Published : 19 Jun 2025 01:34 PM
Last Updated : 19 Jun 2025 01:34 PM
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் தத்தனூர் அடிபெருமாள் கோயில் வளாகம், ராயர்பாளையம் வண்ணாம் பாறை சிறிய மலைக் குன்று ஆகிய இடங்களில் வரலாற்று காலத்தை சேர்ந்த கல்லாயுதங்களை கூர்தீட்டும் உற்பத்தி தொழிற்சாலையாக கருதப்படும் இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட யாக்கை மரபு அறக்கட்டளை குழுவினரும், யாக்கை நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் அடங்கிய குழுவினரும் மேற்கண்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கிடைத்த தகவல் தொடர்பாக அக்குழுவினர் கூறியதாவது: புதிய கற்கால பண்பாட்டு காலத்தை சேர்ந்ததாக அறியப்படும் இவ்வகை தொல்லியல் சான்றுகள் வடதமிழகம், தென் தமிழகத்தில் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதன்முறையாக கொங்கு நாட்டின் பகுதியில் கல்லாயுதம் கூர் தீட்டுவதற்காக 100-க்கும் மேற்பட்ட தேய்ப்புக் குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்களின் நடமாட்டம் இருந்ததை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் புதிய கற்கால பண்பாட்டு இடங்கள் குறித்த சான்றுகள் ராபர்ட் புரூஸ் புட் ஆவணங்களில் கிடைத்துள்ளன.
அண்மையில் நொய்யல் ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியில் மோளப்பாளையத்தில் நடைபெற்ற அகழாய்வில் புதிய கற்கால பண்பாடு தொடர்பான சான்றுகள் கிடைத்துள்ளன. பல இடங்களில் இக்கால கட்டத்தை காட்டும் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் இவ்விடம் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்ட தேய்ப்புக் குழிகள், வேளாண்மை நோக்கத்துக்காக கல்லாயுதங்களை கூர்த்தீட்ட பயன்படுத்தப்பட்ட இடங்களாகும். இக்காலகட்டத்தில்தான் வேட்டைச் சமூக நிலையில் இருந்து, வேளாண்மை சமூக வளர்ச்சி ஏற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வுகளின் கருத்தாக உள்ளது. தத்தனூர் அடிபெருமாள் கோயில் வளாகத்தில் சுமார் 104 புதிய கற்கால ஆயுத உற்பத்தி பாறை குழிகளும், வண்ணாம் பாறை என்ற இடத்தில் சுமார் 7 கற்குழிகளும் அடையாளம் காணக்கூடிய வகையில் உள்ளன.
இவ்வகை கற்குழிகள் மிகுதியாக காணப்படும் விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் காணப்பெறும் குழிகளோடு ஒப்பிடும்போது, இங்குள்ள சில கற்குழிகள் அதிக ஆழத்தில் உள்ளன. ஓரிடத்தில் 100-க்கும் மேற்பட்ட கற்குழிகள் காணப்படுவது, இவ்விடத்தின் தொல்லியல் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.
54 செ.மீ. நீளமும் 16.5 செ.மீ. அகலமும் கொண்டுள்ள ஒரு குழி 4.2 செ.மீ. ஆழம் கொண்டுள்ளது. இதுவே அளவில் பெரிய குழியாகும். மற்றவை சராசரியாக சுமார் 30 முதல் 45 செ.மீ வரையிலான நீளமும் 10 முதல் 18 செ.மீ வரையிலான அகலமும் கொண்டுள்ளன. அடிபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பண்டைய கற்குழிகள் வழிபாட்டு தொன்மமாக மாறியுள்ளன. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள வண்ணாம்பாறை மலையிலும் வழிபாடு நடைபெற்று வருகிறது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT