Last Updated : 20 Feb, 2025 11:02 AM

1  

Published : 20 Feb 2025 11:02 AM
Last Updated : 20 Feb 2025 11:02 AM

அச்சுறுத்தப்படும் குழந்தைகள்: என்ன செய்யப் போகிறோம்?

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பதைபதைப்புடன் பார்த்துவருகிறோம். 2015-2022 காலக்கட்டத்தில் மட்டும் இந்திய அளவில் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் சதவீதம் 217 ஆக அதிகரித்து 2,26,728 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருந்தன.

புதிய வழக்குகள் எதுவும் விசாரணைக்கு வராத நிலையில், இந்த வழக்குகளை முடிக்க மட்டும் ஆறு ஆண்டுகள் ஆகலாம் என வழக்கறிஞர்கள் கணித்தனர். ஆனால், சில மணி நேரத்துக்கு ஒரு வன்முறை என்கிற கணக்கில் நிலைமை படுமோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

தமிழ்​நாட்டைப் பொறுத்​தவரை, 2012 - ஜூன் 2022 காலக்​கட்​டத்தில் 20,829 போக்சோ வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்டன. இதில் 8,190 வழக்குகள் முடிக்​கப்​பட்டு 5,631 பேர் விடுவிக்​கப்​பட்​டனர். மீதம் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் 3,500 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருக்​கின்றன. போக்சோ வழக்கு விசாரணை​களைத் துரிதப்​படுத்த 19 மாவட்​டங்​களில் சிறப்பு நீதிமன்​றங்கள் அமைக்​கப்பட்ட நிலையில், அவற்றில் 8 நீதிமன்​றங்​களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்​கின்றன.

முடிவுக்கு வராத குற்றங்கள்: 2012இல் உருவாக்​கப்பட்ட ‘போக்சோ சட்டம்’ குழந்தைகள் பாதுகாப்​புக்கான விரிவான சட்டம் என்று எல்லாத் தரப்பினரின் பாராட்​டையும் பெற்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகள் மீது கொடூரமாக நிகழ்த்​தப்​படுகிற செயல் என்றுதான் நாம் நினைத்​துக்​கொண்​டிருக்​கிறோம். அது தவறு. குழந்தைகளைத் தவறான எண்ணத்​துடன் தொடுதல், தடவுதல், தீங்கிழைத்தல் போன்ற எல்லா வகையான வன்முறை​களும் அந்தச் சட்டத்தில் விரிவாகக் கொடுக்​கப்​பட்​டுள்ளன. ஆனால், இவ்வளவு விரிவான சட்டங்கள் இருந்​தும், குழந்தைகள் மீதான குற்றங்கள் குறையவே இல்லை.

அண்மையில் தமிழ்நாடு சட்டமன்​றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின், பெண்கள் - குழந்தை​களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்​கப்​படு​வதற்கான சட்டப் பிரிவு​களில் திருத்தம் கொண்டு​வந்​திருக்​கிறார். 12 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தை​களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்​படும் என்றும் அறிவித்​திருக்​கிறார். அதன் பிறகும் எவ்வித அச்ச உணர்வுமின்றிக் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்​தல்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்​துக்​கொண்​டிருக்கக் கூடாது.

‘தகாத முறையில் குழந்தை​களிடம் நடந்து​கொள்​ளுதல்’ (Child Abuse) குறித்த மத்திய அரசின் 2007 ஆய்வறிக்கை​யானது, குழந்தை​களுக்கு நன்கு அறிமுகமான - நெருங்கிய உறவினர்கள், சுற்றத்​தினர், பெற்றோரின் நண்பர்கள் போன்ற​வர்கள் மூலமாகத்தான் பாலியல் வன்முறை நடைபெறுகிறது என்று தெரிவிக்​கிறது. நம் தேசியக் குற்ற​வியல் ஆய்வறிக்கையில் 97% குற்றங்கள் குழந்தை​களுக்கு நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகக்​கூடிய​வர்​களால்தான் குற்றங்கள் நடை பெறு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

பாதுகாப்பற்ற குழந்தைகள்: நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்​ப​தற்கு ஏற்ற இடமாக நாம் நம்பி ஒப்படைத்து​வருகிற பள்ளி​களிலேயே இத்தகைய கொடுமை நடப்பது ஏற்கவே முடியாதது. அடிப்​படை​யில், பள்ளிகள் என்பவை குழந்தை​களுக்கான பகல் நேரப் பாதுகாப்பு மையம்​தான். கல்வி, ஆளுமைவளர்ச்சி யாவும் அத்துடன் இணைந்​தது​தான்.

இன்றைக்கு ஒருங்​கிணைக்​கப்படாத கூலித் தொழிலா​ளர்கள், விளிம்​புநிலைச் சமூகத்​தினர் தங்கள் குழந்தை​களைப் படிப்​ப​தற்கு மட்டுமல்​லாமல், பாதுகாப்பாக இருப்​பார்கள் என்கிற நம்பிக்கை​யில்தான் பள்ளிக்​கூடத்தில் ஒப்படைத்து​விட்டு வேலைக்குப் போகிறார்கள்.

பள்ளியி​லிருந்து வெளியேற்​றப்பட்ட குழந்தை​கள்தான் இன்றைக்குக் குழந்தைத் தொழிலா​ளர்களாக இருக்​கிறார்கள். குழந்தைத் திருமணத்​துக்குத் தள்ளப்​படு​கிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுத்​தப்​படு​கிறார்கள். போதைப் பழக்கங்​களுக்கு அடிமையாகிறார்கள். உலகத்தில் எளிதில் பாதிப்​புக்கு உள்ளாகுபவர்​களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்​பவர்கள் குழந்தைகள். குழந்தைகள் குரலற்​றவர்கள், எதிர்க்கும் ஆற்றல் அற்றவர்கள்.

ஆகவே, நாம் அவர்களின் குரலாக, சக்திகளாக மாற வேண்டும். 18 வயது வரை குழந்தைகள் என்கிறோம். அவர்களிடம் வாக்கு வங்கி இல்லை என்பதாலேயே அரசியல்​வா​திகள் கண்டு​கொள்ள​வில்லையோ என்கிற அச்சம் ஏற்பட்​டிருக்​கிறது. ஏனெனில், குழந்தை​களுக்காக ஒதுக்​கப்​படும் பாதுகாப்பு நிதி குறைக்​கப்​பட்டு​வரு​கிறது. குழந்தை​களுக்கான அரசு அமைப்புகள் சரியாக இயங்குவது இல்லை.

ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்​தப்​படு​கிறது என்றால், அக்குழந்தை பால்யத்தை இழக்கிறது. அந்த வன்முறை குழந்தை​களிடம் உளவியல் சிக்கலை உண்டாக்கு​கிறது. எளிதில் மறையாத அந்த வடுவானது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்​தையின் வளர்ச்​சியில் பாதிப்பை ஏற்படுத்​தும். ஒருபுறம், குழந்தை​களுக்கு எதிரான வன்முறை அதிகரித்​துக்​கொண்​டிருக்​கிறது. ஆனால், போக்சோ சட்டம் மூலம் யாரும் பெரிய அளவில் தண்டனை பெற்ற​தாகத் தெரிய​வில்லை.

என்ன செய்ய வேண்டும்? - போக்சோ சட்டத்தில் கைதுசெய்​யப்​பட்​ட​வர்​களில் 16% பேர்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்​களில் தண்டனை பெறுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தண்டனையி​லிருந்து விடுபட்டு​விடு​கிறார்கள். எனவே, குழந்தைகள் பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை. அதை உறுதிப்​படுத்த, பள்ளி​களில் குழந்தை​களின் பாதுகாப்பை உறுதிப்​படுத்து​வதற்கு, அனைத்துப் பள்ளி​களிலும் ‘குழந்தை பாதுகாப்புக் கொள்கை’யை நடைமுறைப்​படுத்த வேண்டும். தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்​டிருக்​கிறது.

கேரளம் போன்ற மாநிலங்​களில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை நடைமுறையில் உள்ளது. ஒரு பள்ளிக்​கூடத்தில் யாரெல்லாம் உள்ளே நுழைய​லாம், பள்ளியின் தர நிர்ணயம் என்ன என்பது தொடங்கி, பள்ளி ஆண்டு தொடங்​கிய​வுடன் போக்சோ சட்டம் பற்றிய விழிப்பு​ணர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற அனைத்து அம்சங்​களும் குழந்தை பாதுகாப்புக் கொள்கையில் இடம்பெற்றிருக்​கும். அதைத் தமிழ்​நாட்​டிலும் உறுதிப்​படுத்த வேண்டும்.

குழந்தை​களுக்குத் தீங்கிழைத்தல் என்றால் என்ன என்கிற அடிப்​படைப் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், அந்தப் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆகியோரை உள்ளடக்கிய ‘குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள்’ உருவாக்​கப்பட வேண்டும்.

குழந்தைகள் தங்களுடைய கருத்து​களையும் பிரச்​சினை​களையும் சொல்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சில ஆண்டு​களுக்கு முன் ‘மாணவர் மனசு’ என்றொரு பெட்டி பள்ளி​களில் வைக்கப்​பட்டது. அந்த முறை சரியாக இயங்க​வில்லை. பல பள்ளி​களில் அந்தப் பெட்டிகளையே காணவில்லை என்று சொல்லப்​படு​கிறது.

அரசாணை 121, 2012இன்படி - பள்ளி​களில் ஏதாவது பாலியல் வன்முறை நிகழ்ந்​தால், அந்த ஆசிரியரின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்​படும். அத்துடன் பணிநீக்​கமும் செய்யப்​படு​வார். இதுவரை எவர் மீதும் இந்த அரசாணை​யின்கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை. தற்போது, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த ஆணையின் மூலமாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சொல்லி​யிருக்​கிறார். அதன்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்​கி​னால்தான் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்​கப்​படும்.

பள்ளி​களில் குழந்​தைநேய அணுகுமுறை கடைப்​பிடிக்​கப்பட வேண்டும். குழந்தை​களுக்கான பாலினச் சமத்துவம் தொடர்பான, பாலின நீதி தொடர்பான வாழ்க்கைத்திறன் சார்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி​களில் உள்ள குழந்​தை நேய அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கல்வித் துறை என்பது திறந்த மனதோடு குழந்தைகள் தொடர்​புடைய மற்ற துறை நிபுணர்​களோடு இணைந்து செயல்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை அவர்களுக்​குள்ளேயே ஆலோசனை சொல்லிக்​கொள்கிற அமைப்பாக இல்லாமல், மற்ற அமைப்​பினரோடும் சேர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் ‘குழந்​தைநேயப் பள்ளி’ என்பதை உறுதிப்​படுத்த முடியும். குழந்தை​களுக்கு இத்தகைய கொடுமைகள் நிகழும்போது ஆசிரியர் அமைப்புகள் எவ்விதக் குரலையும் எழுப்​பாமல் மௌனமாக இருப்பது வருந்​தத்​தக்கது.

ஆசிரியர் அமைப்புகள் இது குறித்து வெளிப்​படை​யாகப் பேச வேண்டும். ஆசிரியர்​களுக்கு இது குறித்த விரிவான விளக்​கத்தைக் கூற வேண்டும். ஆசிரியர் அமைப்​புகள் அரசுடன் பேச வேண்டும். குழந்​தைகள் பாதுகாப்பு சமூகத்தில் உள்ள அனைவரது கடமை, இதற்கு அனைவரும் ஒருங்​கிணைந்து ஒற்றுமை​யுடன் குரல்​கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்​.

- தொடர்புக்கு: thozhamai@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x