Last Updated : 18 Jun, 2025 03:11 PM

 

Published : 18 Jun 2025 03:11 PM
Last Updated : 18 Jun 2025 03:11 PM

நெய்... உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்

‘நெய்... நம் உடல் நலனுக்கு ஹீரோவா, வில்லனா? எப்போது நெய் வில்லனாக மாறுகிறது? எப்படி நெய்யை உட்கொள்வது?’ என நமக்கு எழும் அடிப்படை சந்தேகங்களுக்கு மிக எளிதாகவும் தெளிவாகவும் விளக்கம் அளிக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா...

“உண்மையில் நமது பாரம்பரிய உணவு முறையில் நெய் முக்கியமானது. அதனால்தான் கைக் குழந்தைகளுக்கு முதல் உணவாக பருப்பு சாதத்துடன் சிறிது நெய் சேர்க்கப்படுகிறது. ஏன் என்றால், குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் செரிமானத்தை எளிமையாக்க நெய் மிகவும் முக்கியமானது. அதனால் தான் குழந்தைகளுக்கு முதல் உணவாக நெய் சோறு வழங்கப்படுகிறது.

நெய் என்பது நல்ல கொழுப்பா, கெட்ட கொழுப்பா என்று கேட்டால், அது நாம் அதனை உட்கொள்ளும் அளவை பொறுத்தே அமைகிறது எனலாம். இன்றைய சூழ்நிலையில், ‘நெய் உட்கொண்டால் இதயம் தொடர்பான நோய்கள் வருமோ? நெய்யால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமோ? குறிப்பாக, நெய் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்குமோ?’ என பல கேள்வி எழுகின்றன. அதற்கான விடைகளைக் காண்போம்.

நெய்யில் Conjugated Linoleic Acid (CLA) இருக்கிறது. இது, நல்ல கொழுப்பு என கூறப்படுகிறது. இதில் Omega 3 Fatty Acid, வைட்டமின் ஏ, டி, இ, கே, உள்ளன. இவை அனைத்தும் கொழுப்பை தக்கவைத்துக் கொள்ளக் கூடிய வைட்டமின் ஆகும். இது மிகவும் நல்லது. குறிப்பாக, ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் நெய் உட்கொள்வது நல்லது. இதுவே, 40 வயதை கடந்தவர்கள், தினமும் ஒரு ஸ்பூன் நெய் உட்கொள்வது நல்லது. அத்துடன், நமது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கு கண்டிப்பாக நெய் தேவை.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நெய்யில் உள்ள Conjugated Linoleic Acid (CLA) உடலில் உள்ள பருமனை குறைக்க உதவி செய்கிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. ஒரு நாளில் நமது சமையலில் ஒரு ஸ்பூன் நெய் பயண்படுத்துவதன் மூலம் நமது மெட்டபாலிசம் (Basic Metabolism) ஊக்குவிக்கிறது. இது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால், உடல் பருமனை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, நெய்யில் நல்ல கொழுப்பு இருப்பதால், எண்ணெய்க்கு பதிலாக நெய் பயன்படுத்துவதன் மூலம், உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறையாமல் இருக்க உதவுகிறது. இது, செரிமானத்துக்கும் உதவுகிறது.

நெய்யில் Butyrate என்று பொருள் இருப்பதால், அது நமது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஒரு சிலர் நெய்யில் செய்யப்பட்ட உணவு பொருட்களை உட்கொண்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்று கூறுவர். இவர்கள், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான உணவு பொருட்கள் உட்கொள்வது மூலம் செரிமான பிரச்சினையை சந்திக்கின்றனர். குறிப்பிட்ட அளவில் நெய் உட்கொள்வது செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக்கவும் நெய் உட்கொள்வது உதவுகிறது.

எப்போது நெய் வில்லனாக மாறுகிறது? - இவ்வளவு நன்மை இருக்கும் நெய்யை ‘வில்லன்’ எனக் கூறுவதால் குழப்பம் எழத்தான் செய்கிறது. ஆம், நெய் வில்லனாகும் தருணம், அதன் அளவு அதிகரிக்கும் போதுதான். எண்ணெய் மட்டுமின்றி நெய்யில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது மூலம் நமது உடல் நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக, செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. Irritable Bubble Sindrome என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், Lactose Intolerance என்ற பிரச்சினையில் உள்ளவர்கள், அதாவது பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளவதால் ஏற்படும் ஒவ்வாமை உள்ளவர்களும் நெய்யை குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

எப்படி நெய்யை உட்கொள்வது? - நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த எப்படி எல்லாம் நெய்யை உணவு மூலம் உட்கொள்வது என்பதை அறிந்து செயல்படுவது அவசியம். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் நெய் கலந்து உட்கொள்ளலாம். பெரியவர்கள் சாலட்டில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. குழந்தைகள் நெய்யை குறிப்பிட அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் மூளை செயல்பட்டுகள் அதிகரிக்கிறது. மேலும், கவனம் செலுத்துவதும் அதிகரிக்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு நெய்யை, பொட்டுக் கடலையை பொடி செய்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், தேய்காய் மற்றும் முந்திரி, பாதாம் வகை பருப்புகளை துண்டுத் துண்டாக நறுக்கி ஒன்றாக கலந்து உருக்கிய நெய்யை பயன்படுத்தி குட்டிக் குட்டி உருண்டைகளாகப் பிடித்து சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய புரோட்டீன் நெய்யுடன் கிடைக்கும். இதன் மூலம் உடல் வலிமை பெறுவதுடன், கற்றல் திறன் அதிகரிக்க உதவுகிறது.

இதேபோல், சிறுதானிங்களையும் வறுத்து பொடி செய்து, உருக்கிய நெய்யை கொண்டு லட்டு மாதிரி செய்து கொடுப்பதும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. குறிப்பாக பெண் குழந்தை பூப்பெய்தும் வயதில் தினமும் இந்த சிறுதானிய லட்டுகள் கொடுப்பது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் தினமும் லட்டுகள் உட்கொள்வது மூலம் அவர்களுக்கு தேவையான வைட்டமின் சத்துகள், Essential Fatty Acids கிடைக்க உதவுகிறது. குறிப்பாக, பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க சிறுதானிய லட்டுகள் உதவுகிறது. இதன்மூலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் நெய்யில் செய்த உணவு வகைகள் அதிக அளவில் உட்கொள்வர். இதன் மூலம், அவர்களின் உடல் வெப்பத்தை தக்கவைப்பதுடன், உடல் சூட்டை சீர் செய்யவும் வழிவகுக்கப்படுகிறது. குறிப்பாக மலச் சிக்கலைத் தடுக்க இது உதவுகிறது” என்கிறார் மருத்துவர் தீபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x