோட்டில் இருந்து வசிய மை தயாரிப்பார்கள் என்று அந்தக்கால மக்களிடையே நம்பிக்கை இருந்து வந்தது. அவருடைய வாக்கு பலிக்கும் என்றும் கூறுவார்கள்.
இரவில் சாமக்கோடாங்கிகளை மக்கள் நேரில் பார்க்க மாட்டார்கள். பக்கத்து தெருவில் உரத்த குரலில் இவர் பாடி வருவதைக் கேட்டவுடன், வீட்டின் வெளியே ஒரு முறத்தில் காணிக்கையாக அரிசியை வைத்து கதவை மூடி விடுவார்கள். ‘கடவுளே... சாமக்கோடாங்கி நல்ல வாக்கு சொல்லணுமே..’ என்று மனதுக்குள் வேண்டிக் கொள்வார்கள்.
சாமக்கோடாங்கி வீட்டின் முன்னே நின்று பாடிவிட்டு, அந்த அரிசியை எடுத்துக் கொண்டு, முறத்தில் சிறிதளவு விபூதியை வைத்து விட்டுச் செல்வார். ஆனால் அந்த விபூதியை யாரும் பூச மாட்டார்கள். வெளியே கொட்டி விடுவார்கள்.
நடுச்சாமத்தில் குடுகுடுப்பை சத்தம், ‘ஜக்கம்மா சொல்லுறா... ஜக்கம்மா சொல்லுறா..’ என்ற கணீர் குரல், நாய்களின் இடைவிடாத குரைப்பு...
இவையெல்லாம் சின்னஞ்சிறார்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் ‘கிலி’யை ஏற்படுத்தும்...
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > வட்டார நாட்டுப்புறக் கூறுகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 17
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT