Last Updated : 02 Jun, 2025 03:12 PM

 

Published : 02 Jun 2025 03:12 PM
Last Updated : 02 Jun 2025 03:12 PM

பராமரிப்பின்றி பாழாகும் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சைட் மியூசியம் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. மழைநீர் தேங்கி முதுமக்கள் தாழிகள், தொல்பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. இதனை பராமரிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் ஆதிச்சநல்லூரும் ஒன்றாகும். மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டலம் சார்பில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கின.

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணி நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்தன. இவற்றை அதே இடத்தில் காட்சிப்படுத்தும் வண்ணம், இந்தியாவிலேயே முதன் முறையாக உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கப்பட்டது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை திறந்து வைத்தார். இதனைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள், தொல்லியல் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆதிச்சநல்லூர் நோக்கி வரத் தொடங்கினர். இந்த அகழாய்வு பணியில் 'சி' சைட் பகுதியில்தான் ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பணிகள் நிறைவடைந்த பிறகு தொல்பொருட்களை பாதுகாக்க மேற்கூரை அமைக்கபட்டது. ஆனால், அதற்கு பிறகு மேற்கூரை சரிந்து விழும் நிலையில் உள்ளது. கூரையின் மேல் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாய்கள் சேதமடைந்துள்ளன. மழை நீர் உள்ளே புகுந்து முதுமக்கள் தாழிகளில் தண்ணீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் பருவ மழையின் போது நிச்சயம் இந்த தற்காலிக கூரை கீழே விழுந்து சேதமடையும் அபாயம் உள்ளது. அப்படி சேதமடையும் சமயத்தில் அனைத்து முதுமக்கள் தாழிகளும் சேதமடையும். இதனால் கடந்த 5 ஆண்டு கால தொல்லியல் துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நிரந்தரமாக செட் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x