Last Updated : 01 May, 2025 07:10 AM

3  

Published : 01 May 2025 07:10 AM
Last Updated : 01 May 2025 07:10 AM

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினப் பரிசு!

மக்களுக்கு மதுவையும் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கஷாயத்தையும் கொடுத்துவந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் மரியா கிளீட் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்தத் தீர்ப்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினப் பரிசாகக் கிடைத்துள்ளது.

பின்னணி என்ன? - 1970இல் மு.கருணாநிதி ஆட்சி​யில், விடுமுறை தினச் சட்டம் திருத்​தப்​பட்டு மே 1ஆம் தேதி ஊதியத்​துடன் கூடிய கட்டாய விடுமுறையாக அறிவிக்​கப்​பட்டது; இந்தியா​விலேயே அதுதான் முதன்​முறை. எனினும், 1983இல் தொடங்​கப்பட்ட அரசு நிறுவனமான டாஸ்மாக் ஊழியர்​களுக்கு அந்த விடுமுறைச் சலுகை மறுக்​கப்​பட்டது. 30.4.2010 அன்று ராமசுந்தரம் என்கிற ஊழியர் மே தின விடுமுறை கேட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடுமுறைச் சட்டம் டாஸ்மாக் ஊழியர்​களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்​பு அளித்தது.

அதற்கு அடுத்த நாள் மே தினமாக இருப்​பதால் அதற்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்கு மேல்முறையீடு செய்து, தடை உத்தரவு பெற்றது டாஸ்மாக். அவர்களுடைய தொழிலா​ளர்கள் பாசம் எப்படி என்பதை இந்த ஒரு சம்பவமே விளக்​கும். இது குறித்துப் பொதுமேடைகளில் விவாதம் எழுப்​பப்பட்ட நிலையில், கருணாநிதி அரசு டாஸ்மாக் ஊழியர்​களுக்கு மே 1ஆம் தேதி விடுமுறை அளித்தது. எப்படித் தெரியுமா? விடுமுறைக்கான சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று வாதாடிய டாஸ்மாக், மே 1ஆம் தேதியைக் கட்டாய மதுவிலக்கு தினமாக அறிவித்தது.

இந்நிலை​யில், எந்தவொரு சட்டமும் தங்களுக்குப் பொருந்தாது என்றே வாதாடி வந்த டாஸ்மாக்​குக்கு, உயர் நீதிமன்றம் தற்போது அளித்​திருக்கும் தீர்ப்பு மிக முக்கிய​மானது. இந்தத் தீர்ப்பும் நீதிப​தி​யிட​மிருந்து வந்த கண்டனக் கணைகளும் எந்த அளவுக்கு ஒரு ஏகபோக நிறுவனம் தொழிலாளர் சட்டங்களை அவமதிக்கும் என்பதைப் பட்டவர்த்தனம் ஆக்கி​யிருக்​கின்றன.

டாஸ்மாக் செயல்​படும் விதம்: மாநில அரசுக்கு ஏறக்குறைய ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டித் தரும் டாஸ்மாக்கில் பணிபுரியும் நேரடியான ஊழியர்கள் மொத்தம் 24,000 பேர் மட்டுமே. போக்கு​வரத்து, கிடங்கு, சுமை தூக்கும் தொழிலா​ளர்கள், பாதுகாவலர்கள் இவர்கள் அனைவரையுமே ஒப்பந்தத் தொழிலா​ளர்களாக வைத்திருக்கும் ஒரே அரசு நிறுவனம் டாஸ்மாக் மட்டுமே. பொது நிறுவனம் என்றால் அவர்கள் ‘மாதிரி முதலா​ளி’களாக இருக்க வேண்டும் என்று ஒரு நியதி உண்டு. அந்த நியதி​களெல்லாம் டாஸ்மாக்​குக்கு வெறும் உதவாத சொற்களே.

1983இல் ஆரம்பிக்​கப்​பட்​டாலும், 2004இல் தான் நேரடியாக மதுபானக் கொள்முதல், சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையைக் கையில் எடுத்தது டாஸ்மாக். இன்று விஸ்வரூபம் எடுத்​துள்ள அந்த நிறுவனத்தைப் பற்றித்தான் தினசரி செய்தி​களில் வாசிக்​கிறோம். அமலாக்கத் துறையின் திடீர் ஆய்வு, தன்னைப் பற்றி செய்திகள் வெளியிடக் கூடாது என்று யூ-டியூபர் ஒருவருக்கு எதிராகத் துறையின் அமைச்சர் பெற்ற தடை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்திகள் தருவதை மறுப்பது, தொழிலாளர் சட்டங்​களி​லிருந்து விதிவிலக்கு இப்படி அந்நிறுவனம் பல்வேறு அவதாரங்களை எடுத்​துள்ளதைப் பார்க்​கலாம்.

சுரண்​டப்​படும் ஊழியர்கள்: அரசுக்கு ரூ.50,000 கோடி வருமானம் தந்தா​லும், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்​தில்தான் நடக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வருடத்தின் கடைசி மாதத்தில் டாஸ்மாக்கின் வருமானத்தை எல்லாம் விற்பனைக் கட்டணம் (vending fee) என்று அரசு எடுத்​துக்​கொள்​ளும். அதனால், வரவு எட்டணா செலவு பத்தணா என்று டாஸ்மாக் நஷ்டத்தில் நடப்ப​தாக​வும், அதனால் வருமான வரி கட்ட வேண்டாம் என்றும் நீதிமன்​றத்தில் இன்றைக்கும் வாதாடிவருகிறது.

மற்றொரு பக்கத்​தில், விற்பனை ஊழியர்கள் முறைகே​டாகச் செயல்​படு​கிறார்கள் என்று கூறி விசாரணை​யின்றிப் பணிநீக்கம் செய்யப்​படுவதை எதிர்த்து உயர் நீதிமன்​றத்தில் நூற்றுக்​கணக்கில் வழக்குகள் தாக்கல் செய்யப்​பட்டன. இப்படிப் பெருகிவரும் வழக்குகளை முறைப்​படுத்தும் விதமாக 2010இல் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக்​குக்கு உத்தரவு பிறப்​பித்தது.

அந்த உத்தர​வின்படி, டாஸ்மாக்​குக்கு நிரந்தர நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும் அவர்கள் தங்கள் நிறுவனத்​துக்கு நிலையாணைகள் தயார் செய்து அவற்றுக்குச் சான்றிதழ் பெற வேண்டும் என்றும், அதுவரை அரசாங்கம் இயற்றிய மாதிரி நிலையாணை அவர்களுக்குப் பொருந்தும் என்றும் தீர்ப்பு​அளித்தது. மாதிரி நிலையாணை​யின்படி தொழிலா​ளிகள் இழைக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய விசாரணை நடத்தும் முறைகளும் அதற்கான தண்டனை​களும் விரிவாகப் பட்டியலிடப்​பட்​டுள்ளன.

2010இல் அளிக்​கப்பட்ட இந்தத் தீர்ப்பு, பின்னர் பல்வேறு நீதிப​தி​களால் வலியுறுத்​தப்​பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தொடுத்த வழக்குகள் முடித்து வைக்கப்​பட்டன. இருப்​பினும் டாஸ்மாக் இதற்கெல்லாம் அசைந்து​விடுமா? 2014இல் அவர்களே ஒரு விதிமுறையை உருவாக்கி, அதன்மூலம் தவறிழைக்கும் டாஸ்மாக் ஊழியர்​களுக்கு உடனடி தண்டனை வழங்கு​வதும், அவர்கள் ஊதியத்​திலிருந்து சரக்குக் குறைவுக்குப் பணம் பிடிப்​பதும் ஊழியர்​களைத் தண்ணி​யில்லாக் காட்டுக்கு (கிடங்கு​களுக்கு) உடனடி மாற்றம் செய்வதும் விதிமுறைகள் ஆக்கப்​பட்டன.

அதிரடித் தீர்ப்பு: மாதிரி நிலையாணை பொருந்​தக்​கூடிய நிறுவனங்​களில் இதுபோன்ற தனிப்பட்ட விதிகளை நிறுவனங்கள் நடைமுறைப்​படுத்த முடியாது என்று பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்​பினும், அதற்கு டாஸ்மாக் செவிசாய்க்க​வில்லை. தங்களுக்கு நிலையாணைச் சட்டம் பொருந்தாது என்றே கூறிவந்தது. டாஸ்மாக்கை​விடப் பெரிய அளவில் ஊழியர்கள் செயல்​படும் மின்சார வாரியம், அரசுப் போக்கு​வரத்துக் கழகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற நிறுவனங்​களுக்கு எல்லாம் நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்று பல தீர்ப்புகள் உள்ளன.

தனிப்பட்ட முறையில் டாஸ்மாக் உருவாக்கிய 2014 விதிமுறைகள் நிலையாணைச் சட்டத்​துக்கு விரோதம் என்று கூறி, சி.ஐ.டி.யு. தொழிற்​சங்கம் தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டது. அவர் பகாசுர டாஸ்மாக் நிறுவனத்தைப் பகைத்​துக்​கொள்​வாரா? எனவே, இருபக்​கமும் பொருந்தும்படி ஒரு தீர்ப்பை அளித்​தார். டாஸ்மாக் நிறுவனத்​துக்கு நிரந்தர நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும் அதேசம​யத்தில் 2014 விதிமுறைகள் அதற்குத் துணையாக இயங்கும் என்றும் அவர் வழங்கிய தீர்ப்பு விசித்திர​மானது.

இதை எதிர்த்துத் தொழிற்​சங்கம் 2020இல் போட்ட வழக்கில்தான் ஐந்து வருடங்கள் கழித்து உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கி​யிருக்​கிறது. காலம் கழித்துப் பெறப்​பட்​டாலும் நீதியின் உண்மை நிலையை எடுத்​துக்​கூறும் 141 பக்கங்கள் அடங்கிய அந்தத் தீர்ப்பு டாஸ்மாக்​குக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் ஒரு பாடமாக விளங்கும்.

ஈவு இரக்கமற்ற தன்மை: இதுவரை உயர் நீதிமன்​றத்தின் தீர்ப்புகளை டாஸ்மாக் அப்பட்டமாக மீறிவரு​வதைத் தனது தீர்ப்பில் குறிப்​பிட்​டிருக்கும் நீதிபதி மரியா கிளீட், டாஸ்மாக் நிறுவனத்​துக்கு நிலையாணைச் சட்டம் பொருந்தும் என்றும், அதனால் டாஸ்மாக் தன்னிச்​சையாக உருவாக்கிய 2014ஆம் விதி சட்டவிரோதம் என்றும் கூறியிருக்​கிறார். இதுவரை நிலையாணையைத் தயார் செய்து சான்றிதழ் பெறாத டாஸ்மாக் நிறுவனத்​துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்​ததோடு, டாஸ்மாக் மீது கிரிமினல் வழக்குத் தொடுப்​ப​தற்கும் வழிவகை உண்டு என்றும் குறிப்​பிட்​டுள்​ளார்.

வழக்கமான தீர்ப்புகள் போல் உலர்ந்த வார்த்தைகளால் பொருண்​மை​களையும் தீர்ப்பு​களின் முன்னு​தா​ரணங்​களையும் பட்டியலிடும் வார்த்தைக் கோவைகளாக இல்லாமல், இந்த நெடிய தீர்ப்பு இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருப்​ப​தையும் பார்க்​கலாம். ஷேக்ஸ்​பியரின் புகழ்​பெற்ற ‘வெனிஸ் நாட்டு வணிகன்’ என்கிற நாடகத்தில் வரும் ஈவு இரக்கமற்ற கந்து​வட்டிப் பேர்வழியான ஷைலாக்கின் வசனத்​துடன் தொடங்கும் இத்தீர்ப்​பில், வெனிஸ் நகர நீதிமன்​றத்தைக் குறை கூறும் வசனமும் இடம்பெற்றிருக்​கிறது.

இதில் வரும் கதாபாத்​திரமான ஷைலாக் போன்ற நிறுவனம்தான் டாஸ்மாக் என்பதைக் கூறாமல் கூறுகிறார் நீதிபதி. தொடர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனப்​படுத்​திவரும் டாஸ்மாக்கின் ஏகபோகத்​தன்மையை விமர்​சித்த நீதிபதி, இனியும் நீதிமன்றம் வாளாவிராது என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் திருந்தாத டாஸ்மாக்குக்கு, தீர்ப்பின் இறுதியில் விவிலி​யத்​திலிருந்து நீதிபதி மேற்கோள் காட்டு​கிறார்: ‘உங்களுக்கு என் இருதயத்​துக்கு ஏற்ற மேய்ப்​பர்​களைக் கொடுப்​பேன். அவர்கள் உங்களை அறிவோடும் புத்தி​யோடும் மேய்ப்​பார்கள்’ (எரேமியா 3:15). டாஸ்மாக்​குக்குக் கூறும் அறிவுரை​யாகவே இதை எடுத்​துக்​கொள்​ளலாம்​.

- தொடர்புக்கு: saraskrish1951@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x