Published : 11 Jun 2025 01:24 PM
Last Updated : 11 Jun 2025 01:24 PM
மதுரை பல்வேறு சரித்திர நிகழ்வுகளைத் தாங்கி நிற்கும் முக்கியமான நகரம்! உறங்கா நகரம், வரலாற்று நகரம் எனப் பெயர் பெற்ற மதுரையை ‘உணவு வகைகளுக்கான நகரம்’ என்று அழைக்கும் அளவுக்கு விதவிதமான தின்பண்டங்கள் மாநகரம் முழுவதும் வரிசைக்கட்டி நிற்கின்றன!
அந்த வகையில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, தாகத்தோடு சேர்த்துப் பசியையும் தணித்து, சில்லெனும் அனுபவத்தைக் கொடுக்கும் ‘ஜிகர்தண்டா’ மதுரையின் சிறப்புப் பானம்! மதுரையில் எங்கு திரும்பினாலும் ஜிகர்தண்டா கடைகளைப் பார்க்கலாம். இப்போது பல்வேறு ஊர்களிலும் ஜிகர்தண்டா கடைகள் வந்துவிட்டாலும், மதுரையிலேயே ஜிகர்தண்டா பருகுவது தனி அனுபவம்தான்! அதிலும் மதுரையின் பழமை வாய்ந்த ஃபேமஸ் ஜிகர்தண்டா கடைதான் பலரது விருப்பமாக இருக்கிறது.
எப்படித் தயாரிக்கப்படுகிறது?- சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டிக் கடையாகத் தொடங்கி, இப்போது பல ஊர்களில் பிராண்டாக விஸ்தாரம் அடையும் அளவுக்கு மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா உயர்ந்திருக்கிறது. பாலைக் காய்ச்சவும் மற்ற செயல்பாடுகளுக்கும் விறகடுப்பே பயன்படுத்தப்படுகிறது. ஜிகர்தண்டாவின் பதம் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பசும்பாலோடு எருமைப்பாலும் சேர்க்கப்படுகிறது.
ஜிகர்தண்டாவின் தயாரிப்புக்குப் பின் பல மணி நேர உழைப்பு இருக்கிறது. பாலை நன்றாகக் காய்ச்ச காய்ச்ச மெலிதான காபி நிறம் கிடைக்கிறது. அதை வைத்து ஐஸ்கிரீம், பாசந்தி தயாரிக்கப்படுகிறது. பாலாடையைப் பொறுமையாக எடுப்பதில்தான் பாசந்தியின் சுவை அடங்கி இருக்கிறது. நன்னாரி வேரை வைத்துத் தனியாக சர்பத் தயாரித்துக் கொள்கிறார்கள். பாதாம்பிசின் தனியாக ஊறவைக்கப்படுகிறது.
பாலை ஊற்றி, அதன் மீது ஐஸ்கிரீம் ஒரு கரண்டி போட்டு, சுவை மிகுந்த பாசந்தியைப் பரப்பி, பாதாம் பிசினை மேலே தூவி, நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொடுப்பதுதான் ஸ்பெஷல் ஜிகர்தண்டா! பாசந்தி சேர்க்கப்படாத ஜிகர்தண்டாவும் கிடைக்கிறது. சிலர் கடற்பாசி அல்லது சப்ஜா விதைகளைச் சேர்த்தும் தயாரிக்கிறார்கள்.
பாசந்தியோடு ஐஸ்கிரீம், பாதாம் பிசின், நன்னாரியின் சாரம், பால்… இவை அனைத்தும் கலந்த கலவையைப் பருக ஆரம்பித்தால், சுவையால் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. ஒரு ஸ்பெஷல் ஜிகர்தண்டாவைக் குடித்து முடித்தாலே தாகத்தோடு சேர்ந்து பசியும் அடங்குகிறது. ஆனால், அதன் சுவையோ மேலும் ஒரு மினி ஜிகர்தண்டாவைப் பருகலாமா என்று யோசிக்க வைக்கிறது. ‘ஜிகர்’ என்றால் இதயம் என்றும் ‘தண்டா’ என்றால் குளிர்ச்சி என்றும் பொருள். அதாவது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் பானம்.
மருத்துவக் குணங்கள்: குளிர்ச்சியைக் கொடுக்கும் பாதாம் பிசின், நன்னாரி வேர் ஜிகர்தண்டாவின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன. பாலின் உதவியுடன் செய்யப்படும் பாசந்தியும் ஐஸ்கிரீமும் சுவைக்கு ஆதாரமாக நிற்கின்றன. இவை இரண்டும் கால்சியம் சத்தை உடலுக்கு வழங்க துணை நிற்கும். ‘Frozen dessert’ ஆக இல்லாமல், பாலின் உதவியுடன் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், ஜிகர்தண்டாவின் சிறப்பு.
குளிர்ச்சி மிக்க பாதாம் பிசினுக்கு வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகியவற்றைத் தணிக்கும் சக்தி உண்டு. செரிமானப் பிரச்னைகளுக்கும் பாதாம் பிசினைப் பயன்படுத்தலாம். உடனடியாக உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்க பாதாம் பிசின் உதவும். நன்னாரிக்கோ உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் குணமுண்டு. சேரும் பால் பொருள்கள் உடலுக்கான ஆற்றலைக் கொடுக்கும்!
உண்மையில் ஜிகர்தண்டாவில் ஐஸ்கட்டிகள் சேர்க்க வேண்டும் என்றோ குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியூட்ட வேண்டுமென்றோ அவசியமில்லை! அதில் சேர்க்கப்படும் பொருட்களே இயற்கையாகக் குளிர்ச்சியைப் பரிசளிக்கும். புதிய முயற்சியாகப் பல கடைகளில் பழங்கள் சேர்க்கப்பட்ட ‘ஃப்ரூட் ஜிகர்தண்டா…’ பருப்புகள், உலர் பழங்கள் சேர்த்த ’ஃப்ரூட் அண்ட் நட்ஸ்’ ஜிகர்தண்டாவும் விற்பனையில் பட்டையைக் கிளப்புகின்றன. சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் அளவைப் பொறுத்து ஒரு ஜிகர்தண்டா 60 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுரையாளர், சித்த மருத்துவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT