Published : 18 Aug 2025 04:14 PM
Last Updated : 18 Aug 2025 04:14 PM
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறும்போது, ”திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப் படாத எண்ணற்ற வரலாற்றுத் தடயங்களை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வழக்கமான கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, வாணியம்பாடி வட்டம் அலசந்தாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி அடுத்த ஆந்திர எல்லையில் சித்தூர் மாவட்டம் லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடராஜபுரம் என்ற ஊரில் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 800 அடி உயரமுள்ள மலையின் மேல், கோட்டை ஒன்று இருப்பதை உறுதி செய்தோம்.
அக்கோட்டை அமைந்துள்ள மலை ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மலை என்பதை எங்களால் அறிய முடிந்தது. அம்மலையில் கோயில் ஒன்று உள்ளதால், அங்கு ஆடிமாத வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்களோடு பயணித்து அங்குக் கள ஆய்வு மேற்கொண்டோம். சீரான பாதைகளற்ற அம்மலையில் அக்கோட்டையானது அமைந்துள்ளது. கருங்கற்களாலும், சுட்ட செங்கற்களாலும், சுதைக் கலவையினாலும் கட்டப்பட்ட அக்கோட்டையில் ஆயுதக்கிடங்குகளும், மறைவிடங்களும், பீரங்கி மேடைகளும், கண்காணிப்புக் கோபுரங்களும், மதில்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
4 அடி விட்டமுள்ள உறுதியான இரண்டடுக்கு மதில்கள் இன்னும் உறுதியாகக் காணப்படுகின்றன. நீர்த்தேவைக்கு மழைநீரை முறையான கால்வாய் வாயிலாக வடிந்துவரச் செய்து ஒரு ஊரணியோடு வந்து சேருமாறு சேமித்து வந்துள்ளனர். ஒன்றே முக்கால் அளவுள்ள மிக, மிக உறுதியான சுட்ட செங்கற்கள் அக்காலத்தையா கட்டுமானத்திற்குச் சாட்சிகளாக இன்றும் அங்குச் சிதறிக் கிடக்கின்றன.
இக்கோட்டை அமைந்துள்ள இடமானது அன்றைய தொண்டை மண்டலம் என அறியப்பட்டது. தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியதாக அகரம் என்ற ஊரில் கண்டறியப்பட்ட செப்புப்பட்டயம் விவரிக்கிறது. அவை, புழல் கோட்டம், ஆமூர் கோட்டம், வேலூர் கோட்டம் என 24 கோட்டங்கள். இக்கோட்டையானது ஆமூர் கோட்டத்தில் உள்ளது.
இத்தகு சிறப்பு வாய்ந்த இப்பகுதியானது 17-ம் நூற்றாண்டில் திருப்பத்தூரை உள்ளடக்கிய பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்த விஜய நகர அரசின் வழிவந்த ‘ஜெகதேவிராயர்’ என்ற மன்னர் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாரா மகாலில் 12 கோட்டைகள் கட்டி நான்கு ஐந்து தலைமுறையாக (1578 முதல் 1669 வரை) 91 ஆண்டுகள் இப்பகுதியை ஆட்சி செய்தார். 1713-ம் ஆண்டில் மராத்தியர்களும் நிஜாம்களும் இப்பகுதிக்காகப் போராடினர். பின்னர் 1714-ல் சித்தூர் பகுதி நவாப் அப்துல் நபி கான் என்ற நிஜாம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
அவர் மாதகடப்பா, ராமகுப்பம், வெங்கடராஜபுரம் ஆகிய பகுதிகளில் தனது ஆளுகையை வலுப்படுத்த மூன்று கோட்டைகளைக் கட்டினார். இம்மூன்றில் ஒன்றே வெங்கடராஜபுரத்தில் உள்ள நவாப் கோட்டையாகும். ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இக்கோட்டை சிதிலமைந்திருக்க வேண்டும். தமிழக வரலாற்றில் பல கோட்டைகள் குறித்த செய்திகள் பதிவாகி இருப்பது போல இக்கோட்டை குறித்து எங்கும் பதிவாகவில்லை என்பது வியப்பாக உள்ளது.
வரலாற்றின் சாட்சியங்களாகச் சிதைந்த நிலையில் காணப்படும் இக்கோட்டை அன்றைய ஆட்சியாளர்களின் வரலாறு, கட்டிடக்கலை குறித்து அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுப் பெட்டகங்களாகும். எனவே, இவற்றைப் பாதுகாக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT