Published : 07 Jul 2025 07:18 AM
Last Updated : 07 Jul 2025 07:18 AM
ஆலப்புழை: கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர். இளம் வயதில் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை சட்டப்படி உரிமை கோர, இவரது உறவினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார். முதுமையடைந்ததும், உறவினர்கள் யாரும் இவரை கவனித்துக்கொள்ள முன்வரவில்லை.
இதனால் கடந்த 2019ம் ஆண்டு செர்தலா பகுதியில் மயிதாரா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். கடந்தாண்டு இவர் படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால் இவர் ஆராட்டுபுழாவில் உள்ள சந்த்வனதீரம் முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.
6 மாதங்களுக்கு முன்பு இவர் தனது கடைசி காலத்தை உறவினர்களுடன் கழிக்க விரும்பினார். ஆனால், உறவினர்கள் யாரும் பாரதியம்மாவை பார்க்க முன்வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பாரதியம்மா, தனது வங்கி சேமிப்பை பெறுவதற்காக குறிப்பிடப்பட்ட சட்டப்படியான உறவினர்களின் பெயரை நீக்கும்படி முதியோர் இல்ல கண்காணிப்பாளரிடம் கூறினார்.
இவரது வேண்டுகோள் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் பாரதியம்மாவின் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் சேமிப்பு பணத்துக்கான ஆவணங்களை, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் விஜி ஜார்ஜிடம் வழங்கினார்.
சமூக நீதித்துறை இயக்குநர் டாக்டர் அருண் எஸ் நாயர் கூறுகையில், ‘‘முதியோர்களை பாதுகாக்க தவறும் உறவினர்களுக்கு, அவர்களின் சொத்துகளை பெற உரிமை கிடையாது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT