Published : 19 Feb 2025 06:30 AM
Last Updated : 19 Feb 2025 06:30 AM
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் 2022இல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7% ஆக அதிகரித்துள்ளது; அந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,62,000 பாலியல் குற்றங்கள் பதிவானதாகத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துவருவது பொதுத்தளத்தில் அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது.
தரவுகள் என்ன கூறுகின்றன? - உடல்ரீதியாக, மனரீதியாக, பாலியல்ரீதியாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என வரையறுக்கப்படுகிறது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இடங்களைக் குறிப்பிட்டுக் கூற முடியாது என்றாலும், வீடுகள், பள்ளிகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்றவை குழந்தைகள் அதிகளவு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இடங்களாக அறியப்படுகின்றன.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 46% கடத்தல் தொடர்பானவை. கடத்தலைத் தொடர்ந்து குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் குற்றச்செயலாகப் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. 69% குழந்தைகள் உடல்ரீதியாகப் பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும், இதில் 48.7% குடும்ப உறுப்பினர்களாலும், 34% பிற நபர்களாலும் நிகழ்த்தப்படுவதாகத் தமிழக அரசின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பெண் குழந்தைகளில் 50.7% பேர் பாலியல் துன்புறுத்தலினால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் 96% வரை அதிகரித்துள்ளது என ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ’ (CRY) அமைப்பு குறிப்பிடுகிறது.
தென்னிந்தியாவில்... 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 50,935 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் நான்கில் ஒரு பங்கு (13,089 வழக்குகள்) தென்னிந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021இல் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய மாநிலங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2021இல் 24.47% அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 4,465 வழக்குகளுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, கர்நாடகம் (2,813), தெலங்கானா (2,698), கேரளம் (2,647), ஆந்திரம் (446) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளதே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் எனக் குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் வழக்குகளின் எண்ணிக்கை குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்தியாவில்... தேசிய அளவில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் உத்தரப் பிரதேசம். சிறாருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 2010, 2021 ஆண்டுகளில் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் உள்ளன.
2020ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 6,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2021 இல் 6,970 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மகாராஷ்டிரத்தில் 2020, 2021இல் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 6,116, 5,687 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 6,012, 5,648 ஆகவும் பதிவாகியுள்ளன.
போக்சோ சட்டம்: இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நான்கு முக்கியச் சட்டங்கள் உள்ளன. அவை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், போக்சோ சட்டம். இதில் போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offences – POCSO), 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்க 2012இல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, குழந்தை மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, குழந்தைகளின் ஒளிப்படங்களைப் பாலியல் பட நோக்கத்துடன் சித்திரித்தல் போன்றவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்குத் தற்போது குறைந்தபட்சத் தண்டனையாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது குறைந்தபட்ச தண்டனைக் காலமானது 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனையாகவும் விதிக்கப்படலாம்.
இந்த நிலையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சிக்கல்கள்: பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில், விரைவு சிறப்பு நீதிமன்றங் களை 2019 அக்டோபரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாள்களுக்குள் குழந்தையின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும், சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்தியச் சட்ட அமைப்பில் நிலவும் சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை முடிவதில் தாமதம் ஏற்படுகிறது.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சாட்சியங்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து குறைபாடுகள் நீடிக்கின்றன. ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட குழந்தையிடம் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் விசாரணைகள், அக்குழந்தைக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்வுகள்: பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கக் குழந்தைகளுக்கு முதல் படியாக, சரியான தொடுதல் (Good touch), தவறான தொடுதல் (bad touch), பாதுகாப்பான தொடுதல் (safe touch), பாதுகாப்பற்ற தொடுதல் (unsafe touch) குறித்துப் பள்ளிகளிலும் வீடுகளிலும் கற்பிக்கப்பட வேண்டும். குழந்தைகளிடம் யாராவது அத்துமீற முயன்றால், அதிலிருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு முறையான ‘No-Go-Tell’ வழிமுறையைப் பின்பற்ற பயிற்சி அளிக்க வேண்டும்.
அதன்படி யாரவது குழந்தைகளைத் தொட முயன்றால் முதல் எதிர்வினையாக, தொட வேண்டாம் (No) எனச் சத்தம் எழுப்ப வேண்டும், அங்கிருந்து எப்படி வெளியேறுவது என (Go) குழந்தைகள் சிந்திக்க வேண்டும்; இறுதியாகக் குழந்தைகள் யாரை நம்புகிறார்களோ அவர்களிடம் நடந்ததைக் கூறி (Tell) உதவியைப் பெறலாம்.
குழந்தைகளுக்கான ‘ஹெல்ப்லைன்’ எண்ணான 1098ஐத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து வகையான பாலியல் வன்முறைகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள், வரைமுறைகளை அரசு வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்காக அரசு அறிவித்துள்ள ஹெல்ப்லைன் 1098 போன்றவை முறையாகச் செயல்படுகின்றனவா எனக் கண்காணிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT