Last Updated : 30 Apr, 2025 06:23 AM

 

Published : 30 Apr 2025 06:23 AM
Last Updated : 30 Apr 2025 06:23 AM

அதிகரித்துவரும் ரத்தசோகை | சொல்... பொருள்... தெளிவு

இந்தியாவில் 5 பெண்களில், 3 பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களே ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளிடையே தொடர்ந்து அதிகரித்துவரும் ரத்தசோகை ஓர் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினை என்றே உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

ரத்தசோகை: ரத்தச் சிவப்​பணுக்​களின் எண்ணிக்கை அல்லது அவற்றில் உள்ள ஹீமோகுளோபினின் செறிவானது, இயல்பை​விடக் குறைவாக இருக்கும் நிலையே ரத்தசோகை எனப்படு​கிறது. உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்​துச்​செல்ல ஹீமோகுளோபின் தேவைப்​படு​கிறது.

ரத்தச் சிவப்​பணுக்கள் மிகக் குறைவாக இருந்​தாலோ, போதுமான ஹீமோகுளோபின் இல்லா​விட்டாலோ உடலின் திசுக்​களுக்கு ஆக்ஸிஜனை எடுத்​துச்​செல்லும் ரத்தத்தின் திறன் குறைகிறது. இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல், தலைவலி ஏற்படு​கிறது.

நடுத்தர வயது ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்​/டெ.லிட்டர் வரையிலும், பெண்களுக்கு 13 முதல் 15 கிராம்​/டெ.லிட்டர் வரையிலும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். குழந்தை​களுக்கும் கர்ப்​பிணி​களுக்கும் 12 கிராமுக்கு அதிகமாக​வும், வளரிளம் பருவத்​தினருக்கு 13 கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்து​விடும் நிலையே ரத்தசோகை.

காரணங்கள்: ரத்​தசோகை பல்வேறு காரணங்​களால் ஏற்படு​கிறது என்றாலும், முதன்​மையான காரணமாக இரும்​புச்​சத்துக் குறைபாடு உள்ளது. ஃபோலேட், விட்ட​மின்கள் பி12, ஏ குறைபாட்​டி​னாலும் ரத்தசோகை ஏற்படு​கிறது. இவை தவிர நாள்பட்ட நோய்கள், மரபணு, எலும்பு மஜ்ஜைப் பிரச்சினைகள், தைராய்டு கோளாறு ஆகியவையும் ரத்தசோகையை ஏற்படுத்​தும். மலேரியா, காசநோய் போன்ற நோய்களும் ரத்தசோகை ஏற்படக் காரணமாகின்றன.

அண்மையில் ‘நேச்சர்’ (Nature) இதழ் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாட்டால் ரத்தசோகை அதிகரிப்​ப​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது. அதன்படி, ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்கிற அளவில், காற்றில் ‘பி.எம். 2.5’ துகள்​களின் அளவு அதிகரிக்​கிறது (காற்று மாசு அளவீடான ‘பி.எம். 2.5’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோ கிராமைவிட அதிகமான அளவில் மாசு இருக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது). மீறி அதிகரிக்கும் நிலையானது ரத்தசோகையைக் குழந்தை​களிடம் 10 சதவீத​மும், பெண்களிடம் 7.23 சதவீதமும் அதிகரிக்​கிறது.

மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் சைட்டோகைன்​களைத் தூண்டு​வ​தால், இவை எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்தச் சிவப்​பணுக்​களின் உற்பத்​தியைக் குறைய வைத்து ரத்தசோகையை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்​கின்​றனர். காற்று மாசு - ரத்தசோகை குறித்த இந்த ஆய்வு​களில் தொழிற்​சாலைகள், விவசாயக் கழிவுகள், போக்கு​வரத்து போன்றவை காற்று மாசுக்கு முதன்மைக் காரணங்களாக இருப்​ப​தாகவும் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. எனவே, காற்று மாசைக் குறைப்​ப​தற்கான நடவடிக்கையில் இறங்குவது அவசியம்.

புள்ளி​விவரங்கள்: தேசியக் குடும்ப நல ஆய்வின்​படி(4), கடந்த 2015 - 2016இல், 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 53.10% பேர், குழந்தை​களில் (6 முதல் 59 மாதங்கள்) 58.60%, ஆண்களில் 15 முதல் 49 வயதுக்கு இடையே 22.7% பேர் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டு உள்ளனர். அடுத்த சில ஆண்டு​களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்​கியது. தேசியக் குடும்ப நல ஆய்வின்​படி(5), கடந்த 2019 – 2021இல், இந்தியாவில் 67% (6 முதல் 59 மாதங்கள்) குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்​கப்பட, 15 முதல் 49 வயதுக்கு இடையே உள்ள பெண்களில் 59.1% இளம் பெண்களிடம் ரத்தசோகை கண்டறியப்​பட்டது. இதில் 15 முதல் 49 வயதுடைய ஆண்களில் 25% பேர் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டிருந்​தனர்.

மாநிலங்கள் நிலவரம்: இந்தியாவில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்​களில் உள்ள குழந்தை​களில் 50% பேர் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டிருப்பதாக 2019 - 2021 தேசியக் குடும்ப நலச் சுகாதார ஆய்வறிக்கை (5) தெரிவிக்​கிறது. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 80% குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்​தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்​களில் 70%க்கும் அதிகமான குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பிஹார், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஷா, திரிபு​ராவில் 60%க்கும் மேற்பட்ட கர்ப்​பிணிகள் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்​டுள்ளது கவனிக்​கத்​தக்கது.

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பு வளரிளம் பெண்களுக்கு 52.9% ஆகவும் வளரிளம் ஆண்களுக்கு 24.6% ஆகவும் உள்ளது. குறிப்பாக, திருச்சி (82.3%), விழுப்புரம் (73.4%), கரூர் (73.2%) போன்ற மாவட்​டங்கள் தேசியச் சராசரியைவிட அதிக அளவில் ரத்தசோகை உடைய சிறுவர் - சிறுமியரைக் கொண்டுள்ளன.

ரத்தசோகை இல்லா இந்தியா: ரத்தசோகை இல்லா இந்தியா (Anemia Mukt Bharat) என்கிற திட்டத்தை மத்திய அரசு 2018இல் கொண்டு​வந்தது. இத்திட்​டத்தின் கீழ் வளரிளம் பெண்கள், கர்ப்​பிணி​களுக்கு ஊட்டச்​சத்து, இரும்புச் சத்து மாத்திரைகள் சுகாதார மையங்​களில் வழங்கப்​பட்டன. எனினும் இம்முறை​களில் கண்காணிப்பு இல்லாத காரணத்​தி​னால், அரசு நிர்ண​யித்த இலக்கு இதுவரை எட்டப்​ப​டாமலே உள்ளது.

மேலும், மானிய விலையில் உணவு விநியோகத் திட்டத்தின் கீழ், 2021இல் செறிவூட்​டப்பட்ட அரிசியை மத்திய அரசு அறிமுகப்​படுத்​தி​யுள்ளது. ஹரியாணா மாநிலத்​தில், செறிவூட்​டப்பட்ட மாவுகளில் (கோதுமை) ரத்தசோகை சார்ந்த ஆரம்பகால ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவு​களைக் காட்டி​யுள்ளன. ஆனால், வெவ்வேறு உணவு முறைகளைப் பின்பற்றும் இந்தியாவின் பிற மாநிலங்​களில் இந்த முறை ஏற்றுக்​கொள்​ளப்​படுமா என ஊட்டச்​சத்து நிபுணர்கள் கேள்வி எழுப்​பிவரு​கின்​றனர்.

அரிசி, கோதுமை, உப்பு போன்ற பிரதான உணவுகளில் இரும்பு, ஃபோலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகியவற்றைச் சேர்க்க உணவுச் செறிவூட்டல் திட்டத்தை விரிவுபடுத்​துமாறு வலியுறுத்தி வருகின்​றனர். மேலும் பள்ளி, கல்லூரி​களில் இரும்புச் சத்து மத்திரைகள் வழங்கப்​படுவதை முறைப்​படுத்த வேண்டும்.

உணவில் இரும்புச் சத்து நிறைந்த சத்தான உணவுகளைச் சேர்த்​துக்​கொள்ளும் அதேநேரத்​தில், இரும்புச் சத்து உடலில் உறிஞ்​சப்​படுவதை உறுதி​செய்யும் ஆய்வு​களிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்​சத்து நிபுணர்கள் வலியுறுத்து​கின்​றனர். குறிப்பாக, ஹீமோகுளோபினின் முக்கி​யத்துவம், இரும்புச் சத்தின் தேவை ஆகியவை குறித்த விழிப்பு​ணர்​வையும் மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x