Published : 07 Apr 2025 06:28 AM
Last Updated : 07 Apr 2025 06:28 AM
நவீன மருத்துவத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்’ மாறியிருக்கிறது. இதனால், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் கிருமித் தொற்றுகளால் ஏற்படும் நோய்களுக்கு எதிர்காலத்தில் திறம்பட சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிற அச்சம் உருவாகியுள்ளது.
உலக நலவாழ்வு நாளான இன்று (ஏப்ரல் 7) ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம். நம் உடலில் நோய்களை ஏற்படுத்துவதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த வழங்கப்படும் மருந்துகள் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல், ஆன்டிஃபங்கல் என அழைக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதை ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்’ என்று அழைக்கிறோம்.
உதாரணத்துக்கு, பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களுக்கு அளிக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் இயங்கும் விதம், இரண்டு வகையாக உள்ளது. ஒன்று பாக்டீரியாக்களைக் கொல்லும் வகை (BACTERICIDAL). மற்றொன்று பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆன்டிபயாட்டிக்குகள் (BACTERIOSTATIC).
இந்த நிலையில் பாக்டீரியாக்களால் தொற்று ஏற்படும்போது அந்த தொற்றுக்கு சரியான ஆன்டிபயாடிக்கை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட காலம் வரை வழங்க வேண்டும். அப்போதுதான் பாக்டீரியாக்களை முழுமையாக கொல்ல முடியும்.
இதில், பாக்டீரியாவை கொல்லும் ஆன்டிபயாட்டிக்குகளை சரியான அளவில் சரியான கால அளவில் பயன்படுத்தாவிட்டால், இந்த ஆன்டிபயாட்டிக்குகளை எதிர்க்கும் திறனை நுண்ணுயிரிகள் தங்களது மரபணுக்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் மூலம் வளர்த்துக்கொள்ளும். இந்த எதிர்க்கும் திறனை தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல் தங்களது சந்ததியினருக்கும் மரபணு மூலம் அவை கடத்திவிடுகின்றன. இதனால், குறிப்பிட்ட ஆன்டிபயாட்டிக்குக்கு அடிபணியாத பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன.
மருந்துகள் வேலை செய்யாது: உலக சுகாதார நிறுவனத்தின் 2021 அறிக்கையின்படி, தற்போது 45 ஆன்டிபயாட்டிக்குகள் மட்டுமே ஆரம்பக்கட்ட ஆய்வு நிலையில் உள்ளன. இவை மூன்று நிலை பரிசோதனைகளைக் கடந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு அடுத்த 10 ஆண்டுகள் ஆகும்; அதிலும் பரிசோதனை அளவுகோல்களைக் கடந்து 10 ஆன்டிபயாட்டிக்குகள் மட்டுமே நம் கையில் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: மனிதர்களுக்கு ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு நம் கையில் இருக்கும் அனைத்து ஆன்டிபயாடிக்குகளும் வேலை செய்யாத நிலை இப்போதே வந்துவிட்டது. இதை ‘முழுமையான மருந்து எதிர்ப்பு நிலை’ (Total Drug Resistance) என்கிறோம்.
இந்த நிலையை, காசநோயில் அதிகம் பார்க்க முடிகிறது. எவ்வளவு விலை உயர்ந்த ஆன்டிபயாட்டிக்குகள் கொடுத்தும் நிலைமை சரியாகாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மருந்துகளை தவிர்க்கலாம் இதைத் தவிர்க்க, நாமாக மருந்தகங்களுக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.
பெரும்பாலும் மழைக்காலத்தில் வரும் சளி, மூக்கடைப்பு, காய்ச்சலுக்கு வைரஸ்களே காரணம். எனவே, பருவகால வைரஸ் தொற்றுகளுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆன்டிபயாடிக் உட்கொள்ள ஆரம்பிப்பதை தவிர்க்கலாம். கிருமித் தொற்றினால் நோய் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான அளவில், சரியான இடைவெளியில், பரிந்துரைக்கப்பட்ட காலம்வரை உட்கொள்ள வேண்டும். கை கழுவுதல், தும்மும்போது கைக்குட்டை கொண்டு மூக்கையும் வாயையும் மூடுவது, தண்ணீரை காய்ச்சி வடிகட்டிக் குடிப்பது போன்ற தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கால தாமதம் கூடாது: சமகாலத்தின் சுகாதார சவாலாக ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் உள்ளதாக பன்னாட்டு நுகர்வோர் நிறுவனமான ‘ரெக்கிட்’டின் வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்நாகர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் குறைவான செயல்திறன் கொண்டவையாகி வருவதால் ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்’ உலக அளவில் சத்தமில்லாத தொற்றுநோயாக மாறிவருகிறது. இதில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இதில் காலதாமதம் கூடாது. நோயை தடுப்பதற்கான தயார் நிலை, தடுப்பு நடவடிக்கைகளை தனது கவசமாக கொண்டிருப்பதுடன், ஆரோக்கியத்தின் அடித்தளமாக நலவாழ்வை ரெக்கிட் நிறுவனம் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 7) | உலக நலவாழ்வு தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT