Last Updated : 20 Jun, 2025 06:54 PM

1  

Published : 20 Jun 2025 06:54 PM
Last Updated : 20 Jun 2025 06:54 PM

விந்தணு எண்ணிக்கையை கூட்ட ‘இயற்கை உணவு’ வழி என்ன?

குழந்தையின்மைப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணியாக உள்ள விந்தணு எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இயற்கை உணவு ரீதியில் சில தீர்வுகளை பரிந்துரைக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“ஆண்கள், பெண்கள் இரு பாலருமே குழந்தையின்மை பிரச்சினையை சம அளவில் சந்திக்கின்றனர். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் பலருக்கும் விந்தணு எண்ணிக்கை குறைப்பாடு காணப்படுகிறது. இதனால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

இயற்கையான முறையில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனில், முதலில் நமது மன அழுத்தத்தை குறைத்தாக வேண்டும். ஏனெனில், நமது வாழ்வியல் மாற்றங்களில் மன அழுத்தம் முக்கியக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தமும் கூட விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், மன அழுத்தம் காரணமாக ஏற்படும் சில ஹார்மோன் குளறுபடிகளும் விந்தணு எண்ணிக்கை குறைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம்.

மன அழுத்தத்தைப் போக்க உரிய ஆலோசனைகளுடன் யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். மெக்னீசியம், இரும்புச் சத்து, செலினியம் ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவைப்படும் நிலையில், உணவு முறையிலும் கவனம் செலுத்தலாம்.

இன்றைய இளைஞர்கள் அதிகப்படியாக கோழி இறைச்சி உண்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் எண்ணெய்யில் பொறித்த வகையிலான கோழி இறைச்சி உட்கொள்கின்றனர். இதனால், உடலில் வெப்பம் அதிகரித்து விந்தணுக்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும், உடலில் தொடர்ந்து வெப்பம் இருப்பதால் செரிமான பிரச்சினையும் ஏற்படுகிறது.

சியா விதைகளை (Chia Seed) ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊரவைத்து குடித்து வந்தால் உடலின் வெப்பம் தணியும். சியா விதைகள் உடன் வெந்தயம் சேர்த்து கொள்ளலாம். வெந்தயத்தில் கரையும் தன்மையுடைய நார்சத்துகள் உள்ளன. இது ஹார்மோன்களை சமன் செய்ய உதவுகிறது. விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்த வெந்தயம் மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஒருவேளை நோய் தாக்குதல் மூலம் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் என்றாலும், அதனையும் சரி செய்ய வெந்தயம் உதவும்.

இரண்டு அல்லது மூன்று வால்நட் கொட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை பழ ஜூஸில் கலந்து பருகலாம். உடல் எடை குறைவாக இருக்கும் நபர்கள் பாலில் வால்நட் உடன் தேன் கலந்து பருகலாம். வால்நட்டில் உள்ள சத்துக்கள் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

நமது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலம், உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை தவிர்க்க முடிகிறது. வெந்தயம் மற்றும் வால்நட்டில் Saturated Fatty Acid, Omega 3 Fatty Acids உள்ளன. இது நமது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை கொடுக்கிறது. மேலும், விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது. தொடர்ச்சியாக, இவற்றை உட்கொள்வதன் மூலம் விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்தலாம்” என்கிறார் மருத்துவர் தீபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x