Last Updated : 16 Apr, 2025 06:30 AM

 

Published : 16 Apr 2025 06:30 AM
Last Updated : 16 Apr 2025 06:30 AM

அதிகரிக்கும் சிறை மரணங்கள் | சொல்... பொருள்... தெளிவு

இந்தியாவில் 2020 - 2022 காலக்கட்டத்தில் 4,484 சிறை மரணங்கள் (Custodial deaths) நிகழ்ந்துள்ளதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நிகழும் மரணங்கள் லாக் அப் மரணங்கள் அல்லது சிறை மரணங்கள் என அழைக்கப்படுகின்றன.

காவல் துறையினர், கைதுசெய்யப்பட்ட நபர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மனரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறை மரணங்கள் நிகழ்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21, எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமை​களையோ பறிக்கக் கூடாது எனக் கூறுகிறது. இதன்படி, காவல் துறையினால் அத்துமீறி நடத்தப்​படும் லாக் அப் மரணங்கள் சட்டப்படி குற்ற​மாகவே கருதப்​படும்.

இந்தியா​வில்... 2016-17, 2021-22 (பிப்ரவரி 28 வரை) காலக்​கட்​டத்தில் இந்தியாவில் 11,419 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. லாக் அப் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்​களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2,580 பேர், சிறையில் மரணமடைந்துள்ளனர். இப்பட்​டியலில் மத்தியப் பிரதேசம் (925 பேர்), மேற்கு வங்கம் (902 பேர்), மகாராஷ்டிரம் (874), பிஹார் (809 பேர்) போன்றவை அடுத்​தடுத்து உள்ளன.

வழக்கு விசாரணை​களுக்கு அழைத்துச் செல்லப்​படும் பெண்கள் காவல் நிலையங்​களில் பாலியல் துன்புறுத்​தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வு​களும் பல்வேறு மாநிலங்​களில் பதிவாகி​யுள்ளன. 2019இல் மட்டும் காவல் விசாரணை​யின்போது நான்கு பெண்கள் உயிரிழந்​திருக்​கின்​றனர்.

தமிழ்நாடு முதலிடம்: லாக் அப் மரணங்கள் சர்ச்சைக்​குரிய பிரச்சினை​யாகவே தமிழ்​நாட்டில் நீடிக்​கிறது. தென்னிந்தியாவில் லாக் அப் மரணங்கள் அதிகம் நிகழும் மாநில​மாகத் தமிழ்நாடு உள்ளது. மக்களவைத் தரவுகளின்படி, 2016-17, 2021-22 (பிப்ரவரி 28 வரை) ஆண்டு​களில் தமிழ்​நாட்டில் பதிவான லாக் அப் மரணங்​களின் எண்ணிக்கை 478. ஆந்திரப் பிரதேசம் (244), கேரளம் (235), தெலங்கானா (128), கர்நாடகம் (58) ஆகிய மாநிலங்கள் அடுத்​தடுத்த இடங்களில் உள்ளன.

விசாரணைகள் - தண்டனைகள்: இந்தியா​வில், 2017-2021க்கு இடையில், காவல் நிலையங்​களில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக, 286 நீதித் துறை விசாரணை​களுக்கு உத்தர​விடப்​ பட்​டுள்ளது. இந்தக் காலக்​கட்​டத்​தில், இம்மரணங்கள் தொடர்பாக 114 போலீஸார் கைது செய்யப்​பட்​டனர்; இதில் 79 பேர் மீது மட்டுமே குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட்​ட​தாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்​துள்ளது.

இருப்​பினும், இதில் ஒரு காவலர்​கூடக் குற்றவாளி எனத் தீர்ப்​பளிக்​கப்​பட​வில்லை. இதே காலக்​கட்​டத்​தில், காவல்​நிலை​யங்​களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்துத் தமிழ்​நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்​பட்டன. ஆனால், இந்த வழக்குகள் தொடர்பாக எந்த ஒரு காவலர் மீதும் குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட​வில்லை / தண்டனை விதிக்​கப்​பட​வில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.

உதாரணத்​துக்கு, 2020இல் நடந்த சாத்தான்​குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் லாக் அப் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸார் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்து​வருவது நினைவு​கூரத்​தக்கது. இந்தியாவில் காவல் துறையினருக்கு எதிராகச் சட்டவிரோதக் கைது, சித்ரவதை, காயம் ஏற்படுத்​துதல் தொடர்பாக 2017 - 2021க்கு இடைப்பட்ட காலங்​களில் 25 மனித உரிமை மீறல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்​பட்​டுள்ளன.

இக்காலக்​கட்​டத்தில் இது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக 16 காவலர்கள் மீது குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்யப்​பட்டது; இதில் 15 பேர் கைது செய்யப்​பட்​டனர். ஆனால், 3 பேர் மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்​கப்​பட்​டுள்ளது.

இழப்பீடுகள்: இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 22, சட்டவிரோதமான கைதிலிருந்து மக்களைப் பாதுகாக்​கிறது. இதன்படி, காவலில் உள்ள கைதிகளின் பாதுகாப்​புக்கு நீதிபதியே பொறுப்பு. ஆனால், நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நீதித் துறையி​லிருந்து மக்களுக்குக் கிடைப்​ப​தில்லை. காவல் நிலையத்தில் ஏற்படும் மரணங்கள், துப்பாக்​கிச்​சூடு, பாலியல் துன்புறுத்​தலுக்கு ஆளாகுதல், உடல் உறுப்பு பாதிக்​கப்​படுதல் ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை​யில், 5 லட்சம் ரூபாயில் இருந்து 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்​தப்​பட்​டுள்ளது. அதே போல், காவலர்​களால் உடல் துன்புறுத்​தலுக்கு ஆளானது உறுதி​செய்​யப்​பட்டால் அளிக்​கப்​படும் இழப்பீட்டுத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்​கப்​பட்​டுள்ள​தாகத் தமிழக அரசு அறிவித்தது குறிப்​பிடத்​தக்கது.

அதிகாரமின்மை: மனித உரிமை​களைப் பாதுகாப்​ப​தற்காக உருவாக்​கப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், வரையறுக்​கப்பட்ட சில அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளது, இவ்வழக்​கு​களில் பின்னடை​வாகப் பார்க்​கப்​படு​கிறது. லாக் அப் மரணங்கள் போன்ற காவல் துறையின் கொடூரச் செயல்​களுக்கு எதிராக மாநில அரசுகளுக்கு வெறும் பரிந்துரைகளை மட்டுமே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் அளிக்க முடியும். இப்பரிந்துரைகளை மாநில அரசுகள் செயல்​படுத்​தலாம், செயல்படுத்​தாமலும் போகலாம். இத்தகைய சூழலில், லாக் அப் மரணங்கள் போன்ற கடுமையான குற்றச் செயல்​களுக்குத் தேவையான கட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாகிறது.

லாக் அப் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணை​களில், இந்திய நீதித் துறை இயந்திரத்​தனமான அணுகு​முறையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகக் குறிப்​பிட்ட காலத்​துக்குள் விசாரணை முடிக்​கப்​ப​டாமல் காலதாமதம் ஏற்படு​கிறது. தூத்துக்​குடி, தாளமுத்​துநகர் காவல் நிலையத்​தில், 1999இல் விசாரணைக் கைதி வின்சென்ட் மரணம் அடைந்த வழக்கு 20 ஆண்டு​களுக்கு மேலாக நடந்து​வந்தது. இவ்வழக்கில் குற்றம்​சாட்​டப்பட்ட போலீஸாருக்குச் சமீபத்​தில்தான் தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்​பளித்தது.

கால தாமதம் கூடாது: லாக் அப் மரணங்கள், நீதித் துறையின் தோல்வி என்பதை உணர்ந்து, காவல் துறையினர் தங்கள் அதிகாரத்தை மீறாமல் இருப்பதை நீதித் துறை கண்காணிக்க வேண்டும்; காவல் நிலையங்​களில் மருத்​துவச் சேவையை உறுதி செய்வதுடன் லாக் அப் மரணங்கள் - பாலியல் துன்புறுத்​தல்கள் குறித்துப் புகார் அளிக்கும் வழிமுறைகளை வலுப்​படுத்துவது அவசியம். நீதிமன்ற விசாரணைகள் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்குள் முடிக்​கப்​பட்டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி கிடைப்பதை நீதித் துறையும் அரசும் உறுதி​செய்​வதுடன், கைதுசெய்​யப்​படும் நபரின் பாது காப்​புக்கும் முழுமை​யாகப் பொறுப்​பேற்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x