Published : 28 May 2025 05:35 PM
Last Updated : 28 May 2025 05:35 PM

உணவு சுற்றுலா: காஷ்மீரி கஹ்வா

காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

ஸ்ரீநகரின் புகழ்பெற்ற ‘தால்’ ஏரியில் படகுப் பயணம்! காட்சிப் பிழை மயக்கம் கொடுத்துக்கொண்டிருந்த மாலை வேளையில் இதமான குளிரும் கைகோத்துக்கொண்டது. ஷிகாராவில் (படகு) பயணம் செய்துகொண்டே அங்கிருக்கும் சூழலை ரசித்துக்கொண்டிருந்தோம். இமயமலையின் வனப்பு, ஏரி நீரின் தெளிவு, உடலைச் சிலர்க்கச் செய்த காற்று… இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பயணத்தைக் கவித்துவமாக்கின.

மிதந்து வந்த தேநீர்: நிலவும் குளிர்ச்சியான சூழலுக்குச் சூடாகத் தேநீர் அல்லது காபியைப் பருக வேண்டும் என்கிற எண்ணம் துளிர்விட்டது. தின்பண்டங்களை ஏந்திக்கொண்டு மற்றொரு படகு எங்களுக்கு அருகில் மிதந்து வந்தது. ஏராளமான சிற்றுண்டிகளை வைத்திருந்த அந்தப் படகில் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த காஷ்மீரி கஹ்வா பற்றி வழிகாட்டி சுட்டிக்காட்டினார்.

காஷ்மீர் பயணத்தில் கஹ்வா தேநீரைப் பருக வேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும், தால் ஏரியின் பேரழகை ரசித்துக்கொண்டே பாரம்பரியம் மிக்க கஹ்வா தேநீரைப் பருகும் வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில் அமைந்தது.

பழமையான செம்பு கெட்டில் போன்ற அமைப்பில் அமைந்த பாத்திரத்திலிருந்து கஹ்வா பரிமாறப்பட்டது. கஹ்வாவிலிருந்து வெளியான ஆவி, பனியோடு கலந்துகொண்டிருந்தது. மெலிதான செம்மஞ்சள் நிறம். பருகியதும் இன்சுவையும், குளிருக்கு ஏற்ற வெப்பமும் உள்ளிறங்கியதை உணர முடிந்தது.
மறுநாள் பழமையான தேநீர் கடை ஒன்றைக் கண்டறிந்து, கஹ்வா தேநீரை ஆர்டர் செய்துவிட்டு, அதன் தயாரிப்பு முறை குறித்துக் கேட்டறிந்தோம்.

எப்படித் தயாரிக்கப்படுகிறது? - நீரில் ஏலம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகிய நறுமணமூட்டிகளைச் சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்து, அதில் காஷ்மீரி ஸ்பெஷல் தேயிலைகளைப் போட்டு சில நிமிடங்கள் காத்திருக்கிறார்கள். பிறகு குங்குமப்பூ, ரோஜா இதழ்கள், பொடித்து வைத்த பாதாம், பிஸ்தா, அக்ரோட்டுப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து இறக்கினால், மருத்துவக் குணமிக்க காஷ்மீரி கஹ்வா தயார். இறுதியில் தேன் அல்லது சர்க்கரையைக் கலந்து பரிமாறுகிறார்கள். குங்குமப் பூ, ரோஜா இதழ்கள், நறுமணமூட்டிகள், தேயிலைகள் ஆகியவை பானத்துக்குப் புதுமையான நிறத்தைக் கொடுக்கின்றன.

மருத்துவக் குணங்கள்: கேரளாவில் உணவுக்குப் பின்பு செரிமானத்தைத் தூண்ட சூடான கட்டன் சாயா அருந்துவது வழக்கம். அது மாதிரி காஷ்மீரி மக்களுக்கு கஹ்வா! காஷ்மீரி உணவு வகைகளோடு பரிமாறப்படும் கஹ்வா, உணவின் இறுதியில் பருகப்படும் முக்கியப் பானம். பல நூற்றாண்டுகளாகக் காஷ்மீர் மக்களின் உணவுக் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் கஹ்வா, விருந்தினர்களை உபசரிக்கும் பானமாகவும், அனுதினமும் வாழ்கையோடு இணைந்துவிட்ட பானமாகவும் விளங்குகிறது.

கஹ்வாவில் சேர்ந்திருக்கும் லவங்கப்பட்டை, ஏலம் போன்ற நறுமணமூட்டிகளின் வேதிப்பொருள்கள் செரிமானத்தைத் துரிதப்படுத்துகின்றன. பட்டைக்கும் கிராம்புக்கும் உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தடுக்கும் தன்மையும் இருக்கிறது. மேலும் பட்டைக் கொடுக்கும் மெல்லிய வெப்பம் காஷ்மீர் குளிருக்கு இதத்தை வழங்கும். எதிர்-ஆக்ஸிகரணி தன்மை நிறைந்த குங்குமப்பூ பல நோய்களைத் தடுக்கும். கஹ்வா தேநீருக்கான அடிப்படைப் பொருள்கள் காஷ்மீரில் பெருமளவில் விற்பனையாகின்றன.

‘கஹ்வா தேநீர்’ பவுடரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இப்போது டிப் டீ வகைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. இதன் மூலப் பொருள்களை வைத்து வீட்டிலேயே கஹ்வா தேநீரைத் தயாரிக்கலாம். நம் சுவைக்கு ஏற்ப கூடுதலாகச் சில மூலிகைகளைச் சேர்த்தும் கஹ்வாவுக்குப் பெருமை சேர்க்கலாம்.

சமீபமாகப் பால், பால் பவுடர், கிரீம் சேர்த்து கஹ்வா தேநீரைத் தயாரிக்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் கஹ்வாவைக் காஷ்மீரின் குளிரை அனுபவித்துக்கொண்டே பருகுவதே தனி உணர்வுதான்!

- கட்டுரையாளர், சித்த மருத்துவர். தொடர்புக்கு drvikramkumarsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x