Published : 24 Oct 2022 04:15 AM
Last Updated : 24 Oct 2022 04:15 AM

இரவில் நீண்ட நேர கண் விழிப்பே பல உடல் உபாதைகளுக்கு காரணம்: மருத்துவர் அலர்ட்

தருமபுரி

இரவில் நீண்டநேர கண் விழிப்பே பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என உணவுப் பாதுகாப்புத் துறை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நல்லம்பள்ளியில் சிறுதானியங்கள் பயன்பாடு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விளக்க கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, ‘இந்திய மக்களிடம் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. எனவேதான், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சிறுதானியங்கள் பயன்பாடு மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறது. ரத்தசோகையால் பெண்கள் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.

அதை தவிர்க்க வளரிளம் பருவம் முதலே பெண்கள் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த சுண்டல், பேரீச்சம் பழம், திராட்சை, பொட்டுக் கடலை மற்றும் நிலக்கடலையில் செய்த தின்பண்டங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும்’ என்றார்.

சிறப்பு விருந்தினரான, செறிவூட்டல் வள மைய டெல்லி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி பேசும்போது, ‘இந்திய மக்கள் தொகையில் 19 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் 56 சதவீதம் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 0 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 62 சதவீதம் பேருக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது.

அன்றாட உணவுப் பொருட்களில் குறைந்தது ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துகளை பாதுகாப்பான முறையில் சேர்ப்பது செறிவூட்டல் எனப்படும். இந்திய அரசாங்கம் அரிசி, கோதுமை, பால்,சமையல் எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய உணவுப் பொருட்களில் செறிவூட்டல் செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது. இவ்வகை உணவுகள் மூலம் ரத்தசோகை பிரச்சினைகளை தவிர்க்கலாம்’ என்றார்.

காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா மற்றும் இயற்கை, சித்தா பிரிவு மருத்துவர் சுமதி பேசும்போது, ‘காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்தி சாப்பிடுவதும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். அதேபோல இரு உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் குடிநீர் அதிகம் பருக நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரவில் நீண்ட நேர கண் விழிப்பே பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம். இதை தவிர்த்தால் உடல் நலனை சீராக பேண முடியும். நமது அன்றாட பணிகளில் உடற்பயிற்சியும் ஒன்றாக இடம்பெற வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில், பாலக்கோடு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், முனைவர் ஹமீதா பானு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x