Published : 01 May 2025 07:10 AM
Last Updated : 01 May 2025 07:10 AM
மக்களுக்கு மதுவையும் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கஷாயத்தையும் கொடுத்துவந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் மரியா கிளீட் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்தத் தீர்ப்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினப் பரிசாகக் கிடைத்துள்ளது.
பின்னணி என்ன? - 1970இல் மு.கருணாநிதி ஆட்சியில், விடுமுறை தினச் சட்டம் திருத்தப்பட்டு மே 1ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது; இந்தியாவிலேயே அதுதான் முதன்முறை. எனினும், 1983இல் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமான டாஸ்மாக் ஊழியர்களுக்கு அந்த விடுமுறைச் சலுகை மறுக்கப்பட்டது. 30.4.2010 அன்று ராமசுந்தரம் என்கிற ஊழியர் மே தின விடுமுறை கேட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடுமுறைச் சட்டம் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பு அளித்தது.
அதற்கு அடுத்த நாள் மே தினமாக இருப்பதால் அதற்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்கு மேல்முறையீடு செய்து, தடை உத்தரவு பெற்றது டாஸ்மாக். அவர்களுடைய தொழிலாளர்கள் பாசம் எப்படி என்பதை இந்த ஒரு சம்பவமே விளக்கும். இது குறித்துப் பொதுமேடைகளில் விவாதம் எழுப்பப்பட்ட நிலையில், கருணாநிதி அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே 1ஆம் தேதி விடுமுறை அளித்தது. எப்படித் தெரியுமா? விடுமுறைக்கான சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று வாதாடிய டாஸ்மாக், மே 1ஆம் தேதியைக் கட்டாய மதுவிலக்கு தினமாக அறிவித்தது.
இந்நிலையில், எந்தவொரு சட்டமும் தங்களுக்குப் பொருந்தாது என்றே வாதாடி வந்த டாஸ்மாக்குக்கு, உயர் நீதிமன்றம் தற்போது அளித்திருக்கும் தீர்ப்பு மிக முக்கியமானது. இந்தத் தீர்ப்பும் நீதிபதியிடமிருந்து வந்த கண்டனக் கணைகளும் எந்த அளவுக்கு ஒரு ஏகபோக நிறுவனம் தொழிலாளர் சட்டங்களை அவமதிக்கும் என்பதைப் பட்டவர்த்தனம் ஆக்கியிருக்கின்றன.
டாஸ்மாக் செயல்படும் விதம்: மாநில அரசுக்கு ஏறக்குறைய ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டித் தரும் டாஸ்மாக்கில் பணிபுரியும் நேரடியான ஊழியர்கள் மொத்தம் 24,000 பேர் மட்டுமே. போக்குவரத்து, கிடங்கு, சுமை தூக்கும் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் இவர்கள் அனைவரையுமே ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்திருக்கும் ஒரே அரசு நிறுவனம் டாஸ்மாக் மட்டுமே. பொது நிறுவனம் என்றால் அவர்கள் ‘மாதிரி முதலாளி’களாக இருக்க வேண்டும் என்று ஒரு நியதி உண்டு. அந்த நியதிகளெல்லாம் டாஸ்மாக்குக்கு வெறும் உதவாத சொற்களே.
1983இல் ஆரம்பிக்கப்பட்டாலும், 2004இல் தான் நேரடியாக மதுபானக் கொள்முதல், சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையைக் கையில் எடுத்தது டாஸ்மாக். இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள அந்த நிறுவனத்தைப் பற்றித்தான் தினசரி செய்திகளில் வாசிக்கிறோம். அமலாக்கத் துறையின் திடீர் ஆய்வு, தன்னைப் பற்றி செய்திகள் வெளியிடக் கூடாது என்று யூ-டியூபர் ஒருவருக்கு எதிராகத் துறையின் அமைச்சர் பெற்ற தடை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்திகள் தருவதை மறுப்பது, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விதிவிலக்கு இப்படி அந்நிறுவனம் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதைப் பார்க்கலாம்.
சுரண்டப்படும் ஊழியர்கள்: அரசுக்கு ரூ.50,000 கோடி வருமானம் தந்தாலும், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில்தான் நடக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வருடத்தின் கடைசி மாதத்தில் டாஸ்மாக்கின் வருமானத்தை எல்லாம் விற்பனைக் கட்டணம் (vending fee) என்று அரசு எடுத்துக்கொள்ளும். அதனால், வரவு எட்டணா செலவு பத்தணா என்று டாஸ்மாக் நஷ்டத்தில் நடப்பதாகவும், அதனால் வருமான வரி கட்ட வேண்டாம் என்றும் நீதிமன்றத்தில் இன்றைக்கும் வாதாடிவருகிறது.
மற்றொரு பக்கத்தில், விற்பனை ஊழியர்கள் முறைகேடாகச் செயல்படுகிறார்கள் என்று கூறி விசாரணையின்றிப் பணிநீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இப்படிப் பெருகிவரும் வழக்குகளை முறைப்படுத்தும் விதமாக 2010இல் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக்குக்கு உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவின்படி, டாஸ்மாக்குக்கு நிரந்தர நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும் அவர்கள் தங்கள் நிறுவனத்துக்கு நிலையாணைகள் தயார் செய்து அவற்றுக்குச் சான்றிதழ் பெற வேண்டும் என்றும், அதுவரை அரசாங்கம் இயற்றிய மாதிரி நிலையாணை அவர்களுக்குப் பொருந்தும் என்றும் தீர்ப்புஅளித்தது. மாதிரி நிலையாணையின்படி தொழிலாளிகள் இழைக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய விசாரணை நடத்தும் முறைகளும் அதற்கான தண்டனைகளும் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
2010இல் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, பின்னர் பல்வேறு நீதிபதிகளால் வலியுறுத்தப்பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தொடுத்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இருப்பினும் டாஸ்மாக் இதற்கெல்லாம் அசைந்துவிடுமா? 2014இல் அவர்களே ஒரு விதிமுறையை உருவாக்கி, அதன்மூலம் தவறிழைக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடி தண்டனை வழங்குவதும், அவர்கள் ஊதியத்திலிருந்து சரக்குக் குறைவுக்குப் பணம் பிடிப்பதும் ஊழியர்களைத் தண்ணியில்லாக் காட்டுக்கு (கிடங்குகளுக்கு) உடனடி மாற்றம் செய்வதும் விதிமுறைகள் ஆக்கப்பட்டன.
அதிரடித் தீர்ப்பு: மாதிரி நிலையாணை பொருந்தக்கூடிய நிறுவனங்களில் இதுபோன்ற தனிப்பட்ட விதிகளை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த முடியாது என்று பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பினும், அதற்கு டாஸ்மாக் செவிசாய்க்கவில்லை. தங்களுக்கு நிலையாணைச் சட்டம் பொருந்தாது என்றே கூறிவந்தது. டாஸ்மாக்கைவிடப் பெரிய அளவில் ஊழியர்கள் செயல்படும் மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்று பல தீர்ப்புகள் உள்ளன.
தனிப்பட்ட முறையில் டாஸ்மாக் உருவாக்கிய 2014 விதிமுறைகள் நிலையாணைச் சட்டத்துக்கு விரோதம் என்று கூறி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டது. அவர் பகாசுர டாஸ்மாக் நிறுவனத்தைப் பகைத்துக்கொள்வாரா? எனவே, இருபக்கமும் பொருந்தும்படி ஒரு தீர்ப்பை அளித்தார். டாஸ்மாக் நிறுவனத்துக்கு நிரந்தர நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும் அதேசமயத்தில் 2014 விதிமுறைகள் அதற்குத் துணையாக இயங்கும் என்றும் அவர் வழங்கிய தீர்ப்பு விசித்திரமானது.
இதை எதிர்த்துத் தொழிற்சங்கம் 2020இல் போட்ட வழக்கில்தான் ஐந்து வருடங்கள் கழித்து உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. காலம் கழித்துப் பெறப்பட்டாலும் நீதியின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் 141 பக்கங்கள் அடங்கிய அந்தத் தீர்ப்பு டாஸ்மாக்குக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் ஒரு பாடமாக விளங்கும்.
ஈவு இரக்கமற்ற தன்மை: இதுவரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை டாஸ்மாக் அப்பட்டமாக மீறிவருவதைத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதி மரியா கிளீட், டாஸ்மாக் நிறுவனத்துக்கு நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும், அதனால் டாஸ்மாக் தன்னிச்சையாக உருவாக்கிய 2014ஆம் விதி சட்டவிரோதம் என்றும் கூறியிருக்கிறார். இதுவரை நிலையாணையைத் தயார் செய்து சான்றிதழ் பெறாத டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, டாஸ்மாக் மீது கிரிமினல் வழக்குத் தொடுப்பதற்கும் வழிவகை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான தீர்ப்புகள் போல் உலர்ந்த வார்த்தைகளால் பொருண்மைகளையும் தீர்ப்புகளின் முன்னுதாரணங்களையும் பட்டியலிடும் வார்த்தைக் கோவைகளாக இல்லாமல், இந்த நெடிய தீர்ப்பு இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருப்பதையும் பார்க்கலாம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘வெனிஸ் நாட்டு வணிகன்’ என்கிற நாடகத்தில் வரும் ஈவு இரக்கமற்ற கந்துவட்டிப் பேர்வழியான ஷைலாக்கின் வசனத்துடன் தொடங்கும் இத்தீர்ப்பில், வெனிஸ் நகர நீதிமன்றத்தைக் குறை கூறும் வசனமும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் வரும் கதாபாத்திரமான ஷைலாக் போன்ற நிறுவனம்தான் டாஸ்மாக் என்பதைக் கூறாமல் கூறுகிறார் நீதிபதி. தொடர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனப்படுத்திவரும் டாஸ்மாக்கின் ஏகபோகத்தன்மையை விமர்சித்த நீதிபதி, இனியும் நீதிமன்றம் வாளாவிராது என்று குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் திருந்தாத டாஸ்மாக்குக்கு, தீர்ப்பின் இறுதியில் விவிலியத்திலிருந்து நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்: ‘உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்’ (எரேமியா 3:15). டாஸ்மாக்குக்குக் கூறும் அறிவுரையாகவே இதை எடுத்துக்கொள்ளலாம்.
- தொடர்புக்கு: saraskrish1951@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT