Published : 07 Feb 2025 07:46 AM
Last Updated : 07 Feb 2025 07:46 AM

மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?

டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கடந்த 2020 பிப்​ரவரி 7-ம் தேதி மருத்​துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்​பால் உயிரிழந்​தார். சேலம் மேட்​டூரைச் சேர்ந்த அரசு மருத்​துவரான லட்சுமி நரசிம்மன் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க உதவினார். சக மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்​வதன் மூலம், உயிர்க் காக்​கும் மருத்​துவர்கள் இன்னும் உற்சாகமாக மக்கள் சேவை செய்ய முடி​யும் என்பதை உறுதியாக நம்பினார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளி​யிட்​டனர். அன்றைய அரசுக்கு கண்டனத்​தை​யும் தெரி​வித்​தனர்.

மருத்​துவர்களை ஒருங்​கிணைத்து நடத்திய போராட்​டத்​தால் அன்றைய சுகா​தாரத் துறை அமைச்​சர், அதிகாரிகள் பழி வாங்​கிய​தால் ஏற்பட்ட மன அழுத்​தம்​தான் அவரது இறப்​புக்கு காரணம் என்பது மருத்​துவர்கள் மட்டுமன்றி மக்களுக்​கும் நன்றாகவே தெரிந்​தது. லட்சுமி நரசிம்மன் 1986-ம் ஆண்டு சென்னை மருத்​துவக் கல்லூரி​யில் சேர்ந்த 2 ஆண்டு​களி​லேயே மருத்துவ மாணவர் சங்க செயலா​ளராக போராட்​டத்தை முன்னெடுத்​தவர். அன்று முதல் இன்று வரை பல போராட்​டங்களை மருத்துவ சமுதா​யத்​துக்காக முன்னின்று நடத்தி வெற்றி பெற்​றவர். குறிப்பாக பயிற்சி மருத்​துவர் உதவித்​தொகை உயர்வு, மாணவர் கல்விக் கட்டணக் குறைப்பு, மருத்​துவக் கல்வி​யில் தனியார் மயம் எதிர்ப்பு, அரசு மருத்​துவர்​களுக்கு ஊதியப்​பட்டை 4-க்கான போராட்டம் என பல்வேறு போராட்​டங்களை தலைமை தாங்கி நடத்தி சென்ற​வர்​தான் லட்சுமி நரசிம்​மன்.

 ராமச்​சந்​திரா மருத்​துவ​மனையை ஏழை எளிய மக்கள் பயன்​படும் வகையில் திமுக அரசு அரசுடைமை​யாக்​கியது. ஆனால், பணக்​காரர்கள் பயன்​படும் வகையில் அதிமுக அரசு தனியாரிடமே திருப்பி ஒப்படைத்த போது அதை எதிர்த்து, 1991-ல் தமிழகமே அதிரும் அளவுக்கு 57 நாட்கள் மிகக் கடுமையான போராட்​டத்தை முன்னெடுத்து, 17 நாட்​களுக்கு மேல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டவர் டாக்டர் லட்சுமி நரசிம்​மன். வார்த்தை ஜாலங்கள் எதுவும் இன்றி, ஆவண ஆதாரங்​களோடு தெள்ளத் தெளிவான இவரது உரை ஒவ்வொரு போராட்​டத்​தின் வெற்றி​யின் உரமாக அமைந்​தது.

தமிழகத்​தில் ஏழை எளிய மக்களுக்கு தடுப்​பூசி தயாரித்து கொண்​டிருந்த Pasteur Institute of India எனப்​படும் மத்திய அரசின் நிறு​வனத்தை மூட முயன்ற போது, டாக்டர் ரெக்ஸ் சற்குணத்​துடன் இணைந்து மூடக் கூடாது என்று மிகக் கடுமை​யாகப் போராடிய​வர். தன் வீட்​டின் ஒரு பகுதியை சிறிய மருத்​துவ​மனையாக மாற்றி, அறுவை அரங்கம் அமைத்து, தனது சொந்த ஊர் மக்களுக்காக மருத்துவ சேவையை குறைந்த செலவில் வழங்​கினார்.

கடந்த 2019-ல் அரசு மருத்​துவர்கள் சங்கங்களை ஒருங்​கிணைத்து ஃபோக்டா எனப்​படும் அரசு மருத்​துவர் சங்கங்​களின் கூட்​டமைப்பை உருவாக்​கிய​வர். அரசாணை 354-ஐ அமல்​படுத்த வேண்​டும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்​துவர்கள் நியமனம் செய்​வது, அரசு மருத்​துவர்​களுக்கு முதுகலைப் படிப்​பில் சேர 50 சதவீத இட ஒதுக்​கீடுமற்றும் முதுகலை படிப்பு முடிக்​கும் அரசு மருத்​துவர்​களுக்கு கலந்​தாய்வு நடத்த வேண்​டும் என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்​டத்தை வழி நடத்தி வந்தார். அந்த நேரத்​தில் அன்றைய முதல்வர் எடப்​பாடி பழனிசாமியோ, மருத்​துவர்கள் போராட்​டத்தை உடனே வாபஸ் வாங்​கினால் கோரிக்கையை அரசு தாயுள்​ளத்​தோடு நிறைவேற்றும் என உறுதி​யளித்​தார்.

அதை ஏற்று நவம்பர் 1-ம் தேதி காலை​யில் போராட்​டத்தை வாபஸ் வாங்​கு​வதாக டாக்டர் லட்சுமி நரசிம்மன் அறிவித்​தார். ஆனால் அப்போ​தில் இருந்தே தொடர்ந்து பழி வாங்க ஆரம்​பித்தது அரசு. 150 டாக்​டர்​களுக்கு 17 பி குற்ற குறிப்​பாணை​யும், 118 பேருக்கு இடமாற்​ற​மும் தரப்​பட்டு பந்தாடப்​பட்​டார்​கள். இதில் 40 பெண் மருத்​துவர்​களும் அடங்குவர். தர்மபுரி மருத்​துவக் கல்லூரி​யில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன் ராமநாத​புரம் அரசு மருத்​துவ​மனைக்கு மாற்​றப்​பட்​டார்.

பிள்​ளைகள் பள்ளிக்கு செல்​வ​தில் ஆரம்​பித்து அவர்​களது குடும்பமே பாதிக்​கப்​பட்​டது. ஒரு பெண் மருத்​துவருக்கு விபத்​தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்​டது. ஒரு மருத்​துவரின் குழந்தை உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு, வேலூர் மருத்​துவ​மனை​யில் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தது. ஒரு மருத்​துவரின் அப்பாவுக்கு அதிர்ச்​சி​யில் பக்கவாதம் ஏற்பட்டு​விட்​டது. இன்னொரு பெண் மருத்​துவரின் கணவருக்கு மன உளைச்​சலால் மாரடைப்பு ஏற்பட்​டது. இதனால் 4 முறைக்கு மேல் டாக்டர் லட்சுமி நரசிம்மன் புதுக்​கோட்​டைக்​குப் போய் டாக்டர் விஜயபாஸ்கரை சந்தித்து, போராடிய டாக்​டர்கள் மீது பழிவாங்​கும் நடவடிக்கையை தொடர வேண்​டாம் என்று கோரிக்கை வைத்​தார்.

சக மருத்​துவர்​களுக்கு ஏற்பட்ட பாதிப்​பால் மிகுந்த மன உளைச்​சலில் இருந்​தார். வாராவாரம் சென்னை வருவது சுகா​தாரத் துறை அமைச்சரை சந்திப்பது என 3 மாதங்கள் அலைந்து கொண்​டிருந்​தார். கடந்த 2020 பிப்​ரவரி 6-ம் தேதி நெஞ்சு வலி என்று சேலத்​தில் மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட லட்சுமி நரசிம்மன் மறுநாள் காலை மரணமடைந்​தார். அதிமுக அரசின் பழிவாங்​கும் நடவடிக்கையே அவரது உயிரை பறித்து விட்டது என்பதை கிட்​டத்​தட்ட மருத்​துவத் துறை​யில் உள்ள அனைவருமே வேதனையோடு தெரிவிக்​கின்​றனர்.

இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க இருக்​கிறதோ சுகா​தாரத் துறை? ஊதியக் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகும், அரசு மருத்​துவர்​களின் கோரிக்கையை இன்றைய திமுக அரசும் நிறைவேற்​ற​வில்லை என்ற மன வருத்தம் 19 ஆயிரம் அரசு மருத்​துவர்​களிடத்திலும் அதிகமாகவே இருக்​கிறது. எனவே சு​கா​தா​ரத் துறையை வலுப்​படுத்த வேண்​டும் என்ற ​முனைப்புடன் இருக்​கும் அரசு, நிச்​ச​யம் 19 ஆ​யிரம் மருத்​துவர்​களின் நீண்ட கால கனவை நனவாக்​கும் என நம்​பு​கிறோம்.

கட்டுரையாளர்: தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x