Published : 29 Jul 2017 12:10 PM
Last Updated : 29 Jul 2017 12:10 PM
கோவை கொடீசியா தொழிற்கண்காட்சி வளாகத்தின் ஏ, பி அரங்குகளில் ‘ புத்தகத் திருவிழா 2017’ கடந்த 21-ம் தேதி முதல் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது. நாளையுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுகிறது என்பதால், கூட்டம் அலைமோதுகிறது.
“பொதுவாக இது போன்ற புத்தகக் காட்சிகள் திறந்தவெளி மைதானத்தில்- நம் கிராமத்து சந்தைகளைப் போலவோ, அதைவிட சற்று மேம்பட்ட நிலையிலோ நடப்பது வழக்கம். ஆனால், கோவை புத்தகக் காட்சி அரங்குக்குள் நுழைந்தபோது, வெளிநாட்டு புத்தகச் சந்தைக்குள் நுழைந்தது போன்று இருக்கிறது. இப்படியொரு அமைதிச் சூழலில் புத்தகங்கள் விற்கப்படுவதை காணும்போதே மனம் மகிழ்ச்சியடைகிறது” என்றார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.
இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும், சேலம், சென்னை உள்ளிட்ட வேறு பகுதிகளிலும் புத்தகத் திருவிழா நடப்பதாலும் பல பதிப்பகங்கள் கோவை புத்தகக் காட்சியில் இடம்பெறவில்லை. குறிப்பாக, கோவையில் வாசகர் திருவிழாவை அறிமுகப்படுத்தியவர்களான, விஜயா பதிப்பகம்கூட அரங்குக்கு வரவில்லை.
கொடீசியா அரங்கில் உள்ள கேண்டீனில் காபி ரூ. 20, சிக்கன் பிரியாணி ரூ. 120, வெஜ் பிரியாணி, கலவை சாதங்கள் (வெரைட்டி ரைஸ்) ரூ. 60 என்று விற்கப்பட்டது சாமானியர்களிடம் முணு முணுப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற குறைகள் இருந்தாலும் புத்தகக் காட்சிக்கு மக்களின் ஆதரவு குறையவில்லை.
எனினும், புத்தகக் காட்சியின் இறுதி நாளான ஞாயிறு அன்று திரள்திரளாக வாசகர்கள் அணிவகுத்து வந்து புத்தகங்கள் வாங்கினால்தான் இந்தப் புத்தகக் காட்சி பெரும் வெற்றி பெறும் என்று விற்பனையாளர்கள் கருதுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை விஞ்சும் விதத்தில் புத்தகக் காட்சியை வெற்றியடைய வைப்பது கோவை வாசகர்களின் கடமை!
என்ன புத்தகம் வாங்கினேன்?
அருண் அம்மாவுடன் புத்தகக் காட்சிக்கு மூன்றாவது முறையாக வருகிறேன். ‘பஞ்சு அருணாசலம் பயோகிராபி’, ‘மோட்டார் வாகனச் சட்டம்’, கல்கியின் படைப்புகள் என அம்மா நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறார்.
எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள்தான் பிடிக்கும். டெக்ஸ் வில்லர் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் இப்படி நிறைய வாங்கியிருக்கேன். இவ்வளவு புத்தகங்களை ஓரிடத்தில் பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெரிய அரங்குகளில் கடை போட்டவர்கள் நடந்துவருகிற வயதான வாசகர்கள் கொஞ்சம் இளைப்பாற வசதி யாக நாற்காலிகள் போட்டிருக்கலாம். குடிநீர் வசதி அரங் குக்குள் இல்லவே இல்லை.
கனிமொழி முத்துச்சாமி:
ஓஷோவின் ‘குரு’, ‘உயிர்வேதம்’, ‘கால்களின்றி நட’e , பாலகுமாரனின் ‘மகாபாரதம் பாகம் - 1’, கல்கியின் ‘அலை ஓசை’, பாரதி பாஸ்கரின் ‘நதிபோல ஓடிக்கொண்டிரு’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’ என ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கியிருக்கிறோம். வருஷா வருஷம் புத்தகக் காட்சிக்குக் குடும்பத்தோட வருவோம்.
போன வருஷம் ஐயாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினோம். நிறை என்று பார்த்தால் நிறைய பதிப்பகங்களை இங்கே பார்க்க முடிகிறது. ஆனால், எந்த பதிப்பகத்தாரும் விற்பனையாளரும் இந்தப் புத்தகம் நல்ல புத்தகம், இதில் இந்தந்த விஷயங்கள் இருக்கின்றன என்று சொல்வதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT