Published : 11 Jun 2025 04:32 PM
Last Updated : 11 Jun 2025 04:32 PM
ஒரு காலத்தில் ஒரு ஜென்டில்மேனின் அடையாளமாக க்ளீன் ஷேவ் இருந்தது. ஆனால், இன்று திருமண முகூர்த்ததுக்குக் கூட தாடியை விதவிதமாக டிரிம் பண்ணிக் கொள்ளும் மாப்பிள்ளைகள் தான் அதிகம். தாடி வந்த பையன்களையே பெண்களுக்குப் பிடிக்கும் என்றொரு ட்ரெண்டும் இதற்குக் காரணம். சில நேரங்களில் சிலரை தாடியுடன் பார்த்தால் அவர்கள் அதில் வசீகரமாக இருப்பது போலவே இருக்கும். தாடி வசீகரமானதுதான், ஆனால் அது முகத்தில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை கிருமிகள் வாழ தோதான இடம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாகவே மனித உடலின் தோல் பகுதி லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம். குறிப்பாக பாக்டீரியாக்கள், பூஞ்சை, வைரஸ்கள் வாழ முகத்தில் இருக்கும் ரோமங்கள் மிகவும் உகந்த சூழலாக இருக்கின்றன எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சி முடிவு ஏற்கெனவே ‘தாடி அசுத்தமானது’ என்ற வாதங்களுக்கு வலு சேர்த்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, ஒருவரின் தாடியில் இருப்பதைவிட கழிவறையில் குறைவான அளவிலேயே கிருமிகள் இருக்கின்றன எனக் கூறியுள்ளது. உண்மையில் தாடி அத்தனை பெரிய சுகாதார சவாலா? ஆதாரங்களை கூர்ந்து கவனித்தால் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் எட்ட முடியும்.
நம் தோலில் இருக்கும் நுண்ணுயிர்களின் தன்மையும், எண்ணிக்கையும் உடலின் தட்பவெப்பம், pH எனப்படும் அமிலத்தன்மை, ஈரப்பதம், நுண்ணூட்டச்சத்து ஆகியனவற்றைப் பொருத்தே அமையும். அந்த வகையில் தாடி, நுண்ணுயிர்கள் வளர கதகதப்பான சூழலை உருவாக்கித் தரும். மேலும், சுற்றுப்புற மாசு, உணவுத் துகள்கள், எண்ணெய் ஆகியன தாடியில் படியும்போது அது இன்னும் அந்த நுண்ணியிர்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாகிறது.
தாடியின் சுகாதாரம் பற்றிய விஞ்ஞானிகளின் சந்தேகமும், அக்கறையும் 50 ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ளலாம். முந்தைய ஆய்வுகளின் தரவுகளின்படி, தாடி ரோமங்கள் பாக்டீரியா, பாக்டீரியாவால் வெளியாகும் நச்சுக்களை முகத்தை பலமுறை கழுவிய பின்னரும் கூட தன்னகத்தே தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறுகிறது. இந்த ஆய்வுதான், தாடி பாக்டீரியாவின் புகலிடம், அது சரும தொற்றுகளுக்கும் அதை பிறருக்கு பரப்புவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தது. அதுவும் குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களுக்கு, மருத்துவமனையில் இயல்பாகவே நோய்க்கிருமி பரவுதல் அதிகமாக இருக்கும் நிலையில் ஆபத்தும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், தாடி வைத்த பணியாளர்கள் முகத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பது உறுடி செய்யப்பட்டது. சிலரின் தாடியில் ஒரு நாயின் ரோமங்களில் இருப்பதைவிட அதிகளவில் பாக்டீரியாக்கள் இருப்பது எம்ஆர்ஐ ஸ்கானில் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நாய்களும், மனிதர்களும் ஒரே எம்ஆர்ஐ, ஸ்கேனரை பயன்படுத்தலாம். ஏனெனில், நாய்களுக்கு ஒப்பீட்டு அளவில் மனிதர்களின் தாடியில் இருப்பதைவிட குறைந்த அளவே கிருமிகள் இருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னொரு ஆய்வில் தாடி வைத்த ஆண்கள் முகத்திலும், க்ளீன் ஷேவன் ஆண்கள் முகத்திலும் இருக்கும் கிருமிகளின் அளவில் எந்தவொரு பெரிய வித்தியாசமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இன்னொரு ஆய்வில், தாடி வைத்த மருத்துவர்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் ஸ்டாபிலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) பாக்டீரியா கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், அதேபோல் தாடி வைத்த மருத்துவர்கள் முகமூடியும் அணிந்து கொண்டு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில், நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றது.
தாடி வைத்திருப்பதால், சிலருக்கு இம்பெட்டிகோ (impetigo) என்ற பரவும் தொற்று ஏற்படக்கூடும். அரிதான சந்தர்ப்பங்களில், இடுப்புப் பகுதியில் வாழும் அந்தரங்கப் பேன் (ப்யூபிக் லைஸ்) போன்ற ஒட்டுண்ணிகள் தாடி, புருவம் அல்லது கண் இமைகளிலும் தோன்றக்கூடும். குறிப்பாக சுகாதாரம் குறைவாக இருக்கும்போது அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது ஏற்படக்கூடும்.
தாடி சுகாதாரத்தைப் பேணுவது எப்படி? - தாடி வைத்துவிட்டு அதை சரியாகப் பராமரிக்காவிட்டால், அதில் அரிப்பு, எரிச்சல், தொற்று ஏற்படும். தாடிக்கு கீழ் இருக்கும் சருமத்தில் ஏராளமான ரத்த நாளங்கள் இருக்கும். அதுதவிர நரம்பு முனைகள் இருக்கும். நோய் எதிர்ப்புக்கான செல்களும் இருக்கும். இந்தப் பகுதி அதிக உணர்திறனுடன் இருப்பதால் நுண்ணுயிர் தொற்றுகள், சுற்றுப்புற அசுத்தங்களால் பாதிக்கப்படக் கூடும். எண்ணெய் பிசுக்கு, உணவுத் துகள்கள், இறந்த தோல் செல்கள் தாடிக்கு கீழ் படியும்போது அங்கிருக்கும் சருமம் பூஞ்சை, பாக்டீரியா தொற்று வேகமெடுக்கும்.
அதனால் தாடியை அன்றாடம் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அது நுண்ணுயிரிகள் பல அடுக்குகளாக தாடிக்குக் கீழ் வளர்வதைத் தடுக்கும் என்று கூறுகின்றனர். அதேபோல், சருமநோய் நிபுணர்கள் முகத்தில் ஈரப்பதத்தை சரியான அளவில் பேணுவது அங்கு வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும் என்று கூறுகின்றனர். மேலும், தாடியை சீவ பிரத்யேக சீப்பு பயன்படுத்துவதால் அங்கிருக்கும் கழிவுகள் வெளியேறும் என்று அறிவுறுத்துகின்றனர். டிரிம் செய்வதும் தாடியை சுத்தப்படுத்தும் என்கின்றனர்.
இத்தனைக்குப் பிறகும், நமக்கு ஒரு கேள்வி எழலாம்... தாடி சுகாதரமானதா அல்லது அசுத்தமானதா என்று? அது நீங்கள் உங்கள் தாடியை எவ்வளவு முறையாகப் பேணுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததே. சரியாகப் பராமரித்தால் தாடி நிச்சயமாக நாம் நினைப்பதைவிட சுகாதாரமானதாக இருக்கக்கூடும்.
கட்டுரை உறுதுணை: தி கான்வர்சேஷன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT