Last Updated : 10 Feb, 2025 07:03 AM

11  

Published : 10 Feb 2025 07:03 AM
Last Updated : 10 Feb 2025 07:03 AM

மாற்று அரசியலுக்காக விஜய் வரட்டும்! - வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் களத்தில் பெரியார், பிரபாகரன், திராவிடம் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்த விமர்சனங்கள் இன்னமும் சூடான விவாதத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அரசியலாளரும் பிரபாகரனுக்கு நன்கு பரிச்சயமானவரும் ‘கதைச் சொல்லி’ ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.

பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

1978 முதல் 1980 வரை இலங்​கைக்​கும் தமிழகத்​துக்​கும் போக வர இருந்​தார் பிரபாகரன். 1981 முதல் 1987-ல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் ஏற்படும் வரை தமிழகத்​தில் இருந்​தார். தமிழகத்​தில் நான், நெடு​மாறன் உள்பட நான்​கைந்து பேர்​தான் பிரபாகரனுக்கு அறிமுக​மாகி​யிருந்​தோம். தன்னுடைய போராட்ட உத்தி​கள், வாழ்க்கை முறையைப் பற்றியெல்​லாம் தினசரி அவர் என்னோடு பேசி​யதுண்டு. 10 ஆண்டு​காலம் அவருடன் பழக்​கவழக்கம் உண்டு. பிறகு நானும் வவுனி​யா​வுக்கு சென்​றிருக்​கிறேன். அப்போதெல்​லாம் பெரியார் பற்றி பிரபாகரன் பேசி​ய​தில்லை. எதிர்​வினை​யாற்றிய​தில்லை. எம்ஜிஆரை மலை போல் நம்பி​னார். அவர் திராவிட இயக்​கத்​தின் தலைவர்​தானே. மு.கருணாநி​தியை எனது திரு​மணத்​தில் சந்தித்​துப் பேசி​னார்.

எனக்​குத் தெரிந்து திராவிட இயக்​கங்கள் பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ பிரபாகரன் குறை சொல்லி எதுவும் பேசி​ய​தில்லை. ஆனைமுத்து தொகுத்து எழுதிய ‘பெரி​யார் சிந்​தனை​கள்’ பற்றிய 3 தொகு​திகளை பிரபாகரன் வாங்​கிச் சென்​றார். பிரபாகரன் சென்னை​யில் உண்ணா​விரதப் போராட்டம் நடத்​தி​ய​போது, அப்போ​ராட்​டத்தை கி.வீரமணி​தான் பழச்​சாறு கொடுத்து முடித்து வைத்​தார். திராவிட தலைவர்​களோடு முரண் இருந்​தால், கி.வீரமணி வேண்​டாம் என்று சொல்​லி​யிருப்​பார் அல்ல​வா? கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்ற பெரியாரிஸ்டுகளும் அவரோடு நெருக்கமாகத்தான் இருந்தனர்.

பெரியாரை சரமாரியாக சீமான் விமர்சிக்கும் நிலையில், அதற்கு திராவிட இயக்கங்கள் சரியாக எதிர்வினையாற்றியதாக நினைக்கிறீர்களா?

எ​திர்​வினை எங்கே ஆற்றி​னார்​கள்? அங்கு​தான் (திமுக) தகுதியான ஆட்களை வைத்​துக் கொள்ள​மாட்​டார்​களே. தகுதி​தான் அங்கு தடை. நானும் அங்கிருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​வன்​தானே. இப்போது திமுக-​வில் இருப்​பவர்​களுக்கு திமுக-​வின் வரலாறு தெரி​யுமா? திரா​விடம் என்று பெயர் வைத்​தவர்கள் யாரென்று இவர்​களுக்​குத் தெரி​யுமா? இந்து மதம் சம்பந்​தப்​பட்​ட​வர்கள் வைத்த பெயர்​தான் திரா​விடம். இதைச் சொல்​லக்​கூடிய​வர்கள் இன்று திமுக-​வில் யார் இருக்​கிறார்​கள்? இன்றைய திமுக-​வில் சிந்​தனை​யாளர்​களுக்கு வேலை இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களைப் போன்றவர்கள் முட்டு கொடுக்க வேண்டும்.

திமுகவை எதிர் முகாமிலிருந்து திட்டிக் கொண்டிந்தவர்கள், திமுக ஆளுங்கட்சியான பிறகு இந்திரனே, சந்திரனே என்று பேசுகிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்றுதான் தெரியவில்லை. அதனால்​தான் இன்று யார் வேண்​டு​மா​னாலும் திராவிட இயக்​கங்​களைப் பற்றி பேசலாம் என்றாகி​விட்​டது. தகுதி​யானவர்கள் இருந்​திருந்​தால் சரியாக எதிர்​வினை​யாற்றி​யிருப்​பார்​கள். ஒரு காலத்​தில் அற்புத​மாகப் பேசக்​கூடிய தலைவர்கள் திமுக-​வில் இருந்​தார்​கள். இன்றோ ஓட்டுக்கு காசு, லஞ்சம் வாங்​குபவர், தொடர்ந்து எம்எல்ஏ, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்​து​கொண்டு பெரிய காரில் முரட்டுத்​தனமாக ஹாரன் அடிப்பவர்கள் இருந்​தால் போதும் என்றாகி​விட்டது. இதுதான் இன்றைய திமுக நிலை. அதனால்​தான் மாற்று அரசியல் வேண்​டும் என்று நினைக்​கிறோம்​.

நீங்கள், நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரனுடனும் நெருக்கமாக இருந்தவர்கள். சீமான் பேசும் விஷயங்களில் உள்ள உண்மை தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்குமே..?

அவர் (சீமான்) அங்கு (இலங்கை) இருந்ததே சில நிமிடங்​கள்​தான். மகேந்​திரன் உள்ளிட்ட இயக்​குநர்கள் பிரபாகரனை சந்திக்கச் சென்​றார்கள் அல்லவா? அந்த அணியில் இருந்​தவர்​தான் சீமான். ஒரு 5 - 10 நிமிடங்​கள்​தான் அவர் பிரபாகரனைச் சந்தித்​திருப்​பார். தமிழகத்​தில் பிரபாகரனை யாருமே அறியாதவர்கள் போல் சீமான் பேசுகிறார். தமிழ்​நாட்​டில் முன்​பைப் போல நாகரிக அரசியல் இல்லை. முன்பு கண்ணியம் இருந்​தது. பிரபாகரனை பார்க்காத ஆட்கள் எல்லாம் அவரைப் பற்றி இணையத்​தில் எழுதுகிறார்​கள். நாம் ஏதும் மறுத்​துப் பேசி​னால் ஆபாச​மாக, கீழ்​தரமாக விமர்​சிக்​கிறார்​கள். ஒருவர் சொன்னதை இட்டுக் கட்டி 100 பேர் பேசி​னால், அது உண்மை​யாகி​விடு​கிறது. இதற்​கெல்​லாம் அஞ்சியே நாங்கள் அமைதியாக இருக்​கிறோம்​.

இலங்கையின் தமிழ் தேசியம் வேறு. அதை தமிழ்நாட்டில் பின்பற்ற முடியாது என்று ஈழத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் சொல்கிறார்கள். பிரபாகரனின் தமிழ்த் தேசியம் என்றுதானே சீமான் இங்கு பேசுகிறார். அதுபற்றி உங்கள் பார்வை?

தமிழ்த் தேசியம் எந்தக் கோட்​பாட்​டில் இயங்க வேண்​டும் என்கிற கர்த்​தாவை உருவாக்​கியவர்கள் வள்ளலார், மறைமலை​யடிகள், திரு.​வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர்​தான், 1930-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்​டத்​தில் பங்கேற்ற சோமசுந்தர பாரதி நடைபயணமாக சென்னை பொதுக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​துக்கு நீலாம்பரி அம்மை​யார் தலைமை தாங்​கி​னார். பெரி​யாரும் அந்தக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​தில்​தான் பெரி​யார் என்கிற பட்டம் கொடுக்​கப்​பட்​டது. இந்தியா​வில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்​கின்றன. பல்வேறு மொழிகள், மாறு​பட்ட சீதோஷ்ண நிலைகள், மாறு​பட்ட பழக்​கவழக்​கங்​கள், கலா​சா​ரங்கள் இருக்​கின்றன. தமிழ் கலாச்​சா​ரம், தமிழர்​களின் தேசிய தன்மை பாதுகாக்​கப்பட வேண்​டும் என்று இந்தியா​வில் தமிழ்த் தேசியம் ஆரம்​பிக்​கப்​பட்​டது.

இலங்​கை​யில் சிங்​களம், தமிழ் என இரண்டே இனங்​கள்​தான். தமிழர்​களுக்கு உரிமைகள் வழங்​கு​வதாக ஒன்பது ஒப்பந்​தங்களை பல்வேறு சிங்கள அரசுகள் போட்டன. தமிழ் அடையாளம், கலா​சா​ரம், சம உரிமைகள் பாதிக்​கப்​ப​டாமல் காப்​போம் என்று சொன்​னார்​கள். ஆனால், இவையெல்​லாம் நிறைவேற்​றப்​பட​வில்லை. பிறகு​தான் வட்டுக்​கோட்​டை​யில் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சி தீர்​மானம் நிறைவேற்றியது. இனி சிங்​களர்​களோடு வாழ முடி​யாது.

நாம் ஒரு தனி தேசிய இனம். தனி நாடு, தனி வாழ்வு இவற்றை முன்னிறுத்த வேண்​டும் என்று சொல்​லித்​தான் இலங்​கை​யில் தமிழ்த் தேசியம் முன்னெடுக்​கப்​பட்​டது. இதனாலேயே ஈழ மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தமிழரசுக் கட்சி 18 எம்பிக்களைப் பெற்றது. அங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. இங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்​டும்​.

தமிழ்த் தேசியமும் திராவிடமும் எங்களுக்கு இரண்டு கண்கள் என்று விஜய் சொல்கிறார். அது இரண்டும் வேறு வேறு என்கிறாரே சீமான்..?

தமிழ் நாட்​டைப் பொறுத்​தவரை திரா​விட​மும் தமிழ்த் தேசி​ய​மும் ஒன்றோடொன்று பிணைந்​து​தான் செல்​கிறது. அந்தக் காலத்​தில் தமிழ்​நாட்​டில் தமிழ்த் தேசியம் பேசி​ய​வர்கள் பெரி​யாருடன் மாறு​பட்டு நிற்​க​வில்​லை.

சில நேரத்தில் உங்களுடைய பதிவுகள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறீர்கள். விஜய்யின் அரசியல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் நாட்​டில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்​டும் என திமுக-வை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று, பொதுக்​கூட்​டங்​களில் பேசி 15 ஆண்டு​களில் திமுக-வை ஆட்சிக்​குக் கொண்டு வந்தவர் அண்ணா. 60 ஆண்டு​களுக்​குப் பிறகு பல பிழைகளும் தவறுகளும் மக்கள் விரோத செயல்​பாடு​களும் இந்த இயக்​கத்​தில் தெரி​கின்றன. இப்போது ஒரு மாற்று அரசியல் தேவை. தமிழ்த் தேசி​ய​மும் திரா​விடத்​தை​யும் ஒன்று கலந்து எடுத்​துச் செல்​வேன் என்று விஜய் சொல்​கிறார். இதில் எந்தப் பிழை​யும் இல்லை. மாற்று அரசி​யலுக்காக விஜய் வரவேண்​டும். அவருக்கு வாழ்த்து​கள்​.

கடந்த காலங்களில் திமுக - மதிமுக என மாறியிருக்கிறீர்கள். உங்களை மீண்டும் திமுக அழைத்தால் செல்வீர்களா?

என்னை அழைக்​க​மாட்​டார்​கள். அதற்கு நான் தயாரும் இல்லை. மதிமுக என்கிற இயக்​கத்​தின் நிறுவன தலைவர்​களில் நானும் ஒருவன். வைகோ எனக்கு எதுவும் செய்ய​வில்லை. ஆனால், அந்த இயக்​கத்தை கட்டமைக்க நான் பட்ட கஷ்டம் எனக்​குத் தெரி​யும். என் இளமை, என் காலம், வழக்​கறிஞர் தொழில் ஆகிய​வற்றை இழந்​து​தான் வைகோவுக்கு உறுதுணையாக இருந்​தேன். நான் எல்லா அரசி​யலை​யும் பார்த்து​விட்​டேன். ஏதாவது ஒரு கட்சி​யில் இருந்​தால் என்னால் ஒரு நியா​யத்தை எழுத முடி​யுமா? எனக்​குப் படிப்​ப​தற்​கும் எழுது​வதற்​குமே நேரம் இல்லை. நான் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவன். காமராஜர் காலத்​திலிருந்து அரசி​யலில் இருக்​கிறேன். என் அரசியல் அனுபவ வயது இல்லாதவர்​களிடம் இன்று என்னால் எப்படி கூழைக் கும்​பிடு போட முடி​யும்​?

இன்னும் ஒரு சில மாதங்களில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் வர இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருந்தீர்கள். பிரபாகரன் குறித்து அவ்வப்போது வரும் தகவல்கள் போன்றதுதானா இது?

எனக்​கும் நெடு​மாறனுக்​கும் விடு​தலைப் புலிகள் பற்றிய எல்லா விஷயங்​களும் தெரி​யும். அதற்​காக, முன்​னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை நாங்கள் நியாயப்​படுத்​தவில்லை. இந்தப் படுகொலையை அவர்கள் (விடு​தலைப் புலிகள்) செய்ய​வில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம். விடு​தலைப் புலிகளும் இதை அன்றே மறுத்து​விட்​டார்​கள். இலங்​கை​யில் உள்ள மக்கள் ஒரு குடை​யின் கீழ் வர வேண்டு​மென்​றால் பிரபாகரன் வந்தால்​தான் வருவார்​கள். நிச்​சயம் பிரபாகரன் வருவார். அதற்கான தடைகள் இந்தியா​வில் இருக்​கிறது. அப்படி வரும்​போது பிரதமர் மோடிக்​கு​தான் பிரபாகரன் கடிதம் எழுது​வார்​.

திருப்பரங்குன்றம் மலையை வைத்து நடைபெறும் சர்ச்சைகளைத் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக எப்படி பார்க்கிறீர்கள்?

​திருப்​பரங்​குன்றம் ஆர்ப்​பாட்​டத்​தில் பங்கேற்​றவர்கள் பாஜக-வைச் சேர்ந்​தவர்கள் அல்ல. இந்து அமைப்பு​களுக்கு தமிழகத்​தில் இவ்வளவு பெரிய செல்​வாக்கா இருக்​கிறது? அது தானாகக் கூடிய கூட்​டம். ஒரு மணி நேரத்​தில் இவ்வளவு கூட்டம் என்றால், பாஜக தலைவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கூட்டி வந்த கூட்​டமா?

பாஜக-வுக்காக இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவர்கள் மக்கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்றிருக்க வேண்​டுமே. இங்கு இந்துக்கள் பெரும்​பான்​மையாக இருக்​கிறார்​கள். தங்களுக்காக அவர்கள் திருப்​பரங்​குன்​றத்​தில் கூடி​யிருக்​கிறார்கள். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி​யைச் சேர்ந்த இந்துக்​களும் இதில் பங்கேற்றிருப்​பார்​கள். இந்துக்​களுக்கு விழிப்பு​ணர்வு இருக்​கிறது என்​பதை அரசு புரிந்​து​கொள்ள வேண்​டும்​. மதுரா விஜயம், கம்பணன் நூல்களைப் படித்தால் திருப்பரங்குன்றம் பற்றிய புரிதல் ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x