Published : 16 Mar 2025 07:20 AM
Last Updated : 16 Mar 2025 07:20 AM
ராவணன் இந்திரசித்துவைப் பார்த்து, ‘வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் / நின்றுளென் அன்றோ’ என்று கூறுகிறான். ராவணன், ராமனை வெற்றிபெற வில்லையாயினும் ராமன் பெயர் இருக்கும்வரை
ராவணனின் பெயரும் இருக்கும். ராமனைப் பற்றி பேசும்போது ராவணனும் அப்பேச்சில் இடம் பெற்றுவிடுகிறான். அதாவது, ராவணனையும் உள்ளடக்கியதுதான் ராமனின் வரலாறு. ராவணனின் இந்தக் கூற்றைக் கர்ணனுக்குப் பொருத்தி, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் ‘வென்றிலன் என்ற போதும்’ சிறுகதையை எழுதியிருக்கிறார்.
பதினேழாம் நாள் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தருமனும் கர்ணனும் போர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தருமனுக்குக் கர்ணனைக் கொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், சபதத்தின்படி அர்ஜுனன்தான் கர்ணனைக் கொல்ல வேண்டும். தருமன் பின்வாங்குகிறான். இம்முறை கர்ணன் தருமனைக் கடுமையாகத் தாக்குகிறான். கர்ணனும் தருமனைக் கொல்ல முடியாது. ‘பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன்’ என்று குந்திக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான் கர்ணன். ஆனால், இது தருமனுக்குத் தெரியாது. கர்ணனால் கடுமையாகத் தாக்கப்பட்ட தருமன், பாசறைக்குத் திரும்பி விடுகிறான். அர்ஜுனன் தருமனைத் தேடிப் பாசறைக்கு வருகிறான். கர்ணனைக் கொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பிவந்த அர்ஜுனனுக்கும் தருமனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. அர்ஜுனனின் வில்லாற்றலைக் கேலி செய்கிறான் தருமன். ‘பெண் வேட்டைக்காரனுக்குப் போர்முறை என்ன தெரியும்?’ என்கிறான். ‘கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாதவருக்கு மனைவி வேறா?’ என்று பதிலுரைக்கிறான் அர்ஜுனன். இருவருக்கும் இடையிலான சண்டையைத் தீர்த்து வைக்கிறான் கண்ணன். அளவுகடந்த கோபத்துடன் சென்று கர்ணனைக் கொல்கிறான் அர்ஜுனன். இது கண்ணனின் போர் உத்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT