Last Updated : 21 Jun, 2025 06:29 PM

 

Published : 21 Jun 2025 06:29 PM
Last Updated : 21 Jun 2025 06:29 PM

நீங்கள் படுத்து தூங்கும் முறை சரிதானா? - ஒரு ‘செக் லிஸ்ட்’ கைடன்ஸ்

படம்: மெட்டா ஏ.ஐ

பொதுவாக, நாம் நான்கு விதமான முறைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள உளவியல் குறித்தும், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த தூங்கும் முறை குறித்தும் விவரிக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது உடலுக்கு தேவை. தூங்குவதில் நிறைய வகை உள்ளன. ஒரு சிலர், ‘இரவு எந்த முறையில் தூங்குகிறேனோ, அப்படியேதான் காலையில் எழுகிறேன்’ என கூறுகின்றனர். சிலர் ‘நல்ல தூக்கம் இல்லை’ எனவும் புலம்புகின்றனர். இதுவே பலருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மனநிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய அளவுக்கு மிக முக்கிய விஷயமாக தூக்கம் உள்ளது.

அதனால்தான், தற்போது உள்ள வாழ்வியல் நோய்களில் தூக்கமின்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தூக்கமின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்கள் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதால், குறிப்பாக தேர்வு தயாரிப்பு சமயங்களில் மாணவர்களுக்கு தேவையான தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் தேர்வுக்கு பின்னரும், விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களில் சரியாக தூங்க முடியவில்லை என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் பல மாணவர்கள் தங்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

பொதுவாக மனிதனின் உடலுக்கு தேவையான ஓய்வு (தூக்கம்) இல்லாமல் இருக்குமானால், நமது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அனைத்தும் அதிகரிக்கும். இதய நோய் மட்டுமின்றி தூக்கமின்மையால் நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்தப் பக்கம் படுத்து தூங்குவது? - பொதுவாக மனிதர்கள் தூங்க நான்கு விதமான முறை (Positions) உள்ளன. 1) குப்புறப் படுத்துத் தூங்குவது 2) மல்லாக்க படுத்து தூங்குவது 3) இடதுபுறம் படுத்து தூங்குதல் (Left Lateral) 4) வலதுபுறம் படுத்து தூங்குதல் (Right Lateral).

இதில், ஒவ்வொரு விதமாக தூங்கும் நபர்களுக்கும் ஒவ்வொரு குணநலம் இருக்கும் என கணிக்கின்றனர். வயிற்றுப் பகுதி முழுவதும் தரையில் படும்படி குப்புறப்படுத்து தூங்கும் நபர்கள், அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

மல்லாக்க படுத்து தூங்கும் நபர்கள், அதிகம் குறட்டை விடும் நபர்களாக இருப்பார்கள் என கணிக்கின்றனர். இவர்களால் வாழ்க்கைத் துணைகளுக்கு தொந்தரவுகள் இருக்கும். இவர்கள் விடாப்பிடி குணம் உடையவர்களாக இருப்பார்கள். நினைத்ததை செய்து முடிக்க வேண்டும், தான் நினைத்துதான் சரி. நான் தான் சரி என்று எண்ணுவர்.

இடதுபுறம் படுத்து தூங்கும் (Left Lateral) நபர்கள், எதிலும் எச்சரிக்கை இருக்கக் கூடியவராக இருப்பர். தூங்கும் நேரத்தில் கூட தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பர்.

வலதுபுறம் படுத்து தூங்கும் (Right Lateral) நபர்கள், வாழ்க்கையில் எந்த விதமான சூழலையும் கடந்து செல்லும் மனப்பக்குவம் உடைய நபர்களாக இருப்பர். தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமும் நன்மைக்கே என எண்ணக்கூடிய நபர்களாக இருப்பர். செயல்பாடுகளில் ஒரு பக்குவப்பட்ட நபராக இருப்பர்.

எது சிறந்தது. ஏன்? - இடதுபுறம் படுத்து தூங்கும்போது, வயற்று பகுதியில் இரைப்பை உடலின் இடதுபுறம் உள்ளதால், இடதுபுறம் திரும்பி படுக்கும்போது, சீராக முச்சு விட முடிகிறது. மேலும், உணவு செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. எனவே, இடதுபுறம் படுத்து தூங்குவது சிறந்தது.

அடுத்து, வலதுபுறம் படுத்து தூங்குவது (Right Lateral) மிகவும் சிறந்தது. ஏன் என்றால், வலதுபுறம் படுக்கும்போது, இரவு உணவை செரிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, வலதுபுறம் திரும்பி படுக்கும்போது, இடதுபுற மூச்சுக் குழாய்க்கு காற்றோட்டம் எளிதாக இருக்கும்.

நமது மூளையின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, வலதுபுற மூளை செயல்பாடு முழுமையாக செயல்பட, இடதுபுற மூச்சுக் குழாய் அதிகப்படியான காற்றை சுவாசிக்கிறது. இதனை Psycho Immuno Neurology என்பர். இதுவே இடதுபுற மூளை அதிகப்படியாக செல்படும் என்றால், வலதுபுற மூச்சுக் குழாய் அதிகப்படியான காற்றை சுவாசிக்கிறது என்பது அர்த்தம்.

இடதுபுற மூச்சுக்குழாய் மூலம் அதிகமாக சுவாசிக்கும்போது மன அமைதி, நிம்மதியான உணர்வு ஏற்படுகிறது. அதுவே, வலதுபுற மூச்சுக்குழாயில் அதிகமாக சுவாசிக்கும்போது, சுறுசுறுப்பாக காணப்படுவர். அதன்படி, பகல் நேரத்தில் வலதுபுறமும், இரவு நேரங்களில் கட்டாயம் இடதுபுறமும் சுவாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். ஒரு நிம்மதியான தூக்கம் என்பது வலதுபுறம் படுக்கும்போது முழுமையாக கிடைக்கும்.

இதுவே, குப்புறப் படுத்து தூங்கும் போது, ஒரு சில நிடங்கள் மட்டுமே தூங்க முடியும், தொடர்ந்து குப்புறப் படுத்து தூங்குவது வயற்றுப் பகுதி முழுமையாக அமுக்கப்படுகிறது. மேலும், நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதினால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதே தூங்கும் முறை தொடர்ந்தால் எதுக்களிப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல், மல்லாக்க படுத்து தூங்கும் நபர்களுக்கு, குரட்டை பிரச்சினை அதிகம் இருக்கும். மேலும், தொப்பை ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

தூக்கத்தைத் தூண்டும் உதவும் உணவு முறை: தூக்கத்தை தூண்ட இயற்கை மருத்துவத்தில் 4 பாதாம் பருப்பு, 8 பூசணி விதைகள், ஒரு ஸ்பூன் கசகசா ஆகிய மூன்றையும் ஒரு மணி நேரம் ஊர வைத்து, (பாதாம் மட்டும் தோல் நீக்கிவிட்டு) பின்னர் மூன்றையும் அரைத்து பால் அல்லது தண்ணீரில் (சிறிது அளவு தேன் சுவைக்காக மட்டும்) கலந்து 21 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, தூக்கத்தை தூண்ட உதவுகிறது.

இதனுடன் யோகாவில் Deep Relaxation Technique, Instant Relaxation Technique மற்றும் யோக நித்ரா இப்படி பல முறைகள் உள்ளன. இவற்றை உரிய நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, செய்து வர தூக்கமின்மை என்ற பிச்சினைக்கு தீர்வு கிடைப்பது மட்டுமின்றி, நிம்மதியான தூக்கம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்” என்கிறார் மருத்துவர் தீபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x